Monday, October 20, 2014

கோன், என் மிகைநிகர் நண்பன்/அண்ணன்

சின்னஞ் சிறு வயதுகளில் ஒன்றாய் ஓடித்திரிந்து, பிறகு கால ஓட்டத்தில் பிரிந்து, பிறகு முகநூலால் மட்டும் தொடர்புகளை வைத்திருந்த ஒருவன், அண்மையில் மறைந்துவிட்டான்... அவன் நினைவாக...
இந்தமுறை ஊர் போனபோது கோனைச் சந்திக்கவேண்டும் என்பது மனதில் நின்றது. இவன் கம்பளையில்தானே நிற்பான் என்று இடைக்காடு போனபோது கோனைத் (வேலுப்பிள்ளை கனகக்கோன்) தேடவில்லை. அப்போது இடைக்காட்டில்தான் நின்றிருக்கிறான். பிறகு கொழும்புவந்து தொலைபேசியபோது கட்டாயம் சந்திப்பதாகச் சொன்னான். நான்தான் "நீ பெரியையாவின் அந்தியேட்டிக்குப் போவதாயின் அடுத்தமுறை சந்திக்கலாம்" என்றேன். அவன் சொன்ன பதில் ஒரு பத்து நிமிடங்கள் எடுத்திருக்கும். அவ்வளவு நேரமும் 'அன்பு, நட்பு' என்பதுபற்றி ஒரு குட்டிச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினான். அந்தக் கணத்தில்தான் கொஞ்சம் நெருடலாக உணர்ந்தேன்.

சிட்னி திரும்பும்வரை ஆளை சந்திக்கும் ஆவலுடன்தான் இருந்தேன். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சந்திப்பு நடக்கவில்லை. நானும் அடுத்தமுறை பார்க்கலாம் என்றிருந்துவிட்டேன். வெறுமனே ஆறரை மாதங்களுக்குப் பிறகு தகவல் கிடைத்தது "கோன் சீரியஸ், அவரது தாயாரும், மூத்த அண்ணாவும் உடனே கனடாவில் இருந்து ஊர் புறப்பட்டு விட்டார்கள்" என. அடுத்தநாட் காலையே கோன் மறைந்துவிட்ட தகவல் கிடைத்தது. ஒருகணம் தாங்கமாட்டாத கோபமும் அடுத்த நிமிடமே ஒருவித வெறுமையும் சேர்ந்துவிட்டது.

கோன் எனக்கு அண்ணன் முறை. எங்கள் இருவரின் தாத்தாமாரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ! என்றாலும் நான் ஊரைவிட்டுப் படிக்கவென்று வெளியே வரும்வரை ஒவ்வொருநாளும் சென்றுவந்த வீடுகளில் அவன் வீடும் ஒன்று. என்னைவிட நான்கு வயது பெரியவன். சிறுவனாக இருந்தகாலங்களிம் மகிழ்ச்சி, குதூகலம், நக்கல், குறும்பு இருந்த ஒருவன் அவன். நான் கொஞ்சம் சீரியஸ் ரைப். நக்கல் பண்ணி என்னை அழ வைப்பது இவனது ஒரு பகுதிநேரத் தொழில்.

அநேகமான ஆண்கள் எல்லோருக்குள்ளும்- அவர்கள் வயதானவர்கள் ஆகிவிட்டாலும் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டிருப்பான் என்பார்கள். என்றாலும் இவனில் இது சற்று அதிகம். கோனை இப்போது பார்த்தாலும் அவனில் தெரிவது ஒரு அதீத குறும்புச் சிறுவன். சந்தர்ப்பம் கிடைத்தால் இப்பவும் "பட்டப்பெயரொன்றைக் கட்டைக் குரலில் சொல்லிவிடுவான்போல் இருப்பான். இல்லாவிட்டால் சைக்கிள் ரயருக்குக் காற்றைத் திறந்துபோட்டு அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறானோ என்று ஒரு சந்தேகமும் வரும். இவ்வளவு விளையாட்டுப் புத்திகள் இருந்தாலும் அத்தோடு ஞாபகம் இருப்பது இவனின் 'பகிர்ந்துண்ணும்' குணம். மீன் பொரியல் , இறால் பொரியல், வாழைப்பழம், பிஸ்கட் பெட்டி என்று எதென்றாலும் பக்கத்தில் இருக்கும் யாருடனும் பகிர்ந்தே உண்பான்.

1986 அளவில் நிறைய இளைஞர்கள் ஊரில் (வடக்கில்) இருக்கமுடியாத நிலை. இந்த நிலையில்தான் கோன் கண்டிக்கு வந்து பேராதனை வீதியில் ஒரு வீட்டில் தங்குகிறான். பிறகு சில வருடங்கள் கழித்து 'நில அளவையியல்' படிக்கக் கிடைத்து தியத்தலாவ போகின்றான். அதே காலங்களில் நான் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியில். "அன்பின் கண்ணனுக்கு, .."என்று முத்து முத்தான கையெழுத்துக்களில் கடிதங்கள் போடுவான். என்வலப்பில் இருக்கும் கையெழுத்தும் மிக அழகாக இருப்பதால் இரண்டொருதரம் உடைக்கப்பட்டே கடிதங்கள் கிடைத்தன. கடிதங்கள் வாயிலாக தியத்தலாவ காடு எப்படி இருக்கும், அங்கு இருக்கும் மக்களின் எளிய வாழ்வு/அப்பாவித்தனம் பற்றி ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்திருந்தேன். ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைகின்றான் என்றும் எழுதியிருந்தான்.

பிறகு என் கல்யாண விட்டு நேரம், எனக்கு சொந்த அண்ணன் இல்லாத குறையை நிவர்த்தி செய்யுமாப் போல, வீட்டுக்கு வந்து 'போட்டுப் பறிச்சு' உதவிகள் செய்தான். கிண்டல், நக்கல், கல்யாணம் கட்டிய ஆணின் சோகக் கதைகள் (வேடிக்கையாக) என்று பொழுது போனது.

நான் வெளிநாடு சென்றபின் தொடர்புகள் குறையத் தொடங்கி ஏறக்குறைய இல்லாமற் போனது... பிறகு ஃபேஸ்புக் வந்தது. கவிதைகள் எழுதுகிறான் என்று புரிந்துகொண்டேன். கவிதைகள் பற்றிய என் புரிதல்கள் மட்டு என்பதால் அதைப்பற்றி நான் அவனிடம் பேசுவதில்லை. அடிக்கடி ஊர் (இடைக்காடு) போய் புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக் இல் போடுவான். ரசித்துப் பார்ப்பேன். கிட்டத்தட்ட 80 களின் நடுப்பகுதிக்கு ஞாபகங்களை எடுத்துப் போய்விடுகிறது. எத்தனைமுறை மீட்டாலும் அலுக்காத ஞாபகங்கள். அதில்தான் ஒன்று கோன் உருவாக்க முயற்சித்த புது மொழி ஒன்று! அம்மொழியில் அவன் அடிக்கடி சொல்லியது 'பீற்றுண்டி பில்லி சுள்ளி, சுள்ளி'. அர்த்தம் இன்றுவரை தெரியாது. இவனையே கேட்கவேண்டும் என்று அப்பப்ப நினைத்துக் கொள்வேன். சென்றமுறை சந்தித்திருந்தால் கேட்டிருக்கலாம். இருக்கட்டும், எல்லா நினைவுகளையும் காவிக் கொள்கின்றேன்.
















------
மிகைநிகர் - virtual


Friday, August 1, 2014

வைஜந்திமாலா

அநேகமான யாழ்ப்பாணத்தவர் மத்தியில் ஒரு கருத்துண்டு. 'தென்னிந்தியர்தான் சினிமாப் பைத்தியங்கள், சினிமா நடிகர், நடிகைகளுக்காக எதையும் செய்வார்கள். நாம் அப்படியிலை. படம் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வோம்" என்று. அண்மையில், விஜய் கட்-அவுட்'டிற்கு பாலாபிஷேகம், அதே யாழ்ப்பாணத்தில்தான் நடந்தது. ஆனால் இதெல்லாம் 'இப்பத்தைய கூத்து, முன்பெல்லாம் இப்படியில்லை" என்று இதைப் புறந்தள்ள மாட்டோமா? முதலில் இதை வாசியுங்கள்.

