Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, November 19, 2013

சாருகேசி

நான் மிகச்சிறுவனாக இருந்தகாலங்களில் வந்த சினிமாப் பாடல்களில் இளையராஜாதான் இளைஞர்களின் விருப்ப இசையமைப்பாளர். அப்போது 'பெரிசு'களாக இருந்தவர்களெல்லாம் "இவன் என்ன மியூசிக் போடுகிறான்? அந்தக் காலப் பாட்டுக்கள் மாதிரி வருமா? " என்று அலுத்துக்கொள்வார்கள். கையோடு தியாகராஜ பாகவதர் உதாரணம் காட்டப்படுவார்.தியாகராஜ பாகவதர் என்றால் உடனே "மன்மத லீலையை வென்றார் உண்டோ" முதலில் ...



எனக்கும் இந்தப்பாட்டு அந்தக் காலங்களில் பிடிக்கவில்லை. பிறகு கொஞ்சம் பரவாயில்லை போலிருந்தது. இந்நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாய் விட்டது. (இப்பாடல் ஜி.ராமநாதன் இசையில், ஹரிதாஸ் திரைப்படத்தில்(1944) வந்தது. இயற்றியவர் பாபநாசம் சிவன்)


இன்னுமொரு பாடல். எனக்கு சிறுவயதுகளில் இருந்து பிடிக்கும். அது,



இதுவும் ஜி.ராமநாதன் இசையில், ஆனால் டி.எம்,சௌந்தரராஜன் குரலில். (அந்நாட்களில் டி.எம்,சௌந்தரராஜன், தியாகராஜ பாகவதர் பாணியிலேயே பாடியே தன் இசைப் பணியைத் தொடங்கியதாகச் சினிமா இசை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்)

கேள்வி: ராஜசுலோசனாவை மயில் என்னாது புறா என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கிறது. இல்லையா?

மேலேயுள்ள இரண்டு பாடல்களும் ஜி.ராமநாதன் இசையில் வந்தன. இரண்டும் சுப்பர் ஹிட் என்பதைவிட, இரண்டு பாடல்களுக்கும் சாருகேசி ராகத்தில் உள்ளன என்பது எனக்கு முந்தாநாள்தான் தெரியவந்தது.. சாருகேசி ராகத்தை எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று யாரும் விட்டுவைக்கவில்லை.

"மலரே குறிஞ்சி மலரே" என்பது எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வந்தது.




கீழேயுள்ளதுவும் சாருகேசி இராகத்தில்தான் உள்ளது. சிம்ரன் ஓடுவதைக் கவனிக்காமல் சாருகேசியைத் தேடவும். (இசை தேவா)




எனக்கு மிக மிகப் பிடித்த சாருகேசி கீழேயுள்ளதுதான். "ஆடமோடி காலடே". ஆக்கியது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் (1767-1847). இதிலிருந்துதான் சாருகேசி பற்றித் கூகிளில் தேடவெளிக்கிடக் கிடைத்தவைதான் மேலேயுள்ளவை. மற்றும்படிக்கு என் சங்கீத அறிவு ஒரு பந்திக்குள் அடங்கிவிடும்.

(வயலின் லால்குடி ஜெயராமன், மிருதங்கம் காரைக்குடி மணி, கஞ்சிரா ஜி.ஹரிசங்கர்)




(ஆரம்பத்தில் அலுப்படித்தால் 3:59 இலிருந்து கேட்கவும். பிறகு, பிடித்திருந்தால் மீண்டும் முழுதாகக் கேட்கலாம் :-))

-------------------------

நன்றிகள்: மேலேயுள்ள லால்குடி அவர்களின் வயலினை ஃப்பேஸ்புக்கில் பகிர்ந்த திரு ஆறுமுக வேல்முருகன் அவர்களுக்கு.

Sunday, December 25, 2011

பி. ஜெயச்சந்திரன் - திருவாளர் underestimated

எனக்கும் பொதுத் திரையிசை இரசனைக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உண்டு. அநேகருக்கும் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அவர் மிக இளைஞனாக இருந்தபோது பாடிய ஒருசில பாட்டுக்கள் விதிவிலக்கு. ஜேசுதாஸ் ஏறக்குறையப் பிடிக்காது எனலாம். ஜேசுதாஸ் பாட்டுக் கேட்டால் ஏதோ ஒரு ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருக்கிறமாதிரி இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு அரும்பொட்டில் அடிவாங்காமல் தப்பிய அனுபவங்கள் உண்டு. இப்பவும் தீவிர ஜேசுதாஸ் ரசிகர்கள் கண்ட இடத்தில் உதைக்கும் 'ஃபத்வா' வெளியிடலாம். அதுபோகட்டும், எனக்கும் சில ஜேசுதாஸ் பாடல்கள் ஆவது பிடிக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அந்தப் பாடல்களைப் பாடியது ஜேசுதாஸ் அல்ல, இன்னொரு மலையாளியான பி.ஜெயச்சந்திரன் என்று தெரியவந்தது.

முதலாவது, ஒருகாலத்தில் சக்கைபோடுபோட்ட, "வசந்தகால நதிகளிலே..."




