Tuesday, June 28, 2011

என் மீன்பிடித் தொழில்...

70 களின் இறுதி அல்லது 80 களின் ஆரம்பம். நாலாவதோ அல்லது ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சரியாக ஞாபகமில்லை.

ஒரு சனிக்கிழமை காலைச் சாப்பாட்டு நேரம். நான் ஏழாவது தோசையைப் பிய்த்து தேங்காய்ச் சம்பலுடம் கலந்து வயிற்றிற்குள் தள்ளிக் கொண்டிருக்ககொண்டிருக்க, விக்கி வந்தான். விக்கி என் வகுப்புத் தோழன் மற்றும் நண்பன். "அன்பின் நணபண் கண்ணனுக்கு" என்று எழுதப் பழகத் தொடங்கிய காலத்திலேயே தீபாவளிக் கார்ட் எல்லாம் போட்டிருக்கிறான். என்னை விட இரண்டே மாதங்கள் மூத்தவன். அந்தக் குற்றத்திற்காக "விக்கி அண்ணா" என்றெல்லாம் ஒரு காலத்தில் அவனைக் கூப்பிட்டு இம்சைப் படுத்தியுள்ளேன்.

விக்கி குழம்பிப் போய்விட்டான். கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு பெரிய மனிசன் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கனநேரம் ஒன்றும் பேசவில்லை. முதல்நாள் இரண்டு பேரும் போட்ட பெரும் திட்டத்தை நான் மறந்துவிட்டேனோ என்று பயந்திருப்பான். திட்டத்தின்படி நான் காலமைச் சாப்பாட்டை முடித்தவுடன் இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பவற்றுடன் அவன் வீட்டுக்குப் போயிருக்கவென்டும். எதிர்பாரதவிதமாகத் தோசை இடையிற் குறுக்கிட்டு விட்டது. காலைமைச் சாப்பாடு தோசை என்றால் எப்படியும் பிந்திவிடும்.

திட்டங்கள் இரகசியத் திட்டங்கள் என்பதால் அம்மா, அப்பா, சகோதரங்கள் இருக்கும்போது கதைக்கமுடியாது. விக்கியின் நிலைமை தர்மசங்கடம். என்னை முழிசிப் பார்த்தான். நானோ தோசையுடன் பிஸி. இலேசாகப் பல்லை நறநறத்த மாதிரியிருந்தது.

"மறந்து போனியே?" என்று மெல்லமாகக் கேட்டான்.

"நீ போ, நான் வாறன்," அதைவிட மெல்லமாகச் சொன்னேன்.

விக்கி வீட்டில் ஒரு பெரிய "பிலிப்ஸ்" ரேடியோ இருந்தது. அது "செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, ஜில்லென்ற காற்றே.."" என்று உரத்துப் பாடிக் கொண்டிருக்க வீட்டினுள் நுழைந்தேன்.அவனின் பங்குக்கு இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பன ஆயத்தமாக இருந்தன.

"எடே ரெடியே" என்று மறந்துபோய் உரத்துக் கேட்டு விட்டேன். பதிலாக ஒரு முறைப்புத்தான் கிடைத்தது. பிறகு, "ஸ்ஸ்ஸ்...மெல்லமாகச் சொல்லக் கூடாதெ? இப்ப எதுக்கு ரெடி எண்டு கேள்வி வரப்போது" என்றான். நல்ல வேளை, தோசைக் கடை மாதிரி அலறிக் கொண்டிருந்த ரேடியோவின் புண்ணியத்தில் யாருக்கும் என் குரல் கேட்டிருக்கவில்லை போல.

விக்கிக்கு நான்கு அண்ணன்மாரும் மூன்று அக்காமாரும். கடைக்குட்டி என்பதால் எல்லோரினதும் அன்பு மழையில் நனைந்து கொண்டிருப்பான்.
அன்றைய அன்பு மழை மூத்த அண்ணர் வடிவத்தில் வந்தது.

"டேய் விக்கி, இஞ்சை வா". வந்தான்.

"குளிச்சியே காலமை?"
"இல்லை"
"நேற்று?"
"இல்லை"
"முந்த நாள்?"
"ஓ குளிச்சேனே", வலு உசாராகச் சொன்னான்.