வைஜந்திமாலா'வை நான் நேருக்கு நேர் சந்திப்பேன் என்று கனவிலும் நினத்திருக்கவில்லை.
முதலில், இது அந்நாள் நடிகை வைஜந்திமாலா'வைப் பற்றியதில்லை, எனச் சொல்லிவைக்கிறேன். இவர் தாடி மீசை எல்லாம் வைத்த ஒரு முதியவர். எண்பது வயது இருக்கலாம்-சில வருடங்கள் முன்பின்னாக இருக்கலாம். ஆசாமி வயதுக்கு நல்ல ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்குக் காரணம் அவர் தினமும் காலை வடமராட்சி துன்னாலையிலிருந்து பருத்தித்துறை கடற்கரைக்கு 'ஓட்டப் பயிற்சி' செய்ததுதான். இது இவர் இளமைக்காலத்திலிருந்து நடை பெறுவது. ஒருநாளும் தப்புவதில்லை. இப்போது வயதாகிவிட்டதால் ஓடமுடிவதில்லை என்பதால் ஓட்டத்தை வேக நடையாக்கிவிட்டார். துன்னாயிலிருந்து பருத்தித்துறை ஐந்திலிருந்து ஆறு கிலோமீற்றர் இருக்கலாம். எனவே போக, வர என்று ஒவ்வொரு நாளும் அன்னார் குறைந்தது பத்துக் கிலோ மீற்றர்களாவது கடக்கிறார். ஏன் இப்படித் தினமும் "பருத்தித்துறைக் கடற்கரைக்குப் போகின்றார் என்று பிறகு சொல்கின்றேன்.

ஏதோ ஒரு சுபயோக தினத்தில், அதாவது விமான ரிக்கற் மலிவாகக் கிடைத்த ஒரு நாளில், நானும் சிட்னியிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தேன். தனியே இல்லை. பெண்டாட்டி, பிள்ளை குட்டிகளுடதான். பிறந்த ஊரில் நிற்க வசதிப்படவில்லை என்று மனைவியின் ஊரான துன்னாலையில் தங்க முடிவாயிற்று. (என் எதிரிகள் 'இவன் பெண்டாட்டி ஊரில்தான் தங்குவான், சொந்த ஊரை மறந்து விட்டான்' என்று கதை கட்டுகிறார்கள். நம்ம வேண்டாம் !). வழமையாகப் புலம் பெயர் தமிழன்கள் செய்கிறமாதிரி ஊரில் நுளம்பு, எறும்புக் கடி, குழாயில் சுடுதண்ணி இல்லை, 'இஞ்சை ரோட் எல்லாம் இசுக் குட்டியாக இருக்கு', டிரைவிங் படுமோசம், சாப்பாடு அசுத்தம் என்று அலம்பறை பண்ணி அலுத்துப் போனதால் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கலாம் என்று ஒரு எண்ணம் உண்டாயிற்று. இப்படித்தான் வல்லிபுரம் ஆழ்வார் கோவில் போனோம்.

போனமுறை (1994!) பார்த்ததிற்கு கோவில் இன்னும் பெருப்பித்ததாய்த் தெரிகிறது. மணல் வீதியும் மரங்களும் அப்படியே....

"ஓம் நமோ நாராயணா" என்று டிஜிட்டல் எழுத்துக்கள் கோபுரத்தில், நுழைவாசலிற்குச் சற்று மேல் மிளிர்கின்றன. மார்கழி மாதம் என்றாலும் நல்ல வெயில். வெளிவீதியில் வழமைபோல் பிச்சைக்காரர்கள். அநேகர் வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அவர்கள் கூற்றிலிருந்து தெரிகிறது. பிச்சைக்காரர்கள் என்றால் மழிக்காத தாடி, மீசை, அழுக்கு உடை என்று அன்றிலிருந்து மாறவில்லை. என்றாலும் இப்போது அநேகம் பிச்சைக்காரர்களிடம் தகரப் பேணி இல்லை. அதுக்குப் பதிலாக ஒரு துண்டை விரித்துவிட்டு இருக்கிறார்கள். இல்லாவிட்டால் வெறுங்கையுடன். தற்போதைய பணவீக்கத்தில் பிச்சை போடுவதென்றாலும் குறைந்தது பத்து ரூபா நோட்டு போடவேண்டும். தகரப் பேணியைக் கண்டால் நீங்கள் சில்லறைக் காசைப் போட்டுவிட்டு சில்லறைக் காசு, தகரப் பேணியில் 'டங்' என்று மோதி ஒலிக்க ஒருவித திருப்தியுடன் வீடு போய் விடுவீர்கள்.

கோவிலின் உயிர்ப்பு வெளி வீதியில்தான் இருக்கிறது என்பது என் சிற்றறிவுக்கு விளங்கிய வகையில் சரி. மரங்கள், மணல், ஐஸ்கிறீம் வான், கச்சான் விக்கிற ஆச்சிமார், பல்பொருள் கடைகள், டிஜிற்றல் SLR கமராவால் கண்ட எதையும் போட்டோ எடுக்கும் புலம்பெயர் புதுவெள்ளைக்காரன் என்று சுவாரசியமான விசயங்கள். கோவிலின் பின்புறத்தில் இருந்த ஏதோ ஒரு மரத்திற்குக் கீழ் நின்று கொண்டு வாய் பார்க்கும்போதுதான் இவர் வருகிறார். எண்பது வயது மதிக்கலாம். தலையில் சடா முடி, அதோடு போட்டிபோடும் தாடி,மீசை, இடுப்பில் வேட்டி, மற்றும் நரைத்த மஞ்சள் துண்டு. கையில் ஒரு சங்கு. கையில் இருக்கும் சங்கைப் பார்த்ததும் இவர் பிச்சைக்காரன் இல்லைப் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

"ப்ப்ப்பூஊஊஊஊ...." என்று சங்கை ஊதினார்.

"Hey!, Music !" என்றான் என் சின்னவன்.

இவர் சங்கை வாயிலிருந்து எடுத்து விட்டு, "Which country?" என்று கேட்டார்.

அடே இங்லிலிஷ் கதைக்கிறாரே என்று நான் யோசித்தேன். பெடியனுக்கு அவர் பேசியது புரியவில்லை.

அப்போதுதான், "இஞ்சை பாரப்பா, வைஜந்திமாலா!" என்றாள் என் மனைவி.

வைஜந்திமாலா பற்றி முதலே கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதில் இருந்து இவர் வைஜந்திமாலா பக்தனாக இருக்கலாம் என்று ஊகித்தும் வைத்திருந்தேன். நான் சிறுவயதுகளில் சிறீதேவி பக்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். டீ ஆர் ராஜகுமாரியைப் பார்க்க காணி விற்று இந்தியா போன இன்னொரு பக்தரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். என் இருபதுகளில் 'யாரோ ஒரு பெண் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்னையை அடைந்து நடிகர் பிரசாந்தைக் கல்யாணம் கட்டித்தான் வீடு போவேன்' என்று அடம் பிடித்ததும் வீரகேசரியில் வந்திருந்தது. எல்லாம் கேள்விப்பட்டதுதான். அப்படி ஒருவரைச் சந்தித்தது, முதல் முறையாக அந்த 'வல்லிபுரம் ஆழ்வார்' அருளில் அவர் சந்நிதானத்திலேயே நடந்தது.

யாழ்ப்பாணம் நன்றாக இருந்த அந்தக்காலம். சினிமா நடிகர்/நடிகைகள், பாட்டுக்காரர்கள், மற்றும் வேறுபல கலைஞர்களை இந்தியாவிலிருந்து வருவித்து ஒரு நிகழ்ச்சியை வைத்துப் எங்கள் கலை, பண்பாடு, விழுமியங்களைக் கட்டிக்காப்பது அப்போதே தொடங்கியாயிற்று என்பது வரலாறு தெரிந்த, தெரியாத யாரும் ஒத்துக்கொண்ட ஒன்று. அப்படி ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை வைஜந்திமாலா யாழ்ப்பாணம் வருகிறார். " விளம்பரம் போட்டு, ரிக்கற் விற்று ஏதோ ஒரு மேடையில் கட்டுக்கடங்காதா கூட்டத்தின் மத்தியில் வைஜந்திமாலா. அவர் என்ன பேசியிருப்பார் என்று தகவல்கள் கிடைக்கவில்லை. என்றாலும் "எனக்கு ஒங்க ஊர் இடியப்பம், புட்டு என்றால் ரொம்ம்ம்பப் பிடிக்கும்" என்று கூந்தலைத் கோதிக்கொண்டு சொல்லியிருப்பார் என்று ஊகிப்பது சிரமம் இல்லை.

