Sunday, August 26, 2012

சுவையான தேநீர் போடுவது எப்படி?

சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுதான் தேநீர் பிறந்த வரலாறு.

நல்ல தேநீர் போடுவது ஒரு கலை. எல்லோராலும் ஏதோ ஒரு தேநீர் போடமுடியும். அல்லது தேத்தண்ணி ஊத்தமுடியும். ஆனால் ஒரு சிலரால்தான் 'சுவையான தேநீர்' தயாரிக்கமுடியும். தேநீர் போடுவதும் ஒருவிதத்தில் கவிதை எழுதுவது மாதிரித்தான். ஒரு பேப்பர் (இல்லாவிட்டால் ஒரு பஸ் ரிக்கட்டின் பின்புறம்), பேனை, யாரோ ஒருத்தியின் கண்வெட்டு- கவிதை ரெடி. தேயிலைத்தூள், சுடுதண்ணி, சீனி (சென்னையில் இதை ஏன் சர்க்கரை என்கிறார்கள்?), பால் மா (பவுடர்) அல்லது பால், இரண்டொரு பேணிகள் - தேநீர் ரெடி.

மீண்டும் நல்ல தேநீர் போடுவது. அது எல்லாருக்கும் வராது. அந்தக் கைமணம் ஒரு சிலருக்குத்தான் வரும். நானும் வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் இந்த நல்ல தேநீர் போடும் கலையில் தேர்ந்துவிட்டேன். பேராதனைப் ப.க. இல் படிக்கும்போது என் தேநீர் அக்பர் ஹோல் இல் என் 'பாட்ச்' மாணவரிடையே பிரபலம். தேநீர் வாசம் ஹோல் விறாந்தை வழியே பரவிச் செல்ல பக்கத்து அறை மோகன், ராம், சந்திரன், சாஸ்திரிகள், ஆனந்தன் எல்லாம் திடீரென்று ஆனையிறவுத் தாக்குதல், பால்ராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தங்களின் முதற் காதல்கள் பற்றி டிஸ்கஸ் பண்ண அறைக்கு வருவாங்கள். பிறகு என்ன ரண்டு தேத்தண்ணி ஊத்த வெளிக்கிட்ட நான் பதினைஞ்சு இருவது தேத்தண்ணி ஊத்த வேண்டி வரும்.

எல்லாரும் கதைகளுக்கிடையே, "மச்சான் உன்ரை தேத்தண்ணி சுப்பர்" என்று சொல்லுவாங்கள். நக்கலாகச் சொல்வது மாதிரி எனக்கு இருக்கவில்லை.

சாம்பிள்க் கதைகள் இப்படித்தான் இருக்கும்.

மோகன்: மச்சான் இளையராஜா மாதிரி இனி ஒருவன் மியூசிக் போடமுடியாது.
குமார்: இளையராஜாவுக்கும் அவற்றை ரசிகருக்கும் வயசு போட்டுது. இப்ப ரகுமான்தான் காய்.

சாஸ்திரி: மச்சான் சக்தி, இன்னொரு தேத்தண்ணி போடு. நீ போட்டாத்தான் மச்சான் அது தேத்தண்ணி மாதிரி இருக்கும்.

மோகன்:(சூடாக)எவன்டா இளையராஜாவைக் குறைச்சுக் கதைக்கிறது?

சந்திரன்: மக்கள்! இப்ப நாங்கள் சக்தியின்ரை தேத்தண்ணியைப் பற்றிக் கதைப்பம்...

இப்படிச் சூடான தேத்தண்ணியைக் குடித்துக் குடித்துக் கதைக்கும் கதைகள் பிறகு, சூடாகப் போய் அச்சில் என்ன? இணையத்திலேயே ஏற்ற முடியாதளவுக்குப் போய்விடும்.

**************************

தேநீர் போடுவதில் ஒரு சின்ன ரெக்னீக் இருக்கிறது. கனபேர் இதில்தான் கோட்டை விடுவார்கள். தண்ணீரை நன்றாகச் சூடாக்கி, தேயிலைத் தூளை teapot இல் போட்டு தேயிலை சாயம் நன்றாக ஊறுமட்டும் காத்திருக்கவேண்டும். அவசரம் கூடாது. சாயம் நன்றாக ஊறியபின் அதையும் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவேண்டும். பிறகு அளவாகச் சீனியைக் கலந்தால் "சுவையான தேநீர்" ரெடி.

இன்னொரு விஷயமும் இருக்குது. இதைத்தான் 'மா(ர்)க்கற்றிங்' என்பது. நீங்கள் போடும் தேநீரை நீங்களே நல்லது என்று சொல்லிக்கொண்டு திரியவேண்டும். நீங்களே நல்லது என்று சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி நல்லது என்று ஒப்புக்கொள்வார்கள்? இது மட்டுமில்லை, யாராவது மற்றவர்கள் போட்ட தேநீரை நல்லது என்று ஒப்புக்கொள்ளவே கூடாது. அப்படி உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லவேண்டியது "ரீ நல்லாகத்தானிருக்குது, ஆனால் இதில் ஏதோவொன்று குறையுது." கேட்பவரும் ஏதோ ஒன்று குறையுது என்று நம்பத் தொடங்கிவிடுவார்.

எச்சரிக்கை : நான் சொன்னது எதுவும் ஓசித் தேத்தண்ணிக்குப் பொருந்தாது.ஓசித் தேத்தண்ணி எப்பவுமே சுப்பர் (அல்லது சூப்பர்)!!
**************************

நான் கல்யாணம் கட்டிப் 10, 12 வருஷமாகின்றது. காலை எழுந்து பல்லு விளக்கமுன் இரண்டு தேநீர்கள் போடுவேன். ஒன்று எனக்கு, மற்றது மனைவிக்கு. மழை,வெயில், குளிர் என்று காலநிலை மாறினாலும் இது மாறாது. ஆனாலும் இனியும் தேநீர் போட வேண்டுமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதுக்குக் காரணம். மனைவியின் டயறி. மனைவியின் டயறி என்றாலும் படித்துப் பார்க்காதே என்பார்கள். எனக்கு இந்த ஜென்ரில்மன் குணவியல்பு எல்லாம் இல்லை. அண்மையில்தான் வாசித்தேன். இது நான் கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாட்களில் எழுதியிருந்தது.

22-04-2000

அசடு இன்றைக்குக் காலை இரண்டு கப் தேநீர்களுடன் வந்துது.
"என்ன?", என்றேன். தான் தேத்தண்ணி போடுவதில் விண்ணன் என்று ஒரு அரை மணித்தியாலம் கிளாஸ் எடுத்துது.

குடித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு மோசமான ஒரு தேத்தண்ணியைக் குடித்ததில்லை. ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு குடித்தேன்.

"ரீ எப்படீருக்கு?" என்று இன்னும் அசடு வழிந்தது.

"சுப்பர் ரீ'யப்பா!" என்றேன்.