"ரண்டு நாளாக் குளிக்கல்லை, வெளிக்கிட்டுட்டாய் சுத்த; அங்கை பார் கண்ணனை ! காலங்காத்தாத்லை குளிச்சுப் பவுடர் பூசி வந்திருக்கிறான். ஓடு கிணத்தடிக்கு" என்று விரட்டினார். இதிலை "பவுடர் பூசி" என்பது மெய். நான் கடைசியாகக் குளித்தது அதுக்கு முந்திய ஞாயிறு என்பதைத் 'தன்னடக்கம்' காரணமாக வெளிவிடவில்லை.

இவன் குளித்து முடிந்துவர இன்னும் அரை மணித்தியாலமாவது எடுக்கும். திட்டம் இரண்டாவது முறையாகப் பிந்திப் போயிற்று.

******************

ஒருமாதிரி எல்லாருக்கும் போக்குக் காட்டி வெளிக்கிட்டாயிற்று. பள்ளிக்கூடம் தாண்டி நடந்துகொண்டிருக்க ஓணான் முருகேசர் எதிரில் வந்தார். (எங்கள் ஊரில் இப்படி எல்லாருக்கும் ஒரு "மூன்றாவது" பெயர் உண்டு. அதைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.)

"தம்பியவை, எங்கை கையிலே பேணியோடை?" தலையை மேலும் கீழும் ஆட்டியபடி கேட்டார்.

என்ன விடை சொன்னாலும் மனிசன் வீட்டை போய் அப்பாவைச் சந்தித்து வத்தி வைக்காமல் ஒரு வாய் கள்ளுக் கூடக் குடிக்கமாட்டுது.

"அப்பு, பள்ளிக்கூடத்தில கைவேலைப் பாடத்திற்கு மாப் பேணி சேர்க்கச் சொன்னவை. அதுதான் சேர்க்கிறம். உங்கடை வீட்டிலயும் ஏதாவது ஒரு லக்ஸ்பிறேப் பேணி சும்மா இருந்தால், தாறீயோணை?" வாயில் வந்த பொய்யை எடுத்து விட்டேன்.

"தம்பியவையள் நான் அவசரமாகப் போகோணும், பிறகு பாப்பம் என்ன?," ஆசாமி நழுவினார்.


*************************

முனியப்பர் கோயிற் குளம் 'அவ்வளவு' ஆழமானதல்ல. அதன் தெற்குப் பக்கம் தண்ணீர் ஆழம் குறைவு. வடக்குப் பக்கம் ஒரு வளர்ந்த ஆளை மூழ்கடிக்கக் கூடியளவு ஆழம் இருக்கும். ஒரு பனையளவு ஆழம் இருக்குமென்று எங்களோடு படித்த "அளப்பு மன்னன்" குஞ்சன் சொல்லுவான். நல்ல சுத்தமான தண்ணீர். பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கு அதிலிருந்துதான் "இறைப்பு மிசின்" பூட்டித் தணணீர் விடுவார்கள். ஒன்றிரண்டு மாரிகாலங்களில் முதலைகள் வசித்திருந்த குளம் அது என்பது இப்ப அவசியமில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டது, குளத்திலிருந்த மீன்கள். சின்னதாக, பெரிதாக, கறுப்பாக, வெள்ளியாக என்று நிறைய மீன்கள். சின்ன மீன்கள் அனேகமாகக் கூட்டமாக நீந்தும். ஒரு சின்னக் கல்லெடுத்து எறிந்தால், ஒரு கணத்திற் சிதறி ஓடி, மீண்டும் கூட்டமாகச் சேர்ந்து ஓடும். எங்கள் திட்டம் பெரிய மீன்களைப் பிடிப்பதுதான். பெரிய மீன்கள் குளத்தின் வடக்குப் பக்கத்தில்தான் இருக்கும்.

சட்டை ஊசியை நேராக்கி பிறகு தூண்டில் முள்ளு மாதிரி வளைத்தெடுத்தேன். ஊசியின் காதில் நைலான் நூலை இறுக்கமாக முடிந்தேன். இப்ப தூண்டிலில் எதைக் குத்திக் குளத்துக்குள் விடுவது? அதுக்குத்தான் பாவப்பட்ட மண்புழுக்கள் கிடைத்தன. ஈரமான தண்ணீர் வாய்க்கால்களில் தேடி எட்டுப் பத்து உயிருள்ள மண்புழுக்களைப் பிடித்தோம். முதலாவது மண்புழுவைத் தூண்டிலில் குத்தினேன். இப்ப தூண்டில் ரெடி. தூண்டில் கொளுக்கியைக் குளத்தில் வீசிவிட்டு, நைலான் நூலின் மற்றப் பக்கத்தை பூவரசங் கட்டையுடன் சேர்த்துப் பிடித்த் கொண்டேன்.