சிற்றம்பலம் அப்போது இளைஞன். அப்போதுதான் படிப்பு முடித்து ஒரு வாத்தியார் வேலையும் கிடைத்திருந்தது. ஒரு வாலிபக் குறுகுறுப்பில் சிநேகிதங்களுடன் ரிக்கற் வாங்கி வைஜந்திமாலாவைப் பார்க்க வருகிறார். (வீட்டில் 'மாட்டுக்குத் தவிடு வாங்க யாழ்ப்பாணம் போறன்' என்றுதான் சொல்லியிருந்தார்)

வைஜந்திமாலாவின் அழகில் ,கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்த சிற்றம்பலம் அண்ணன், தன்னை மறந்தார். எல்லாவற்றையும் மறந்தார். "மணந்தால் அவளை, இல்லாவிட்டால் நான் பிரமச்சாரி" என்று ஒரு திட சங்கற்பம் எடுத்தார். (அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறார்.)

நிகழ்ச்சி முடிந்து வைஜந்திமாலா இந்தியா போய்விட்டார். சிற்றம்பலம் இலேசாகக் மனநிலை குழம்பி விட்டார். மறுநாள் "வைஜந்திமாலா எங்கே?" என்று நண்பர்களைக் கேட்டிருக்கிறார். "தெரியாதா? அவர் இந்தியா போயிட்டார்" என்று பதில் வருகிறது. சிற்றம்பலத்தாரின் பூகோள அறிவு கொஞ்சம் வீக். "இந்தியா எங்கே இருக்கிறது?" என்று அடுத்த கேள்வியை வீசீயிருக்கிறார்.

"பருத்துறைக் கடலுக்கு அந்தப்பக்கம் இருக்குது" என்று மூக்கைச் சொறிந்து கொண்டே சொன்னார் அவர் நண்பர் நடராசா.

அதற்குப் பிறகு திருவாளர் சிற்றம்பலம் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஆனால் தான் வசிக்கும் துன்னாலையூரிலிருந்து பருத்தித்துறைக் கடற்கரை மட்டும் தினமும் காலை ஓடிச் செல்வார். கப்பல் ஏதாவது வராதா அதில் வைஜந்திமாலா வரமாட்டாரா? என்று பார்க்கத்தான் இப்படித் தினமும் ஓடிச் செல்கிறார் என்று ஊரவர் பேசிக்கொண்டார்கள். அவர் இயற் பெயரும் எல்லாரும் மறந்து 'வைஜந்திமாலா" ஆகிவிட்டது.

வைஜந்திமாலா யாழ்ப்பாணம் வந்து அதுக்குப் பிறகு இலங்கையில் எத்தனையோ இனக்கலவரங்கள் வந்துவிட்டன. கண்ட போனபாட்டுக்குச் துவக்குக் சூடு, ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு, இடம் பெயர்வுகள் அன்று பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. கடைசியாக முள்ளிவாய்க்கால் துயரமும் நடந்து போயாயிற்று.

ஆனால் வைஜந்திமாலா என்கின்ற சிற்றம்பலம் இன்னமும் பிரமச்சாரி. அத்தோடு தினமும் துன்னாலையில் இருந்து பருத்தித்துறைக் கடற்கரைவரை விரைவு நடை போடுகிறார். (வயதாகி விட்டதால் இப்போது முன்புபோல் ஓட முடிவதில்லை).

"வைஜந்திமாலா ஒரு கப்பலில் வந்திறங்குவார்" என்றுதான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

-------------------------


புகைப்படம்:

http://radhikasree.hubpages.com/hub/Vyjayanthimala-the-beautiful-actress-of-Bollywood-during-1950-1970






Wednesday, July 9, 2014

பிரேசிலாதல்



அரையிறுதி 2014 FIFA உலகக்கிண்ணம். பிரேசில் 1 ஜேர்மனி -7. பிரேசில் ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். இதன் பாதிப்புக் கனகாலம் இருக்கும். இருக்கட்டும், நான் இதன் பாதிப்புக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.


(1) எதிர்காலத் தமிழ்ப் படம்

காட்சி 1: பாத்திரங்கள் ஹீரோ(வேலையில்லாப் பட்டதாரி), அம்மா, அப்பா.

அப்பா வழக்கம்போலக் கத்துகிறார். "தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கு, மூணு வேளையும் திங்கத்தான் தெரியுது. மிச்ச நேரத்திற்கு ஆத்தங்கரை, குளத்தங்கரையிலை குந்தியிருக்கிறது. போறவாற பொண்ணுங்களைச் சைட் அடிக்கிறது. பத்துப் பைசா உழைக்க வக்கிருக்கா?".

"சும்மா இருங்க, எதுக்கெடுத்தாலும் எம்புள்ளயைக் குத்தம் சொல்லுறது." அம்மா சப்போர்ட்டுக்கு.

"தண்டச்சோறு, இவன் எதுக்குத்தான் லாயக்கு? பிரேசிலுக்குப் புட்பால் விளையாடத்தான் லாயக்கு".

இவ்வளவு நேரமும் எருமைமாட்டுக்கு மேலே ஏதோ பெய்ததுமாதிரிச் சுணைப்பு இல்லாமல் இருந்த ஹீரோ, கடைசி வசனத்தால் மனம் வெறுத்து வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறுகிறான். கையில் ஒரு பெட்டி. (சிம்பொலிக்'காக ஆசாமி கோபித்துக் கொண்டு ஓடுகிறான் என்று உணர்த்துகிறது. கமரா பெட்டியைக் குளாசப்பில் இரண்டு, மூன்றுமுறை காண்பித்து உங்களின் IQ வைச் சோதிக்கிறார்கள்.)

அம்மா வழக்கம்போல, "என்னங்க, என்னங்க, எம் புள்ளையை நிக்கச் சொல்லுங்க" என்று ஒரு கலன் கண்ணீர் விடுகிறார்.

பிறகென்ன, ஹீரோ திருட்டுத்தனமாக ரிக்கட் இல்லாமல் ரயில்/பஸ் பிடித்து மெட்ராஸ் வந்து, காதலித்துக் கோடீஸ்வரனாகி, வில்லனை அழித்து என்று கதை போகிறது.


(2) கோர்ட் சீன். கொலை வழக்கு. ராமன் சோமனைக் கொன்றுவிட்டான்.

நீதிபதி: திரு ராமன், நீர் சோமனைக் கொன்றது உண்மையா?

ராமன்: ஆம் ஐயா!

ராமனின் வக்கீல் திடுக்கிட்டுப் போய் குறுக்கிடுகிறார், "ஐயா என் கட்சிக்காரருக்கு மனநிலை சரியில்லை, அதுதான் கன்னா பின்னா என்று பேசுகிறார்"

நீதிபதி: அப்படித் தெரியவில்லை. ராமன் நீர் ஏன் இந்தக் கொலையைப் புரிந்தீர்?

ராமன்: ஐயா அவன் என்னை கோபமடையச் செய்யுறமாதிரி அவமதித்தான் ஐயா.

நீதிபதி: இதுக்கெல்லாம் கொலையா செய்வது? என்ன? போயும் போயும் உன் மனைவியின் கற்பை வம்புக்குக் இழுத்திருப்பான்.

ராமன்: இல்லை ஐயா, அதைவிட மோசமாக அவமதித்தான்.

நீதிபதி:?

ராமன்: "நீ ஒரு கையாலாகாதவன் பிரேசிலுக்குப் புட்போல் விளையாடத்தான் லாயக்கு" என்றான் ஐயா. அதுதான் நான் சூடாகி கையில் கிடந்த ஒன்றை அவன் தலையில்போட, ஆள் குளோஸ். சத்தியமாகா நான் பிளான் பண்ணிக் கொலை புரியல்லை ஐயா.

