Sunday, December 25, 2011

பி. ஜெயச்சந்திரன் - திருவாளர் underestimated

எனக்கும் பொதுத் திரையிசை இரசனைக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உண்டு. அநேகருக்கும் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அவர் மிக இளைஞனாக இருந்தபோது பாடிய ஒருசில பாட்டுக்கள் விதிவிலக்கு. ஜேசுதாஸ் ஏறக்குறையப் பிடிக்காது எனலாம். ஜேசுதாஸ் பாட்டுக் கேட்டால் ஏதோ ஒரு ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருக்கிறமாதிரி இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு அரும்பொட்டில் அடிவாங்காமல் தப்பிய அனுபவங்கள் உண்டு. இப்பவும் தீவிர ஜேசுதாஸ் ரசிகர்கள் கண்ட இடத்தில் உதைக்கும் 'ஃபத்வா' வெளியிடலாம். அதுபோகட்டும், எனக்கும் சில ஜேசுதாஸ் பாடல்கள் ஆவது பிடிக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அந்தப் பாடல்களைப் பாடியது ஜேசுதாஸ் அல்ல, இன்னொரு மலையாளியான பி.ஜெயச்சந்திரன் என்று தெரியவந்தது.

முதலாவது, ஒருகாலத்தில் சக்கைபோடுபோட்ட, "வசந்தகால நதிகளிலே..."




அடுத்தது, ஒரு காலத்தில் கலக்கிய "ஒரு வானவில் போலே..."




இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.


பின்னே, எனக்குப் பிடித்த இன்னும் இரண்டு பாடல்கள்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே...
(Disclaimer: இப்படிப் பாடினாலும் நகை பட்ஜெட்டில் கைவைக்க முடியாது)



சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...



Wednesday, December 14, 2011

செல்வன்

செல்வனைக் கடைசியாகக் கண்ட நாள் 25 வருடங்களின் பின்னும் அப்படியே ஞாபகம் உள்ளது. அப்பாவின் மறைவுக்குப் பின் சில நாட்களில் வந்திருந்தான். ஒரு அந்தி மங்கிய நேரம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு நின்றது நேற்றுப் போல் உள்ளது. சம்பிரதாயமான எதையும் சொல்லவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சொல்லும் சுபாவம் இல்லாத பேர்வழி. எனவே வழமையான ஆறுதல்/ இரங்கல் பேச்சுக்கள் எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு நின்றான். அந்த நாளிற்குப் பிறகு செல்வனை நான் காணவில்லை. அவனது வீட்டுக்காரருக்கும் காணக் கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

ஒல்லியான உருவம். முன் பற்கள் கொஞ்சம் நீக்கல். ஊர் சொல் வழக்கப்படி நல்ல கறுவலான பெடியன் என்றுதான் சொல்லவேண்டும். டக்கென்று பார்த்தால் கொஞ்சம் முரடு என்று யோசிக்கவைக்கும் ஆனால் ஆள் என்னவோ அதற்கு நேர்மாறு. மென்மையான, யாருடனும் அதிகம் பேசாத ஒரு சுபாவம். தனிமை விரும்பியாகத்தான் இருந்திருப்பான் என்று இப்போது கணிக்கின்றேன்.

80 களின் ஆரம்பத்தில் இருந்த வடக்குக் கிழக்கு நிலைமையை 80 களில் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புரிய வைப்பது கடினம். கிபிர், புக்காரா விமானத்தாக்குதல்கள் தொடங்கவில்லை. ஆனால், தமிழன் என்ற ஒரேகாரணத்தால் இம்சைகளை அனுபவிக்கும் காலம் எப்பவோ ஆரம்பித்தாயிற்று; என்றாலும் 1983 ஆடிக் கலவரங்களின் பின் ஒட்டுமொத்த தமிழரிற்கும் "இப்படியே இருந்தால் சரி வராது" என்று புரிபடத் தொடங்கியது. அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் இயக்கங்களிர் சேரத் தொடங்குகிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் இளைஞர்கள் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

