Sunday, July 31, 2011

அழகிய இடைக்காடு


யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 752ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாற்றில். இந்த இரண்டு "பெரிய" சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது எங்களூர். றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.

752 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது "வளலாய்" பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு - வளலாய் வரைஓடியது. பிறகு நின்றுவிட்டது. 'லோக்கல்' பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு 'மவுசு'. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.

பஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 752ம் பஸ்ஸில்தான் 'பெல்பொட்டம்' காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் 'பருத்துறை' போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை 'பெடியன் ரியூசன் போய்விட்டான்' என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். சே(ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 'தெறி'களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் "சுப்பிரமணியபுரம்" படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.

'அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் 'குப்பை கூட்டுற' காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டுமா(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன? பார் இவங்கடை தலையை? காகக்கூடு மாதிரி' என்று அப்பா சொல்லுவார். நான் இளந்தாரியாக வந்த காலத்தில் 'தொள தொள' baggy ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் '#இயக்கக்' கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.

********************

ஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் 'வெளி' இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரஙகளும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.

சாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் "நொழுக் நொழுக்" என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.

செல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் 'சுடலை வீதி' ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். "உங்கடை ஊரிலை தார்போட்ட றோட் இல்லையே" என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால் , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு 'திறில்' தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே? போதாக்குறைக்கு "முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன" சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். "முருகேசர் பேயுடன் தண்ணி' இறைக்காதபோது, "அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்" என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்(!), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். "நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே?" என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் "நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே" என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.


********************

சீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை - இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்டவிதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு 'மினுக்கப்பட்ட' சைககிள்களில் திரிவினம். 'இறைப்பு மிசின்'தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.

ஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் 'நகர்ந்து' பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி? சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.

குச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் "வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்" என்று கேட்கக்கூடாது.

சொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் "கோப்பிறேசன்" என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.

இப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.

********************


பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள். ஆருக்குக் கையில் "மசில்" கூட என்று கையை "ட" போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.

அழுக்கு ஐஸ்பழ வியாபாரி, 'சீசனுக்கு' மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, "போஓஓஓத்தல் பித்த்தளை அலுமினியமிருக்கா" ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, "ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு" என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என் உணர்கின்றேன்.

அவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு 'மருந்து' அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து "இண்டைக்கு 'சிக் லீவு' எடுக்கவேணும்" என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.



------------

முள்முருக்கு - கல்யாண முருங்கை
#இயக்கம் -விடுதலை இயக்கம் /இயக்கங்கள்
பத்தைக்காடு - பற்றைக்காடு
தெறி - பொத்தான்/பித்தான் - button
அப்புக்காத்து - வக்கீல், வழக்குரைஞர்
குச்சொழுங்கை = குச்சு+ஒழுங்கை - சிறிய ஒழுங்கை/பாதை

நன்றிகள்:
(1) புகைப்படங்கள்: சுகேசன் கேதீஸ்வரன்


திருத்தங்கள்
(1) 17/08/2011. பஸ் நம்பரை 751 இலிருந்து 752 இற்கு மாற்றிவிட்டேன். எங்கள் ஊரின் கிழக்குப் பக்கத்தால் ஓடியது 751ம் இலக்க பஸ் என்று என் ஞாபகத்தில் தவறாகப் பதிந்து விட்டது. தவற்றைச் சுட்டிக் காட்டிய எல்லோருக்கும் நன்றிகள்.

Thursday, July 7, 2011

வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு

முன்னுரை

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த பிரமிப்பு இப்பவும் கிட்டத்தட்ட அதேயளவு இருக்கிறது.

என்றாலும், அமரர் கல்கி அவர்கள் பாத்திரங்களைக் கொஞ்சம் "இலட்சியப்" படுத்திவிட்டார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் . எனவே நான் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தனமாக "யதார்த்தப்" படுத்திப் பார்த்தேன்.

