Thursday, December 20, 2012

களவையும் கற்று மறந்தேன் - 1

இது எப்ப நடந்தது என்று மிகச் சரியாக ஞாபகம் இல்லை. ஏழு வயதில் சின்னப் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்புப் படித்தேன். எனவே ஏழு வயதிற்குப் பின்தான். சின்னப் பெடியளுக்கு அப்ப 'வாச்சர் அப்பா' தான் ஹீரோ. வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்திற்குக் வெளியே ஒரு சின்ன இனிப்புக் கடை வைத்திருந்தார். ஒரு ஒலைக் கொட்டில், அதுக்கு ஒரு மரக்கதவு. மரக்கதவில் 'சோக்குக் கட்டி'யால் எதாவது எழுதியிருக்கும். அதில் எழுதியிருப்பது புரியும் வயசல்ல அது.

வாச்சர் அப்பா கடை என்று பெயர் இருந்தாலும் இது கடை என்ற வரையறக்குள் வருமோ தெரியவில்லை. ஓலைக் கொட்டிலின் முன்புறம் ஒரு சிறிய மரக்கதவு. அதைத் தாண்டி உள்ளுக்குப் போனால் இடப்பக்கத்தில் ஒரு மர மேசை. அதில் நீளமான கண்ணாடிப் போத்தல்கள். போத்தல்கள் எல்லாம் புகை பிடித்தமாதிரி மங்கலாக இருக்கும். தோடம்பழ இனிப்பு, ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, மலிபன் பிஸ்கற், என ஒவ்வொன்று ஒவ்வொரு போத்தலினுள். சுருட்டுற் ரொபி என்று இன்னொன்று அநேகமாக ஒரு பொலித்தீன் பைக்குள் இருக்கும். இவ்வளவுதான் 'கடையின்' உள்ளடக்கம்.

கடை அல்லது கொட்டிலின் இன்னொரு பக்கம் ஒரு மண் அடுப்பும் சில சமையல் பாத்திரங்களும் இருக்கும். வாச்சர் அப்பா ஒண்டிக்கட்டை. மனைவி நிறைய நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை.

பள்ளிக்கூடத்தில் இன்டேர்வல் விட்டுவிட்டால் 'கெயார்' இலவச பிஸ்கற்றை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கையில் ஐந்து சதமாவது இருந்தால் பெடி பெட்டைகள் ஓடிப்போவது வாச்சர் அப்பா கடைக்கு. அவரும் அந்நேரத்தில் செமை பிஸி. ஐந்து சதம், பத்துச் சதம், இருபத்தைந்து, ஐப்பது, ஒருரூபா என்று குற்றிக் காசுகளை எண்ணி கேட்பவற்றைக் கொடுத்து மிச்சக் காசும் கொடுக்கவேண்டும்.

"வாச்சர் அப்பா, வாச்சர் அப்பா, ரண்டு தோடம்பழ இனிப்பு, ரண்டு ஐஸ் இனிப்பு, மிச்சத்துக்குப் பல்லி முட்டை இனிப்பு" என்று ஒன்று ஒரு ஒரு இருபத்தந்து சதக் குற்றியை நீட்டும்.

"எனக்கு ரண்டு தட்டு தேங்காய்ப்பூ ரொபி" என்று இன்னொன்று கத்தும்.

"எனக்குக் கெரியா பருப்புச் சரையைத் தாணோய் பெல் அடிக்கப் போகுது" அன்று இன்னொன்று அவசரப் படுத்தும்.

கடையின் வாசலுக்குக் கிட்ட நின்றுகொண்டு, மேல்வகுப்பு அண்ணாமார் சட்டையின் மேல்ப் பொத்தானைத் திறந்திவிட்டு, மேலே பார்த்துக்கொண்டு "கடக் கடக்" என்று சத்தம் வர சோடாக் குடித்துக் கொண்டிருப்பார்கள். "ஏ/எல் வந்தால் பல்லிமுட்டை இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு என்று வகைவகையாகத் தின்னமுடியாது. சோடாவும் விசுக்கொத்தும்தான்" என்று யாரோ ஒரு முனிவர் சாபம் போட்டிருப்பாரோ?

நானும் ஒரு நாள் ஆசையாக அம்மாவைக் கேட்டேன் , "சோடா வாங்க வேணும், காசு தாங்கோ" என்று

"என்னது, பள்ளிக்கூடத்தில் சோடாவோ? இந்த வயதிலோ?" என்று அம்மா திடுக்கிட்டுக் கேட்டா. பின்னேரம் அப்பா வீட்டில் நிற்கும்போது அம்மா சொல்லிக் கேட்டது "பெரியவருக்குச் சோடா வாங்கக் காசு வேணுமாம்" என்று.

"ஏன் அவருக்கு மீசை முளைச்சுட்டுதாமே?" அப்பா சொட்டை விட்டார்.

ஆனாலும் அடுத்த சிலநாட்களில் அப்பா கடைக்குப் போய் வரும்போது இரண்டு ஒரேஞ் பார்லி + ஒரு நேக்ரோ சோடாவும் கால் றாத்தால் மாறி பிஸ்கட்டும் வாங்கிவந்தார்.

அப்பதான் ஒன்று புரிந்தது பள்ளிக்கூட இன்ரவலில் சோடாக் குடிக்க ஒரு மினிமம் அடிப்படைத் தகுதி இருக்குதென்று : மீசை முளைத்திருக்க வேண்டும். அதுக்குப் பிறகு அப்பாவின் ஷேவிங் செற் 'ரைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அக்காலங்களில் இன்ஸ்டன்ட் ஷேவிங் கிரீம் எல்லாம் இல்லை. ஒரு ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப்பு, ஒரு ரேசர், என்று ஒரு செற்' ஆக இருக்கும். அப்பா ஷேவ் எடுப்பதைப் பார்ப்பது ஒரு குதூகலம். ஷேவிங் பிரஷ்'ஐத் தண்ணீரில் நனைத்து, ஷேவிங் சோப்பபில் தேய்த்து நுரை வரச்செய்து அதை முகத்தில் பூசுவார். பிறகு கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு 'கறுக் கறுக்' என்று சத்தம் வர ரேசரால் வழிப்பார். முகத்தை இடைக்கிடை நெளித்து அஷ்ட கோணலாக்குவதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் எண்ணியிருப்பார்.

ஷேவிங் செற் கொஞ்சநாட்களில் அலுத்துப் போக அப்பாவின் 'பேர்ஸ்' ஐக் கவனிக்கத் தொடங்கினேன். நல்ல தோலினாற் செய்யப்பட்டது . புதிதாக வாங்கியபோது மண்ணிற நிறமாக இருந்திருக்கும். இப்ப கொஞ்சம் கறுப்பை அண்டிய நிறமாக இருந்தது. சில்லறைக் காசு வைக்க தனியாக ஒரு சின்ன compartment இருந்தது. இது எப்பவின் கொஞ்சம் உப்பிப் போய் இருக்கும்-ஐந்து சதம், பத்துத் சதம், இருபத்தைந்து , ஐம்பது, ஒரு ரூபா என்று

குற்றிக் காசுகளால். தாள்க் காசு இன்னொரு compartment இல் ; கனக்க அலுப்படிக்காமற் சொன்னால் அப்பா பாவித்த பேர்ஸ் , இப்போது நான் பாவிப்பதை விட அதிகம் வித்தியாசமானதல்ல. வித்தியாசம் அந்தச் சில்லறைக் காசுகள் வைக்கும் தனி 'அறைதான்'.

அப்பாவிற்கோ அல்லது அம்மாவிற்கோ அநேகமாக அவர்கள் தரும் இருபத்தைந்து அல்லது ஐம்பது சத்தத்தில் நிறைய இனிப்பு, ரொபி, கறுவாக்கட்டு என வாங்க முடியாது என்கின்ற பொருளாதார பாடம் விளங்கியமாதிரி இருக்கவில்லை. போதாக்குறைக்கு 'சோடா வாங்க' என்று காசு கேட்கவும் முடியாது. (முதலாம் இரண்டாம் வகுப்புப் பெடியங்களுக்கு மீசை முளைக்காது என்று அந்த வயதிலேயே என் சிற்றறிவுக்கு எட்டிவிட்டது !); எனவே அப்பாவின் பேர்ஸ்'சில் கை வைக்கத் தொடங்கினேன்.

இப்போது நான் திடீர் பணக்காரனாய் விட்டேன். ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகும்போது குறைந்தது ஒரு ரூபா ஆவது கொண்டுபோவேன். இண்டர்வல் மணியடிக்க பாய்ந்தடித்துக் கொண்டுபோய் வாச்சர் அப்பா கடையில் முன்னுக்கு நின்றுவிடுவேன். ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, பருப்புச்சரை, கறுவாக் கட்டு, (சுருள்) , விசுக்கொத்து, அப்பப்ப சோடா என்று நல்ல மிதப்பாகத்தான் கொஞ்சநாள் தின்று தள்ளினேன்.

ஒரு ரூபாவிற்குக் கிட்ட ஏறக்குறையத் தினமும் அபேஸ் பண்ணியும் அப்பா கண்டுபிடித்தமாதிரி இல்லை. எனவே இப்போது இரண்டு ரூபா , மூன்று ரூபா என்று முன்னேறிக் கொண்டிருந்தேன் . சிலநாட்களில் 'மாரித் தவளை' மாதிரி உப்பிப் போயிருக்கும் அப்பாவின் பேர்ஸ் என் கை வண்ணத்திற்குப் பிறகு தேரை மாதிரி ஒல்லியாக போய்விடும். நாள் முழுக்க எப்ப பிடிபடுவனோ என்று பயமாக இருந்தாலும் , தொழிலைக் கைவிடவில்லை. அப்பாவும் பேர்சில் காசு குறைவதைக் கவனித்த மாதிரி இல்லை.

ஒருநாள் மட்டும் அம்மாவிடம் "நீ என்னைக் கேக்காமல் காசு எடுத்தாயோ?" என்று கோவித்துக் கொண்டார். நான் "திடுக் திடுக் கடக் மடக்" என்று நெஞ்சு அடிக்க முழியைப் 'பிரட்டிக்' கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து ஓரிரு நாட்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தேன்; அம்மா தந்த இருபத்தந்து சதம், ஐம்பது சதத்தோடு வாச்சர் அப்பா கடை பட்ஜட் முடிந்துபோனது.

அடிக்கடி வாசிப்பீர்கள். விதி வலியது என்று. அதுமாதிரி எனக்கும் ஒரு "சோதனை" வந்தது. பெரிய தம்பிரான் கோவிலோ அல்லது சொத்தி வைரவர் கோவில் திருவிழாவோ- ஏதோ ஒரு திருவிழா. திருவிழா என்றால் இரவுத் திருவிழாதான். பின்னேரத்திற்குப் பின்தான் கோவில் களை கட்டத் தொடங்கும். மேளம், சின்ன மேளம், நாடகம் என்று இரவிரவாகத் திருவிழா நடக்கும். இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு. சிறுவர்களுக்கு கலர் அப்பளம், 'சோக்கட்டி' இனிப்பு, சோடா, பீடா (இதுக்கும் மீசை முளைக்கவேண்டும், களவாகச் சாப்பிடுவோம்), அது, இது என்று தின்பண்டங்கள் இருக்கும். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விலைவாசி, பணவீக்கம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

"நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்கை என்ரை ஐயா ஐந்து சதந்தான் தந்துவிடுறவர்" என்று அம்மா வியாக்கியானம் வேறு தருவா.

எனக்கு இப்போது இதைப்பற்றிக் கவலை இல்லை. கவலையெல்லாம் தம்பி பார்க்காமல் இருக்கும்போது இனிப்புக்களை வாங்கவேண்டும். இல்லாவிட்டால் நிறைய வாங்கும்போது ஆள் 'அலேர்ட்' ஆகி வீட்டில் வத்தி வைத்துவிடுவான். பிறகு விளக்கம், விசாரணை என்று.... கஷ்டம்.

(தொடரும்)

Saturday, November 17, 2012

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும்

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோவன்னாச் சானா" என்றுதான் வரவேண்டும். இத்தவறை யாரும் கவனிப்பதாக இல்லை.

வயசென்று பார்த்தால் இவருக்கு ஒரு அறுபத்தைந்து மதிக்கலாம். கொஞ்சம் ஒல்லியான ஆனால் உறுதியான தேகம். சட்டை போடமாட்டார். சாரம் -அல்லது கோயில், குளம், விஷேசம் என்றால் வேட்டி அணிவார். மேலே போடும் துவாய், வேட்டியணியும் நாட்களில் நல்ல கைத்தறிச் சால்வையாக மாறும். நெற்றியில் எப்பவும் திருநீறு. போகிறவழியில் கோயில் இருந்தால் சந்தனத்தை எடுத்து நெஞ்சில் பூசுவார். சிக்கனம் எல்லாம் பார்க்காமல் நிறையப் அப்பி விடுவார். ஐந்து ஆறாம் வகுப்புவரை படித்திருக்கலாம். அந்தக் காலங்களில் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆசாமியின் சிந்தனை எல்லாம் எப்போதும் "வயல், குளம், நெல்லு, குரக்கன், வெங்காயம் , மிளகாய், ஆடு, மாடு" என்றுதான் இருக்கும். வேறு எதைப்பற்றியும் கதைப்பதில்லை. நல்ல மனிசன், ஆனால் நல்ல மனிசனாக இருப்பதாற் கொஞ்சம் அப்பாவி.

வைரவ சுவாமியும் ஒரு அப்பாவிதான். கெட்டித்தனமாக நடந்து நல்லூர்க் கந்தன் மாதிரி ஒரு கோவிலில் குந்தியிருக்கத் தெரியவில்லை. மக்கள் ஊருக்கு ஊர் மரத்திற்குக் கீழே ஒரு சூலத்தை நட்டு இது உனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார்கள். சில ஊர்களில் பரிதாபப் பட்டு மூன்று பக்கமும் சுவர் வைத்து ஒரு "இசுக்குட்டி" கோவில் கட்டி வைத்தார்கள். வைரவருக்கும் தணியாத ஆசை. ஒரு 'சோக்கான கோவிலில்' ஆறுகாலப் பூசையுடன் 'செற்றில்' பண்ண. இது சரிவராவிட்டால் சந்நிதி கோவில் மாதிரி ஒரு சுமாரானா கோவில் என்றாலும் பரவாயில்லை என்று ஒரு 'பிளான் B" உம் வைத்துள்ளார். முன்னமே சொன்னேன் வைரவர் கொஞ்சம் அப்பாவிதான். அவருக்கு பசையுள்ள ஒரு ஆசாமியின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்கு ஒரு கோவில் கட்டாமல் காலத்தைக் கடத்துகிறாயா?" என்று நைச்சியமாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு, மூன்று கமக்காரர்களின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்குக் கோயில் கட்டு" என்று நேரடியாகவும் சொல்லிப் பார்த்தார். முதல் ஆள் தீவிர பெரியார் பக்தர். "எடே உழைக்காத கள்ளா! ஓடித்தப்பு" என்று பாதி நித்திரையில் எழும்பிக் கத்தத் தொடங்கினார். இரண்டாவது ஆள் மறதி/மாறாட்டக்காரன். காலை நித்திரையால் எழுந்ததும், "அட, கோவிலுக்கும் பொங்கச் சொல்லி வைரவர் சொன்னவர்" என்று பெண்டாட்டிக்குச் சொன்னர். மனைவி சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. எனவே வைரவருக்குப் பொங்கல் கூடக் கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை வைரவருக்கு 'லக்' அடித்தது. பெரிய கிணற்றடி சின்னையா உடனே அலுவலைப் பார்க்க எண்ணினார். கையில் காசில்லை. அடுத்த போகம் வெங்காயத் தோட்டத்தைப் பத்தாயிரம் கன்றாக்கினார். வைரவருக்கு கோவில் வரப்போகுது என்று புரியத் தொடங்கியது. 'நல்லூர்க் கந்தசாமி" கோவில் மாதிரி இல்லாவிட்டாலும் இப்போதைக்கு ஒரளவு பெரிய கோவில் எனக்கு என்று கனவு காணத் தொடங்கினார் உடம்பும் பூரிப்பாக மாறி மினுமினுக்கத் தொடங்கியது. பெரிய கோவில் என்றால் நல்ல 'பொலிஷ்' ஆகவும் இருக்கவேண்டும்தானே. வைரவருக்கும் தான் கொஞ்சம் 'வெள்ளையாக' மாறினால் என்ன என்று ஒரு சின்ன ஆசையும் வந்தது.

கோவில் விடயத்தில் நடந்ததோ வேறை. கிணத்தடிச் சின்னையாவுக்குக் அடுத்த போகம் வெங்காயம் நல்ல விலைக்குப் போனது. லொறிக் கூலி, நாலம் குறுக்குத் தெரு 'கமிசன் கடைக்காரனின்' வெட்டுக்கள் எல்லாம் போயும் கையில் காசு கனக்க மிஞ்சியது. எல்லாம் "வைரவர் அருள்" என்று சொல்லிக்க கொண்டார். சொல்லிக் கொண்டாலும் "கனவை நம்பிக் கோவில் எல்லாம் கட்டவேண்டுமா?" என்றும் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. என்றாலும் தெய்வக் குற்றம் ஏதாவது செய்ய வேண்டும். சின்னையர் அருகில் உள்ளா ஒரு கொல்லன் பட்டடைக்குப் போனார். திருப்பி வரும்போது நல்ல இரும்பில் 'அடித்த' ஒரு திரிசூலம் ரெடி. அன்றைக்குப் பின்னேரமே ஊருக்கு வடக்குப் புறம் இருக்கிற வெளிக்குப் போனார். வெறுமனே போகவில்லை. பெண்டாட்டி பிள்ளை, குட்டி, மூன்று கடகம் மோதகம், இரண்டு கடகம் வடை, இரண்டு பெரிய கதலி வாழைக் குலைகளுடன்தான் போனார். றோட்டுக் கரையில் இருகிற ஒரு சுமாரான சைஸ் மருத மரத்தைத் தேர்ந்தெடுத்தார். நிலத்தில் முறுகிப் பரவியிருந்த வேரில் திரிசூலத்தைக் கஷ்டப்பட்டுக் குத்தினார். இப்படித்தான் கண்டாமடம் வைரவர் கோவில் வந்த கதை.