குறிப்பு: மிக நீண்ட விசாரணையின் பிறகு ஜூரர்கள் அவனை விடுதலை செய்யச்சொல்லி முடிவு எடுக்கிறார்கள்.


(3) 10/10/2014. இலங்கை அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையில் நடக்கவிருந்த கால்பந்து விளையாட்டு ரத்து செய்யப்படுகிறது. யாரும் ரிக்கற் வாங்காததுதான் காரணம் என்று ஊகிக்கப்படுகிறது.

(4) தமிழில் சில பழமொழிகள் கொஞ்சம் மாறும். உ+ம் யாரும் "கழுதை கெட்டால் குட்டிச்சுவரில்" என்று சொல்லமாட்டார்கள். "கழுதை கெட்டால் பிரேசிலில் கால்பந்து விளையாடுமாம்" என்பார்கள்.

தமிழில் ஒரு புது வார்தை வரும்.

பிரேசிலாதல் - 1.அசிங்கமாகத் தோற்றல். 2. (கம்பஸ் மொழி) பெயிலாகுவது, அரியர்ஸ் வாங்குவது

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியக் கிரிக்கட் அணிகள் சொதப்பினால், கிரிக்கட் ஆய்வாளர்கள் எழுதுவார்கள்' "இது மாதிரி இனியும் விளையாடினால். இனி இவர்கள் பிரேசிலாவதைத் தவிர்க்க முடியாது.


(5) இலங்கைக் கம்பஸ் பெடியள் சொல்லுவார்கள் "மூன்று பாடம் கையில்" என்று. அதையே தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் "மூன்று பாடம் அரியர்ஸ்" என்பார்கள்.

இனிமேல் இலங்கை, இந்தியாக் கல்லூரி மாணவர்கள் ஒரேமாதிரிச் சொல்லுவார்கள், "மூன்று பாடம் பிரேசில் ஆச்சு"




-----------------

புகைப்படம்

www.smh.com.au

Monday, June 30, 2014

புது மாப்பிள்ளைகள்

இது புது மாப்பிள்ளைகளுக்கும் முன்னாள் புது மாப்பிள்ளைகளுக்கும் ஆனது.

புது மாப்பிள்ளைகளை எப்படி வரைவிலக்கணம் செய்யலாம் என்பது சர்ச்சைக்கு உரியது.
கல்யாண நாளுக்கு 'சில' மாதங்கள் முன்னாலும் பின்னாலும் இருக்கும் ஆண்கள் எனலாம். சிலருக்கு 'சில' என்பது எழுபது எண்பது வரை போவது ஒரு உளச் சிக்கல்.
என்றாலும் "என்ன ஆள் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கிற மாதிரி இருக்கு? கல்யாணாம் கில்யாணம் எதாவது ஃபிக்ஸ்டோ" என்று ஆராவது ஆரம்பித்து வைக்க ஆள் கொஞ்சம் வெட்கப்பட்டுச் சிரித்தால் அவர் புதுமாப்பிள்ளையாக ரெடி ஆகின்றார் என அனுமானிக்கலாம்.

புதுமாப்பிளைகளுக்கு முழங்காலுக்குக் கீழ் எதுவும் இருப்பதுமாதிரி இராது. ஏதோ மிதப்பதுபோல் திரிவார்கள். எந்தநேரமும் எதையோ யோசித்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (மற்றவர்களுக்கு அசட்டுச் சிரிப்பு மாதிரி இருக்கும்). சந்தியில் இருக்கிற ரொட்டிக் கடையில் சாதாரணமாக எட்டுப்பத்துச் சிநேகிதங்களுடன்கள்தான் பிளேன் ரீ என்றாலும் குடிக்கும் இவர் இப்போது புது மாப்பிள்ளை -தனியாகத்தான் ரீ குடிப்பார். நண்பர்களைக் கெட்டித்தனமாகக் காய் வெட்டி விடுவார். யாராவது கேட்டால், "இவங்கடை நக்கல் தாங்க முடியல்லை" என்பார். அது உண்மையல்ல, இவருக்குத் தனிமையியே கொஞ்சம் "திங்" பண்ண வேண்டும் என்பதுதான் காரணம்.

நேற்று வரைக்கும் ட்ரவுசர், சேர்ட் , சாரம், அது இது என்று எதையும் தோய்த்துத்தான் அணிய வேண்டும் என்று இவனுக்குத் தெரியுமா என்று மற்றவர்களை எண்ண வைத்திருப்பார் பெரியவர். இப்போது சைவ சமய பாடப் புத்தகத்தில் "கோவிலுக்கு எப்படிப் போக வேண்டும்?" என்பதற்குப் விடையான "நன்றாகக் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து.." என்பதனை ஞாபகம் ஊட்டுவார்கள். கூடுதலாக "இஸ்திரி" போடும் வேலையையும் செவ்வனே செய்திருப்பார்கள்.

புது மாப்பிள்ளைகள் சவரம் செய்வது என்பது தனித் தலைப்பு வைத்து எழுத வேண்டிய ஒன்று. எனக்குத் தெரிந்த அண்ணா ஒருவர், 'தமிழீழம் கிடைத்தாலென்ன கிடைக்காட்டிலென்ன தாடியை வழிக்க மாட்டேன்' என்று வீர சபதம் போட்டிருந்தார். அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி, கெமிஸ்ரி வாத்தியார், பிஸிக்ஸ் வாத்தியார் என்று எல்லாரும் இதைத்தான் சொன்னார்கள், "சகிக்கேல்லை". ஆனால் அண்ணனின் தாடி மட்டும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமோ என்னவோ அதுமாதிரி வளர்ந்தது. "காதல் தோல்வி" என்றும் ஊரில் ஒரு கதை கிளம்பியது. (பின்னாட்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் தாடியை விட வேகமாக வளர்ந்த இன்னொன்று என்றால் அவரின் காதல்தான் என்று தெரிந்தது).

ஆயிற்று அண்ணன் புது மாப்பிள்ளையானர். ஒரு பின்னேர நேரம் அண்ணி சொன்னா "இதென்ன ஒரு தாடி, இதை அடுத்தமுறை வரமுன்னே வழிக்கவேண்டும்" என்று. அண்ணனுக்கு ரோஷம் பொத்திக் கொண்டு வந்தது. விறுவிறு என்று சொல்லிக் கொள்ளாமல் நடையைக் கட்டினார். சூடாகி விட்டார் என்றுதான் அண்ணியும் நினைத்திருப்பா. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணனின் தாடி காலி.

இது இன்னொரு கேஸ். இவர் இன்னை விடச் சிறியவர். எனவே தம்பி என்போம். தம்பிக்கு முகத்தில் முடி குறைவு. இரண்டு மூன்று முறை மீசை வளர்க்க முயற்சித்துத் தோல்வியடைந்து ஒரு ராஜதந்திரப் பின்வாங்கல் முடிவு ஒன்று எடுத்தார். "டீசன்ட் வேலை பாக்கிறவங்கள் க்ளீன் ஷேவ் ஆகத்தான் இருக்கவேண்டும்" என. இவரும் ஒரு நல்ல நாளில் புது மாப்பிள்ளையானார். "உங்களுக்கு பிரஞ்ச் தாடி வைச்சால் நல்லாயிருக்கும்" என்று அவா சொல்ல, இவர் உண்மையில் சூடானார். சூடாகி என்ன? ஆத்திரத்தை முகநூலில் நிலைத்தகவல் ஆக்கி ஒரு இருபத்து மூன்று லைக்குகள் வாங்கினார். அதில் ஒன்று அவரின் அம்மா இட்டது.