அடுத்தது, ஒரு காலத்தில் கலக்கிய "ஒரு வானவில் போலே..."




இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.


பின்னே, எனக்குப் பிடித்த இன்னும் இரண்டு பாடல்கள்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே...
(Disclaimer: இப்படிப் பாடினாலும் நகை பட்ஜெட்டில் கைவைக்க முடியாது)



சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...



Wednesday, May 25, 2011

புல்லாங்குழல்

எண்பதுகளின் இறுதியில் வந்த தமிழ் சினிமாப் பாட்டுக்களைக் கேட்டிருப்பீர்களாயின், ஒன்றைத் தவறவிட்டிருக்க மாட்டீர்கள். அநேகமாகப் பாட்டின் ஏதாவது ஓரிடத்தில் "கூக்கூ குக்குக் கூ" என்று ஒரு வரி இருக்கும். இதைச் சிலவேளை ஒரு பெண்குரல் பாடும், அல்லது அநேகமாக ஒரு புல்லாங்குழல் ஊதும்.

இப்படித் தமிழ் சினிமாப் பாடல்களில் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த புல்லாங்குழல், மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. மனிதன் முதல்முதலிற் பாவிதத இசை உபகரணம் இதுதான் என நம்பப்படுகிறது. ஜேர்மனியில் எங்கோ ஒரு குகையிற் கண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல் கிட்டத்தட்ட 35,000 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது என்று அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஐந்து துளைகளைக் கொண்ட இந்தப் புல்லாங்குழல் வல்லூறு ஒன்றின் சிறகு எலும்பிலிருந்து செய்யப்பட்டது.

இன்று இந்தியாவில் பாவிக்கப்படும் புல்லாங்குழல்கள் மூங்கிலினால் ஆனவை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தில் பாவிக்கப்படுவது எட்டுத் விரல்-துளைகளைக கொண்டது. வட இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசையிற் பாவிக்கப்படுவது சற்று நீளமானதாய் இருந்தாலும் ஆறு விரல்-துளைகளை கொண்டது. மேற்கத்தைய புல்லாங்குழல்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்படுபவை. மூங்கில் புல்லாங்குழலுடன் ஒப்பிட்டால் செய்முறை/அமைப்பு என்பன மிகச் சிக்கலானவை.

கிழக்கோ மேற்கோ ஒன்று பிடித்தால் மற்றது பிடிக்கும். இப்போது புல்லாங்குழலால் உலகப்புகழ் அடைந்தவர்கள், இல்லாவிட்டால் புல்லாங்குழலை உலகப் பிரபலமாக்கியவர்களில் ஒரு சிலர்.

(1) சேர் ஜேம்ஸ் கால்வே (Sir James Galway )

"The Lord of the Rings" ஆங்கிலப் படத்தில் வந்த ' உருகி ஓடும் தங்க ஓடை' போன்ற இசையைத் தந்தவர். பார்க்கவும், இவர் இரண்டு விதமான புல்லாங்குழல்களைக் கையாள்கிறார். ஒன்று நாதஸ்வரம் போன்று நேரே பிடித்து ஊதுவது (block flute or recorder). மற்றது நாம் எல்லாருமறிந்த பக்கவாட்டில் பிடித்து ஊதுவது.



(2) ஜோஹ்ன் பியர் ரம்பால் (Jean-Pierre Rampal 1922 -2000)

புல்லாங்குழலில் 'தனி ஆவர்த்தனம்' வாசிக்கலாம் என்று மேற்குலகிற்கு நிரூபித்தவர். அதற்கு முன், புல்லாங்குழல் பத்தோடு பதினொன்றாக குழு இசையில் வாசிக்கப்பட்டது.

Jean-Pierre Rampal plays Mozart

(3) ஷஷாங் சுப்பிரமணியம் (Shashank Subramanyam) மிக இளம் வயதிலேயே அதீதத் திறமையை வெளிப்படுத்தியவர். இவரின் "REMINISCENCE OF BRINDAVAN" இறுவட்டு எனக்கு மிகவும் பிடித்தது. கீழே உள்ளது வேறு ஒன்று. அவரின் இளங்கன்று போன்ற துள்ளல் நடை கவனிக்கத்தக்கது.



(4)Dr என்.ரமணி. இவரின் இறுவட்டு எதுவாகிலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவேன். இன்று வரை ஏமாற்றமடைந்ததில்லை. டி.ஆர்.மகாலிங்கத்திற்குப் பிறகு, அவர் பாணியிலே சில புதுமைகளைப் புகுத்தி கர்னாடக புல்லாங்குழலிசைக்குப் புத்துயிர் கொடுத்தவர்.



(5)இமானுவல் பயூட் (Emmanuel Pahud). பிறந்தது ஜெனீவா வில். வசிப்பது பெர்லினில். இவர் புல்லாங்குழல் பழகியிருக்காவிட்டால், ஹொலிவூட்டிற்கு நடிக்கப் போயிருக்கலாம்! ஆசாமி அவ்வளவு அழகாக இருக்கிறார்.



----
உசாத்துணை:

(1) http://www.britannica.com/
(2) Wikipedia