வைரவருக்கும் கொஞ்சம் மனக்குறைதான். "மூன்று பக்கமும் சீமந்துச் சுவராவது கட்டியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

**************************

கண்டாமடம் வைரவர் கோவில் இருப்பது ஊரில் இருந்து கொஞ்சத் தூரம் தள்ளி. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் சுடலை. இடம் களிமண் தரை. வெங்காயம், நெல், குரக்கன் ,சாமி (சாமை) எல்லாம் விளையும் காணிகளும் அருகில். என்றாலும் வைரவர் கோவில் இருக்குமிடம் முள்ளுக்காடுகள் நிறைந்த இடம். இடைக்கிடை இருக்கும் வெறும் நிலத்தில் மழை பெய்யுங்காலங்களில் நல்ல பச்சைப் புல் முளைக்கும். பக்கத்தில் நல்ல தண்ணிக் கிணறும் உண்டு. பள்ளிக் கூடம் விட்டபின் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், விடலைகள் இந்த இடத்தில் சந்திப்பார்கள். பெடியளுக்கு தினமும் ஆடு, மாடு மேய்ப்பது, கிட்டிப்புள் விளையாடுவது, வீட்டில் இருந்து களவாகக் கொண்டுவரும் தேயிலைத்தூள், சீனி, உடன் கறந்த பாலுடன் டீ போட்டுக் குடிப்பது என்று அலுத்துவிட்டது. வைரவருக்கும் வடை, வாழைப்பழத்துடன் படையல் கிடைப்பதுவும் அருகி விட்டது. இப்படி ஒருநாளில் தான் ஒரு பெடியன் வைரவருக்கு வேண்டுதல் வைத்தான், "வைரவரே எங்களுக்குத் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தேவையில்லை. தினமும் வடை, மோதகம், புக்கை, வாழைப்பழம் என்று கிடைக்க வழி செய்வாய்" என.

வைரவருக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை. "யார் சொன்னது, இவங்களில் யாரோ ஒருவன் படித்து டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுண்டன் என்று பின்னாட்களில் நன்றாக வந்தால் ஒரு பெரிய சோக்கான கோயில் எனக்குக் கட்ட மாட்டாங்களா என்ன?" என்று கணக்குப் போட்டார். இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கக் கூடாது. முன்னமே சொல்லி விட்டேனே வைரவர் ஒரு அப்பாவி என்று. அத்தோடு வைரவர் கணக்கிலும் 'வீக்'. இருக்கட்டும், வைரவர் அருள் பாலிக்கத் தீர்மானித்தார். அத்தோடு அவர் இப்பதான் 'தீடீரெனத் தெரிவதும் உடனே மறைவதும்' கலையைக் கற்கத் தொடங்கி சுமாரான வெற்றியும் ஈட்டுகிறார். (சிலவேளை சொதப்புகிறார், அநேகமாகச் சரிவருகிறது).

சிலநாட்கள் இப்படியே போய்விட்டது. வைரவருக்கும் இப்போது கனவிற் தோன்றி வேண்டுதல் அல்லது கட்டளை கொடுப்பதில் நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்கள் இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுகிறார்கள் இல்லை. இனிக் கொஞ்சம் 'வித்தியாசமாக' எதையாவது செய்வது என்று தீர்மானித்தார்.

ஒரு புதன்கிழைமை காலை பதினோரு மணி. கோனாச்சானா கண்டாமடம் வைர. கோவிலில் வந்து "அப்பனே, முருகா, வைரவா!" என்று ஒரு கும்பிடு போட்டார். பிறகு செவிகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டார். கண்களை மூடாமலே வேண்டுதல்களைச் சொல்லத் தொடங்கினார்.

"பக்தா கண்களை மூடு" திடீரேன ஒரு குரல் மருதமரத்தில் இருந்து கேட்டது. குரலில் ஒரு தெய்வீகம். ஆனால் ஒருவித கம்பீரமான உத்தரவிடும் தொனி.

"ஐயா நீங்கள் ஆர்?" கோனாச்சானா கண்களைத் திறக்காமல் பயபக்தியாகக் கேட்டார்.

வைரவருக்குக் கடுப்பு. இந்தநேரம் இது "முருகன், சிவபெருமான், பிள்ளையாராக' இருந்தால் இப்படி ஒரு கேள்வி வருமா? என் குரலில் 'தெய்வீகத்தன்மை" போதாதா? எனறு ஒருவித சுய பச்சாபமும் வந்தது. என்றாலும் வைரவர் முடிவெடுத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்றிருந்தார்.

"பக்தா மேலே பார்"

"ஒண்டுமே தெரியல்லையே?"

"கண்களைத் திற பக்தா" ரொம்ப மினக்கெட்டுக் கனிவாகச் சொன்னார் வைரவர்.

இப்பதான் கோனாச்சானா கண்களைத் திறக்கிறார். மருத மரத்தில் ஒரு கரிய குண்டான ஒரு பேர்வழி. சுருட்டை முடி. கொட்டைப் பாக்கு முழி. பெரிய தொந்தி. ஆனால் உறுதியான உடல்வாகு.இரண்டு வேட்டைப் பற்களும் வாயை மூடியிருக்குப்போதே மிக மெலிதாகத் துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தன. இவரின் தந்தையார் இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது வைரவ சுவாமி எப்படி இருப்பார் என்று சொல்லியிருந்தார். எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் இந்த வைரவர் கொஞ்சம் வயசாளி மாதிரி இருந்தார்.

"இது மெய்யா அல்லது யாரும் விளையாடுகிறார்களா?" என்று யோசிக்கும்போதே வைரவர் மறைந்து விடுகிறார். கோனாச்சானாவிற்கும் இது வைரவ சாமிதான் என்று புரிகிறது.

"பக்தா கண்களை மூடு" வைரவர் அவசரமாகச் சொல்கிறார். (கன நேரம் மறைந்திருப்பது சிரமம். அத்தோடு வைரவருக்கும் தன் 'மறைந்திருக்கும்" கலையில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.)

"எனக்குத் தினமும் வடை, மோதகம், புக்கையுடன் படையல் வைப்பாய். அத்தோடு பாயசமும் இருந்தால் நல்லது" வைரவர் கடைசியாகச் சொன்னது இதுதான். கோனாச்சனா அரை மணித்தியாலம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார்.



**************************

கதை ஊரில் பரவி விட்டது. நினைத்ததைவிட அதிகம் பேர் நம்பினார்கள். நம்பியவர்கள் எல்லாம் அள்ளி வழங்க, வைரவருக்குத் தினமும் வடை, மோதகம், புக்கை, சிலநாட்களில் பாயசம் என்று வேட்டைதான். பின்பலனாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் தினமும் இவை கிடைத்தன. இது, இரு கிழமைகள் தொடர்ந்தன. மூன்றாம் கிழமையில் இருந்து வடை இருந்தால் மோதகம் இல்லை அல்லது மோதகம் இருந்தால் வடை இல்லை என்றாய் விட்டது. பிறகு அவற்றின் எண்ணிக்கைகளும் குறையத் தொடங்கியது. நாட் போகப் போக வடை மோதகமெல்லாம் மெலியத் தொடங்கின. ஆடு மேய்க்குக் சிறுவர்களுக்கு இப்போது ஆளுக்குப் பாதி வடை அல்லது மோதகம் கிடைத்தால் அதிசயம்.

தினமும் படையல் என்பது வாரம் ஒன்றாகியது. பிறகு அமாவாசை , பௌர்ணமி என்று சிறப்பு நாட்காளில் மட்டும். பிறகு எல்லாரும் வைரவரை மறந்து விட்டார்கள். வைரவர் மட்டும் கொண்ட கொள்கையில் பிடியாக இருந்தார்.

அன்றைக்கு ஒரு நல்ல பௌர்ணமி நாள். கோனாச்சானா தோட்டத்திற்கு இறைப்பு வேலை முடிந்து அலுத்துப் போய் கண்டாமடம் வைரவர் கோவிலில் "அப்பனே, முருகா, வைரவா!" என்று சொல்லிக்க் கொண்டு சாமி கும்பிடத் தொடங்கினார். இரவு எட்டு மணி இருக்கும். நிலவு உண்மையிலேயே இரவைப் பகலாக்கியமாதிரி எறித்துக் கொண்டிருந்தது.

"பக்தா கண்களை மூடு" அசரீரி கேட்டது. இவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். மரத்தில் அதே வைரவர்தான்.

"பொறுக்கிப் பயலே, என்னை ஏமாத்திறியா?" என்று அருகில் இருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு கோபமாக இவர் வர, மரத்தில் இருந்து குதித்து ஓடித் தப்பினார் வைரவர்.



-------------------------------------

படம் http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_1486.html இலிருந்து

கதைக்குத் தேவையில்லாத குறிப்பு: 'வைரவர்' இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வழிபடப்படும் ஒரு கிராமக் கடவுள். தென்னிந்தியாவில் வைரவர் வழிபாடு இல்லை எனச் சில பதிவுகள் வாயிலாக அறிகிறேன். என்றாலும் கிராமப் புறங்களில் இருக்கும் மாடசாமி, ஐயனார் மாதிரிக் கடவுளர் இதுமாதிரித்தான் என ஊகிக்கிறேன்.

இசுக்குட்டி- மிகச் சிறிய, தம்மாத்துண்டு

Tuesday, October 23, 2012

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?
(20 வழிகள்)

என்று இணையத்தளம் ஒன்றில் வெள்ளைக்கார அம்மணி ஒருவர் எழுதியிருந்தார். அதை நான் எங்கள் 'கலாச்சாரத்திற்குப்' பொருத்தும் வகையில் மொழிபெயர்த்து என் கொமென்ற்'களுடன் கீழே தருகிறேன்.

(1)மனைவியைப் பார்த்துப் புன்சிரியுங்கள். நீங்கள் ஒன்றும கதை/வசனங்கள் பேசத் தேவையில்லை, வெறுமனே ஒரு கனிவான புன்னகையைக் கசியவிடுங்கள். முக்கியம் புன்னகைக்கும்போது அவள் கண்களைப் பார்க்கவேண்டும்.

நீங்களே 'ஒன்றும் பேசத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன? கடைப் பிடித்துப் பார்த்தேன். "சும்மா அசட்டுச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டிருக்காமல் வூல்வேர்த்'துக்குப் போய் இந்த லிஸ்ட்'இல இருக்கிற எல்லாத்தையும் வாங்கி வாங்கோ" என்று ஒரு நீஈஈஈளமான ஒரு பேப்பர்த் துண்டு வந்தது.


(2) அவளிடம் (கோபத்தில்) கத்தவேண்டாம். மென்மையாக, மகிழ்வாக, அடங்கிய குரலில் பேசவும். (அடக்கி வாசிக்கச் சொல்லுறா). அவள் காதுகளில் கத்துவது அவளுக்கு ரொம்பக் கோபமூட்டும். நீங்கள் கத்தாமலேயே அவளுக்குக் காது கேட்கும்.

என்னது? கத்துவதா? மூச். அம்மா தாயே நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?


(3) மனைவி சொல்வதை எப்போதும் கேளுங்கள். அது மிகவும் கஷ்டமானது என்று எனக்குத் தெரியும். உங்களால் அவள் சொல்வதைக் கொன்சென்ரேட் பண்ணிப் புரிந்துகொள்ள முடியாது. அது போறிங்'ஆக இருக்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பாதியில் விட வேண்டி வரலாம். முயற்சி செய்யுங்கள். அவள் முக்கியமான ஒன்றைச் சொல்லவரலாம்.

இதைத்தான் எங்கள் தமிழர் "மனைவி சொல்லே மந்திரம் என்பார்கள்". யாருக்காவது மறுக்கிற துணிச்சல் உண்டா?

(4) மனைவி எதாவது ரிப்பேர், அல்லது வேறு 'அலுப்பு' வேலைகள் செய்யச் சொன்னால் எதையும் பின்போடாதீர்கள். சூடாற முதல் செய்யவும். இதெல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான் அவள் சொல்லுகிறாள்.

நாம் பிறப்பு எடுத்ததே எதற்காக? இதுமாதிரித் தொட்டாண்டி வேலை பார்க்கத்தானே?

(5)உங்கள் மனைவியைப் புகழ்ந்துதள்ளுங்கள். பாசாங்கு பண்ணாமல் 'உண்மையாகவே' சொல்லவும். அவள் 'ஷொப்பிங்' போனால், "உனக்கு என்ன வாங்கினாய்" என்று அக்கறையாகக் கேட்கவும். அப்படிக் கேட்டால்தான் அவள் வாங்கிவந்த "ட்ரஸ்' உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குப் புரியும்.

நான் மெய்யாகவே புகழ்ந்துதான் சொல்லுகிறேன்.. போனகிழமைகூட "நீ கிண்டிய கேசரி நல்லாகத்தான் இருக்குது" என்று புகழ்ந்தேன். 'கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று கோபித்துக் கொண்டாள்.

(6)ரொம்பக் கஞ்சத்தனம் வேண்டாமே. அவளுக்குக் தேவையானல எல்லாவற்றையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டால், அவளுக்குக் காசு செலவழிக்க வேண்டிய தேவை இல்லையல்லவா?

வேறை வழி?

(7)காசை வீணடிக்காதீர்- குடி, பீடி/சிகரட், 'படம்' போட்ட புத்தகம் என்று...

சான்ஸ்ஸே இல்லை

(8) ரொய்லட் மூடியை எப்போதும் மூடி வைத்திருக்கவும். உங்கள் மனைவி இது விசித்திரம் என்று நினைத்தால், உள்ளே உள்ள 'தண்ணீர்' தெரியாமல் இருப்பது அழகு என் விபரிக்கவும்.

இது புரியவே இல்லைங்கோ.

(9) உங்கள் உடைகளை நிலத்தில் வீசி எறியவேண்டாம். உடை மாற்றியதும் அழுக்கு உடைகளை அதற்குரிய 'லோண்டரி பாஸ்கற்' இனுள் போடவும்.

(10) பற்களை ஒழுங்காகத் துலக்கவும்.

(11) ஒழுங்காகக் குளிக்கவும்.

மேலே (9), (10), (11) - ஞாபகம் இருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்ததே யாராவது சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள். சின்ன வயசிலே (அதாவது கல்யாணம் கட்டமுதல்) அப்பா/அம்மா, இப்ப மனிசி. ஆனால் மனிசி ஒருக்கா மட்டும்தான் ஓ(ர்)டர் போட்டது சொன்னது. பிறகு திருப்பிச் சொல்லவேண்டிய தேவை வரவேயில்லை.

(12)குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லவும். அது உங்கள் வேலை, அவளுடையது அல்ல.

நீங்கள் சொல்லமுதலே-- சிட்னியிலே, இந்தச் சில்லுப் பூட்டிய குப்பை வாளிகளை (Wheelie Bins), தந்தைக் குலம்தான் வீதிக்கரைக்கு இழுத்துச் செல்லும். சிட்னியில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலேயும் அப்படித்தான்..

(13) அவளிடம் கார் இருப்பின், சே(ர்)விஸ்ஸிற்கு நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும். எப்போது அடுத்த சே(ர்)விஸ் வருகின்றது என்று நீங்கள்தான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

மேலே (6) ஐப் பார்க்கவும்

(14) ரிவி'யில் என்ன பார்ப்பது என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும். அவள் பார்க்கும் 'மெகா' சீரியலைப் பக்கத்தில் இருந்து முடியும்வரை பார்க்கவும். வெறுமனே தேமே'யென்று பார்த்தால் போதாது. 'சுவாரசியமாகப்' பார்க்கவேண்டும்.

மாட்டேன் போ!! நேற்றுத்தான் "மாற்றான்" பார்த்தேன்.

(15) உங்களுக்கான உடைகளையோ பாதணிகளையோ அவளே தேர்ந்தெடுக்கட்டும். எப்படியும் நீங்கள் தேர்ந்தெடுப்பதைவிட அவை நன்றாக இருக்கும்.

சொந்தமாக ஒரு விருப்பு/வெறுப்பும் இருக்ககூடாது என்கிறீர்கள். இதைத்தான் ஞானிகள் "பற்றற்றிரு" என்றார்கள்.

(16) (மிக முக்கியம்). எக்காரணம் கொண்டும் மனைவிமேல் கோபமாகவே வேண்டாம். ரொம்பச் சூடானால், உடனே வெளியே போய் காலாற நடக்கவும். சூடு இறங்கியபின் உள்ளே வரவும். வந்தவுடன் மனைவிக்கு ஐஸ் வைக்கவும்.

மேலே (2) இல் சொல்லியும் உங்களுக்குத் திருப்தி வரவில்லை. ம்ஹூம். ரொம்பச் 'சூடானால்' வெளியே துரத்தப்படுவீர். எனவே வெளியே கௌரவமாக நாங்களாகவே முதலில் போகச் சொல்லுகிறீர்கள் போல.

(17) மனைவியிடன் 'ஐ லவ் யூ' அடிக்கடி சொல்லவும். நிறைந்த மனத்துடன் சொல்லவும். நக்கல் கூடவே கூடாது.