தூண்டிலை அங்குமிங்கும் அசைத்து மீன் ஏதாவது மாட்டுப்படுதா என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். விக்கியின் லக்ஸ்பிறேப் பேணிக்குள் இதுக்கிடையில் இரண்டு பெரிய மீன்கள். என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு வேறு அடித்தான். மனதுக்குள் அவன் பிடித்த மீன்களைத் திருப்பிக் குளத்துக்குள் எறிந்தேன்.

ஒருமணித்தியாலம் கழிந்தும் எனக்கு ஒரு மீனும் பிடிபடவில்லை. ஆனால், "ம்ம் கும்" என்று ஒரு செருமல் பின்னுக்குக் கேட்டது. நான் மீன் பிடியில் பிஸி. "மாப்பிளே, மீன் என்ன விலை?" என்று பழகிய குரல். திரும்பிப் பார்த்தால் அப்பா! அடுத்து நடந்தது அநேகமாகக் கார்ட்டூன் படங்களில் மாத்திரம் பார்த்திருப்பீர்கள். அந்தக் கணம் அந்த இடத்திலிருந்து மறைந்து அடுத்த கணம் வீட்டில் நின்றேன். அவ்வளவு வேகமாக எந்த ஓட்டப் போட்டியிலும் ஓடியிருக்கவில்லை. விக்கி பிறகு அப்பாவின் சைக்கிளில் அவன் வீட்டுக்கு வந்ததாக அறிந்தேன்.

சொல்லாமல் கொள்ளாமல், களவாக, ஆளை மூழ்கடிக்கக் கூடிய குளத்தில் மீன் பிடித்ததிற்கு பூவரசங் கம்பு முறிய அடி விழப் போகுது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அப்பா "என் மீன்பிடித தொழிலைப்" பற்றி ஒருநாளும் கதைக்கவில்லை. கொஞ்சம் ஏச்சும் அடியும் தந்து அலுவலை அப்பவே முடித்திருந்தால் இதைவிடப் பரவாயில்லை என்றுதான் இப்பவும் நினைக்கிறேன்!




-------------------
பேணி = a tin can

தேங்காய்ச் சம்பல் - கிட்டத்தட்ட தேங்காய்ச் சட்னி மாதிரி ஒன்று, கொஞ்சம் உலர்வாக இருக்கும்

சட்டை ஊசி = safety pin

நைலோன் - Nylon

பூவரசங் கட்டை/பூவரசங் கம்பு - கிட்டத்தட்ட கட்டைவிரல் தடிப்பில் உள்ள பூவரசங் கிளையை வெட்டி, அதன் தோலைச் சீவி எறிந்துவிட்டு, ஒரு சாண் அளவான துண்டுகளாக்கி அதைக் காயவைத்தால், அவைதான் எங்கள் (பட்டம் விடும் நூலின்) நூல் கட்டைகள். இத்தக் கட்டைகளில் நைலோன் நூலை வடிவாகச் சுற்றி வைத்திருப்போம். ஒரு சில விற்பன்னர்கள் வெட்டிய பூவரசங் கட்டைகளை வெறுமனே வெயிலிற் காயவிடாமல், நெருப்பில் மெதுவாகச் சுட்டு (heat treatement !) அதை வலுவாக்குவார்கள்.

Wednesday, June 22, 2011

வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்

என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும்.

எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில்; எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான்.


படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியில் இதைப் பொருத்தியிருப்பார்கள். மேற்பக்கத்தில், நீளமான ஒரு (தண்ணீர்க்) குழாயை ஒரு சுருட்டுச் சுருட்டி பெரிய வட்டவடிவாகக் கட்டி வைத்த்ருப்பார்கள். குழாயைத் தாங்கி நிற்க அடியில் (base)இல் இருந்து சரியான விதத்தில் ஆக்கிய இரும்புக் கம்பிகளை இணைத்திருப்பார்கள். இத்தோடு உடன்பிறவாச் சகோதரம் மாதிரி ஒரு சின்ன வாளியும் பயணப்படும். வாளிக்குள் இரண்டு முழம் நீளமான ஒரு வலிய கயிறு, ஒரு சின்ன Singer Oil Can --அதுக்குள் கொஞ்சம் பெற்றோல் கட்டாயம் இருக்கும். மேலதிகமாக கடந்த 10 வருடங்களில் உழைத்துக் களைத்துப்பபோன பிளக்குகள் (Spark Plugs) மூன்று, நான்கு, ஒரு கரி பிடித்த பழைய துண்டு/துணி, என்பனவும் இருக்கலாம்.

இந்த இறைப்பு மிசின்களைப் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தைத் தவிர வேறுநிறத்தில் நான் காணவில்லை.


இறைப்பு மிசின் விவசாயிகளின் நண்பன் என்றால், றலி சைக்கிள் எல்லாருக்கும் நண்பன். ஏசியா பைக், லுமாலா கூட்டணி வருமட்டும் யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களின் மகாராஜா றலி சைக்கிள்தான். எங்களூரில் கட்டாயமாக, குடும்பத்திற்கு ஒரு றலி சைக்கிள் இருந்திருக்கும். அநேகமாக (டைனமோ) விளக்கு இருந்தால், அதைச்சுற்றி ஒரு மஞ்சள் துணி கட்டப்பட்டிருக்கும்; சத்தியமாக அது ஏன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. படத்தில் இருப்பது போலன்றி 'ஸ்டான்ட்' பின்புறம் ஒரு 'கரியல்' (carrier) உடன் இணைந்திருக்கும். ஒரு நாலைந்து குஞ்சங்களும் ஆங்காங்கே இருக்கும்.

சைக்கிள் என்றால் கட்டாயம் ஒரு மணியும் இருக்கும். அழகான இளம் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குக் கிட்ட சைக்கிள் போகும்போது இந்த சைக்கிள் மணிச் சத்தம் கொஞ்சம் வலுவாக ஒலிக்கும். மோட்டச் சைக்கிள், கைத் தொலைபேசி எல்லாம் பரவலாக வரமுன் இந்தச் சைக்கிளும் சைக்கிள் மணியும் எத்தனையோ காதலர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அண்ணன் அவளின் வீட்டுக்குக் கிட்டவந்து மணியை ஒரு வித சங்கேத தொனியில் அடிப்பார். அவள் வீட்டு மதிலில் 'கடதாசியை' வைப்பார். அந்தப்பக்கம் ஒரு வளையல் அணிந்த கரம் அந்தக் கடதாசியைக் கணக்காக எடுத்து விட்டு, இன்னொரு கடதாசியை வைக்கும். (நிற்க, இது எந்தச் சைக்கிளுக்கும் பொருந்தும் றலி சைக்கிளுக்கு மட்டுமல்ல).

இனிக் கொஞ்சம் 'சீரியஸ்'ஸான விடயத்திற்கு வந்தால், ஆறுகள் அற்ற, வரண்ட தட்டையான யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம், ஒருகாலத்தில் தந்நிறைவடைந்தது என்றால், அதற்கு யாழ் மக்களின் கடும் உழைப்புத்தான் காரணம். அந்த உழைப்பிற்கு உதவியதில் முக்கியமானது இந்த வில்லியர்ஸ்/றலி கூட்டணி.

"மீண்டும் காணமாட்டோமா அந்தப் பொற்காலத்தை,?" மனம் அடித்துக்கொள்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -
- பாரதியார்

பாரதியார் இந்தியாவை நினைத்துப் பாடியது. "வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்" எழுதத் தொடங்கிய என் ஞாபகத்திற்கு வருகின்றது.


--------------------------------------------

வில்லியர்ஸ் இறைப்பு மிசின் = a Water Pump with Villiers engine
றலி சைக்கிள் = Raleigh Bicycle
மிசின் = மெசின் = Machine
வாளி (bucket) - மெட்ராஸ் தமிழில் அழகாக "பக்கட்டு" எனப்படும் :-)

Photos: Thanks to
http://www.flickr.com/photos/33159162@N02/5574558073/
http://www.bikecult.com/works/archive03.html

Saturday, June 11, 2011

ஒரு மத நல்லிணக்கக் கதை எழுதுவது எப்படி?