செல்வன் 1982 இல் மாணவர் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றான். பிறகு இராணுவப் பிரிவிற்கு மாறுகின்றான். ஆள் இடைக்கிடை ஊரிற்கு வருவதும் பிறகு காணாமற் போவதும் நடக்கும். காணும் போதெல்லாம் எனக்கும் செல்வனுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் மிகச் சரியாக இரண்டு 'கதை/காரியம்' இல்லாத இருவருக்கு இடையில் நிகழ்வது போல்தான் இருந்தது. ரோட்டில் எங்காவது கண்டால்

"எங்கை போறாய்?", இது செல்வன்.
"வீட்டுக்கு" என்று பதிலளித்து விட்டு நிறுத்திக்கொள்வேன்.

அல்லது சிலவேளைகளில் ஒரு கதையும் இல்லாமல் ஆளை ஆள் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வோம்.

அமைதியான சுபாவம் என்றாலும், அமைதியான சுபாவமானவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பக்கம் போலவே செல்வனுக்கும் இருந்திருக்கிறது. "கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" ஒரு நண்பர் கூட்டம் அவனுக்கு இருந்திருக்கிறது. அதே நண்பர்களுடன் பின்னேரங்களில் காற்பந்து விளையாடுவதையும் கண்டுள்ளேன். இலகுவிற் களைப்படையாத செல்வன் நன்றாகப் காற்பந்து விளையாடுவான் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேட்கிறேன். காற்பந்து விளையாட முடியாதளவு இருட்டியபின் அதே இளைஞர் கூட்டம் பள்ளிக்கூட மதிலில் அல்லது திறந்தவெளி மேடையில் இருந்து வம்பளக்கத் தொடங்கும். "நீ சின்னப் பெடியன்... ஓடு வீட்டை" என்று என்னையும் கலைக்கும். "இவங்கள் 'நோட்டிஸ்' எழுதப் போகிறான்கள், அதுதான் என்னைக் கலைக்கிறாங்கள்" என்று யோசித்துக் கொள்வேன்.

****

இயக்கங்களிடையே 'கருத்து வேறுபாடு' தொடங்கி இனப்பிரச்சினை மாதிரி இதுவும் சிக்கலாகிக் கொண்டிருக்கும் ஒரு காலப் பகுதியில்தான் கிழக்கில் நிறைய வேலை செய்ய இருக்குது என்று கிழக்கு மாகாணங்களுக்குப் புறப்பட்டுப் போனான். பிறகு ஊர் வருவது ஆடிக்கொருக்கால் அமாவசைக்கொருக்காற் தான்.

இவ்வளவு காலம் கடந்து, வடக்குக்/ கிழக்கு என்று ஒரு மாபெரும் பிளவு வந்து, அது எல்லாவற்றையும் காவு கொண்டு போனபின், 25, 26 வருடங்களிற்கு முன்பே "கிழக்கில் செய்ய வேண்டிய வேலைகள் கனக்க இருக்கு" என்று கிழக்கிற்குப் பயணமான ஒரு 22 வயது இளைஞனை நினைத்துப் பார்க்கின்றேன். How great he is ! தீவிர தமிழ்ப் பிரியர்கள் மன்னிப்பீர்களாக. உண்மையாகவே கடைசி வரியைத் தமிழிற் கோர்க்க முடியவில்லை.

கிழக்குக்குப் பயணமாகமுன் சொந்த அண்ணா ஒருவரிடம் செல்வன் சொன்னது, "அண்ணை நான் இனி அடிக்கடி இங்கை வருவனோ தெரியாது, எனக்கு ஒரு ஷே(ர்)ட்டும் ஒரு மணிக்கூடும் வாங்கி அனுப்பு" என்று. அண்ணா அனுப்பினார். போய்ச்சேர்ந்ததோ இல்லயோ என்பது செல்வனுக்கு மட்டும் தெரிந்ததொன்றாகியது.