ற்ம்ம்ம்ம்ம்ப முயற்சித்தேன். "இது நக்கலா? அல்லது கிண்டலா?" என்கிறாள்.

(18)உங்கள் மனைவி எதாவது ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டால், புரிந்துணர்வுடன் நடவுங்கள். குற்றம் சாட்டும் வேலை எல்லாம் வேண்டாமே.

குற்றம் சாட்டும் அளவிற்குத் துணிச்சல்?

(19) நீங்கள் சிக்கலில் மாட்டுப்பட வேண்டாம். அப்படி மாட்டுப்பட்டாலும் அவளையும் உதவிக்கு இழுக்காது நீங்களே தனித்துத் தீர்த்து வைக்கவேண்டும்.

முயற்சிக்கிறேன். மேலே (18) இல் இருக்கிற மாதிரி புரிந்துணர்வு கிடைக்குமா?

(20) (மிக முக்கியம்) அவள் உங்கள் வேலைக்காரி இல்லை. அவள் பேசும்போதெல்லாம் 'கப்சிப்' என்று கேட்கவேண்டியது உங்கள் வேலை. அவள் பேசும்போது குறுக்கிடவேண்டாம்.

ஏற்கெனவே அப்படித்தானே? அவள் பேச, நான் கேட்கமட்டும் முடியும். சின்னச் சந்தேகம். (1) இலிருந்து (20) வரை உள்ளதைப் பார்க்க 'நாமதான்' வேலைக்கா..... சரி சரி எனக்கேன் வம்பு?



---------------

Image from: http://www.cartoonfaces.net/2009/11/cartoon-picture-of-cute-little-dog-with.html

Monday, October 15, 2012

நொந்தபோபால் 2

(கண்டிப்பாக நாற்பது வயது தாண்டியோருக்கு மட்டும்)

பாலகோபாலுக்கும் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று மிகச் சாதாரணமானது. இருவரும் தமிழர். மற்றது கொஞ்சம் முக்கியமானது. இருவரும் பிறந்த ஆண்டும் 1969. வயதைக் கணக்கிட்டால் கோபால் வெறும் 43 வயதான வாலிபன். அட, நம்ம Felix Baumgartner இற்குக்கூட வயசு வெறும் 43 தானே!

கொஞ்சநாளாக கோபாலுக்கு ட்ராபிக் பொலிசுடன் தகராறு. 'பிழையான' இடத்தில் கார் பா(ர்)க் பண்ணியது, 50 கிமீ/ம வலயத்தில் வெறுமனே 65 கிமீ/ம இல் ஓடியது என்று "தம்மாத்துண்டு" விசயங்களுக்குக் எல்லாம் தண்டம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 500 டொலருக்கும் அதிகமாகக் கட்டினான். நொந்து நூலாகிப் போன இவன் இப்ப பஸ்'ஸில்தான் வேலைக்குப் போய் வருகிறான்.(காரை ஓட்டினால்தானே ஃபைன் எல்லாம்?). பஸ்ஸில் குறைந்தது இரண்டு, மூன்று 'தேங்காய்ப்' பார்ட்டிகளாவது கூடவரும். ஆனால் 'தேங்காய்ப்' பார்ட்டிகள் சக 'மண்ணிறத் தோலர்'களுடன் பேசமாட்டார்கள். ஒரு அசட்டு அறிமுகச் சிரிப்புச் சிரித்தாலும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு ஐ'ஃபோனையோ அல்லது ஏதோ ஒரு கொரியன் ஃபோனையோ மும்முரமாகத் தேய்க்கத் தொடங்குவார்கள். இவனும் வெறுத்துப் போய் இப்ப சக மண்ணிறங்களைப் பார்த்துப் புன்னகைப்பதில்லை. 'தானும் ஒரு தேங்காய்ப் பேர்வழியாக ஆகி விட்டேனோ?' என்று ஒரு டவுட்டு மட்டும் அப்பப்ப வந்து போகிறது இவனுக்கு.

ஒரு புதன்கிழைமை இப்படித்தான் இவன் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் வரவில்லை. ஒரு இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க 'சின்னப் பெடியன்' கோபாலுக்குக் கிட்ட வருகிறான்.

"உங்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே?" என்றான் ஒரு சிநேகிதமான புன்னைகையுடன். சுருட்டை முடி, கொஞ்சம் புசுபுசு என்று அகலமான முகமும் சற்றுப் பருத்த உடலும். . மலையாளியாக இருக்கலாம் . கொஞ்சம் மூளையைக் கசக்கியதில் மெதுவாக ஞாபகம் வந்தது.

" மூன்று நான்கு வருடங்களின் முன் உங்களிடம் என் மகன் நீச்சல் பழகினான், உங்கள் பெயர் சாம் என்று நினைக்கின்றேன். உங்களுடன் அதிகம் பேச முடியவில்லை"

"பிரச்சினை இல்லை. பிரியந்த சமரதுங்க என் பெயர், சாம் என்று சுருக்கிவிட்டேன்"

"அப்ப நீங்கள் இலங்கையில் எங்கே"

"கண்டி"

கண்டி என்றதும் குஷியாகிவிட்டான் கோபால். இவன் நான்கு வருடங்கள் படித்தது கண்டிக்குக் கிட்டவுள்ள கம்பஸில்.

"தொண்ணூற்றொன்றில் இருந்து தொண்ணூற்றைந்து வரை நான் பேராதனையில்தான் படித்தேன்"

"அப்போது நான் ஆரம்பப் பள்ளியில்.." சாம் இப்ப ஒரு வயதான பேர்வழியுடன் பேசிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு அசௌகரிய மௌனம் வந்து குந்திக் கொண்டது. "உங்களுக்குக் ஆட்களுடன் கதைக்கப் பேசத் தெரியாதப்பா" என்று மனைவி காதுக்குள் சொல்லுவதுபோல் ஒரு பிரமை இவனுக்கு. இப்படி 'அச்சுப் பிச்சென்று' கதைப்பவர்களை "பெக்கோ" என்று இவன் கல்லூரிக் காலங்களில் அழைப்பார்கள்.

இப்படி அசௌகரியமாகத் தொடங்கிய பஸ் நட்பு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தது. கோபால் தன் பழைய சிறுவயதுக் குறும்புகள் , சிறுபிராய நனைவிடை தோய்தல்கள் என்று பெரிய பாராயணங்களையே மெதுவாக எடுத்துவிட்டான். 'சாம்'உம் தன் பழைய காதல் , ஊரில் புதுவருசத்திற்குக் 'கிரிபத்' சாப்பிட்ட ஞாபகங்கள் -அது இது என்று தன பங்குக்கு எடுத்து விட்டான். இரண்டுபேரும் "புலிக்கதை" கதைப்பதை மட்டும் கெட்டித்தனமாகத் தவிர்த்தார்கள்.

**************************
இப்போது சிட்னியில் "வேலைத்தளங்களில் ஆட் குறைப்புத்தான்' எல்லா இடங்களிலும் பேசப்படும் ஒரு பொதுத் 'தலைப்பு'.

இன்றைக்குக் கதை இப்படிப் போனது.

கோபால்: எனக்கு 'இந்தக்' கம்பனியில் குப்பை கொட்டி அலுத்து விட்டது. ஆள் குறைத்தலில் அகப்பட்டு கொஞ்சக் காசு எடுத்தால் சந்தோசமாக வேறு வேலை எடுத்துவிடுவேன்.

சாம் : உங்களை மாதிரி ஆட்களை இலகுவில் வெளியே அனுப்ப மாட்டாங்கள்.

கோபால் ஒரு கணம் சிலுசிலு என்று உணர்ந்தான். தன்னை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் + அறிவு உள்ளவனை இலகுவில் "வீட்டை போ" என்று சொல்லமாட்டாங்கள் என்று சொல்ல வருகிறான் என்று புளகாங்கிதம் அடைந்தான்.

சாம்: வயசு போனவர்களை இலகுவில் அனுப்ப மாட்டார்கள். அது கம்பனிக்குக் கனக்க காசு செலவழியும் வழி. பதிலாக 'அதிகரிப்புக்களை' நிறுத்தி வைத்தல், உன் வேலை சரியில்லை என்று நொட்டை நொடுக்குச் சொல்லுதல்மாதிரி இம்சை வேலை செய்து நீங்களாகவே வெளியில் போகச் செய்வாங்கள்.

பஸ்'ஸில் வீடு வரும்போது வழியில் இருந்த முதியோர் இல்லத்தைக் கொஞ்சம் பயத்தோடுதான் பார்த்தான் போபால்.


------
அரும்பதவுரை:

'தேங்காய்ப்' பார்ட்டி - Coconut Party- Brown outside, white inside. தங்களைத் தாங்களே வெள்ளையராகப் பாவனைப் பண்ணிக் கொண்டு திரியும் பேர்வழிகள். ஏதோ தங்கள் கெட்டகாலம் தாம் மண்ணிறமாகப் பிறந்துவிட்டோம் என்பது மாதிரித்தான் இவர்களின் உடல் மொழி இருக்கும். சீனர்களில் இருக்கும் இவ்வாறானவர்களை Banana Party என்பார்கள்.

Monday, September 10, 2012

ஓடி வந்தவர்கள்...

சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது...

"எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும்.

பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்திலையொன்றை நடு நரம்போடு இரண்டாகக் கிழித்தா; பிறகு நிதானமாகச் சுண்ணம்பைப் பூசத் தொடங்கினா.

"நான் புதினம் சொல்லப்போக இவள் வெத்திலை போடுறாள்," என்று சின்னாச்சி அலுத்துக் கொண்டா.

"அவள் கிடந்தாள் நீ விசயத்தைச் சொல்லு, " இன்னொரு ஆச்சி சொன்னா.

இது நடப்பது வேதப் பள்ளிக்கூடத்துக்குப் பின்னுக்கு இருக்கிற ஊர்ச்சந்தையில். இதுதான் ஊரில் இருக்கிற ஒரே ஒரு சந்தை.

"ஆரோ ஒருத்தி பிளவுசோடையும் பாவாடை'யோடையும் ஒடிவந்திருக்கிறாளாம், " சின்னாச்சி தொடங்கியது. இப்ப அவாவைச் சுத்தி மூன்று நாலு பேர் வந்தாச்சு.

"இதென்ன புதினம், ஆர் இப்ப பிளவுசும் பாவாடையும் போடுறதில்லை? அது சரி ஏன் ஓடிவந்தவள்?" . கதை தொடர்ந்தது...


கோபாலகிருஷ்ணனுக்கு யாழ்ப்பாணந்தான் பூர்வீகம். சின்ன வயதிலேயே குடும்பத்துடன் ஹற்றனுக்குப் பக்கத்தில் உள்ள குட்டி ஊர் ஒன்றுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்களாம். பிறகு அங்கேயே நல்ல படிப்புப் படித்து, நல்ல வேலை எடுத்துக், கல்யாணமும் கட்டி இரண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று. தானுண்டு, தன் வேலையுண்டு, தான் வாசிக்கும் 'டெய்லி நியூஸ்' பேப்பர் உண்டு என்று அமைதியான குடும்பம். பெண்டாட்டிக்கும் பூர்வீகம் யாழ்ப்பாணந்தானாம். மனிசன் காலைமை நித்திரையாலே முழித்தவுடன் பல்லுத் தீட்டித் தேத்தண்ணி குடிக்க முதல் 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பாராம். வீரகேசரிப் பேப்பரையும் போனாற் போகிறது என்று வாசிப்பாராம். இப்படி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் விதி விளையாடியது 1978 கலவரமாக.

கொஞ்ச நாட்களாக நிலவரம் சரியில்லை. சிங்களவங்கள் எல்லாம் தமிழர்களைத் தேடித் தேடி அடித்துக் கொண்டிருந்தாங்கள். வெட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களின் கடைகள்,வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு அதுவும் போதாது என்று தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இவர் கோபாலகிருஷ்ணன் ஒருநாள் காலைமை வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். பெனியனையும் ட்றவுசரையும் போட்டுவிட்டார். மனைவி சுட்ட தோசையை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் சாப்பிட்டு விட்டுத்தான் ஷேர்ட்டைப் போடுவார். அப்பதான் "அடோ தெமலுப் பண்டி' என்று கத்திக் கொண்டு ஒரு கும்பல் கத்தி, பொல்லுக்களுடன் கொலை வெறியுடன் ஓடிவருவது தூரத்தில் தெரிந்தது. போட்டது போட்டபடி இருக்க மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எதோ விதமாக யாழ்ப்பாணம் வந்து பிறகு எங்கள் ஊருக்கும் வந்து விட்டார். ஓடி வரும்போது அவர் போட்டிருந்தது ஒரு நீளக் காற்சட்டையும், ஒரு கையில்லாத பெனியனும். மனைவி பாவாடையும் பிளவுசும். சாறி கட்டக்கூட அவகாசம் வரவில்லையாம். பிள்ளைகள் போட்டிருந்த உடுப்பு மட்டும். ஒரு மாற்றுடுப்பு இல்லை. ஒரு சதக் காசும் இல்லை.

இவ்வளவு விசயங்களும் 'கோவால்' ஊருக்கு வந்திறங்கி அடுத்தநாளே சந்தைக்கு வந்திட்டுது.

"எண்டாலும் பாவமப்பா, இளங் குடும்பம்" என்றா சின்னாச்சி.

"எங்கடை ஊர்ச் சனங்கள் நல்லதுகள், உதவி செய்யாமலே இருக்குங்கள்?" என்றாவாம் பொன்னம்மா.

இலங்கைத் தமிழர் மேலே இந்தமாதிரி கலவரம், வெட்டுக் குத்து, கடை/வீடு எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையன்கள் சுதந்திரத்தைத் தூக்கித் தந்துவிட்டுப் போன காலத்தில் இருந்து அப்பப்ப நடப்பதுதான். என்றாலும் இது அதிகம் யாழ்ப்பாணத்திற்கு வெளியில்தான் நடக்கும். யாழ்ப்பாணத்தில் என்றால் ரவுண் பக்கம் நடக்கும். ஊர்ச் சனத்திற்கு இந்த மாதிரிக் குடும்பமாகத் துரத்துப் பட்டு வெறுங்கையுடன் வருபவர்களைப் பார்ப்பது இது முதல் தடவை. ஊரில் ஆட்களில்லாமல் இருந்த ஒரு வீட்டைச்சு த்தம் பண்ணி வசிக்கக் கொடுத்தார்கள். (அந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் முன்பு இருந்ததாகக் கதை). தமிழ் உபாத்தியாயர் சில பல புதிய பழைய உடைகளையும் சமைக்கும் பாத்திரங்களையும் ஒரு 'துருவு பலகையும்' கொடுத்தார். கமக்காரர்கள் அரிசி, மரக்கறி கொடுத்தார்கள். உத்தியோகத்தர்கள் 'அஞ்சு, பத்துக்' கொடுத்தார்கள். இல்லாவிட்டால் போட்டுக் கழித்து வைத்த உடுப்புக்களையாவது கொடுத்தார்கள். மீன்கார ஆச்சியும் 'பாவம் ' என்று மீன் கடனாகக் கொடுத்தா. பேப்பர்காரத் தாத்தாவும் கடனாக 'டெய்லி நியூஸ்' பேப்பரும் வீரகேசரிப் பேப்பரும் கொடுக்க ஒத்துக்கொண்டார். "இங்கிலிஷ் படிச்ச மனிசன் வேலை எடுத்துக் கடனைக் கட்டமாட்டானா என்ன?" என்று பேப்பர்காரத் தாத்தா சொன்னாராம்.

கோபாலகிருஷ்னன் மனைவி அன்னலட்சுமி, ஒரு வாரத்திலேயே அயலிலுள்ள பெண்டுகள் குமருகளைச் சிநேகிதம் பிடித்துவிட்டா. அப்பப்ப பிள்ளைகளை அயலிலுள்ள வீடுகளில் விட்டுவிட்டு புருஷனுடன் ரவுண் பக்கம்போய் வருவா. அதுக்கெல்லாம் 'அஞ்சு பத்துக்' கடன் கொடுக்குமளவுக்கு ஊர் ஆட்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. கோபாலும் அவரது 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பும் ஊரில் விரைவில் பரவத் தொடங்கிவிட்டது. ஊரிலே அப்பப்ப 'இங்கிலிசில' மொட்டைக்கடுதாசி எழுதுற மணிவண்ணனுக்குக் கூடக் கொஞ்சம் பொறாமை வரத் தொடங்கிவிட்டது. 'இவருக்கென்ன பெரிய இங்கிலிஸ் தெரியும்?" என்று அலுத்துக் கொண்டானாம். ஆனாலும் கோபாலுக்கு வேலை மாத்திரம் அகப்படுதில்லை. படித்த படிப்புக்கும் தெரிஞ்ச 'இங்லிசுக்கும்' பொருத்தமான வேலை கிடைப்பது என்றால் சிம்பிளா என்ன? ஆனால் இது மீன்கார ஆச்சிக்கும் பேப்பர்த் தாத்தாவுக்கும் புரியவில்லை.

"வீட்டுக்காரம்மா," என்று நைச்சியமாக கூப்பிட்டுக்கொண்டு மீன்கார ஆச்சி வந்தது ஒரு வியாழக்கிழமை.

"இண்டைக்குச் சூடை மீன் காணும்" என்றா அன்னம் என்கிற அன்னலட்சுமி.

"அதில்லை ...." மீன்காரா ஆச்சிக்கு அகதிப் பொம்பிளையிடம் கடன் காசைத் திருப்பிக் கேட்க அசௌகரியம்தான்.