முதலில் முன்னுரை:

இது கனகாலம் முன்னுக்கு சிட்னியில் உள்ள ஒரு கற்பனைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் உண்மையாக நடந்தது. அது தமிழ்ப் பள்ளிக்கூடம் என்பதால் சனிக்கிழமைகளில் மட்டும் கூடும். "வருடாந்த பெற்றோர், ஆசிரியர், பாடசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்" அல்லது அதுமாதிரி நீளமான தலைப்பில் நடந்த ஒன்றில் நானும் ஓசித் தேத்தண்ணி, விசுக்கோத்துக்களை அனுபவித்துக்கொண்டு அமர்ந்து இருந்தேன். எல்லாரும் 'அமர்ந்திருந்து' கூட்டத்தில் பங்கு பற்றுமாறு அடிக்கடி வேண்டிக் கொண்டார்கள். எனவே, பின்வரிசையில், கதவிற்குக் கிட்ட, வழக்கம் போல் நிற்க முடியவில்லை. கதவுக்குக் கிட்டத்தான் விசுக்கோத்து, தேத்தண்ணி, கோப்பி எல்லாம் வைத்திருந்த மேசை இருந்தது.

நடுவில் நடுவுரை:

"கூட்டம்" வழக்கமான கூட்டங்களை போல் இருந்தது. "கொட்டாவி -தேத்தண்ணி- கொட்டாவி-கோப்பி- விசுக்கோத்து- கொட்டாவி", என்று என் பொழுது போயிற்று.

எப்படா எழும்பிப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. "கடந்த வருடம் நடந்த கலை விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்" என்று தலைவர் கேட்க, 'கச்சிதமாக அழுத்தப்பட்ட' நீளக் கைச் சட்டையும் பொருத்தமான, ஆனால் 1980 யாழ்ப்பாணத்தை ஞாபகப்படுத்தும் வகையிலான நீளக் காற்சட்டையும் அணிந்திருந்த ஒருவர் எழுந்தார்.

"என் பெயர் பீட்டர் சூசைதாசன். நான் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை உப அதிபர்", எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனால் ஒரு சின்னக் கருத்தொன்றைச் சொல்லலாமென்று உள்ளேன். இது ஒரு நாடகத்தைப் பற்றியது. அதிலே ஒரு கிழவன் 'எல்லாம் அந்தச் சிட்னி முருகன் துணை என்று மானசீகமாக அந்தப் பக்கம் பார்த்துக் கும்பிடுகிறார்?", . இந்த இடத்திலே பேச்சை நிறுத்திவிட்டு ஒரு அரை வட்டமாத் திரும்பி, எல்லோரையும் பார்த்தார்.


"அது பிழைதானே?"

நான் மட்டும் குழம்பவில்லை என்று மற்றவர்களின் முகபாவனைகளிலிருந்து விளங்கியது.

"வழக்கமாக வயதானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தானே? அதிலென்ன பிழை?" என்று யாரோ பின்னுக்கிருந்து கேட்டார்கள். எல்லாவற்றிற்கும், "சந்நிதி முருகா" என்று முருகனைத் துணைக்கழைக்கும் என் ஆச்சி வேறு ஞாபகத்திற்கு வந்து போனா.

"இல்லை, நான் அதைச் சொல்லவில்லை, எல்லா மதப் பிள்ளைகளும் படிக்கிற ஒரு பள்ளிக் கூடத்திலே இப்படி ஒரு சைவ சமயத்தைப் திணிக்கிற காட்சிகள் வரக்கூடாதுதானே?" தொடர்ந்தார் அவர்.

இந்த இடத்தில் இன்னொரு பேர்வழியும் புகுந்து கொண்டார். "என் பெயர் ஜான் ஆசீர்வாதமுங்க , அது தப்புதாங்க" என்றார்.

எதோ இப்படியாவது " 'நீ இலங்கைத் தமிழன், நீ இந்தியாத் தமிழன்' என்று வேறுபடாது சேர்ந்து நிக்கிறாங்கள்" என்று யோசித்தும் கொண்டேன்.