அண்மைக்காலப் புது மாப்பிள்ளைகள் சிலரைப் முகநூலில் அவதானிக்க முடிந்தது. காலையில் எழுந்து பல்லுத் தீட்டி, நீராடி, தேத்தண்ணி பாண் என்பவற்றை வயிற்றினுள் தள்ள முன்னரே முகநூலில் நிலைத்தகவல் போடுவார்கள். "It is so cold outside, but roses on my desk are beautiful- Handsome boy, the poet" என்ற கணக்கில். அதுக்கு எழுநூற்று அம்பத்தைஞ்சு 'லைக்குகள்' (அதில் ஒன்று நான் போட்டது). ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு நிலைத்தகவல் போடுவார். தம்பிக்குக் கல்யாணம் ஆச்சு. பெண்டாட்டி ஒரே ஒரு வேலைதான் செய்தா. இந்த லைக்'குகளில் எததனை ஆண்கள் போட்டது, எத்தனை பெண்கள் போட்டது என்று ஒரு ஒரு excel sheet இலே இரு சின்ன ஆராய்ச்சி தொடங்கினா. தம்பியை இப்ப முகநூல் பக்கம் காணவில்லை. இது இப்படி என்றால் இப்ப கல்யாணம் ஆன ஒரு பதிவரைப் பற்றி எழுதி நான் அடி வாங்க ஆயத்தம் இல்லை. போனமுறை கண்டபோது தான் ஜிம்'இல் செய்யும் உடற்பயிற்சிகளைப் பற்றி ஒரு சின்ன வகுப்பு எடுத்து விட்டுத்தான் போனார். எதுவும் விளங்கவில்லை என்றாலும் பாரமான இரும்புகளைத் தூக்குகிறார், தள்ளுகிறார், இழுக்கிறார் என்று புரிந்தது. பிசகு வந்தால் ஓடித்தப்பலாம் என்றால் அன்பர் ஒவ்வொரு நாளும் முப்பது நாப்பது நிமிடங்கள் ஓட்டப் பயிற்சியும் செய்கிறாராம். வம்பெதற்கு?

***************************

Sunday, June 29, 2014

ஓடக்காரனும் தோழரும் (சற்றுப் பெரிய குட்டிக் கதை)

தோழர் என்று அறியப்பட்ட பரமார்த்த செந்தமிழன் முற்றும் கற்ற ஒரு மார்க்ஸிய அறிஞர். தடித் தடியான சிவப்பு மட்டைப் புத்தகங்களை முதற் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒருவித கொள்கை வெறியோடு படித்துத்தீர்த்தவர். அதுகாரணமாகவோ என்னவோ அவர் முகத்தில் ஒரு அறிவுக்களை எப்பவும் வீசும், எப்பவாவது முறையாகப் பனங்கள் அடித்தநாட்களில் மட்டும் இந்த அறிவுக்களை இன்னும் அதிகமாகும்.

ஒரு நன்னாளில் தோழருக்கு கடலின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போக வேண்டிய தேவை உண்டாயிற்று. முள்ளுப் பற்றைகள், மணல் வெளிகள் எல்லாம் தாண்டி இக்கரைக்கு வந்தார் தோழர். அக்காலங்களில் அக்கடலைக் கடந்து அந்தப் பக்கம் போவது ஒரு பயங்கர ரிஸ்க்கான விடயம். மேலேயிருந்து ஹெலி சுடும். நேவிக்காரன் ஷெல் அடிப்பான்; அல்லது பென்னாம் பெரிய கலிபர் துவக்கால் எட்ட நின்று சுடுவான். சனங்கள் இதுக்குப் பயந்தால் என்ன பயப்படாவிட்டால் என்ன இக்கரையிலிருந்து அக்கரை போகவேண்டிய தேவை. வள்ளக்காரர்கள் கரையில் நிற்பார்கள். நாலைந்து பேரிலிருந்து, பத்துப் பதினைந்துபேர்வரை கொள்ளக்கூடிய வள்ளங்கள் சேவையில் இருக்கும். அன்றைக்கு முதல் நாளில் போன வள்ளங்களை ஹெலி துரத்தித் துரத்திச் சுட்டதில் எட்டுப் பத்துப்பேர் பலி. இன்னும் எட்டுப் பத்துப் பேருக்குக் காயம். அதனால் அன்று படகோட்டிகள் யாரும் இல்லை. முதல் நாள் உதயன் பேப்பரில் தலைப்புச் செய்தியே இதுதான்.

தோழர் உள்ளூர் விடயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. கியூபா, பழைய சோவியத் யூனியன், வியட்னாம் என்று அவர் சிந்திக்கும் தளமே வேறு. கரையில் சனஞ்சஞ்சடி குறைவாக இருப்பதால் ஏதோ சம்பவங்கள் நேற்று நடந்திருக்கலாம் என்று ஊகித்தார். சரி படகோட்டி ஒருவன் தன்னும் இன்றைக்கு வர விடாமலா போகின்றான்? என்று அங்கலாய்ப்போடு கடற்கரையில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு 'அன்னா கரீனினா' வை பன்னிரண்டாம் முறை வாசிக்கத் தொடங்கினார்.

மெலிதாக வீசும் கடற்கரை உப்புக் காற்று, தூரத்தே இருட்டில் தெரிந்த தென்னங்கூடல், பெயர் தெரிந்த தெரியாத விலங்குகள்/பூச்சிகளின் இரைச்சல், மற்றும் கடலில் இருந்து வந்த வாசனைகள் எதுவும் தோழரின் மனத்தில் படவில்லை. இன்றைக்குக் கடல் இரைச்சல் வேறு அதிகமாக இருந்தது இவர் தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிப் போனார். யாரோ மெலிதாகத் தோளில் தட்டுவது புரிந்ததும் திடுக்கிட்டு துள்ளி எழுந்தார்.

"தம்பி, வள்ளத்திற்கு காத்திருக்கிற மாதிரி இருக்கு.." என்று கேட்ட ஆசாமிக்கு சுமார் ஐம்பது வயதிருக்காலம். பெயர் சீனித்தம்பி, சுருக்கமாகச் சீனி. உறுதியான ஆனால் சற்று வரண்ட உடல்வாகு. "ஐஞ்சியாங் காசு உழைக்க லாயக்கில்லை, இரவிலை சுரண்டுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை" என்று பெண்டாட்டி வழக்கம்போல் டோஸ் கொடுத்ததால் இன்றைக்கு மட்டும் ரோஷம் பொத்திக் கொண்டு வர ' ஐந்நூறு ரூபாக் காசாவது உழைக்காமல் வீட்டுக்கு வருவதில்லை' என்று திட சங்கற்பற்பத்தோடு வீட்டைவிட்டு வந்திருந்தார்.

"ஓம் தோழர் அந்தப் பக்கம் போகலாமே?" என்றார் தோழர். இது நடந்தது தாடி வைத்த - பீடி குடிக்கிற எல்லாரும் தம்மைத் தானே கொம்யூனிஸ்ட் என்று நம்பிக் கொண்டு தில்லாகத் திரிந்த காலத்திற்குச் சற்றுப் பின். "தோழர்" என்று அழைக்கப்பட்டதில் சீனி வியப்பேதும் அடையவில்லை. சீனிக்குச் சின்ன வயதில் 'எறும்பு' என்று ஒரு பட்டப்பெயர் இருந்தது மட்டும் ஞாபகம் வந்தது. வாத்திமார்கள் அதேகாலத்தில் அவனை 'கணக்குப்புலி' என்று செல்லமாக அழைப்பார்கள். கணக்குப் போடுவதில் விண்ணன்தான். கல்யாணம் கட்டிய புதிசில் மனிசி செல்லமாக அழைத்த பெயரை எழுதினால் சங்கடப்படுவார். இந்தப் பெயர் வரிசையில் 'தோழர்' என்பதுவும் ஒன்றெண்டு அலுத்துக் கொண்டார்.

"தம்பி, ஐஞ்நூறு ரூபா எண்ணி வையும்," என்றார் சீனி.

"ஐந்நூறா?" என்று திடுக்கிட்ட தோழர், "உழைப்பைச் சுரண்டக் கூடாது" என்று ஞாபகம் வர அமைதியானார்.