"வீட்டிலை காசு கொஞ்சம் தேவைப்படுது, நீங்கள் தரவேண்டிய நாப்பது ரூவா சொச்சத்திலை ஒரு இருவதையாவது தந்தால் உதவியாக இருக்கும், நாளைக்கு வெள்ளிக்கிழமை நானும் வரமாட்டன். இண்டைக்கே தந்தால்..... "

"ஆச்சி, உண்ணான உனக்குத் தரவெண்டு இருவது ரூவா எடுத்து வைச்சிருந்தனான். பிள்ளைகள் இரண்டுக்கும் காச்சல். டாக்குத்தர்/மருந்துச் செலவுக்கு முடிஞ்சு போச்சுது. கட்டாயம் அடுத்தமுறை தாறன் என்ன?"

மீன்கார ஆச்சி இன்றைக்கும் கடனாகத்தான் மீன் கொடுத்தா. அடுத்த கிழமைக்கும் காசைப்பற்றிக் கதைக்கவில்லை. பேப்பர்த் தாத்தா கொஞ்சம் 'கடுமை'. வீரகேசரிப் பேப்பரை நிறுத்திவிட்டார். இங்கிலிஷ் பேப்பரைத் தொடர்ந்து சப்ளை பண்ணிக் கொண்டுதான் இருந்தார்.

**************************
நாட்கள் போகப்போகக் கஷ்ட ஜீவனம் கோபாலகிருஷ்ணனுக்கு. ஊர் ஆட்களும் உதவிகளைக் குறைக்கத் தொடங்கிவிட்டார்கள். அன்னத்திற்கும் கடன் வாங்குவது சிரமமாய்க் கொண்டிருந்தது. பேப்பர்காரனுக்கு நூற்றி நாற்பத்தெட்டு ரூபாய்கள் பாக்கி. மீன்காரிக்கு எண்பத்தாறு. பக்கத்து வீடுகளுக்கும் ஐம்பது, நூறு, எழுபத்தைந்து என்று. தமிழ் வாத்தியார் மட்டும் அறிந்தவர் தெரிந்தவர் எல்லாரையும் அகதிக் குடும்பத்திற்கு உதவி செய்யப் 'பரப்புரை' செய்துகொண்டிருந்தார். தானும் இயலுமானவரை 'பத்து இருவது' கொடுத்துக் கொண்டிருந்தார். எது நடந்தாலும் காலை வேளைகளில் கோபால் நீளக் காற்சட்டையும், கையில்லாத பெனியனுமாய், வீட்டுக்கு வெளியில் சாய்வுக் கதிரையில் இருந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். கிழமைகளில் ஒரிரு நாட்கள் தம்பதி சமேதராய் ரவுணுக்கும் போய்வருவார்கள். சினிமா பார்க்கத்தான் என்று சின்னாச்சிக் கிழவிக்குத் தகவல் கிடைத்துவிட்டது.

பாக்கியம் அன்ரி அன்று காலை நல்ல 'மூட்'டில் இருக்கவில்லை. முற்றத்திற்குத் தண்ணி தெளித்து பிறகு விளக்குமாறால் கூட்டத் தொடங்கினா. கடுங்கோடை என்பதாலோ அல்லது மனிசனிலிருந்த கோபத்தை விளக்குமாறில் காட்டியதாலோ என்னவோ புழுதி ஒரு படையாகாக் கிளம்பியது. அரை மணித்தியாலத்திற்கு முதல்தான், மனிசன் 'கல்யாணம் கட்டி இருவது வருசமாச்சு, இன்னும் ஒழுங்காத் தோசை சுடத் தெரியல்லை' என்று கத்திப் போட்டுச் சாப்பிடாமல் போய்விட்டார். கல்யாணம் கட்டிய புதிதில் , "பாக்கியம் இது தேவலோகத்துத் தோசை'யப்பா" என்று சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்.

அன்னமும் கோபாலும் புழுதிக்குள்ளால் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். கூடவே குழந்தைகள்.

"இண்டைக்கு ஒருக்கா ரவுணுக்குப் போய் வாறம். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுகிறியளே?" என்றா அன்னம். கோபால் இங்லிஷ் பேப்பரை நிதானமாக மடித்து பையினுள் வைத்துக் கொண்டிருந்தார். மனிசன் பேப்பர் இல்லாமல் எங்கேயும் போகாது.

"ஐயோ இண்டைக்கு ஏலாது, நானும் மனிசனும் இண்டைக்குப் படம் பாக்கப் போறம்" என்று ஒரு பச்சைப் பொய்யை எடுத்து விட்டா.

"சரி பின்னை" என்று விட்டுக் குடும்பமா ரவுண் புறப்பட்டுச் சென்ற கோவால் குடும்பத்தை யாரும் அதுக்குப் பிறகு காணவில்லை.

**************************

கடன் கொடுத்த, கொடுக்காத ஊர்ச்சனங்கள் கொஞ்சநாள் இவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களின் பின், ஏதோ ஒரு சினிமாத் தியேட்டரில் இருவரையும் கண்டதாக யாரோ பேசிக் கொண்டார்கள். பிறகு இவர்களை மறந்து விட்டார்கள்.

தமிழ் வாத்தியார் மட்டும் கனகாலத்திற்கு "பாவமப்பா அதுகள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


Sunday, August 26, 2012

சுவையான தேநீர் போடுவது எப்படி?

சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுதான் தேநீர் பிறந்த வரலாறு.

நல்ல தேநீர் போடுவது ஒரு கலை. எல்லோராலும் ஏதோ ஒரு தேநீர் போடமுடியும். அல்லது தேத்தண்ணி ஊத்தமுடியும். ஆனால் ஒரு சிலரால்தான் 'சுவையான தேநீர்' தயாரிக்கமுடியும். தேநீர் போடுவதும் ஒருவிதத்தில் கவிதை எழுதுவது மாதிரித்தான். ஒரு பேப்பர் (இல்லாவிட்டால் ஒரு பஸ் ரிக்கட்டின் பின்புறம்), பேனை, யாரோ ஒருத்தியின் கண்வெட்டு- கவிதை ரெடி. தேயிலைத்தூள், சுடுதண்ணி, சீனி (சென்னையில் இதை ஏன் சர்க்கரை என்கிறார்கள்?), பால் மா (பவுடர்) அல்லது பால், இரண்டொரு பேணிகள் - தேநீர் ரெடி.

மீண்டும் நல்ல தேநீர் போடுவது. அது எல்லாருக்கும் வராது. அந்தக் கைமணம் ஒரு சிலருக்குத்தான் வரும். நானும் வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் இந்த நல்ல தேநீர் போடும் கலையில் தேர்ந்துவிட்டேன். பேராதனைப் ப.க. இல் படிக்கும்போது என் தேநீர் அக்பர் ஹோல் இல் என் 'பாட்ச்' மாணவரிடையே பிரபலம். தேநீர் வாசம் ஹோல் விறாந்தை வழியே பரவிச் செல்ல பக்கத்து அறை மோகன், ராம், சந்திரன், சாஸ்திரிகள், ஆனந்தன் எல்லாம் திடீரென்று ஆனையிறவுத் தாக்குதல், பால்ராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தங்களின் முதற் காதல்கள் பற்றி டிஸ்கஸ் பண்ண அறைக்கு வருவாங்கள். பிறகு என்ன ரண்டு தேத்தண்ணி ஊத்த வெளிக்கிட்ட நான் பதினைஞ்சு இருவது தேத்தண்ணி ஊத்த வேண்டி வரும்.

எல்லாரும் கதைகளுக்கிடையே, "மச்சான் உன்ரை தேத்தண்ணி சுப்பர்" என்று சொல்லுவாங்கள். நக்கலாகச் சொல்வது மாதிரி எனக்கு இருக்கவில்லை.

சாம்பிள்க் கதைகள் இப்படித்தான் இருக்கும்.

மோகன்: மச்சான் இளையராஜா மாதிரி இனி ஒருவன் மியூசிக் போடமுடியாது.
குமார்: இளையராஜாவுக்கும் அவற்றை ரசிகருக்கும் வயசு போட்டுது. இப்ப ரகுமான்தான் காய்.

சாஸ்திரி: மச்சான் சக்தி, இன்னொரு தேத்தண்ணி போடு. நீ போட்டாத்தான் மச்சான் அது தேத்தண்ணி மாதிரி இருக்கும்.

மோகன்:(சூடாக)எவன்டா இளையராஜாவைக் குறைச்சுக் கதைக்கிறது?

சந்திரன்: மக்கள்! இப்ப நாங்கள் சக்தியின்ரை தேத்தண்ணியைப் பற்றிக் கதைப்பம்...

இப்படிச் சூடான தேத்தண்ணியைக் குடித்துக் குடித்துக் கதைக்கும் கதைகள் பிறகு, சூடாகப் போய் அச்சில் என்ன? இணையத்திலேயே ஏற்ற முடியாதளவுக்குப் போய்விடும்.

**************************

தேநீர் போடுவதில் ஒரு சின்ன ரெக்னீக் இருக்கிறது. கனபேர் இதில்தான் கோட்டை விடுவார்கள். தண்ணீரை நன்றாகச் சூடாக்கி, தேயிலைத் தூளை teapot இல் போட்டு தேயிலை சாயம் நன்றாக ஊறுமட்டும் காத்திருக்கவேண்டும். அவசரம் கூடாது. சாயம் நன்றாக ஊறியபின் அதையும் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவேண்டும். பிறகு அளவாகச் சீனியைக் கலந்தால் "சுவையான தேநீர்" ரெடி.

இன்னொரு விஷயமும் இருக்குது. இதைத்தான் 'மா(ர்)க்கற்றிங்' என்பது. நீங்கள் போடும் தேநீரை நீங்களே நல்லது என்று சொல்லிக்கொண்டு திரியவேண்டும். நீங்களே நல்லது என்று சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி நல்லது என்று ஒப்புக்கொள்வார்கள்? இது மட்டுமில்லை, யாராவது மற்றவர்கள் போட்ட தேநீரை நல்லது என்று ஒப்புக்கொள்ளவே கூடாது. அப்படி உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லவேண்டியது "ரீ நல்லாகத்தானிருக்குது, ஆனால் இதில் ஏதோவொன்று குறையுது." கேட்பவரும் ஏதோ ஒன்று குறையுது என்று நம்பத் தொடங்கிவிடுவார்.

எச்சரிக்கை : நான் சொன்னது எதுவும் ஓசித் தேத்தண்ணிக்குப் பொருந்தாது.ஓசித் தேத்தண்ணி எப்பவுமே சுப்பர் (அல்லது சூப்பர்)!!
**************************

நான் கல்யாணம் கட்டிப் 10, 12 வருஷமாகின்றது. காலை எழுந்து பல்லு விளக்கமுன் இரண்டு தேநீர்கள் போடுவேன். ஒன்று எனக்கு, மற்றது மனைவிக்கு. மழை,வெயில், குளிர் என்று காலநிலை மாறினாலும் இது மாறாது. ஆனாலும் இனியும் தேநீர் போட வேண்டுமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதுக்குக் காரணம். மனைவியின் டயறி. மனைவியின் டயறி என்றாலும் படித்துப் பார்க்காதே என்பார்கள். எனக்கு இந்த ஜென்ரில்மன் குணவியல்பு எல்லாம் இல்லை. அண்மையில்தான் வாசித்தேன். இது நான் கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாட்களில் எழுதியிருந்தது.

22-04-2000

அசடு இன்றைக்குக் காலை இரண்டு கப் தேநீர்களுடன் வந்துது.
"என்ன?", என்றேன். தான் தேத்தண்ணி போடுவதில் விண்ணன் என்று ஒரு அரை மணித்தியாலம் கிளாஸ் எடுத்துது.

குடித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு மோசமான ஒரு தேத்தண்ணியைக் குடித்ததில்லை. ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு குடித்தேன்.

"ரீ எப்படீருக்கு?" என்று இன்னும் அசடு வழிந்தது.

"சுப்பர் ரீ'யப்பா!" என்றேன்.


Wednesday, June 13, 2012

சின்னாம்பி

சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் 'கொமென்ட்' போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று 'அப்பாவிகள்' தொடர்ந்து 'கொமென்ட்' போடுகிறார்கள். அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை 'தலைப்பு'ப் போட்டால் அதைப்பற்றி எழுதாமல் என்னவோ எல்லாம் எழுதுவேன். எனது பெறாமகள் ஒருத்தி 4ம் வகுப்புப் படிக்கிறாள். தமிழ்ப்பாடத்தில் 'ஆடு' என்று தலைப்புப் போட்டு "எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்" என்று தொடங்கி நிறைய எழுதி '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு' என்று முடித்தாள். இப்பதானே எல்லாம் ஜீன்ஸ், ஜெனிடிக் என்று ஆராயிறாங்கள். அதொன்றுதான் பரம்பரையிலே ஒடுதுபோல.

சரி, நான் சொல்லப்போற விஷயம் கொஞ்சம் சிக்கலானது. சரியாகப் புரியாவிட்டால் என்னை லூசு என்றுதான் நினைப்பீர்கள். இதைச் சொல்லுறது கொஞ்சம் கஷ்டம். முயற்சிக்கிறேன். முதல்ல எச்சரிக்கை நான் சொல்லப்போறது உண்மை, கற்பனையில்லை. பின்நவீனத்துவப் பிசுக்கோத்தும் இல்லை. அவன் ஒரு விநோதன். சின்னாம்பி என்பது நான் அவனுக்கு வைத்த பெயர்தான். அவனுக்குப் பெயர் இல்லை. "உனக்கு பெயர் என்னடா" என்று அவனை ஒருமுறை கேட்டேன்.

"எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்" என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன். சின்ன வகுப்பிலை கணக்கு வாத்தியார் சொல்லுவார், "நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்" என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது.

நான் குழம்பினமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "சரி உனக்குப் பெயர் சின்னாம்பி" என்று வைத்துவிட்டேன். சரி உங்களுக்குச் சொன்னால் என்ன? சின்னாம்பியைப் பற்றி உங்களுக்குத்தான் முதல்லே சொல்லுகிறேன். பெண்டாட்டிக்குக் கூடச் சொல்லவில்லை. அவள் முந்தியே 'மனிசன் லூசு சந்திப்புக்களுக்கு (அதுதான் 'இலக்கியச் சந்திப்புக்கள்') போகிறார் என்கிறாள். அதிலே இதைச் சொல்லி ஏன் வீண்வேலை. கடைசியாப் போன சந்திப்பிலே வேட்டியை உருவிறமாதிரி நாலு கேள்வி கேட்டாங்கள்;சரி அது இருக்கட்டும். திருப்பப் பாருங்கோ சின்னாம்பியில் தொடங்கி வேட்டியில் வந்து நிற்கிறேன்.

சின்னாம்பியை எப்ப முதலில் சந்தித்தேன்? அதுவுமொரு சின்ன அதிர்ச்சிதான்.நானும் 'நானுண்டு என் மொக்கைப் பதிவுண்டு' என்றுதான் இருந்தேன். யாரைவாவது திட்டி எழுதிப் கொஞ்சம் பிரபலமாகுவமென்று ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேனாம். பின்னும் "கீக் கீக்"என்று ஒரு சாதியாச் சிரித்துக் கேட்டுது. 'ஷிவ்ட்' கீ வேலை செய்யவில்லையென்றுதான் யோசனை ஓடியது. என்றாலும் திருப்ப "கீக் கீக்"என்று சிரித்துக் கேட்டது. சத்தம் அந்தக் காலத்து 'கட்டை ஸ்பீக்கர்'இலிருந்து வருகிறமாதிரி, ஸ்டீரியோ இல்லை. "யாரடா அது?" என்று அதட்டினேன்.

எதிரில் பணிவாக "ஐயா வணக்கம்" என்று வந்தான். சாதாரண உயரம், சாதாரண உருவம், சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலை. இரண்டு பந்தி வர்ணித்து உங்களை இம்சைப்படுத்தி இருக்கலாமில்லையா?

"எப்படி வந்தாய், முன்கதவு பூட்டியிருக்கே?"
"நான் ஏன் வரவேண்டும், நான் இங்குதான் எப்பவும் இருக்கிறேன்!"
"ஓஹோ தாங்கள்தான் கடவுளோ?"
"அதுதான் இல்லை, நானும் உன்னைமாதிரி ஒரு சாதாரணன்".
"கண்டுபிடித்து விட்டேன் நீ யாரென்று, பழைய நாடகங்களில் நீ நல்ல பேமஸ். நீதான் என் மனச்சாட்சி"
"கஸ்மாலம், கொஞ்சம் வித்தியாசமாக யோசி, இன்னும் பழைய காலத்திலை நிக்கிறாய். 'நனவிடை தோய்தல்' சக்கரவர்த்தி என்று மெல்பனில் இருந்து விருதெல்லாம் வரப்போகுது!"
"விருதா, நல்லதுதானே யப்பா!"
"இது நக்கல் விருது ஓய்,உமக்கு வயது போட்டுது என்று பூடகமாசச் சொல்லுறாங்கள்"

நானும் 'பதிவுலகத்திலே இது சகஜமப்பா'என்று இருந்துவிட்டேன்.

என்னோடு அந்தக் காலத்திலே படித்த உதயன் அடிக்கடி சொல்லுவான் "xyz இலே இதெல்லாம் சகஜமப்பா" என்று. இதிலே xyz என்னவாகவும் இருக்கலாம். உதாரணம் 'வாழ்க்கை, யானைபிடிப்பது, கொய்யாக்காய் களவெடுக்கிறது". இப்ப அவன் phD முடித்து அமெரிக்காவிலே. இவனைப்பற்றிச் சொல்லப்போனால் அது பெரிய கதை. ஆறாம் வகுப்பிலே தமிழ் வாத்தியாரைப் பிடிக்கவில்லை என்று கவிதை எழுதினான். வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு இடியப்பமும் சொதியும் மட்டுமே என்பது ஊரறிந்த இரகசியம், மத்தியானச் சோற்றிலும் மீந்துபோன சொதியை ஊற்றித் தின்னுவார். சொதியர் என்றுதான் அவரை ஊரிலே தெரியும்.