"அப்ப அவர்கள் அப்படி நாடகங்கள் போட்டால், நீங்கள் ஏசுநாதரை வைத்து ஒரு நாடகம் போடலாமே", இது நான்.

"இது நல்ல ஐடியாதான், ஆனால் சரிவராது, எங்களில் ஆட்கள் குறைவு, எனவே ஏசுநாதரை வைத்து நாடகம் போடுவது கஷ்டம்" அவர் தொடர்ந்தார்.

இதுக்குப் பிறகு , 'எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் நாடகம் போடுவது/ கதை எழுதுவது எப்படி' என்று மூளையைக் கசக்கி யோசித்ததில் வந்த எண்ணம் இது. யாரும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். காப்புரிமைப் பிரச்சினை இல்லை.

இப்ப விஷயம்

நீங்கள் இருக்குமிடத்தில் மூன்று மதங்களைப் பின்பற்றும் தமிழ் பேசும் நன்மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் எனில் நீங்கள் எழுதும் கதை அல்லது நாடகம் நான்கு பகுதிகளாக்கப்படும் ஏன் நான்கு என்பது பிறகு விளங்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பந்தி கீழே ...

ஒன்று

யேசுதாசன் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் பரலோகம் போய் விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"ஏசுவே என்மீது இரக்கம் காட்டும்" என்று பொதுவாக வேண்டிக் கொள்வார். குறிப்பாக எதையும் யேசுவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் பைபிள் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

இரண்டு

இஸ்மாயில் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் மவுத்தாகி விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"இன்ஷா அல்லா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் அல்லாவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் குர்ஆன் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

மூன்று

முருகுப்பிள்ளை தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் சிவனடி சேர்ந்து விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"முருகா முருகா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் முருகனிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் தேவாரம்/திருவாசகம் என்பன படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

நான்கு

ஏதுசாமி தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று. (ஏதுசாமி தாத்தாவிற்குக் கடவுள் நம்பிக்கையில்லை. பெற்றோர் வைத்த பெயரை "ஏதுசாமி" என்று மாற்றிவிட்டார்)

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டாள் . முதுமையிற் தனிமை வேதனையானது.

"கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். கடந்த ஐம்பது, அறுபது வருடங்களாக இரவில் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

******************************************************

எப்படி என் ஐடியா?


-----------

Image from http://www.humanitarianforum.org/pages/en/faith-religion-and-the-forum.html


தேத்தண்ணி = தேநீர் = tea ; இந்தியாவில் பரவலாக "டீ" எனப்படும். மலேசியா/சிங்கப்பூரில் "டீத்தண்ணி" எனச் சொல்லப்படுவதைக் கேட்டுள்ளேன்.

விசுக்கோத்து = பிஸ்கட்=biscuit;

Thursday, June 2, 2011

தட்டை வடைகளும் ஒரு 'உண்மை' நண்பரும்

காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. அன்றுதான் சனியும் பிடிக்கப்போகுது என்று புரியாமல் இடியப்பக் கடைக்குள் பாய்ந்து உள்ளிட்டு "ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும் தாங்கோ" என்றேன்.

"ஐயோ இவ்வளவு மயிர் கொட்டுண்டு போச்சு உங்களுக்கு" என்று பின்னுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் 'நண்பர்' நின்று கொண்டிருந்தார். நண்பருக்குத் தும்புத்தடி மாதிரி நிறையத் தலைமுடி. அதைப் பகரவீ நிறத்திற்குச் சாயம் அடித்திருந்தார். "ஞாபகம் இருக்கே? உங்களுக்கு ரண்டு வருசம் ஜூனியராகப் படிச்சனான்? இப்பதான் வந்தனான் ஒஸ்ரேலியாவுக்கு , வேலையும் எடுத்துட்டன், என்ன கார் லைசன்ஸ்தான் இன்னும் எடுக்கல்லை" என்றார். கையில் இருந்த சின்னச் சரையில் இருந்து தட்டை வடையொன்றை எடுத்து நீட்டினார்.