செல்வன் ஞாபகமாக:
************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதியார்


--------------------------
செல்வன் என்கின்ற சுப்பிரமணியம் செல்வகுமார் (இயக்கப் பெயர் செல்றின்) 14/12/1986 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைகின்றார். அன்றுதான் அவரது 23 வது பிறந்த நாள். என்னைவிட ஆறு வயது பெரியவன் என்றாலும் "ன்" போட்டுக் கதைத்த பழைய இடைக்காட்டில் வாழ்ந்தோம். என்பதால் அதே உரிமையோடு 'அவன்' என்று பத்தியில் எழுதுகின்றேன். செல்வனின் தாய்வழிப் பேத்தியாரும் என் தந்தைவழிப் பேத்தியாரும் சகோதரிகள் என்பது டிஸ்கி.

"கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" என்ற சொற்றொடரை அவரது நண்பர் எழுதிய அஞ்சலியில் இருந்து எடுத்துப் பாவிக்கின்றேன்.

Thursday, December 8, 2011

காய்ச்சல்காரன்

வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. நல்ல வெயில் எறித்த காலை நேரம். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று.

முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது.

"குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என விளிப்பார். கொஞ்சம் குஷி 'மூட்டில்' இருந்தால் 'பெரிய பண்டி' என்று கூப்பிடுவார். அக்காவை 'மகாராணி' என்றுமட்டும்தான் கூப்பிடுவார். 'மகாராணியார்' என்று சொன்னால் ஏதோ பிடிக்கவில்லை என்றாகும்.

"காச்சல்காரனை ஏன் திட்டுறியள்?" அம்மா சப்போர்ட்டிற்கு வந்தா.

"இன்னும் மாறல்லையே" அப்பா கிட்ட வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். "வெளிக்கிடு ஆஸ்பத்திரிக்கு" என்றார்.

****

"வாயை 'ஆ' காட்டு" டாக்குத்தர் ரோ(ர்)ச்லைற் அடித்துப்பார்த்தார். எனக்கு மனிசன் ஊசி போடப்போகிறாறோ என்றுதான் பயம் வந்தது.
"எத்தினை நாளாக் காச்சல்?" அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
"மூண்டு நாளாச்சு"
"வயித்துக் குத்து, வயித்தோட்டம் இருக்கே?" எனக்குக் கொஞ்சம் வெட்கம். வெளியில் இருந்த ஆட்களுக்குக் கேட்டிருக்குமோ?
"இல்லை" அவசரமாக மறுத்தேன்.
"இவன் ஒழுங்காக கக்கூசுக்குப் போறேல்லை" என்று அப்பா சொல்ல வெட்கம் பிடுங்கித் தின்றது.
"கடைசியாக எப்ப போனவர்?" என்று டாக்குத்தர் அப்பாவைக் கேட்க, எழுந்து வெளியே ஓடலாம் போலிருந்தது.

டாக்குத்தரைப் பார்க்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி இருப்பார், குண்டாகத் தள தள என்று. மீசை இல்லை. எப்பவும் புன்சிரிப்புடன் இருப்பார். என்றாலும் மனிசனைப் பார்த்தால் ஊசி ஞாபகம் வருவதால் நெஞ்சு கொஞ்சம் 'பக் பக்' என்று அடித்துக்கொள்ளும். இன்றைக்கு ஊசி போடவேண்டி வரவில்லை. மனிசன் குனிந்து சதுரவடிவ வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கினார்.

"இதை எடுத்துப்பாருங்கோ, 3, 4 நாளில் மாறிவிடும்" என்றார்.

சின்ன மஞ்சள் குளிசைகள், சிவப்பில் இன்னொரு வகை (நக்கினால் மேல்பக்கம் இனிக்கும்), பிறகு கூட்டுக் குளிசைகள், காய்ச்சல் இருக்கும்போது விழுங்க வெள்ளைக் குளிசைகள் (காய்ச்சல் இருந்தால் மட்டும் எடுக்கவும்). இத்தோடு சிவப்புக் கலர் 'சிரப்' ஒன்றும் குடிக்கவேண்டும். ஒருபாதி மஞ்சளாகவும் மற்றப்பாதி சிவப்பாகவும் இருந்த கூட்டுக்குளிசைதான் எழுப்பமானது. காய்ச்சல் மாறின பிறகு பள்ளிக்கூடம் போனால் 'கப்சூல்' குளிசை விழுங்கித்தான் காய்ச்சல் மாறியது என்று பீற்றிக்கொள்ளலாம்.