"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?"


எப்பவுமே சிரிக்காத தமிழ் வாத்தியார் இதை வாசித்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். கடைசி வரி சரியில்லை என்று 'கொமெண்ட்' போட்டும் கொடுத்தார். கேதீஸ்வரனுக்கு இந்தச் சந்தங்களொன்றும் பிடிக்காது.

"முறிந்த பிரம்பொன்று
சொல்லிச் சென்றது
வாத்தியாரின் கொதியை..."


என்று எழுதவேண்டும் என்று திருத்தம் கொடுத்தான். நான் தலையைப் பிறாண்டிக் கொண்டேன்.

"டேய் உனக்குக் கவிதை எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது, விட்டுர்ரா!"

திடுக்கிட்டு விட்டேன். இவனுக்கு நான் நினைப்பதுவும் தெரிகிறது.

"சின்னாம்பி" பரிதாபமாத் தொடங்கினேன்,"உனக்கு நான் நினைப்பதுவும் தெரியுதா?"
மீண்டும் "கீக் கீக்" என்று சிரித்தான் சின்னாம்பி. "அந்த 'அறிவில்' நான் கொஞ்சம் வீக்... நீ நினைப்பதில் ஒரு பகுதிதான் எனக்குத் தெரிகிறது, முழுக்கத் தெரியுதில்லை " என்று கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"சரி இப்ப சொல்லு நீ ஆர்?" பரிதாபமாகக் கெஞ்சினேன்.

"கேள்விக்குக் கேள்வி, மனிதனுக்கு எத்தனை அறிவு உண்டு?"

ஏழு என்று சொல்ல யோசித்து, "ஆறு" என்றேன்.

"எமக்குப் பன்னிரண்டு" என்றான்.


(தொடரலாம்)


-----------
கொதி -கடுங்கோபம்
சவர்க்காரம்- soap

Sunday, June 10, 2012

நொந்தகோபால்

இரண்டு பெண்கள் பேசிக்கொண்டது.
இடம்: சிட்னியின் மேற்குப்பக்க புறநகர் ஒன்று

"ஐசே நான் உங்களை எங்கையோ பாத்திருக்கிறன்..... நீங்கள் லேடீஸ் கொலிஜ்'சே?"
"ஓம், நான் 92 ஏ/எல் பாட்ச், நீங்கள்?"
"நான் 93!"
"எப்படி இருக்கிறீயள்"

"------"
...
"------"
கதை ஒரு பத்து நிமிசம் உப்புச் சப்பில்லாமல் போகுது. பிறகு

"ஐசே, உங்கடை மனிசன்ர பேரென்ன?"
"பாலகோபால்"
"ஓ, உயரமா சிவலையா இருப்பாரே?
இரண்டாவது பெண் கொஞ்சம் அசௌகரியமாகிறார். "ம்ம்ம்"
"உத்துப் பாத்தா கமலின்ரை சாயலடிக்கும்.."
"அப்படித்தான் அவர் நினைக்கிறார், உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?" என்றார் உடனே
"நான் கம்பசிலை அவருக்கு ஜூனியர்"
"ம்ம்ம் நான் வேறை கம்பஸ்!?"
"கோபால் நல்ல முசுப்பாத்தி. கடி ஜோக் நெடுகச் சொல்லி எல்லாரையும் சிரிக்கவைப்பார்."
"ம்ம்ம்"
"ஆனாப் பாருங்கோ அவர் கொஞ்சம் 'லெவல்' பேர்வழி, அவர் மாதிரி இருந்தால் கொஞ்சம் லெவல் வரும்தானே?"
"ம்ம்ம்"
"அது சரி இப்பவும் அவர் ஷூ'வை நல்லா மினுக்கித்தான் போடுறவரே? அப்ப அவர் ஷூ'வைப் பள பள எண்டு கண்ணாடி மாதிரிதான் வைச்சிருப்பார்"
கொஞ்சம் எரிச்சலோடு, "ஆருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் வருது..."

"சரி ஐசே, நானொருக்கா என்ரை மனிசனையும் கூட்டிக் கொண்டு உங்கடை வீட்டுக்கு வாறன்.கோபாலின்ரை கடி ஜோக்'குகளைக் கேட்டுக் கனகாலம் ஆச்சு, எப்ப ப்ரீ'யா நிப்பியள்?"

"இப்ப எங்களுக்கு நேரமில்லைப் பாருங்கோ, பெடியனுக்கு எக்ஸாம் வருது, பிறகு நேரம் வரேக்கை பாப்பம்...இப்ப நேரம் போயிட்டுது, நான் வரட்டே"

-----
பாலகோபாலுக்கு அட்வைஸ் :"ஆம்பிளை வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!"

Friday, June 8, 2012

மழை

இரவெல்லாம் ஒரே மழை. சாக்குக் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்திருக்க நன்றாக இருந்தது. ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது. போன கிழமை இப்படி இரவு முழுக்க மழைபெய்த ஒரு இரவில்தான் ஷெல் விழுந்து பன்னிரண்டு பேர் ஏதோ ஒரு ஊரில் செத்தார்கள். ஈழநாடு,ஈழமுரசு, உதயனில் எல்லாம் தலைப்புச் செய்தி. நான்கு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள். ரூபவாஹினி ரிவி "நேற்றிரவு பலாலி இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இராணுவம் முறியடித்துப் பதில் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்" என்றது. இன்றைக்கு அப்படி இராது. இருக்கக்கூடாது. சந்நிதி முருகன் பார்த்துக் கொள்வார். "அவருக்கு அவற்றை தேர் ஐக் காப்பாற்ற முடியவில்லை, ஆக்களைக் காப்பாற்றப் போறாறோ?" என்று சேந்தன் அண்ணா கேட்பார். அவர் நிறையச் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் வாசிப்பார். புத்தகங்கள் எல்லாம் பூர்ஷ்ஷவா, நிலவுடமை, சுரண்டல், உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என்று இருக்கும். ஒன்றும் புரியாது. ஒரு புத்தகத்திலும் ஒரு படமும் போட்டிருக்காது. நான் படம் போட்ட புத்தங்கள்தான் வாசிப்பேன். "ரொபின்சன் குறூசோ" கூட மழை பெய்த ஒரு நாளில்தான் சேந்தன் அண்ணாவின் புத்தக அலுமாரியில் கண்டு பிடித்து வாசித்தேன். "ரொபின்சன் குறூசோ" இற்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு/வெள்ளை புகைப்படங்கள் நிறையப் போட்ட ஒரு புத்தகமும் இருந்தது.

காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஒரே மழை இருட்டு. வெள்ளம் வடிந்திருந்தது. நிலம் சுத்தமாக இருந்தது. நிலத்தில் அட்டைகளும் நத்தைகளும் ஊர்ந்து திரிந்தன. மரங்களும் மழையில் கழுவுப்பட்டுச் சுத்தமாக இருந்தன. கிளிகள், குருவிகள் என்று கலவையாகச் சத்தம் கேட்டது. "கோபால் பற்பொடி நேரம் காலை ஏழு மணி" என்று றேடியோ சொன்னது. பொங்கும் பூம்புனல் அடுத்ததாக இருக்கலாம். றேடியோவை முடுக்கினேன், ஆமி றேடியோவில் "சிட்டூக்குச் செல்லச் சிட்டூக்குச்-சிறகு முளைத்தது.." என்று யேசுதாஸ் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தார். இடையில் எந்நேரமும் பாட்டு நிறுத்தப்பட்டு, "அச்சுவேலி, இடைக்காடு ,அவரங்கால் மக்கலுக்கு.....பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதால் உடனடியாக பதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும்... " என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இஸ்ரேல்காரன் 'அத்துலத் முதலி'க்குக் கொடுத்த அட்வைஸ் இப்படித்தான் இருந்திருக்க்கும்.

"இண்டைக்கு அடுப்பு மூட்டுவது கஷ்டம், விறகு எல்லாம் ஈரம், போய்ப் பாண் வாங்கி வா" என்றா அம்மா. மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாண்காரனும் மழை என்பதாற் பிந்தித்தான் கடைகளில் 'சப்ளை' பண்ணியிருப்பான். பாண் சூடாகத்தான் இருக்கும்.

அப்பா வாங்கித் தந்த ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். என்றாலும் அதில் ஒரு பிரியம். ஓ/எல் பரீட்சைக்கு அதில்தான் போனேன். மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார்.

மண் ரோட்டில் சைக்கிள் ரயர் தடம் பதிந்த அடையாளங்கள் தெரிந்தன. குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரை விலக்கச் சைக்கிளை வெட்டி வெட்டி ஓட வேண்டியிருந்தது. "சரக்க்" என்று சத்தம் கேட்டது. அட்டையோ நத்தையோ ஒன்று ரயரில் நெரிந்து போயிருக்கவேண்டும். ஒருகணம் அரியண்டம், பிறகு பிறகு பரிதாப உணர்ச்சி. புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே? தூரத்தில் இடைக்கிடை துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. ஒன்றிரண்டு சூட்டுச் சத்தங்கள் கேட்டாலே தலை தெறிக்க எதிர்த் திசையில் ஓடும் காலம் கழிந்து, 'தூரத்தில் தானே'என்று அசண்டையாக இருக்கும் காலமிது. ஈரக்காற்று முகத்தில் அடித்தது... நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கோண்டு மெலிதாக நடுங்கிக்கொண்டு இரண்டொரு பெரிசுகள் நடந்து போய்க்கொண்டிருந்தர்கள். ('இந்தக் காலத்துப் பெடியளுக்குக் குளிர்ச்சட்டை தேவைப்படுது, நாங்களும் இருக்கிறமே, இந்த அறுவைத்தஞ்சு-எழுவது வயதிலும் சட்டையே இல்லாமல் நடந்து திரியுறம், இது ஒரு குளிரே?)

திடீரென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இப்பதான் முதல் முதலில் வெயில் அடிப்பதுமாதிரி ஒரு சுத்தமான புது வெயில். கண்கூசியது. தும்பிகளும், வண்ணத்திப் பூச்சிகளும் பறக்கத் தொடங்கின. முன்பு எங்கு ஒளித்திருந்தன? தூரத்தில் ஹெலிகொப்ரர் பறப்பது கேட்டது. ஹெலிகொப்ரர்காரன் என்றால் கண்ணில் பட்ட யாரையும் துரத்திச் துரத்திச் சுடுவான். "பிளேன்"காறன் என்றால் முன்பே திட்டமிட்டிருந்தால் தான் குண்டு போடுவான். போற வாற வழியில் "எந்நேரமும் எவருக்கும்" வஞ்சகமில்லாமல் சுடுவது ஹெலிகாரன்தான். நினைத்தது மாதிரி 'ஹெலிச்சூட்டுச்' சத்தம் கேட்டது, தூரத்தான். கிட்ட வந்தால் கண்ணில் அகப்பட்ட வீட்டுக்கு புகுந்து தலைக்கறுப்பையும் சைக்கிளையும் மறைக்கவேண்டும். '50 கலிபரா?, 60 கலிபரா' ? எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பிய்த்தெறியப் போதும். சிலவேளை ஜாம்பழப் போத்தலில் கைக்குண்டைப் நுளைத்து, அதைச் சும்மா மேலேயிருந்து போட்டுவிடுவாங்கள். அப்படி ஒன்று விழுந்துதான் எங்கள் கணக்கு வாத்தியார் ஒருவர் இறந்து போனார்.

மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். அவ்வளவு இருட்டு. மழை எந்நேரமும் பெய்யலாம். அல்லது ரூபவாஹினியில் சொல்வதுமாதிரி 'மழை பெய்யக்கூடும்' . அதுக்குமுன் பாணோடு வீடு போகவேண்டும். இரண்டரை இறாத்தல் பாண் வாங்கவேண்டும். அதில் ஒரு இறாத்தல் "அச்சுப்" பாண், மிகுதி "ரோஸ்" பாண். 'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும். பாணுக்கு கோழிக்கறி நல்ல பொருத்தம்-அதுவும் மழை நாட்களில். இல்லாவிட்டால் போனாப் போகுது என்று தேங்காய்ச் சம்பலோடு சாப்பிடலாம், அதுவும் நல்லாத்தான் இருக்கும். மழைக்கு இடித்த அரிசிமாப் புட்டும் நல்லாகத்தான் இருக்கும். வெளியில் மழை பெய்ய , வீட்டு விறாந்தையில் குந்தியிருந்து, புட்டை தேங்காய்ச் சம்பலோடு... காமுகன் என்பவன் எந்த நேரமும் பொம்பிளையைப் பற்றி யோசிப்பானாம், நான் மழை வந்தால் சாப்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறேன்.

**************************

பின்னேரம் ஆகியும் இருட்டு விலகவில்லை. இனி வெளிச்சம் நாளை காலை வந்தால்தான் உண்டு. வயல் வெளியில் நடுங்கிக் கொண்டு நடந்தேன். சுருக்கிய குடை கையில். குளிர் காற்றுக் காதில் வீசியது. வயல் கட்டில் 'பலன்ஸ்' பண்ணி நடக்க நாரியை நெளித்து இடைக்கிடை ஒரு சின்ன ஓட்டம் ஓட வேண்டியிருந்தது. எதிரில் சின்ராசு அண்ணை "தண்ணீஈஈ கருக்கையிலே அங்கே தவளை சத்தம் கேட்டீஈஈருச்சு..." என்று பாடிக்கொண்டு வந்தார். என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி , "தம்பி வளலாய்க் குளத்துக்க முதலை வந்துட்டுதாம், பாத்துப் போ" என்றார். இந்த முதலைகள் எப்படி வருகின்றனவோ தெரியாது. மழைக்காலத்தில் மட்டும்தான் யாராவது காண்பார்கள். முதலை என்றவுடனே ஆளை விழுங்கிவிடுமென்றுதான் யோசனை ஓடும். ஆருக்காவது ஒரு முதலைக்கடி தன்னும் விழுந்தது மாதிரி ஊரில் அறியவில்லை. ஆனால் 'வழிதவறி' ஒரு தோட்டக் கிணற்றிற்குள் விழுந்துவிட்ட ஒரு குட்டி முதலையை அடி அடி என்று அடித்துப் பின்னும் அது சாகாததால் அதன் வாய்க்குள் இறைப்பு மிசின் பைப்'பைச் செருகி தண்ணீர் பம்ப் பண்ணிக் கொன்றார்கள்.அது பழங்கதை.செத்த முதலையை நானும் போய்ப் பார்த்திருந்தேன். முதலைப் பயம் இருந்தாலும் தலை முழுக்க அடிகாயங்களுடன் செத்திருந்த குட்டி முதலையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?


------------

நன்றிகள்:
(1) புகைப்படம்: சுகேசன் கேதீஸ்வரன்

Sunday, April 8, 2012

கலைமகள் தேநீர்ச்சாலை

- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும். ஈ என்ற எழுத்திற் தொடங்கும் திருக்குறள்கள் எட்டு உண்டு. ஈ என்பது 'அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு" என்பவற்றில் ஒன்றைக் குறிக்கும் என்று தமிழ் விக்சனறி கூறுகிறது. ஈ என்பது இலங்கைப் பேச்சு வழக்கில் இலையான் எனப்படும். தமிழ்நாட்டிலும் 'இலையான்' என்ற சொல் பாவனையில் உண்டா என அறிந்தவர்கள் கூறவும்.

மதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயாவிற்கு எங்கு ஈயோட்ட வேண்டிய தேவை இருந்ததோ தெரியவில்லை.

"அப்பொழுது பார்த்து ஜிவ்வென்று இலையான் ஒன்று பறந்து வந்து அவளையே சுற்றியது. தானாகவே பிரகாசம் வீசும் பச்சை இலையான். உருண்டைக் கண்கள். தோள் மூட்டில் இருக்க முயற்சித்த போது உதறினாள். நான் பொறுக்க முடியாமல் கையை வீசினேன். .."

என்று "மஹாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதையில் எழுதுகிறார்.

அ.மு. ஐயாவின் நுணுக்கமான அவதானிப்புக்களுக்கும் வர்ணனைகளுக்கும் நிறைய ரசிகர்கள். ஆனால் "கலைமகள் தேநீர்ச்சாலை" உரிமையாளர் திருவடிவேல் ஈககளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தானும் 'ஈ' விடயத்திலாவது அ.மு ஐயா மாதிரி நுணுக்கமான அவதானிப்புள்ளவர் என்று சிலாகித்துக் கொண்டார்.
காலை 11 மணி. கடைதிறந்த நேரத்தில் இருந்து தனியாக 'ரீ' ஆத்தி ஆத்தித் தோள்மூட்டுக்களில் வலி. கடைவாசலில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு, 'எனக்கு கஸ்டமர்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, தரம் தெரிந்த வாடிக்கையாளர்தான் முக்கியம்' என்று மனதிற்குள் பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

தூரத்தில் யாரோ மூவர் வருவது தெரிந்தது. 'யாரோ வழிதவறிய அப்பாவிகள் வருகிறார்கள் போல... ' என்று யோசித்துக்கொண்டார்.

கேஜே: அண்ணே மூண்டு காப்பி போடுங்க.