தோழர் சாரத்தை மடித்துக் கட்டி விட்டு வள்ளத்தினுள் ஏறிக்கொண்டார். சீனி வள்ளத்தைக் கொஞ்சத்தூரம் தள்ளிக்கொண்டு சென்று பிறகு படகின்
ஒருபக்கத்தில் கைகளை ஊன்றி ஒரு எம்பு எம்பிப் படகில் குதித்தார். மாரி காலக் கடற் காற்று சில்லென்று வீசியது. தூரத்தில் புலம்பெயர்ந்து வந்த பெயர் தெரியாத பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து திரிந்தன. தோழர் 'பைக்கால்' ஏரியில் இதுமாதிரிப் படகுச் சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒருவித மம்மல் நிலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

அன்றைக்குக் கடலில் அலை சற்று அதிகமாக அடித்தது. வள்ளமும் கொஞ்சம் தூக்கிப் போட்டதில் தோழர் மோகன நிலையில் இருந்து சற்று மீண்டுவந்தார். குளிருக்கு இதமாக பீடி குடிக்கவேண்டும் போல் இருந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த பீடிக்கட்டைப் பிரித்து ஒன்றை வாயில் வைத்தார். இன்னொன்றை சீனித்தம்பியிடம் நீட்டனார். "தம்பி நான் கட்டினாப் பிறகு விட்டுட்டன்" என்று வழக்கமாக யாழ்ப்பாணத்துக்காரர் அநேகம்பேர் சொல்லுகிற மாதிரிச் சொன்னார்.

தோழர் தான் வாசித்த ரஷ்யக் கதைகளில் யாராவது படகோட்டி எதுவும் புகைக்காமல் இருந்தானா என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"தோழர், இன்றைக்கு ஐநூறு ரூபாய்கள் உழைத்துவிட்டீர், இனி இன்றைக்கு இது போதுந்தானே?" என்று கதையைத் தொடங்கினார். வெறும் பரமார்த்த செந்தமிழன் எப்ப 'தோழர் பரமார்த்த செந்தமிழன்' ஆனாரோ அன்றையிலிருந்து அவரின் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் கிட்டக் கிட்ட வரத் தொடங்கின. அத்தோடு, செயப்பாட்டு வினைச் சொற்களை அதிகம் பாவிக்கத் தொடங்கினார். உ+ம் "ஒடுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறீர்கள்". சிலவேளை இவர் பேசுவது சுவிஷேஷ நற்செய்தி கேட்பதுமாதிரி இருக்கும். இதைச் சொன்னால் பத்திரகாளியின் பெரியப்பா மாதிரியாய் விடுவார் செந்தமிழன். விட்டு விடுவோம்.

"தம்பி சூடாக்காதேயும்," சீனி சூடாகத் தொடங்கினார்.

"ஏன் தோழர்?" தோழர் நோண்டத் தொடங்கினார்.

"படகு என்ரை இல்லை. படகுச் சொந்தக் காரனுக்கு சரி பாதிக் காசு கொடுக்கோணும். அவங்களுக்கும் 2 வீதம் வரியும் குடுக்கவேணும்"

"நீங்கள் நன்றாகச் சுரண்டப் படுகிறீர்கள்!" இப்போது தோழரின் மீசை, தாடி, புஜங்கள் எல்லாம் துடிக்கத் தொடங்கின. கண்கள் சிவந்தன. குடித்துக் கொண்டிருந்த பீடியைக் கடலினுள் வீசீனார்.

"ஒவ்வொரு நாளும் நான்தான் சுரண்டுறதாகப் பெண்டாட்டி அலுத்துக் கொள்ளுறாள்" சீனி கனக்க வெட்கப் பட்டார்.

"தோழர் உங்களுக்குப் பிரச்சினை புரியவில்லை. இதுதான் பிரச்சினையே" தோழர் தொடர்ந்தார்.

"நீங்கள் கார்ல் மார்க்ஸின் மூலதனம் படித்தீர்களா?" ஆர்வத்தோடு தோழர் கேட்டார்.

"இல்லை!" படகு அலைகளில் சற்று அதிகமாக ஆடுவதைக் கவனித்துக்கொண்டே பதிலளித்தார் சீனி.

"கார்ல் மார்க்ஸ் எழுதிய வேறு ஏதாவது புத்தகங்கள் படித்தீரா?"

"இல்லை"

"லெனின், ஏங்கெல்ஸ், மாவோ எழுதிய ஏதாவது புத்தகங்கள்?"

"தம்பி, நான் சின்ன வயசில கணக்கு நல்லாச் செய்வன். கணக்கு வாத்தியார் கனக்க இங்கிலிஸ் புத்தகங்கள் தந்து பயிற்சி செய்யச் சொல்லுறவர்.. " சீனி தான் படித்த கணக்குப் புத்தகங்களை மனதில் கொண்டுவர எத்தனித்தார். ஐம்பது வயதில் மூளை முன்போல் இல்லை என்று சற்று கவலைப்பட்டார். கூடவே தன்னோடு படித்த சிலபேர் டாக்குத்தர், இஞ்சினியர் என்று இப்ப இருக்க தான் மட்டும் படகோட்ட வேண்டி வந்திட்டுது என்று ஒரு சுய பச்சாபமும் வந்துவிட்டது.

"சொச் சொச், " தோழர் தொடர்ந்தார். "உங்கள் வாழ்க்கையில், அம்பது வீதத்தை இழந்து விட்டீர்களே!!"

"தம்பி சரியாச் சொல்லுது, எனக்கு இப்ப அம்பது வயசு. நூறு வயசுக்கு இருக்க ஆசை", சீனிக்குச் சின்ன வயதில் கடியன் என்று ஒரு பெயரும் இருந்தது.

தோழர் பரமார்த்த செந்தமிழனுக்கு சீனியின் நக்கல் புரிபடவில்லை. "பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும், ஏகாதிபத்தியம் பற்றி, லெனினியத்தில் பிரச்சினைகள், மார்க்சியமும் மொழியியல் பிரச்சினையும், பிற்போக்குவாதிகள் பற்றி, இதில் ஏதாவது ஒன்றாவாது கேள்விப்பட்டிருக்கிறீரா?"

சீனியின் அவதானம் கடல் சற்றுப் பொங்குவதிலும் படகின் ஆட்டத்தைச் சரிப் பண்ணுவதிலும் இருந்தது. "இது எந்தப் பள்ளிக்கூடத்தில தம்பி சொல்லிக் கொடுக்கிறங்கள்?" என்றார் அசுவாரசியமாக.

"ஐயா, இதெல்லாம் பள்ளிக்கூடத்திலை சொல்லிக் கொடுக்கிறதில்லை. முதலாளித்துவ கல்வித்திட்டத்திலை உங்களுக்குத் தேவையில்லாதவற்றைத் தான் சொல்லிக்கொடுக்கிறர்கள். தேவையான ஒன்றையும் படிக்கவில்லை. உங்கள் வாழ்வில் எழுவது வீதததை இழந்துவிட்டீர்களே?" என்றார் பரமார்த்த செந்தமிழன் நக்கலாக.

கடலில் அலை இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. படகு மேலும் கீழுமாகவும் பக்கப் பாட்டாகவும் ஆடத் தொடங்கியது. படகு கவிழ்ந்து விடப் போதுதோ என்று தோழரும் பயந்தார்.

அப்போதுதான் சீனித்தம்பி முதல்முறையாகத் 'தோழர்' என்ற வார்த்தையைப் பாவித்தார்.

"தோழர், உங்களுக்கு நீந்தத் தெரியுமா?"

"இல்லையே" என்றார் தோழர் பரிதாபமாக

"அப்ப உங்கள் வாழ்க்கையில் நூறு வீதத்தையும் இழக்கப் போகிறீர்களே!" என்றுவிட்டுச் சீனித்தம்பி கடலில் குதித்து நீந்தலானார்.


-------------------------------------------
பொறுப்பாகாமை: இது ஒரு கற்பனைக் கதை. உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்கள், அல்லது அயிராக அலைபவர்கள் எவரையும் குறிக்கவில்லை. அத்தோடு பல்வேறு இஸவாதிகள், நிலைவாதிகள், குழப்பவாதிகள், திரிபுவாதிகள், திரியாதவாதிகள், ஃப்பேஸ்புக் சிந்தனைவாதிகள், மற்றும் அப்பாவிகள், அப்பாவிகள் அல்லாதோர் எவரையும் குறிக்கவில்லை. மேலும் யாராவது மேலே உள்ள பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகமோ இக்கதை குறிப்பிடவில்லை என்று கூறிக்கொள்கிறேன்.