கிளினிக்கில் இருந்து ஊசி போடாமல் வந்தது சந்தோஷம். என்றாலும் மிக முக்கிய வேலை ஒன்று மிச்சம் இருந்தது.

"அப்பா" உலகத்தின் ஆகத்திறம் அப்பாவை, ஆகத்திறம் மகன் கூப்பிடுகிறமாதிரிக் குரலை வைத்துக் கொண்டேன்.
"என்னடா?"
"வி.சு.க்.கோ.த்.து..." ஒருமாதிரி மெல்லமாக இழுத்துச் சொல்லிவிட்டு உண்மையாகவே கொஞ்சம் தயங்கினேன். அப்பா என்னைப் பார்த்தார். ஆள் இளகிவிட்டார். சைக்கிள் கணேஸ் கடையை நோக்கித் திரும்பியது. நான் உண்மையாகவே மகாராசா மாதிரிப் பாவனை பண்ணிக்கொண்டு சைக்கிள் 'கரியலில்' உட்கார்ந்து இருந்தேன்.

திரும்பி வரும்போது சைக்கிள் ஹாண்டிலில் கொழுவிருந்த வயர்க்கூடையில் இருந்த 250 கிராம் 'நைஸ்' பிஸ்கட்டிலும், தோடம்பழ இனிப்புச் சரையிலும்தான் மனம் இருந்தது.

"தம்பிமாருக்கும் குடுத்துத் தின்ன வேணும், தெரியுதே?"
"ம்ம்ம்.. " அரைகுறை மனத்துடன் சொன்னேன்.
"கொக்கா கேட்கமாட்டாள், அவளுக்கும் ஒரு விசுக்ககோத்துக் குடு என்ன?"
"சரி அப்பா". அக்காவிற்கு கொடுத்துவிட்டுத் திருப்பி வாங்குவது கஷ்டம் இல்லை.

****
பின்னேரம் தாத்தா வந்தார். கையில் இருந்த பையில் மூன்று செவ்விளநீர்களும் இரண்டு தோடம்பழங்களும்.
"இவனுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப்பட்டன்", உரத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தார். இவர் மெல்லிய குரலில் சொன்னால்தான் அதிசயம். காய்ச்சல் நேரத்தில் இளநீர் எனக்குப் பிடிக்காது. யார் அதைக் கணக்கில் எடுத்தது? தாத்தா மொட்டைக் கத்தியால் 'சத், சத்'என்று இளநீர் வெட்டுவது கேட்டது. குடித்தே ஆகவேண்டும். தப்ப முடியாது.

"இந்தக் காலத்துப் பெடியங்களுக்குக் காச்சல் பீச்சல் எண்டு எப்பவும்; நானும் இருந்தன், சின்னப்பிள்ளை வயதில ஒரு காச்சல் வந்திருக்குமே?" தாத்தா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். எவர்சில்வர் கப்பில் இளநீர் வந்தது. இளநீரைக் குடிக்க 'சத்தி' வரும்போல் இருந்தது. ஒருமாதிரி அடக்கிக் கொண்டேன். தம்பிமார் இளநீர் வழுக்கைக்கும் 'கயருக்கும்' அடிபடத் தொடங்கினார்கள்.


****
இரவு நித்திரை கொள்ளமுடியவில்லை. இடையில் அப்பா வந்து வியர்த்துப் போயிருந்த தலையைத் கோதிவிட்டார்; பிறகு போர்வையை இழுத்துக் கழுத்துவரை மூடிவிட்டார். பிறகு அம்மாவும் அக்காவும் அதே வேலையை இரண்டு இரண்டு மணித்தியால வித்தியாசத்தில் செய்தார்கள்.

காலையில் எழும்போது தலை நல்ல 'கிளியராக' இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. இனிக் காய்ச்சல் அடிக்கமாட்டாது என்று புரிய எதையோ இழந்தது மாதிரி இருந்தது.



--------------

பண்டி - பன்றி
கொக்கா (யாழ் பேச்சு வழக்கு) - உனது அக்கா