திரு: தம்பி வாங்கோ வாங்கோ.., ஊர் எது? உங்கடை மொழிதான் கொஞ்சம் இடிக்குது. இதேன் இந்தத் தொப்பியைப் பின்பக்கமாகப் போட்டிருக்கிறீர்?

கேஜே: (மனதிற்குள் 'ஒரு ரீ குடிக்க வந்தால் ஒரே இம்சை, இந்த ஆள் ஈயோட்டுவதற்கு இதுதான் காரணம், காப்பியோ கோப்பியோ கேட்டால் தரவேண்டியதுதானே?') ரவுண் பக்கந்தான். எங்கடை வீட்டில 'காப்பி' எண்டுதான் சொல்லுவம். கோப்பி என்று சொல்லுறதில்லை.

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி.

திரு: தம்பிமார், கடை போ(ர்)ட்டை வடிவாகப் பாருங்கோ.

எல்லோரும் குழம்பிப்போய் இருக்க, வாலி வாயைத் திறக்கிறார். "கலைமகள் தேநீர்ச்சாலை" நல்ல வடிவான பெயர். நான் "தேநீர்ச்சாலை" எண்டு ஒரு கவிதையே எழுதியிருக்கிறன்.

திரு:ஆங், நான் கடை போ(ர்)ட்டிலை இருக்கிறமாதிரி தேத்தண்ணி மட்டும்தான் போடுவன். மூண்டு ரீ போடட்டே? இல்லாட்டி 'கிரூபன் காப்பி/டீ ஸ்டால்' தான் போகோணும்.

வாலி: (வேண்டாவெறுப்பாக) "சரி, சரி போடுங்கோ.."

கேஜே: அண்ணே சொல்லுறன் எண்டு குறை நினைக்காதேங்கோ, 'ரீ, மசாலா ரீ, சாயா, காப்பி, கப்புச்சினோ, லாற்றே' எண்டு வகை வகையாக மார்(க்)கற் பண்ணினால்தான் ஆக்கள் வருவினம்.

வாலி: ரீ போடுவது ஒரு தவம். அதுக்கொரு டெடிக்கேஷன் வேணும்.

கேஜே: இது விசர்க்கதை, 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ. அதுக்கொரு கைமணம் வேணும், அது பிறவியிலைதான் வரும்.

வாலி: பிறவித் திறமை உள்ளவனும் தவம் மாதிரி டெடிக்கேஷன் உடன் ஊத்தினால் வருவது தேவலோகத்துத் தேநீர்! நான் ஒரு கவிதை ....

திரு: மன்னிக்கோணும், எனக்குக் கவிதை விளங்காது.

வாலி: அண்ணே பொய் சொல்லுறியள், ரீ போடுற உங்களுக்கு கவிதை விளங்காதா?

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி; 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ

திரு: (மனதிற்குள், இவங்கள் என்னைவிட இம்சை பண்ணுறாங்கள்). கேஜே நீர் ரீ'யையும் 'கோப்பி'யையும் கலந்து ஏதோ ஒரு புதுப் பானம் தயாரிக்கிறீராமே?

கேஜே: ஓமண்ணே, நல்ல சுவை. 'காப்பிப்' பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. 'டீ'ப் பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. ஆரோ ஆடிவேல் எண்டு ஒரு கோணங்கி மட்டும் குறை சொல்லுது.

**************************

இப்போது, தோளில் ஜோல்னாப்பை ,முகத்தில் ஒருவாரத் தாடியுடன் ஒருவர் கடைக்குள் நுளைகிறார். பையை எடுத்து மேசையில் வைக்கிறார். பையில் இருந்து பெயின்ற் பிரஷ்களும் போட்டோக்களும் எட்டிப் பார்க்கின்றன.

ஆள்: திறுவேள், ஒரு தோத்தண்ணி போடும்.

திரு: ஆங் வரணியண்ணே, கனகாலம் இஞ்சால காணல்லை.

வரணி: (உன்ரை தோத்தண்ணியை நான் சகிச்சுக் கொல்லவேணும், பிரகு ஒவ்வொறு நாளும் வறோணூம்) இந்தப் பெயின்ரிங் வேலை கனக்க இருக்குது. பிறகு உலையங்குளத்திலையும் வேலை இருக்குது.

திரு: அண்ணே, ஊரில ஒரு ரீ'க் கடை போட்டீங்களாமே?

வரணி :(சூடாகிறார்) தம்பி, அதைப்பற்றிக் கதைக்கக் கூடாது தெரியுதே? அங்கை பார் 'சும்மா தேநீர்ச்சாலை' ஜயந்தன் வாறார்.

ஜயந்: ஐயா, உங்கடை கடைக்கு இப்படி ஏன் பெயர் வந்தது? தூய தமிழ்பெயர் வைக்கச் சொல்லி ஓடர் வந்ததே?

திரு: சீச் சீ, எனக்குத் தமிழ்ப் பற்று

கனகு: சும்மா கதை அளக்காதேயும். 'தமன்னா டீ ஸ்டால்' என்று பெயர் வைக்க 'மேலிடம்' பெமிசன் தரல்லை. பிறகு கடுப்பில இப்படிப் பேர் வைச்சனீர்.

திரு: (இந்தாள் எப்ப வந்தது? உள் வீட்டு வேலையை எல்லாம் லீக் பண்ணுது) கனகண்ணே ரீ போடட்டுமே? ரீ இருக்கட்டும், 1995 இலே சந்திக் கடையில கொத்துரொட்டி திண்ட உங்கடை சோகக் கதையைச் சொல்லுங்கோ.

கனகு: (இவன் ஆப்பு வைக்கிறான்) சரி சரி அவசர வேலை இருக்குப் பிறகு வரவே?

**************************

கேஜே: அண்ணே, நாங்கள் போய் வரட்டே, ரீ நல்லாக இருந்துது. ஒரு சின்னச் சந்தேகம்.

திரு: சொல்லுங்கோ

கேஜே: நீங்கள் போடுற ரீ'யை உங்கடை பிள்ளையள் குடிப்பாங்களே?

இவ்வளவு நேரமும் கூலாக இருந்த திருவடிவேல் ரென்ஷன் ஆகிறார். விடு விடுவென்று தேநீர் தயாரிக்குமிடத்திற்கு நடந்தார். பெரிய பாத்திரத்திற் தயாரித்து இருந்த தேநீரைக் கவிழ்த்து தொட்டியினுள் ஊற்றினார். "நாளையிலிருந்து கடை பூட்டு" என்று கத்தினார்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு இலையான் பட்டாளம் ஊற்றப்பட்ட தேநீரை மொய்த்தது. தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன்போல் அவற்றை விரட்டத் தொடங்கினார் திருவடிவேல்.

Saturday, March 24, 2012

எழுத விரும்பாத பதிவு

எனக்குத் தெரிந்த ஒருவர் எப்பவும் உரையாடலை இப்படித்தான் தொடங்குவார், "நான் உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்...". அவரின் நிலை இப்பதான் புரிகிறது. ஆனால், எனக்குப் பிடிக்காதது வரிக்கு வரி எல்லாவற்றுக்கும் Disclaimer கொடுப்பது. ஒவ்வொரு பதிவின் கீழேயும், "கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரின் பெயராவது கதையில் வந்தால் அது தற்செயலே.." என்று போடக்கூடாது, அது வாசிப்பவருக்குத் தானாகப் புரியவேண்டும் என்று அடியேனுக்கு ஒரு 'மூன்றுகால் முயல்'க் கொள்கையுண்டு. என்றாலும் ஒரு பதிவிலாவது "மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே" என்று போட்டேன். (இடைக்கிடையாவது முயலுக்கு நான்கு கால்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டாமா?)

நேற்றுத்தான் ஜேகே நொந்து போயிருந்தார்."என்ர அம்மாளாச்சி”, “கணவன் மனைவி” என்று வரிசையாக இரண்டு சிறுகதைகள் எழுதினேன் இல்லையா? எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை!)...".

என்ன முகூர்த்தத்தில் நானும் "அழி றப்பர்" எழுதினேனோ தெரியவில்லை. இப்போது நான் வறுத்தெடுக்கப்படுவது, "யார் அந்தச் சுகந்தி?" என்று. அது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றால் நம்புவாரில்லை. (வீட்டுக்குள்ளும் குத்துப்பாடு). நான் பதிவெழுத வந்தது சதா காலமும் என்னைப் பிடித்து உலுக்கும் என ஊர் ஞாபகங்களைச் சேமிக்க. ஏதோ கற்பனையிலாவது ஊர் போய்க் கொட்டில் போட்டு வாழும் மனது எனக்கு. அந்த யோசனை இன்னும் போகவில்லை. போகப்போவதுவும் இல்லை- நடை முறையிற் சாத்தியம் இல்லாவிட்டாலும். ஆனாலும் என் கற்பனையில் என்னால் 'என் நிலத்தில் கால் வைக்கமுடியும். அப்பாவின் கறள் பிடித்த றலி சைக்கிளில் இடைக்காடு-தம்பாலை-கதிரிப்பாய்-பத்தைமேனி-அச்சுவேலி என்று ஓடித்திரிய முடியும்'. இந்த அலம்பல்கள் எல்லாம் போக, மிகக் கட்டாயமாக நான் 'கொசிப்' எழுதுவதற்காகப் பதிவெழுத வரவில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும் தனிப்பட்டது. அதை வ்ரி வரியாக எழுதுவது சிலருக்குத் தேவைப்படலாம், வாசிப்பதுவும் பலருக்குத் தேவைப்படலாம். எனக்கு இரண்டும் இல்லை. என்றாலும்.... எனக்கும் ஒரு டவுட். ஏன் யாரும் "அழி றப்பர்" இல் 'யார் அந்தக் குஞ்சிப் பெரியாச்சி" என்று கேட்கவில்லை. ரங்கன், சிறியன் பற்றியும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

என் பார்வையில் சில சிறுவர்கள், அதில் ஒருவன் குறும்பானவன் ஆனால் மிக உத்தமமானவன் அல்ல ( 'அண்டல்' வேலை பார்க்கிறான்). வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இவங்களின் வம்பு தும்புகள் புரிந்த ஆச்சி. சுகந்தி கதைக்கு ஊறுகாய் மாதிரித்தான். இப்படிப் பின்னணியைச் சொல்லிவிட்டால் இனி ஏ.எ.வாலிபன் சொன்னதுமதிரி (என் கருத்தும் அஃதே) கதை 'சப்' என்று போய்விடும். அதற்கு முன்னமே கதை 'சப்' என்று இருந்தால் அது உங்கள் விதி.

Draft இல் ஒரு கதை இப்ப இருக்குது. அதில் வரும் சில வரிகள், 'தியேட்டரில் இருட்டு, அவனுக்கு அவள் தன்னுடன் (சினிமாப்) படம் பார்க்க வந்ததை இன்னும் நம்பமுடியவில்லை. Structural Drawing" பாடம் கட்...."

இதைப் பிரசுரித்தால் "அதில் வந்த அவன் யார்? நீயா? அவள் யார்? அவளைத்தான் கட்டினீயா" இப்படிக் கேள்விகள் வரும் போல இருக்கு. எதுக்கும் பிரசுரிக்கமுன் ebay இல் மொட்டாக்கு விற்குதா என்று பார்க்கவேண்டும்.

ஒரு சொதப்பல் சிறுகதை எழுதிப்போட்டு வடிவேலு பாணியில் அலம்பல் பண்ணுறியா என்று நீங்கள் கேட்டால் பதில் ரெடி. ஆம்.

"சரி சரி, ஆரப்பா அவள்?" என்று காதுக்குக்கிட்ட ஒரு குரல் மிரட்டலுடன் கேட்குது. மரக்கறி வெட்டவேணும், இன்றைக்குச் சனிக்கிழமை ...வெளியில் புல்லும் வெட்டவேணும். எனக்கேன் வம்பு? போயிட்டு வாறன், என்ன?

ஆங் மறந்து போனேன், "நான் எதையும் குறிப்பாக உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்..."

--------------
கொட்டில் - குடிசை
கறள் பிடித்த -துருப் பிடித்த
'அண்டல்' வேலை -கோள் மூட்டுவது, போட்டுக் கொடுப்பது
மொட்டாக்கு- முக்காடு

Saturday, March 10, 2012

அழி றப்பர்

நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்த பீப்பீக் குழலை எறிந்துவிட்டு மேளக்காரனாக மாறி விட்டான்.

"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.

ஓடத்தொடங்கிய இரண்டு பேரும் போய் நின்றது பள்ளிக்கூடத்தில் நின்ற வேப்பமரங்களின் கீழே. மிச்சப்பேரும் சரியாக ஊகித்து அங்கே வந்து சேர்ந்தார்கள்.

**************************

ரங்கனின் அரைக்காற்சட்டைப் பொக்கற்றில் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும். அதற்குள் நெருப்புக்குச்சி இருக்காது. பதிலாக உயிருள்ள ஒன்று இருக்கும். இன்றைக்கு சில்வண்டு . இவன் நடக்க நடக்க சில்வண்டு "ரீஈஈஈஈஈ, ரீற், ரீஈஈஈஈ" என்று விட்டுவிட்டுச் சத்தம் போட்டது. இவனைக் கண்ட எல்லோரும் சத்தத்தைக் கேட்டு விட்டுக் கேள்விக்குறியோடு பார்க்க, ஒன்றும் நடவாததுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடந்தான். இந்த 'அச்சாப்பிள்ளை' முகம் இவனுக்கு ஒரு கொடை. யார் வீட்டையாவது போய் 'ஆச்சி/அப்பு/மாமி உங்கடை வீட்டை மாங்காய் ஆயலாமா?" என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் களவாக மாங்காய், புளியங்காய் நெல்லிக்காய் ஆய்ந்து தின்பதின் சுகம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவன் முதல்நாள்தான் குஞ்சிப் பெரியாச்சி வீட்டில் மாங்காய் திருடியிடுப்பான். அடுத்தநாள் பெரியாச்சி இவனிடமே "ஆரோ கள்ளப் பெடியள் மாங்காய் ஆஞ்சு போட்டாங்கள். உனக்கு ஆரெண்டு தெரியுமே?" என்று விசாரிப்பா. இவனும் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடையல் பதில் சொல்லிக்கொண்டிருப்பான். அவாவும் "நீ நல்ல பெடியன், பதிவாக இருக்கிற ஒரு மாங்காய் ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்பா. என்றாலும் இவனுக்குக் கனகாலம் ஒரு குழப்பம், "ஆச்சிக்கு என்னிலை சந்தேகமா?" என்று. கடைசிவரை அந்த 'டவுட்' கிளியர் ஆகவில்லை. ஆனால் இந்த அச்சாப்பிளை சொந்த ஆச்சி வீட்டிலேயே அப்பப்ப நெல்லிக்காய் களவாகப் புடுங்கும். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் மட்டும் ஆச்சியிடம் 'அனுமதி' வாங்கி நெல்லிக்காய்கள் பறிப்பான். அன்றைக்கு இவன் பாடு சோகம். ஆச்சி இவனை மரத்தில் ஏறவிடா. நீளத் தடியொன்றைக் கொடுத்துப் 'பத்திரமாகப்' பழுத்த நெல்லிக்காய்களை மட்டும் தட்டி விழுத்தச் சொல்லுவா. 'கிழவி' மறக்காமல் அன்று பின்னேரம் இவன் வீட்டை போய் அம்மாவிடம் 'இவன் நாசமறுவான் பச்சை நெல்லிக்காய்களை நாசம் பண்ணிப்போட்டான் ' என்று புகார் கொடுக்கும். அம்மாவிற்குத் தன்மகனை 'நாசமறுவான்' என்று ஆச்சி சொன்னது பிடிக்காது. அந்தக் கோபத்தையும் இவனிடம்தான் காட்டுவா.

இதெல்லாம் இப்படி இருந்தாலும், இன்றைய நாயகன் என்னவோ சொறியன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிற சிறியன் தான். சேட்'டுப் பொக்கற்றில் இருந்து "அதை" ஒரு நளினமாக எடுத்துப் போட்டான். அது அப்போதுதான் பிரபலமாகத் தொடங்கிய 'வாசம்' மணக்கிற அழிறப்பர். ஒரு றப்பரால் கெப்பரானது வரலாற்றில் இவனாகத்தான் இருப்பான். அதுக்குப் பின்னால் ஒரு கதை இருந்தது.

"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக. சுகந்தி பள்ளிக்கூடத்தில் புதுப்பெட்டை. புத்தம்புது அரை லேடீஸ் பைக்கில் வருவாள். தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். "நீர்" என்றும் மற்றவர்களை விளிக்கலாம் என்று பட்டிக்காட்டுப் பெடி பெட்டைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள். கொஞ்சம் கறுப்பு என்றாலும் கூடப்படிக்கிற பெடியள் எல்லாருக்கும் அவளில் ஒரு 'இது' இருந்தது. கற்பனையைச் சிறகடிக்க விடவேண்டாம். இப்பதான் இவர்கள் ஆறாம் வகுப்பிற் படிக்கிறார்கள். அக்காலங்களில் ரவுணிலை ஷெல் விழத் தொடங்கிவிட்டது. அதுதான் அவள் ரவுண் கொன்வென்ட் இலிருந்து உள்ளூர் மகாவித்தியாலத்திற்கு வந்த வரலாறு.

"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.
"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.
"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.
"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.

"சத்தியமாக அவள் ரண்டு றப்ப்ர் வச்சிருந்தவள், ஒண்டை எனக்குத் தந்தவள்" என்ற சிறியன் அதை கையில் வைத்து ஒரு சுண்டு சுண்டிவிட்டு ஏந்திப் பிடித்தான். பிறகு பொக்கற்றில் போட்டுவிட்டு ஒரு 'மிதப்புப்' பார்வை பார்த்தான்.