உசாத்துணை:

பொன்னியின் செல்வன்

**************************************


வந்தியத்தேவன் குழம்பிப் போயிருந்தான். மணிமேகலை கொஞ்சநாட்களாக அவன் அனுப்பிய காதல் ஓலைகளுக்குப் பதிலனுப்புவதிலை. ஓலைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சிறுவன் குஞ்சமல்லனும் இப்போது "ஓலைகாவுதல்" வேலைகளில் சுவாரசியம் காட்டுவதில்லை. "ஓலையைக் கொடுத்தால், முன்பு சம்பளமாக கற்கண்டுகள் கொடுப்பாள் மணிமேகலை அக்கா, இப்ப என் கன்னத்தில் கிள்ளல்களை மட்டும்தான் கொடுக்கிறாள்" என்கிறான்.

வந்தியத்தேவனின் நண்பன் கந்தமாறன். அவன் தங்கைதான் மணிமேகலை. அவன் காதலுக்கு கந்தமாறனின் மறைமுக ஆதரவும் இருந்தது. உடனே நீங்கள் "ஆஹா, எல்லா அண்ணன்மாரும் இப்படியிருந்தால் நல்லதல்லவா!" என்று பெருமூச்சு விடுவதும் கேட்கிறது. உங்கள் பெருமூச்சு வீரநாராயண ஏரியின் கரையில் குறுக்கும் நெடுக்கும் தன குதிரையில் பயணித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்குக் கேட்கமாட்டாதுதான். கேட்டாலும் குழம்பியிருந்த அவன் மனம் தெளியவா போகிறது?

போனமுறை, திருப்பனங்காட்டிலிருந்து வரவழைத்த அழகான, விலையுயர்ந்த, நன்கு பதப்படுத்திய ஓலையில், வேலை மினக்கெட்டு அழகான கையெழுத்தில் சிரமப்பட்டுக் காதல் மடல் வரைந்திருந்தான். அதற்கும் பதில் வரவில்லை. ஓலையில் அடியில் இரண்டு "இதயப்" படங்களை கிட்டக்கிட்ட வரைந்து, அவையிரண்டையும் ஒரு ஈட்டி துளைப்பது போலெல்லாம் வரைந்திருந்தான். ( கிரேக்க குதிரை வியாபாரி சொல்லிக் கொடுத்த யோசனையிது)

வந்தியத்தேவனின் குதிரையும் மூச்சு வாங்கத் தொடங்கியது. "கிழட்டுக் குதிரை" என்று அவன் திட்டிக் கொண்டிருக்க, எதிரில் ஒரு ஆஜானுபாவன் உருவம் ஒரு பெரிய முரட்டுக் குதிரையில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கண்கள் அந்தக் குதிரையைச் சற்றுப் பொறாமையுடன் நோக்கின. நல்ல கருநிறப் புரவி. இவனின் குதிரையைவிட அரை மடங்கு உயரம் அதிகமாக இருந்தது. "அதில் ஏறியிருந்தாலே ஒரு கம்பீரம்தான்" என்று சொல்லிக் கொண்டான். "இந்த மாதிரிப் பெரியபுரவி வைத்திருப்பவன் நிறையப் பொன் வைத்திருப்பவனாகத்தான் இருக்கவேண்டும். அத்தோடு இந்தக் குதிரைக்கு கொள்ளு வாங்கவும் இருமடங்கு பொன் தேவைப்படும்" மனம் முணுமுணுத்தது.

முரட்டுக் குதிரைக்காரன் கிட்ட வரத்தொடங்கவும் வந்தியத்தேவனின் கை குறுவாளை இறுகப் பற்றியது. சாலையிலிருந்து சற்று விலகி நின்று, வந்த உருவத்தை உற்று நோக்கினான். அருண்மொழிவர்மனின் மதிப்பிற்குரிய ஒற்றனின் விழிகளுக்கு அவன் யாரென்பது கணநேரத்தில் புரிந்துவிட்டது. இளவரசன் மதுராந்தகன்! அவன் சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்புவரையர் மணிமேகலையின் தந்தை.

அவன் அடிக்கடி சம்புவரையரின் மாளிகைக்கு போய் வருவது வந்தியத்தேவனிற்குப் பிடிக்கவில்லை. அத்தோடு போனமுறை அவன் சம்புவரையரின் மாளிகைக்கு போனபோது ஒரு அழகிய முத்துச்சரமும், சில வளையல்களும் எடுத்துச் சென்றதும் வந்தியத்தேவனின் காதுகளிற்கு எட்டாமல் போகுமா?

"அவர்கள் சந்திப்பது இராஜ காரியத்திற்கு, எனக்கு இதற்குமேல் தெரியாது," என்று கந்தமாறன் சொல்லியதையும் அவன் நம்பவில்லை.