அயிர்- (பெயர்ச்சொல்)
1. zombie என்பதற்கான தமிழ் வார்த்தை. சத்தியமாக இது நான் உண்டாக்கிய தமிழ் வார்த்தை. எழுத்தாளர் ஜெயமோகனிடம் இருந்து திருடப்படவில்லை.
2. வெல்லம் ( 1. இற்குத் தொடர்பற்றது)


கனக்க- நிறைய

Thursday, January 2, 2014

இடைக்காடும் செலவில்லாமற் கிடைக்கும் ஒரு சில ஞாபகங்களும்

ஊரென்றால் என்ன இருக்கும்?

வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர்.

என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பதவி உயர்வு பெற்றுவிடும். நாங்கள் 'ஃபாக்டரி' கட்டக் கூடாது' என்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தத் தேவை வரவில்லை. ஊரில் யாரும் தொழிற்சாலைகள் கட்டவில்லை. ஒன்றிரண்டு கம்மாலைகள் அப்பப்ப திறந்து மூடப்பட்டன. சைக்கிள் கடை கூட நிரந்தரமாக இருந்ததில்லை.

எனக்கும் இடைக்காட்டுக்குமான தொடர்பு 1989 இலேயே குறையத் தொடங்கி 1990 இற்குப் பிறகு ஊரில் கால் வைக்கத் விடாமல் நாட்டு நிலைமையும் சொந்தத் தேவைகளும் சதி செய்தன. ஊர் என்று நான் எழுதுவதெல்லாம் 1990 இற்கு முன்பானவை. எனக்கு ஞாபகப் பிசகு இருப்பதால் தகவல்கள் முன்பின்னாக இருக்கலாம். பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும். அல்லது மொட்டைக் கடிதமாவது போடவும்.

இடைக்காட்டின் எனது ஆகப் பழைய ஞாபகம், "வெள்ளி விழா, பொன் விழா" என்று அறியப்பட்ட இடைக்காடு மகாவித்தியாலத்தின் பொன் விழாவும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழாவும். 1977 என்று ஞாபகம். மிகக் கோலாகலமாக இ.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது. பள்ளிக்கூடத்திற்குக் கிட்ட அலங்கார வளைவுகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன . கலை நிகழ்வுகள், பொருட்காட்சி என்றெல்லாம் நடந்தன. இதை எழுதும் நான் அப்போது ஒரு சிறு பையன். என்பதால் அப்பா அம்மாவிடம் வாங்கிய சில்லறைக் காசுக்கு இனிப்பு, ரொபி, கச்சான் அலுவா, ஐஸ் பழம் என்று பக்ரீறியா, சுகாதாரம் என்றெல்லாம் யோசிக்காமல் தின்று தீர்த்தேன். அதைவிட முக்கியம் 'அவிட்டு' விட்ட மாடு மாதிரிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன்.

பள்ளிக் கூடத்தை விட்டால் அதுக்கு அடுத்த முக்கியமான இடங்கள் இரண்டு வாசிகசாலைகள். (கடவுள் பக்தர்கள் இதைவிடக் கோவில்கள் தான் முக்கியமானவை என்பார்கள். நான் இந்தப் பட்டிமன்றத்திற்கெல்லாம் வரவில்லை). "இடைக்காடு சனசமூக நிலையம்" என்பது ஒன்று. மற்றது "இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம்". இரண்டிற்கும் இருக்கும் பெயரை வைத்துப் பார்க்கும்போது ஒன்றிலிருந்து கோவித்துக் கொண்டு பிரிந்துபோய்த் தொடங்கியதுதான் மற்றது என்று எண்ண இடமுண்டு. சன சமூக நிலையம் என்றூ 'ஒபிசியலாக' அறியப்பட்டாலும் வாய்ச்சொல்லில் (பேச்சு வழக்கில்) கிழக்கு வாசாலை, மற்றது மேற்கு வாசாலை என்றே அறியப் பட்டன. (வாசாலை =வாசிக சாலை ). இரண்டு வாசாலைகளிலும் வீரகேசரி, உதயன், ஈழ நாடு, ஈழ முரசு, டெய்லி நியூஸ் என்று எல்லாப் பேப்பர்களும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் (நடுப்பக்கம் சில வேளைகளில் கிழிக்கப்பட்டிருக்கும்) ,குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது ,அம்புலி மாமா, ரத்ன பாலா, பால மித்திரா என்று எல்லா வாராந்திர/மாத சஞ்சிகைகளும் இருக்கும். ஒன்றிரண்டு இந்த 'வாசாலை'யில் இருக்காது எனில் அவை மற்றதில் இருக்கும். தனியப் பேப்பர், விகடன், குமுதம் எனில் மற்ற ஊர் வாசிகசாலைகள் போலாகி விடும். முக்கியமானதை விட்டு விட்டேன். அவை வகை பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். புத்தகங்கள் என்றால் வெறுமானே கதைப் புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகங்கள் பாடப் புத்தங்கள், கட்டுரைப் புத்தககள், கலைக் கழஞ்சியங்கள் முழுமையான எல்லா வகைப்புத்தகங்களும் இருந்தன..

என் இடைக்காட்டு நாட்களில் கைத்தொலைபேசி (மொபைல் போன்) இன்னும் பாவனைக்கு வந்திருக்கவில்லை. எனவே கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்பும் வழி இல்லை. இணையம் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கும் இல்லை. அப்ப ஊர்ப்புதினங்களை எப்படி அறிவது? இந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் என்று இரண்டாகப் பிரிக்கவேண்டிள்ளது.
ஆண்களுக்கு வாசிகசாலை வாங்கும்(Bench) பெண்களுக்கு சந்தையும்தான் அன்றைய ஊர்ப்புதினம் கதைக்கும்/பரப்பும் இடம். ஊர் வம்புகள் அந்தக் காலத்தில் இன்னும் விரைவாகப் பரவியது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது இவ்வாறு ஊர்ப்புதினம் பேசுவது அவரவர் கற்பனைத் திறனை வளர்க்க உதவியது. இக்காலங்களில் ஃப்பேஸ்புக்கில் 'share' பண்ணுவது அவரவர் கற்பனைத் திறனை மழுங்கடிக்கிறது.

வாசிகசாலைகள மட்டும் பேசிவிட்டு ஊரில் மூலைக்கு மூலையிருக்கும் வைர(வ) கோவில்களைப் பற்றி எழுதாவிட்டால் வைரவர் கனவில் வந்து என்னை மிரட்டலாம். கொட்டடி வைர கோவில், பெரீய தம்பிரான் கோவில், சொத்தி வைர கோவில் ('சொத்தி வைரவர்', ' சோதி வைரவர்' என்று மறுநாமம் சூட்டப்பட்டார்), இத்திக்கலட்டி வைர கோவில் என்பன உடனே ஞாபத்திற்கு வருகின்றன. மாணிக்கப் பிள்ளையாரும் இருக்கிறார் காட்டுப் பிள்ளையாரையும் மறக்கவில்லை. அம்மன் கோவில் சற்றுப் பெரியது.. வருடாந்திர திருவிழாவும் உண்டு. அம்மன் கோவில் திருவிழா தவிர்த்து மற்றக் கோவில்களுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள்தான் திருவிழா. பகலில் பூசையும் அன்னதானமும் இருக்கும். இரவில் மேளக் கோஷ்டி, சின்ன மேளம், இசைக் குழுவினரின் பாட்டு, நாடகம் என்று களை கட்டும்- லையிற்று மிசின் புன்ணியத்தால் ரியூப் பல்ப்கள் (கலர் கலராக), "ஓடும்" பல்ப்புக்கள் என்று அலங்காரம். இதிலே ஒரு சின்ன 'அரசியலும்' எண்டு. எல்லா வைர கோவில்களுக்கும் வருஷத் திருவிழா இல்லை. எனவே வைரவர்களுக்குள்ளும் 'ஸ்ரேஸ்' பிரச்சினை இருக்குப் போல.