இந்த இடத்தில் சீன் கொஞ்சம் மாறுகிறது. அந்த நாட்களில் இலங்கை வானொலியில் "அடுத்து... நிலைய வித்துவான்கள் வாசிக்கக் கேட்கலாம்" என்றபின் வித்துவான்கள் இஷ்டம்போல வெளுத்துவாங்குவார்கள். அந்த இசையைக் கற்பனை செய்து பார்க்கவும்.

"சிறியன் சொறியன்" என்றன் ரவி
"சொ ஓஓஓஓ றீஈஈஈஈஈஈஈ யன் சீஈஈஈஈறீஈஈஈஈ யன்" என்று டீ.ஆர்.மகாலிங்கம் ஸ்டைலில் இழுத்துப் பாடினான் ரங்கன்.
"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி.
"நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்.

எல்லாரும் "ஹா ஹா" "ஹீ ஹீ.., "ஈ ஈ" என்று வகை வகையாகச் சிரிக்க அழுதுகொண்டு வீட்டை ஓடினான் சிறியன்.

**************************

குஞ்சிப் பெரியாச்சி வீட்டின் பின்பக்கம் பெரிய மாமரம். மாங்காய்கள் கைக்கெட்டும் உயரத்திலும் இருக்கும். வீட்டின் முன்பக்கம் ஆட்டுக் கொட்டில். உள்ளே ஒரு ஒரே ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது. குட்டிகள் அண்மையில்தான் பிறந்திருக்கவேண்டும். அவை கட்டப்பட்டிருக்கவில்லை. தாயாடு, கூரையிலிருநது தொங்கிய கயிற்றில் கட்டியிருந்த கிளுவங் குழைகளைக் 'கறுக் முறுக்' என்று கடித்துக்கொண்டிருந்தது. குட்டிகளுக்குப் பொழுதுபோகாமல் இருந்திருக்க வேண்டும். ரங்கன் என்கின்ற ரங்கநாதன் வளவுக்குள் நுழைய இவனது கால்களில் ஈரமான மூக்குகளால் உரசிப்பார்த்தன. பிறகு இவனைப் பின்தொடர்ந்தன. ஒரு குட்டியை மட்டும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். மற்றக் குட்டி இன்னும் பின் தொடர்ந்தது.

திண்ணையில் ஆச்சி, அவித்த பனங் கிழங்குகளை உரித்து, நார்க் கடகமொன்றிற்குள் போட்டுக்கொண்டிருந்தா. இவன் ஆட்டுக் குட்டியை இறக்கிவிட்டான். பிறகு அதன் செவிகளைச் செங்குத்தாக உயர்த்திப் பிடித்து. "நீ இப்ப முயல்" என்றான். இம்சை தாங்காத குட்டி ஆடு ஓடித்தப்பியது.

"என்னடா பொறுக்கி இந்தப் பக்கம்?" ஆச்சி வரவேற்றா.
" ....... " இவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.
"இந்தா பனங் கிழங்கு சாப்பிடு" ஆச்சி பனங் கிழங்கொன்றை சரி இரண்டாகப் பிளந்து நடுவில் இருந்த 'ஈர்க்கை' எறிந்துவிட்டு, பிறகு நுனிப்பக்கதால் சின்னதாக முறித்துத் தும்புகளை இலாவகமாக நீக்கி விட்டுக் கொடுத்தா.

"ஆச்சி ... " இவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு எதையோ சொல்ல வெளிக்கிட்டான். நாக்குக் கொஞ்சம் உலர்ந்தது. நெஞ்சு கொஞ்சம் பட பட என்று அடித்தது.
"உனக்கு முந்தநாள் மாங்காய் ஆஞ்சது ஆரெண்டு தெரியுமே?" ஒருமாதிரிச் சொல்லத் தொடங்கினான்.
"அதைச் சொல்லத்தான் துரை வந்திருக்கிறார் போல, சொல்லு ராசா"
"உவன் கள்ளச் சிறியன்தான்!"

ஆச்சி கொஞ்சமும் அதிசயப்பட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சநேரம் வாய்க்குள் இருந்த வெத்திலை, பாக்குச் சமாச்சாரங்களைக் குதப்பத் தொடங்கினா. இவன் பொறுமை இழக்கத் தொடங்கிய நேரத்தில் பொழிச் என்று வெற்றிலைச் சாற்றை திண்ணைக்கு வெளியே எட்டித் துப்பினா.

"அவன் கள்ளன், எனக்கும் அவனிலைதான் சந்தேகம்.... நீ நல்ல பெடியன்; சரி சரி கறுத்தைக் கொழும்பான் காய்ச்சிருக்குது; அதிலை பதிவாக இருக்கிற ஒரு மாங்காயை ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்றாவாம்.

இவன் மினக்கெடாமல் வளவுக்குப் பின்புறம் மாமரத்தடிக்கு வந்தான். நாலைந்து மாங்காய்களைச் கணநேரத்திற் பிடுங்கி வேலிக்குக் கீழே ஒளித்துவைத்தான். பிறகு ஆச்சி சொன்ன 'ஒரு' மாங்காயை ஆயும்போது திரும்ப அந்த டவுட் வந்தது "ஆச்சிக்கு என்னிலைதான் சந்தேகமா?" என்று.



--------------------

ஆய்தல் - பிடுங்குதல் , ஆய் - பிடுங்கு

Monday, February 6, 2012

சயந்தனின் நாவல்: ஆறா வடு

"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாயிருந்தது. உப்பும் குளிரும் கலந்த சேர்ந்த மெல்லிய காற்று முகத்தில் வருடியபடியிருந்தது. கடலின் வாசம் சூழவும் நிறைந்திருந்தது. போட்டிருந்த சேர்ட்டினுள் காற்று நுழைந்து முதுகில் டப் டப் என்று சடசடத்தது..." இப்படித் தொடங்கும் நாவல் 1987 இல் தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதிக்' காலங்களுக்கு இடையில் நகர்கிறது.

மிக நீண்ட நாட்களின் பின், ஒரு நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். தேவையில்லாத அலங்கார வார்த்தைகள் இல்லாத ஒரு தெள்ளிய நீரோடை போன்ற எழுத்து நடை சயந்தனினது. கொடி, குடை, ஆலவட்டங்கள், ஒளிவட்டங்கள் இல்லாமல் மிக இயல்பாக நம் துயரங்களையும் வரலாற்றையும் எழுதிச் செல்லுகிறார். ஆங்காங்கே மெலிதான கிண்டல் /அங்கத நடையில் கதை செல்கிறது. புன்முறுவலை ஏற்படுத்தும் சில இடங்கள்:

தூய தமிழ்ப்பெயர் சூட்டும் காலம்: கல்வியங்காடு முத்திரைச் சந்தியில் சைக்கிள் ரியூப் ஒட்டுகிற கடையொன்றின் முகப்பில் ராஜா ஒட்டகம் என்று பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று நாட்களில் அது இராசா ஒட்டகம் என்று மாறியிருந்தது.

இவன் (அமுதன் என்கின்ற ஐயாத்துரை பரந்தாமன்) ஓரிடத்தில் சண்டையை விபரிக்குமிடம்: சண்டையென்று வந்துவிட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுண்ஸ்சும் வாயிலிருந்து தூஷணங்களும் பாய்ந்துகொண்டே இருக்கும். ரவுண்ஸை அளவாகப் பாவிக்கச்சொல்லி இயக்கத்துக்குள்ளே விதிமுறை இருந்தது. தூஷணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லை.

பாடசாலை நாடகமொன்றில்: வெள்ளைக்காரத் துரையாக நடித்த விசுவலிங்கம் வெள்ளைக்காரர்களுக்கு எல்லாம் வெள்ளை என்று நினைத்திருக்கவேண்டும். வெண்ணிறத் தலை, வெண்ணிற மீசை, வெள்ளை நிற உடை, வெள்ளை நிறச் சப்பாத்து, அதே நிறத்து சொக்ஸ் என்று வெளிறிப்போனான்....

இவன் கப்பலில் கனவு காணுமிடம்: கொஞ்சநேரத்துக் கனவொன்றில் அகிலா வந்தாள். இவனும் அவளும் டைட்டானிக் கப்பலின் ஏதோ ஒரு தளத்தில் ஜீப் ஒன்றிற்குள்.. (சரி நீங்கள் எல்லாரும் டைட்டானிக் பார்த்திருப்பீர்கள் தானே? - எஸ்.ச). சின்னப்பெடியன் இவனை மிரட்சியுடன் பார்க்கத் தொடங்கினான்....


*****************************************

சயந்தனின் எழுத்து நடை மெலிதான அங்கத/ கிண்டல் நடை என்பதை நான் சொல்லப்போக, இது பொழுதுபோக்கு/ நகைச்சுவைக் கதை என்று எடுக்கக் கூடாது. எந்தக் கஷ்டத்திலும் வாழவேண்டும் என்ற விருப்புள்ள ஒருவனின் பார்வையில் இரண்டு "சமாதான" காலங்களிற்கு இடையேயான ஈழத்தவர் வாழ்வு காட்டப்படுகிறது. கதை முழுவதும் ஒரு பெரிய "வள்ளப்" பயணத்தில் சொல்லப்படுகிறது. அதற்காக இது வெறுமனே கடற்பயணக் கதையுமல்ல. சென்டிமென்டல் பேர்வழிகள் அநேகமாக ஒரு துளி கண்ணீராவது விடுவார்கள். (சே, நான் அழவில்லை). சின்னப் பெடியனும் அவனைத் தன் தம்பியாக நினைக்கும் பெரியய்யாவும் ஏற்படுத்தும் தாக்கம்தான் எனக்கு அதிகமாக இருந்தது.

சனங்கள் சைக்கிளில் கட்டிய மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர். "எட்டி நடவணை" என்றும் "கெதியில வா" என்றும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. இருட்டில் யாரோ சிவராசனை அழைத்தார்கள். "சிவராசண்ணை, நல்லூரடியில் ஆமி வந்திட்டானாம். சனங்கள் அரியாலைக்கால வெளியில் போகுதுகள். பொம்பிள்ளைப் பிள்ளைகளை வச்சிருக்கிறியள், கெதியாக வெளிக்கிடுங்கோ.." - இதை வாசிக்கும்போது திடீரென்று 25 ஆண்டுகள் பினனோக்கிச் சென்று விட்டேன். பெயர்கள் சம்பவங்கள் வேறு. ஆனால் நாமெல்லாம் அனுபவித்த ஒன்று. ஒரு முறையல்ல, பலமுறைகள்.

பாத்திரங்களும் அப்படியே மனதில் நிற்கிறார்கள்: இந்திய இராணுவத்தின் கண்களில் விரலை வைத்தது ஆட்டிய வெற்றி, சற்று மனநிலை தவறிய தேவி, நிலாமதி, படகில் கூடவரும் பெரியய்யா, சின்னப்பயல், மூன்று குமர்ப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு பட படக்கும் சிவராசன், தூய தமிழ்ப்பெயர் மாற்றத்தால் கடுப்படையும் "டில்ஷான் ரீ ரூம்" முதலாளி (சில பதிவர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) என்று யாரையும் மறக்க முடியவில்லை.

எப்போதோ மறந்தபோன, 80 களின் நடுப்பகுதிகளிற்குப் பிறகு "பிரபலமாக" இருந்த, சோலாப்பூரிச் செருப்பையும் ஞாபகப்படுத்துகிறார் சயந்தன். சோலாப்பூரித் திருடன் பிறகு இந்திய இராணுவத்தில் தலையாட்டியாக மாறிப்போய் பிறகு மண்டையில் போடுப்படுகிறான். இந்த இழுபறியில்தான் செருப்பின் உரிமையாளர் தேவையிலாத சிக்கல்களில் மாட்டுப்பட்டு, தவிர்க்கமுடியாமல் ஆயுதம் தூக்க வைக்கப்படுகிறான். இப்படிச் சொன்னால் சற்று நம்பமுடியாத கதை மாதிரி இருக்கும். ஆனால் உண்மைகளும் சிலசமயங்களில் நம்பவே முடியமாட்டாததாய் இருக்கும், இருக்கிறது. இதை நுட்பமாகச் சொல்கிறார் கதைசொல்லி.

ஏதாவது நொட்டை சொல்லவேண்டும் என்றால், சில கடைசி அத்தியாயங்கள் அவசரமாக எழுதியது போல் தெரிகிறது. ஆனால் கடைசி சில அத்தியாயங்கள்தான் கவனமாக எழுதப்பட்டிருப்பதாக ஒருவர் முகநூலிற் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எழுத்தாளனின் வெற்றியே. (அதாவது எனக்கு கதையின் முதற் சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்த மாதிரி, இன்னொருவருக்கு கடைசி சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்துள்ளது. ஆனால் இருவருக்கும் முழுக்கதையும் பிடித்துள்ளது)

மொத்தத்தில், இது ஈழ (இலக்கிய நாவல்) வரலாற்றில் ஒரு முக்கியமான நாவலாக இருக்கப் போகிறது. வாழ்த்துக்கள் சயந்தன்.

நூலை வாங்க, இணையத்தில் - கீழேயுள்ள இணைப்புக்களில் ஏதோவொன்றில் சொடுக்கவும்.

உடுமலை.com
வடலி இணையப் புத்தகக் கடை
கிழக்குப் பதிப்பகம்

அல்லது, நீங்கள் இலங்கை அல்லது இந்தியாவில் வசிப்பின், உள்ளூர்ப் புத்தகக் கடைகளில் வாங்க முயற்சிக்கலாம்.

Saturday, January 14, 2012

துளிர்ப்பு

இவனுக்கு இவ்வூரில் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. "ஆமி வாறான்" என்றவுடன் கையில் கிடைத்ததைக் காவிக்கொண்டு குடும்பத்தோடு சைக்கிள்களில் இரண்டு மூன்று ஊர் தாண்டி, பிறகு ஒரு பழைய பாலத்தையும் தாண்டி இவ்வூர் வந்தாயிற்று... இவ்வூரில் வீடுகளுக்கு எல்லாப் பக்கமும் மணலும் நிறையத் தென்னை மரங்களும்... சொந்த ஊரில் மணலைக் காணவேண்டுமாயின் யாராவது வீடுகட்டவென்று லொறியில் கொண்டுவந்து கொட்டினால்தான் உண்டு. பள்ளிக்கூடக் கிறவுணட்ஸ் இலும் மணல் உண்டு. கலட்டிகளில் நின்ற பனை மரங்களும் ,வளவுகளுக்குள் நிற்கும் பூவரச மரங்களும், கிளுவை வேலிகளும் கொஞசம் ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. ஒரு பெரிய நாற்சார் வீட்டின் பின்புறத்தில் ஒண்டிக்கொண்டான். எல்லாமாக எட்டுக் குடும்பங்கள் அந்தவீட்டில். சற்று அதிகமாகவும் இருக்கலாம். எந்த நேரமும் யாராவது வருவதும் போவதுமாக இருந்ததால் எல்லாமாக எத்தனை பேர் வசித்தார்கள் என்று தெரியவில்லை. இரண்டொரு நாட்களுக்குள், சனம் குறைந்த இன்னொரு வீட்டுக்கு மாறினால் இப்போது இருக்கும் வீட்டுக்காரருக்குச் சிரமம் குறையும் என நினைத்தான். ஆனால் எல்லா வீடுகளிலும் இதே கூத்துத்தான். எல்லா வீடுகளும் இடம் பெயர்ந்த சனங்களால் நிரம்பி வழிந்தன.

இவன் சொந்த ஊரில் தோட்டங்கள் எல்லாம் சிவப்பு மண்ணில். இங்கு களிமண் தோட்டங்கள் தான் அதிகம் தென்பட்டன. ஊரில் 'நாலாயிரம் கன்று' வெங்காயம்-மிளகாய் செய்யும் கமக்காரனிவன். இங்கு கத்தரித் தோட்டங்களைதான் அதிகம் கண்டான். கத்தரிக் கன்றுகளை எந்த மாதம் நடுவது, எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணிவிடுவது, என்ன உரம் போடுவது என்று இவனுக்குத் தெரியவில்லை. "நான் என்ன இந்த ஊர்ப் பெட்டையையே கட்டியிருக்கிறேன் கத்தரித்தோட்டம் வைக்க?" என யோசிக்கச் சிரிப்பு வந்தது. கிணறுகள் அகலமாக இருந்தன. ஆனால் இறைப்பு மிசினால் இறைத்தால் விரைவாக நீர் வற்றிவிடும். கிணற்று நீரும் ஊர்க்கிணறுகளில் இருப்பதுமாதிரி ஸ்படிகமாக இல்லை. கொஞ்சம் கலங்கலாக இருக்கும். "கிணத்துத் தண்ணி கலங்கலாக இருக்குது" என்று மனைவியிடம் சொல்ல

"அகதி மகாராசாவுக்கு நினைப்பு மட்டும் குறைவில்லை" என்று சிரித்தாள்.

பிள்ளைகள் இடம் பெயர்ந்ததைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பெரியவன் பழைய நண்பர்களையும் புதிய நண்பர்களையும் கண்டு பிடித்துவிட்டான். பள்ளிக்கூடம் இல்லை என்று புளுகு போல. சின்னவன் மட்டும் இரவில் நித்திரை கொள்ளும்போது "எப்ப வீட்டை போவம்?" என்று கேட்கிறான். ஒரு பின்னிரவில் நித்திரையால் எழுப்பி, "அப்பா சிவப்பிக்கு ஆர் நெல்லுப் போடுறது?" என்று கேட்டான். சிவப்பி என்பது வீட்டில் வளர்ந்த பேட்டுக் கோழி. அதைத் துரத்தித் திரிவது சின்னவனின் பொழுதுபோக்கு. அப்பப்ப தாயிடம் அடம் பிடித்து ஒரு சிறங்கை நெல் வாங்கி சிவப்பிக்குப் பக்கத்தில் வீசுவான். அது நெல்லைப் கொத்தத் தொடங்க, திருப்பத் துரத்தத் தொடங்குவான்.