வடையைக் கடித்துக்கொண்டு, 'ஆரப்பா இவன்' என்று யோசனையில் ஆழ்ந்தேன். கற்பனையில் அவரின் தலைமுடியைக் கறுப்பாக்கினேன். ஆளை ஒரு பதினைந்து வருடங்கள் இளமையாக்கினேன். அவரின் பிள்ளையார் போன்ற உடம்பை, முருகனின் உடம்புபோல் 'ஒல்லி' ஆக்கினேன். அப்பவும் பிடிபடவில்லை. 'மொட்டையனாக ஆகியும் இவன் என்னை அடையாளம் கண்டு பிடித்துவிட்டான்', எனக்குக் கொஞ்சம் வெட்கமாயிற்று.

நண்பர் வலு நிதானமாக இன்னொரு வடையை எடுத்து நீட்டினார், "இன்னும் கண்டு பிடிக்கவில்லைப் போல, நான் சுகுமார், பூனை சுகுமார் எண்டா ஞாபகம் வரும்". பூனை மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் வலு அமைதியாக இருந்ததால் வந்த பெயர். "நல்லா மாறீட்டாயடாப்பா, வண்டி எல்லாம் வைத்து", என்று அசடு வழிந்தேன்.

'சரி இப்ப உங்கடை மொபைல் நம்பரைத் தாங்கோ, பிறகு கதைக்கிறன்," என்று நம்பரையும் எடுத்தார் நண்பர்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் அழைப்பு வந்தது. மிக மெல்லிய குரலில், பக்கத்தில் யாரோ ஒட்டுக்கேட்பதைத் தவிர்ப்பதுமாதிரிப் பேசினார்.

"ஒரு சின்ன உதவி..."
"சொல்லுங்கோ"
"இந்த டிரைவிங் லைசன்ஸ் விசயம்... நான் ரண்டு மூண்டு தரம் RTA இலே டெஸ்ட் கொடுத்தாச்சு, இன்னும் சரிவரல்லை."
"ஐயோ இங்கை ஊர்மாதிரி இல்லை, காசு தள்ளி எல்லாம் எடுக்க முடியாது" என் உள்ளூர் அறிவை மெதுவாகப் பறை சாற்றினேன்.

"ஹா ஹாஹ் ஹா" என்று எதிர்முனையில் நண்பர் ஏதோ தலைசிறந்த நகைச்சுவையைக் கேட்டமாதிரிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

"இல்லையப்பா, டிரைவிங் பழக்கிற ஆள் சொன்னார், ஆரேனும் நண்பர் மூலம் கொஞ்சம் அதிகம் ஓடிப் பழகச் சொல்லி. கிழமைக்கு ஒருநாள் அந்த ஆளட்டை பழகிறது போதாதுதானே?"

"போதாதுதான்!"

இப்படித்தான் ஆறுமுறை தவறி, ஏழாவது முறை டிரைவிங் லைசன்ஸ் எடுத்த நான் நண்பருக்குக் கார் ஓட்டப் பழக்கிய சம்பவம் தொடங்கியது.

காருக்கு முன்புறமும் பின்புறமும் பெரிய L என்று எழுதிய அட்டைகளை மாட்டிவிட்டு , சிட்னியில் உள்ள பெரிய பெரிய வீதிகளில் எல்லாம் ஆமை வேகத்தில் நண்பர் என் அறிவுறுத்தல்களின்படி கார் ஓடிப் பழகினார். சொறிப்பார்வைகள், நடுவிரல் உயர்த்தல்களையெல்லாம் புத்தரின் உண்மையான சிஷ்யர்கள் போல் புன்னகையால் எதிர் கொண்டோம். என் 'திறமையான' பயிற்சியளிப்பால் நண்பர் மிகக் குறுகிய எட்டு மாதங்களில், இன்னும் நாலே நாலு முறை முயற்சித்து, டிரைவிங் லைசன்ஸ் எடுத்துவிட்டார். பிறகு ஒருநாள் ஒரு சின்னச் சரையில் கொஞ்சத் தட்டை வடைகளையும் நிறைய நன்றிகளையும் எடுத்து வந்தார்.

இதுக்குப் பிறகு நான் நண்பரை மறந்துவிட்டேன். ஆனால் நண்பர் இடைக்கிடை நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார். ஒரு வருடம் கழித்து நான் ஊருக்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது வாய் நிறையப் புன்னகையுடனும் கையில் நாலு கிலோ எடையில் ஒரு 'சின்னப்' பையுடனும் வீடு வந்து சேர்ந்தார்.