புது வருஷம் என்றாற் கூடுவோம் பள்ளிக்கூட மைதானத்தில். புது வருட விளையாட்டுப் போட்டி அவர் அவரிற்கு அவரவர் சோலி. பெடி பெட்டைகளுக்கு ஐஸ்கிறீம், அல்லது ரொபி , ஐஸ் இனிப்பு என. பேரன் பேர்த்தி கண்டவர்களுக்கு சிறிசுகளின் விளையாட்டைக் கண்டு களிக்க என்று. இளைஞர்களுக்கு பிரியமானவர்களின் பார்வை மட்டும் போதும். (மூன்று போத்தற் கள் அடித்தாலும் இதன் போதைக்கு இணையாகுமா?). கிறிஸ் கம்பில் ஏறுவார்கள் இளந்தாரிகள். அநேகமாக ஒவ்வொருவரும் தம் முயற்சிகளில் கிறீசை வழித்தெடுக்கக் கடைசியாக வருபவருக்கே 'லக்'. இதெல்லாம் நடக்க இன்னொரு சீரியஸ் பார்ட்டியையும் மறக்கலாகாது- நடுத்தர வயது கொழும்பு உத்தியோகத்தர்! லீவு போட்டு விட்டு ஊருக்கு வந்தால் போதுமா? கொஞ்சம் போட்டுவிட்டு இங்கிலிஷ்' கதைக்காவிட்டால நாலுபேர் மதிப்பார்களா? அல்லது கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியுமா?

"ஐ சே, ஜேயார் இஸ் ஏ ஸ்டுபிட் கை..... யூ சீ!, பெடியள் வில் டீச் ஹிம் எ லெஸ்ஸன்" என்று பிளந்து கட்டுவார்கள். (விடியக் காலமை இறக்கிய கள்ளின் வாடையும் இவர்கள் பேச்சில் லேசாக அடிக்கும்). இவர்கள் பேசுவது அநேகம் பேருக்குப் புரியாது. புரிந்தவர்கள் குழப்பிப் போய் இருப்பார்கள்). இருக்கட்டும் ஆனால் இவர்கள் 'முதியோர் " ஓட்டத்தில் மட்டும் பங்கு பற்ற மாட்டார்கள். 'பழைய மாணவர்" ஓட்டத்திற்கு 'அரைக் காற்சட்டையுடன்' ஆயத்தமாக இருப்பார்கள். மனதில் மட்டும் ஒரு நம்பிக்கை அந்தக் கால 'ஓட்டோகிறாப்ஃ' காரி நாம் ஓடுவதைப் பார்க்க மாட்டாளா என....

ஊரில் நிறையப் பேர் நீளக்காற்சட்டை போட்டு "ஒபிஸ்' வேலை பார்த்தாலும் இடைக்காடு விவசாய பூமிதான். மிகுதி யாழ்ப்பாணத்தையும் போல கிணற்று நீர் இருந்தாலும் கற் பூமி இது. அந்தக் காலத்திலேயே முன்னவர்கள் கலட்டிகளைத் 'திருத்தி' நிறையத் தோட்டாக்காணி ஆக்கிவிட்டார்கள். எனவே வெங்காயம், மிளகாய், பயறு, உளுந்து, தக்காளி, கத்தரி, மரவள்ளி என்று யாழ்ப்பாணத்தில் விளையும் எதையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் 'செய்தோம்'. என்றாலும் வெங்காயந்தான் எங்கள் முக்கிய பயிர்.

முழுநேரமாகத் தோட்டம் செய்பவர்கள் மூவாயிரம், நாலாயிரம், ஏன் பத்தாயிரம் 'கண்டு' என்று வெங்காயம் செய்வார்கள். இன்னொரு தொழில் செய்பவர்கள் 800- 1000 கண்டு வெங்காயமாவது செய்வோம். வெங்காயம்தான் அநேகத் தேவைகளுக்குப் பணம் கொடுத்தது. "புரொபஷனல்" கமக்காரருக்கு வருமானத்தில் பெரும்பகுதி வெங்காயச் செய்கையினால்தான் வரும். இன்னொரு வேலை செய்துகொண்டு கொஞ்சமாக வெங்காயம் செய்பவர்களுக்கு அவசரத் தேவைகளுக்குக் கை கொடுப்பதும் அதுவே. வெங்காயக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் மாதிரி ஒரு "மாற்றுத் தங்கம்" இன்னும் நான் தேடிக்கொண்டிருப்பது. திடீர்ப் பணத்தேவைகளுக்கு உதவுவது இது மாதிரி ஒன்றில்லை. காசுத் தேவை எனில் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் சிலவற்றை அவிழ்த்தி, நுள்ளிச் சாக்குகளில் போட்டுக் கொழும்பு லொறியில் அனுப்பலாம், இல்லாவிட்டாம் உள்ளூர்க் கடைகளிலும் விற்கலாம். பெரியவர்களுக்கு இப்படி என்றால் சிறியவர்களையும் இந்த 'வெங்காயம்' கைவிடாது. இது வெங்காயம் பூக்கும் காலங்களில். வெங்காயப் பூக்களை 'முறித்து' அளவாகப் 'பிடிகளாகக் கட்டினால் பிறகு சந்தைக்குக் கிட்ட உள்ள ஒரு கடையில் விற்றால் கிடைக்கும் காசு சிறுவர் எமக்கே :-)

சிறுவனாக ஓடித்திரிந்து, கள்ள மாங்காய், புளியங்காய் ஆய்ந்து, பிறகு அந்த ஆமிப் பிரச்சினைக்கிடையில் வளர்ந்து ஒரு இருபது வயது இளைஞனாக ஊரை விட்டு வெளிக்கிட்டேன். பிறகு படிப்பு, வேலை, என்று நாட்டுக்கு நாடு மாறினேன். பிறகு ஊரிற் கால் வைக்கக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் காசில்லாமல் அனுபவிக்கக் கூடிய சில சிலிர்ப்பான ஞாபகங்கள் ம்ட்டுமே.

கனவா, நனவா என்று புரியாத ஒரு மத்திய நிலையில் நடந்து கொண்டிருக்கிறேன் -சத்தியமாக உற்சாக பானம் எதுவும் ஏற்றாமல். தொண்டை வறள்கிறது. பசி வயிற்றையும் தாண்டிக் காதையும் பிறாண்டுகிறது. என்றாலும் எதையோ தேடி இன்னும் இன்னும் நடக்கின்றேன். கால்கள் 'நீ இன்னும் இளைஞன் இல்லை" என்று உணர்த்துகின்றன. ஆழ் மனத்திற்குள் ஒளித்திருக்கும் இன்னும் வளராத சிறுவன் மட்டும் சொல்லுகிறான் 'இன்னும் நட, கிடைக்கும்' என்று. என்னத்தைத் தேடுகிறேன் என்றால் விடை கொஞ்சம் குழம்பலாக... சில வாசனைகள், சத்தங்கள், மற்றும் நினைவுகளின் கோர்வைகள்.

", வாய்க்கால்களில் வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உழவாரத்தால் கஷ்டப்பட்டுச் 'செருக்கும்' ஒரு வயதானவர், பக்கத்துத் தோட்டத்தில் இயங்கும் இறைப்பு மிசினின் ரீங்காரம், வாசிகசாலை வாங்கில் இருந்தபடியே அரசியலில் pHD செய்யும் ஆய்வாளர்கள், சிலிப்பர் போடாமல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள், மீன் சந்தையில் கேட்கக்கூடிய 'விசேட' தமிழ், ரியூசன் விடும் நேரம் பார்த்துக் கணக்காகத் தற்செயலாக குறுக்கே நெடுக்கே சைக்கிள் ஓடும் பெரிய பொடியள், நவராத்திரிக்குக் கிடைக்கும் ஓசி அவல்/கடலை, மாரித் தவளைகளின் கத்தல்கள், முறித்த வெங்காயப் பூவின் மெதுவாக மூக்கை அரிக்கும் வாசனை, மாரியில் மட்டும் நீர்ப்பிட்டிக் கடற்கரையில் கிடைக்கும் சீலா மீனையும் மறந்துவிட முடியவில்லை "

இவ்விடை கூட அண்ணளவானதுதான். முழு விடையும் இடைக்காட்டில்தான் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால் இன்னும் தேடுகின்றேன்.





-----

கண்டு (கன்று) - என்பது ஒரு நில அளவை. 1000 கன்று = ?????? பரப்பு
செருக்குதல்- செதுக்குதல் என்பதன் மருவிய வடிவம் என நினைகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது விளக்குவார்களா?

நன்றி- 'இத்தி மலர் 2013", யாழ் இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (கனடா)