மகளுக்குப் பன்னிரண்டு வயதாகிறது இப்பவும் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்தால்தான் நித்திரை வரும். "குமரியாகப் போகிறாள் இப்பவும் அவாவுக்கு பேபி எண்டு நினைப்பு" என்று மனைவி கோவித்துக்கொள்வாள். 'விசர்க்கதை கதைக்காதே , அவள் குழந்தைப் பிள்ளை" என்று இவன் பாய்வான். மகளிற்கு இந்தச் சண்டையெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவள் நித்திரைகொள்ள அம்மா பக்கத்தில் வேண்டும் அவ்வளவே.


*****************************************

இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான். பிறகு வாயைத் திறக்காமல் மனைவி சொல்லும் வேலைகளைச் செய்வான். அன்றைக்கு சந்தைக்குப் போய் மரக்கறிகூட வாங்கிவருவான். (மற்ற நாட்களில் இது பெண்டுகள் வேலை என்று கழற்றிக் கொள்வான்). இருந்தாலும் அத்தினங்களில் சமையல் பாத்திரங்கள் 'டொங்கு டொங்கு' என்று கொஞ்சம் சத்தம் அதிகமாக வைக்கப்படுவது தனக்குப் புரியவில்லை என்றமாதிரிப் பாவனை பண்ணிக்கொள்வான். அன்றைக்கும் பழைய நண்பன் ஒருவன்தான் 'மச்சான், இப்ப இருக்கிற நிலமையிலை கள்ளடித்தால்தான் கவலை தீரும், வா" என்று ஐந்து சந்திக்குக் கிட்ட இருந்த 'கோப்பரேசனுக்குக்' கூட்டிக்கொண்டுபோனான். விதி வலியது என்பார்கள். அன்றைக்குப் பார்த்து கனபேருக்குக் கவலை போல.கோப்பரேசன் வாடிக்கையாளரால் நிறைந்து வழிந்தது. இதற்கிடையில் இவன் அங்கு போன புலனாய்வுத் தகவல் மனைவிக்குத் தக்க நேரத்திற் கிடைத்திருக்கவேண்டும். இவன் நல்ல மத்தியான வெயிலில் சைக்கிளை ஒருமாதிரி வெட்டி, வெட்டி ஓடிக்கொண்டு இருந்த வீட்டுக்கு வர, வாசலில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஒரு 'ராங்கிப்' பார்வையுடன் அவள் நின்றிருந்தாள். "சாய், இண்டைக்குத்தான் நீ இன்னும் வடிவாயிருக்கிறாய்.." அன்று ஒரு அசட்டுக் கொமென்ற் அடித்துப்பார்த்தான். அவள் அதைக் காதிற் போட்ட மாதிரித் தெரியவில்லை. "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று தியாகராஜ பாகவதர்போல் பாவனை பண்ணிக் கொண்டு பாடிப் பார்த்தான். அது அவளை இன்னும் கோபமூட்டியது.

பிறகு அன்றைக்குப் பிள்ளைகள்தான் "பேச்சுவார்த்தைத்" தூதுவர்கள்.

"கொப்பரைச் சாப்பிடச் சொல்லு.."
"அப்பா, அம்மா சாப்பிடச் சொல்லுறா"
"எனக்குப் பசிக்கல்லையாம் எண்டு சொல்லு.."

இத்தனைக்கும் இருவரும் ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவராக முழங்கைகள் இடிபடும் தூரத்தில்தான் நின்று கொண்டிருந்தார்கள். ஆளை ஆள் பார்ப்பதை மட்டும் தவிர்த்தார்கள். இவன் பிகு பண்ணிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான் . "நீ சாப்பிட்டிட்டியே" என்று அரைக்கோப்பை சோறு காலியாகும்போதுதான் கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் தட்டில் சாப்பாட்டைப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினாள். இவன் அவளைப் பேசச் செய்வதற்காக "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இதுக்கெல்லாம் எடுபடுகிறமாதிரித் தெரியவில்லை. முகத்தில் எதுவித சலனமும் இல்லை; உதட்டில் தெரிந்தும் தெரியாமலும் தோன்றிய சிறு புன்னகை மட்டும் விதிவிலக்கு.

ஆனால் இன்னொருவரின் வீட்டில் 'தொங்கிக்கொண்டு' நின்றபடியால் சமையல் பாத்திரங்களை அவள் 'டொங்கு டொங்கு' என்று வைக்கவில்லை. "இண்டைக்குச் சட்டி, பானைகள் எல்லாம் இடி வாங்காமல் தப்பிட்டுது" என்று சொல்லிவிட்டுக் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான். அவள் வந்த புன்சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். பிறகு கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள். திடீரென இவனுக்கு சொந்த ஊரில் சொந்த வீட்டில் இந்தக் கணமே நிற்கவேண்டும்போல் இருந்தது!

மறுநாள் மனைவி ஒரு உரப்பையையும் ஐநூறு ரூபா காசையும் கொடுத்து அரிசி வாங்கிவரச் சொன்னாள். இவன் கிட்ட உள்ள பெரிய சந்தைகளுக்குப் போகாமல், பழைய பாலத்தையும் உப்புவெளியையும் கடந்து, மீண்டும் 'தப்பி' ஓடிவந்த வழியே இரண்டு ஊர்களைக் கடந்து தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ள சின்ன ரவுணுக்கு வந்தான். எந்த நேரமும் ஆட்கள் குறுக்கும் நடக்கும் போய்க்கொண்டிருந்தார்கள். அநேகர் சைக்கிள்களில், சிலர் பொடி நடையில். இன்னும் சிலர் உழவு மிசின் பெட்டிகளில். எங்கே இந்த ஓட்டம் முடியப்போகிறது என்று தெரியவில்லை. சந்தியில் உள்ள டீ'க் கடையில் பிளேன் டீ'யும் போண்டாவும் சாப்பிட்டுக் கொண்டு ரோட்டில் போன ஆட்களை வேடிக்கை பார்த்தான். பிறகு வெளியில் வந்து, தெரிந்த ஆட்களிடம் ஊர் நிலவரம் கேட்டான். 'ஆமிக்காரன் போய்விட்டான்' என்றும் 'இல்லை போகவில்லை, ஒளித்து நிற்கிறான்' என்றும் குழப்பகரமான தகவல்கள் கிடைத்தன். ஆனால் யாரும் ஊருக்குத் திரும்பிப் போவதாய் இல்லை. சில வீரவாகுகள் ஊர் போய் அவரவர் வீடுகளில் அத்தியாவசியச் சாமான்களை எடுத்துக் கொண்டு 'உயிருடன் திரும்பி வந்தார்கள்' என்ற தகவலும் கிடைத்தது. இவனுக்கு அவ்வளவு றிஸ்க் எடுக்கத் துணிவில்லை. "நான் ஊர் போய்த் துவக்குச் சூடு வாங்க என்ன முட்டாளா?' என்று தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொண்டு அரிசியுடன் திரும்பி வந்தான்.

இவனுக்குப் பகல் பொழுதுகள் நரகமாக இருந்தன. எட்டுப் பத்துக் குடும்பங்கள் இருந்த வீட்டில் மூஞ்சையை மூஞ்சையைப் பார்த்துக் கொண்டி இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வெளியே என்ன வேலை என்றாலும் வலிந்து செய்யத் தொடங்கினான். அரிசி மரக்கறி வாங்குவது, சங்கக் கடையில் மாவிற்கும் மண்ணெண்ணைக்கும் கியூவில் நிற்பது, என்று எல்லாவற்றிற்கும் நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வெளியே போய்விடுவான். சாப்பாட்டு நேரம் தவிர பகலில் அவ்வீட்டில் நிற்கமாட்டான். இரவு எல்லாரும் உறங்கியபின் பூனைபோல் சத்தம்போடாமல் உள்ளே வந்து சாப்பிட்டுப் படுப்பான்.

அன்றிரவும் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. சத்தம் போடாமல் சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு உள்ளே பின் விறாந்தைக்கு வந்தான். மனைவி மண்ணெண்ணை விளக்கைத் தூண்டி விட்டுத் தட்டில் சாப்பாட்டைப் போட்டாள். வழக்கம் போலவே கிட்ட வந்து கள் வாசனை அடிக்குதோ என்று 'செக்' பண்ணிணாள். இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான் என்றாலும் அவளுக்கு ஒவ்வொரு நாளும் சந்தேகம். இவன் முகம் ஒரு குறும்புச் சிறுவனின் முகம் போல் மாறியது. "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இம்முறை குபீரெனக் கண்களில் நீர் வரச் சிரிக்கத் தொடங்கினாள்.


Wednesday, January 4, 2012

வழித் துணை

"தம்பி, கண்டு கனகாலம்" குரல் வரவும் ட்ரெயின் பெட்டி உன்னிக் கொண்டு நகர ஆயத்தம் பண்ணவும் சரியாக இருந்தது. ஆளை நிமிர்ந்து பார்த்தேன்.

"உம்மடை அப்பா என்ரை மூத்த அண்ணாவோடை படிச்சவர், நான் நீர் அஞ்சாம்- ஆறாம் வகுப்புப் படிக்கேக்கை ஏ.எல். படிச்சிருப்பன்". இப்போது ஆளை மட்டுக்கட்டக் கூடியதாக இருந்தது. இவரை எனக்குத் தெரியும். பெயர் வாசுதேவன். ஊரில் அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி என்றால்தான் புரியும்.

"நல்லகாலம் உம்மைக் கண்டது, பயணம் முழுக்கக் கதைத்துக் கொண்டு போகலாம், என்ன சொல்லுறீர்?"

"அதுவுஞ் சரிதான்..."

"வவுனியாவில அக்காவின்ர மகளுக்கு வீடு சொந்தமா இருக்கு; அங்கைதான் ரண்டுநாள் நிண்டிற்று வாறன், நீர்?". விடை சொல்ல ஒன்றரைச் செக்கன் தந்தார். பிறகு தானே தொடர்ந்தார், "பெரியம்மா வீட்டை வந்து போறீர் போல".

"பெரியம்மா வீடு சொந்த வீடோ? வாடகை வீடோ?"

"வாடகை வீடுதான்"

"அக்கான்ரை மகள் சொந்தமா வீடு வாங்கிப் போட்டாள். அவளின்ர மனிசன் கவர்ன்மெண்டில் நல்ல வேலை, தெரியுமே?"

"ஓம்", இல்லை என்று சொன்னால் இன்னும் கதை வளரும்.

"அவர் இப்ப ஏ.ஜி.ஏ எல்லோ!"

"நல்லது"

"அவர் படிக்கிற காலத்தில படிப்பில வலு விண்ணன். இஞ்சினியறிங் படிச்சுக் காடு கரம்பு எண்டு வேலை செய்ய அவருக்கு விருப்பமிலையாம், அதுதான் கவர்ண்மெண்ட் சேர்விஸ் இல சேர்ந்தவர். அவற்றை குடும்பமே படிச்ச குடும்பமெல்லே?"

"நல்ல விஷயம்தானே"

"உமக்குத் தெரியாது, அக்கான்ர மகள் நல்ல வடிவு. அவர் இவளைத்தான் கட்டுவன் எண்டு நிண்டல்லோ கட்டினவர். மருமகள், அதுதான் அக்கான்ரை மகள்.. கல்யாணம் செய்திருக்காட்டி ஒரு டொக்டராகத் தன்னும் வந்திருப்பாள்; அவள் நல்ல கெட்டிக்காரி"

"உண்மைதான்"

"தம்பி இஞ்சினியரிங் செய்யிறீர் எண்டு கேள்விப்பட்டன்"

"ம்ம்ம்"

"இப்ப இஞ்சினியரிங் செய்தால் .. இந்தக் காலங்களில எதிர்காலத்திற்கு நல்லதில்லைத் தம்பி, சம்பளமும் முந்தி மாதிரி ஆகா ஓஹோ எண்டில்லை. பிறகு லஞ்சம் வாங்கித்தான் சமாளிக்கவேண்டும். "

"உண்மைதான், நீங்கள் முதலே சொல்லியிருக்கலாம், நான் விசயம் தெரியாமல் இஞ்சினியரிங் படிக்கத் தொடங்கிப்போட்டன்"

ஆசாமி என் நக்கலைக் கவனித்த மாதிரித் தெரியவில்லை. "என்ரை ஒரு அண்ணற்றை மகனுக்கு உங்கை பெரதேனியாவில இஞ்சினியரிங் செய்யக் கிடைச்சது," தொடர்ந்தார், "அவன் இங்கை படிச்சால் பியுச்சருக்கு நல்லதில்லை எண்டு லண்டனில் படிக்கப் போயிட்டான்"

"அங்கை என்ன படிக்கிறான் தெரியுமே?"
"இல்லை"

"எயறோ நோட்டிக்கல் இஞ்சியரிங்". என்னைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தமாதிரித் தெரிந்தது.



*****************************************

இரவு ட்ரெயின். விடியத்தான் கொழும்பை அடையும். பிறகு கண்டி பஸ் பிடிக்கவேண்டும். ட்ரெயின் இல் ஏறினால் பாதிநேரமாவது நித்திரை கொள்ளவேண்டும். மீதி நேரம் வெளியில் பராக்குப் பார்க்க வேண்டும். அல்லது ட்ரெயின் பெட்டிக்குள் பராக்குப் பார்க்கவேண்டும். பெட்டியின் படியில் சில விடலைப் பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக ஏதாவது ஒரு பக்கத்தில் ஒன்றோ இரண்டோ வாலைக் குமரிகளின் கண்பார்வை வீச்சில் இவர்கள் இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்களின் முகத்தில் இவ்வளவு குதூகலமும் அசட்டுத்தனமும் எப்படி இருக்கும்?

வெளியில் நிறையத் தென்னை மரங்களும் குறுக்குக் நெடுக்குமாக நிறையத் தண்டவாளங்களும் ... பொல்காவலை ஸ்டேசன் ஆக இருக்கலாம். "குறும்ப குறும்ப" என்று இளநீர் வித்துக் கொண்டிருந்தார்கள், கைகளில் இளநீர் சீவும் கூரிய கத்திகளுடன். என்னதான் சொன்னாலும் கூர்க் கத்தியுடன் "அன்புச் சகோதரர்களைக்" கண்டால் அடி வயிற்றில் ஒரு மெல்லிய திகில் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மரபணுக்கள் வரை அந்தப் பயம் பரவிவிட்டதுபோல.

"தம்பி இளநி குடிக்கப் போறீரே, நான் வழியில் இளநி குடிக்கிறதில்லை, அநியாய விலை?" அவர் கதைக்கத் தொடங்கினார். அவரின் இரண்டாவது அண்ணரின் இரண்டு மகன்மார் லண்டனில் 'மெடிசின்' படிக்கிறார்கள். (உள்ளூரில் ஸ்டாண்டர்ட் காணாது), சின்ன அண்ணிக்கு கல்வயலில் தென்னந்தோட்டம் இருக்கு(மாதவருமானம் 20,000 ரூபா), இலங்கையில் இஞ்சினியரிங் படித்தால் லண்டனில் கோப்பைதான் கழுவ வேண்டும், மூன்றாவது அண்ணா கல்விக்கந்தோரில் நல்ல வேலை (சம்பளம் இரண்டு இஞ்சினியர்களின் சம்பளங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன்), இலங்கையில் வாத்தி வேலை பார்ப்பவர்கள் எல்லாம் *பேயர்கள் (நான் ஒரு வாத்தியாரின் மகன்), முதலிய அருந்தகவல்கள் நான் ஒரு இளநீர் குடித்து முடிக்கும் நேரத்தில் கிடைத்தவை.


*****************************************


ட்ரெயின் உலுக்கி ப்ரேக் அடிக்கத்தான் விழித்தேன். கோட்டை புகையிரத நிலையம். எதிரில் அவரைக் காணவில்லை. ஸ்ரேசனுக்கு வெளியே வந்தேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது. றோட்டு எல்லா இடமும் சேறு. யாரும் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அதிகாலையிலும் சுறுசுறுப்பான கொழும்பு நகரம். ஒரு சைவச் சாப்பாட்டுக் கடையில் எட்டுப்பத்து இடியப்பங்களும் ஒரு ரீ'யும் பசியை அடக்கின. உடம்பு உளைந்தது. கண் எரிந்தது. இனி விடுதி போய் ஒரு குளிப்பு அடித்துவிட்டு ஒரு பெருந்தூக்கம் போடவேண்டும். நல்ல சீற் கிடைத்தால் கண்டி பஸ்ஸிலும் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்.

"நுவர, நுவர" என்று கொண்டக்ரர் கத்திக்கொண்டிருந்த ஒரு பஸ்'ஸினுள் பாய்ந்து ஏறினேன்.

"தம்பி!, நீர் கண்டியே போகிறீர், நல்ல விசயம், பக்கத்தில இரும் கதைத்துக் கொண்டு போகலாம்" . குரல் வந்த திக்கைப் பார்த்தேன். அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி சாவகாசமாக பட்டர் பூசிய பாணைக் கடித்தபடி... பக்கத்து சீற்றில் உட்காரச் சைகை செய்தார்.



---------------
*பேயன் - முட்டாள்
நுவர- 'கண்டி' நகரின் சிங்களப் பெயர்
பாண்- bread