"அண்ணை ஊருக்குப் போறியள் எண்டு கேள்விப்பட்டன். இந்தச் சின்னப் பார்சலை கொழும்பிலை என்ரை மனிசியின்ரை தம்பியிட்டை கொடுத்து விடுவியளே?"

நன்றிக்கடனாக நண்பர் தட்டைவடைச் சரை ஒன்றை எனக்குத் தரவும் மறக்கவில்லை.

-----
நட்பு மிக ஆழமானது என்று மீண்டும் ஆறு மாதங்களின் பின் புரிந்தது.

"அண்ணை ஒரு சின்ன உதவி," நண்பர் வழக்கம்போல் மெல்லிய குரலில் தொலைபேசினார்.
"சொல்லுங்கோ"
"மாமா ஊரிலை இருந்து வாறார், சிட்னி எயர்போர்டில் இருந்து கூட்டி வரவேணும், எனக்கு உந்தப் பெரிய பெரிய ரோட்டுகளிலை கார் ஓடப் பயமாக இருக்கு. இப்பதானை லைசன்ஸ் எடுத்தனான். நீங்கள்தான் கார் ஓடவேணும், சனிக்கிழமை இரவுதான் வாறார். ஏலும்தானே?"

சிட்னி விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது , 'மாமா' என் வாகனமோட்டும் திறமையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டு வந்தார். மாமா கொண்டு வந்த 'பருத்துறை' வடைகளில் பாதி எனக்குக் கிடைத்தது.

-----
நட்பு இன்னும் ஆழமானது என்று இன்னும் ஆறே மாதங்களிற் புரிந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில், நடுத்தர வயதைத் தாண்டிய என் கார் சண்டித்தனம் பண்ணி நடுவீதியில் நின்றுவிட்டது. இரண்டு வெள்ளைக்காரத் தடியன்கள் 'பாவம்' பார்த்துத் தள்ளியதில் காரை வீதியின் கரையில் நிறுத்திவிட்டேன். 'வீதி உதவி'(road assist) இற்கு வருடச் சந்தா கட்ட மறந்து விட்டேன். இப்ப கூப்பிட்டால் பெரிய தொகையை உருவி விடுவார்கள், கட்டணமாக.

காருக்கு வெளியே வந்தேன். காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. சூடாக மொறுமொறுப்பாக 'ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும்' சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

ஆங் , என் மறதி மண்டைக்குள் தலை முடியைப் பகரவீ நிறத்திற்குச் சாயமடித்த நண்பர் வந்தார். செல்பேசியில் நண்பர் உடனே கிடைத்தார்.

இப்ப என் முறை, "மச்சான் ஒரு சின்ன உதவி"

"சொல்லுங்கோ" என்றார் நண்பர் எதிர் முனையில். சொன்னேன்.

"அண்ணை குறை நினையாதீங்கோ, நான் அந்தப் பக்கம் இப்ப வர வேண்டிய தேவையில்லை. அதுதான் ... "

"தம்பி , நீங்கள் இந்தப் பக்கம் வர வேண்டிய தேவையில்லைதான், ஆனால் ஒருக்கா வந்து என்னைப் 'பிக்கப்' பண்ணிக் கொண்டு வீட்டில் விட்டு விடுகிறீயளே? இஞ்சை குளிராக் கிடக்கு"

"அண்ணை திருப்பச் சொல்லுறன் குறை நினையாதீங்கோ. நான் உந்தப் பக்கம் வர வேண்டியிருந்தால் கட்டாயம் உங்களுக்கு உந்த உதவியைச் செய்ய மாட்டனே? இப்ப நான் தேவையில்லாமல் ரண்டு கிலோமீட்டர் கார் ஓடி உங்கை வரக்கிடையிலே, நீங்கள் கிட்ட இருக்கிற வேறை ஃப்ரென்ட்ஸைக் கூப்பிடலாமே!"

ஒரு உதவியும் எதிர்பாராமற் செய்யும் உதவிதானே உண்மை நட்புக்கு அழகு? இது ஏன் எனக்கு இப்பதான் புரிகிறது?

************************************

நன்றிகள்: படம் http://n-aa.blogspot.com/2010/12/blog-post_24.html இலிருந்து


சரை = பொதி, பொட்டலம்
வண்டி = தொப்பை
RTA - Roads & Traffic Authority