**************************************

"வீரநாராயணன் மோர்க்குடில்" சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு அதிக தூரத்தில் இல்லை. எப்பவும் அங்கு இளவட்டங்களின் சத்தம் , கும்மாளம் கேட்டுக் கொண்டிருக்கும். வயதானவர்கள் "காலம் கெட்டுப் போய் விட்டது" என்று சொல்லி அங்கு வருவது குறைவு. கால் முட்டி மோரை வாங்கிப் பத்து நாழிகைகள் செலவழித்து அதி மெதுவாகக் குடிக்கும் கலையை இளைஞர்கள் அல்லது யுவதிகளால்தான் செய்ய முடியும். அதுவும் தங்கள் மனங் கவர்ந்தவர்களுடன் வந்த இளைஞர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோர்க்குடிலின் பின்புறம் இரகசியமாக, அரசனின் அனுமதியின்றிச் சோமபானமும் விற்கப்படுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்குதான் வந்தியத்தேவன் மணிமேகலையை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"மணிமேகலை," வந்தியத்தேவன் காதல் உணர்ச்சியுடன் அழைத்தான்.

"என்ன?" பதில் கொஞ்சம் சூடாக வந்தது.

"நீ, ஏன் நான் அனுப்பிய மடல்களுக்குப் பதில் அனுப்பவில்லை"

"நேரம் கிடைக்கவில்லை," அவன் கண்களைப் பார்க்காமல் பதில் கூறினாள்.

"ஓ அதுதானா நான் வேறு ஏதோவென்று பயந்து விட்டேன் !"

"ஏதோவென்று?"

"இல்லை அடிக்கடி அந்த மதுராந்தகன் உன் மாளிகைக்கு வந்து போகின்றான்.."

"அதுக்கென்ன?"

"இல்லை, உன் தந்தை அவனை உனக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார் என்று பயந்து விட்டேன்"

"அவரைத்தான் நான் மணக்கப் போகின்றேன்", அவள் முகத்திலிருந்தது நாணமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை.

அதிர்ச்சியடைந்த வந்தியத்தேவன் தன்னிலையடையச் சில நிமிடங்கள் எடுத்தது. "மணிமேகலை, யாது சொல்லுகின்றாய்" என்றான்.

"ஏன் உங்களுக்குக் காது கேட்காதா? நான் இளவரசர் மதுராந்தகரை மணக்கப் போகின்றேன் என்று சொன்னேன்," சற்று உரக்கக் கூறினாள்.

"அப்போது நாங்கள் காதலித்தது?"

"காதலித்தது? நீங்கள் அப்படி யோசித்தால் நான் என்ன செய்வது? என்னைப் பொறுத்தவரையில் எமக்கிடையே இருந்தது தூய நட்புத்தான்!"

"புரிகிறது மணிமேகலை, அவன் இளவரசன். நான் ஒருகாலத்தில் நன்றாக இருந்து கெட்ட வாணர் குலத்தவன். நீ என்னை மெதுவாக நீக்க விழைகிறாய்"

"வல்லவரையரே, தங்களுக்கு நட்பென்றால் என்னவென்று புரியாது. நான் போய்வருகிறேன். சொல்ல மறந்துபோய் விட்டேன். இந்த ஓலை அனுப்புதல் வேலைகளையெல்லாம் இனி வைத்துக் கொள்ளாதீர்கள், மதுராந்தகருக்குப் பிடிக்காது" வந்தியத்தேவனின் கண்களை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். பிறகு மென்மையாக, மிக மென்மையாக, தனக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில், "என் நிலைமை தங்களுக்குப் புரியாது" என்றாள்.

அதற்குப் பிறகு முட்டி முட்டியாகச் சோமபானம் அருந்தியதுதான் வந்தியத்தேவனின் ஞாபகத்தில் இருந்தது.

மணிமேகலை தன் முதல் ஆண் குழந்தைக்கு வந்தியக்குமாரன் என்று பெயர் வைத்தது வந்தியத்தேவனுக்குக் கனகாலம் பிறகுதான் தெரிய வந்தது.


--------------

1 நாழிகை = 24 நிமிடம்
கால் முட்டி = கால்வாசி முட்டி = 1/4 முட்டி

படங்கள் : http://www.eegarai.net/t50562-topic இலிருந்து