Thursday, April 28, 2011

மழையும் கூரைகளும் ...

'மழை..மழை...அது, பெய்யட்டும்!

வீட்டின் மீது,

வீதியில், வெளியில் -

காட்டின் மீது,

மலையில், மனத்தில் -

இண்டில், இடுக்கில், எங்கெங்கும் -

அது பெய்யட்டும்! -

-கவிஞர் பழமலய்



நல்ல மழைகள் இரவுகளில்தான் பெய்யும். மழையை ரசிக்க ஒரு கூரையும் வேண்டும். கூரையில்லாதவன் மழையை ரசித்தால் அவன் ஒரு ஞானி. கூரையில் மழை விழும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு, போர்வைக்குள் சுருண்டு படுத்திருப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

ஆரம்பத்தில் நான் சிட்னியில் தங்கி இருந்த அடுக்கு மாடித் தொடரில் நல்ல soundproof. காலையில் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியில் போகும்போதுதான் இரவு மழை பெய்திருந்தது தெரியும். எனவே மிஞ்சியது பகலில் பெய்யும் அரியண்ட மழை.

யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்பு, கண்டி வந்தபிறகுதான் தகரக்கூரை போட்ட வீடுகளிற் தங்கக்கிடைத்தது. தகரக் கூரையில் மழை பெய்யும்போது கொஞ்சம் அதிரடியாக இருக்கும். தட தட என்று கூரையில் சல்லிக் கற்களை யாரோ எறிவதுபோல் இருக்கும். என்னுடன் அறை வாடகையை பங்கிட்ட சபேசனுக்கு தகரக் கூரையில் மழை பெய்தால் பல்லுக் கூசும் என்பான். மழை பெய்தால் பாட்டுப் பெட்டியை (tape recorder) உச்சத்தில் விட்டு யேசுதாஸ் "கங்கைக் கரை மன்னனடி.. " இனை ஓடவிடுவான். நாடாவில் அடுத்தது "வெண்ணிலா உன் தேரில் ஏறி.. " , பிறகு "வச்சப் பார்வை தீராதடி.." என்று எல்லாம் யேசுதாஸ் . "மச்சான், யேசுதாஸ் அடுத்த ட்ரெயினைப் பிடிக்கப் போறாறே? ஏன் இப்படி அவசரமாகப் பாடுகிறார்?" என்று கேட்டால் மூக்கு நுனி சிவக்கக் "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?" என்பான் காட்டமாக. எனக்குக் கற்பூர வாசனை பிடிபடாது, ஆனால் இன்றைக்கும் மழை பெய்யும்போது மேலே தகரக் கூரை இருந்தால் யேசுதாஸ்தான் ஞாபகத்திற்கு வருவார்.

ஊரில் தாத்தா வீடு அரைக் கல்வீடு. இடுப்பு உயரம் வரை சீமந்துக்கட்டு , ஆனால் கூரை தென்னங் கிடுகினால் வேய்ந்தது. சுவரும் கிடுகுதான். மழை அடிக்கும்போது, கிடுகுக் கூரை நனைய ஒருவித வாசனை வீசும். நிச்சயமாக மண் வாசனையல்ல. ஈரக் கிடுகின் வாசனை என்று வைத்துக் கொள்ளலாம். தாத்தாவின் சாக்குக் கட்டிலில் புகையிலை வாசனையும் தவிட்டு வாசனையும் கலந்து வரும். மத்தியானம் 'காச்சிய' ஆட்டிறைச்சி வாசனையும் பின்னணியில் இருக்கும். இப்படியான மழை நாட்களில் , தாத்தாவின் சாக்குக் கட்டிலில் ஏறி இருந்து பழைய ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, கல்கண்டு, மஞ்சரி, இதயம் பேசுகிறது எல்லாம் மூச்சு விடாமல் வாசித்தது ஒருவித 'அறிவுத்' தேடலாகத்தான் இருக்கவேண்டும்.

க.பொ.த. (சா/த) பரீட்சைக்குப் படித்தது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில். இம்மூன்று மாதங்களில் இரவில் எப்படியும் அனேகமாக மழை பெய்யும். போர்த்துக் கொண்டு படுக்கத்தான் சொல்லும். புத்தகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியில் மழை பெய்ய, படிப்பது சிரமம். போதாக் குறைக்கு தொண்டமானாறு, பலாலி இராணுவ முகாம்களிலிருந்து அப்பப்ப வெடிச் சத்தம், ஷெல் சத்தம், அத்தோடு தூர ஒரு "ஹெலி"இலிருந்து சுடுவது எல்லாம் கேட்கும். வெடிச் சத்தம் எவ்வளவு தூரத்தில் கேட்கிறது?, ஊரில் "பொடியள்" நடமாட்டம் என்ன மாதிரி இருக்கிறது? என்பதை வைத்து போட்டது போட்டபடி இருக்க ஓடித் தப்புவதா அல்லது தொடர்ந்து பாடத்தைப் படிப்பதா என்பதை அப்பா/அம்மா சொல்வார்கள். நான் நல்ல பிள்ளை. புத்தகத்திலிருந்து கண்ணையும், மழைச் சத்தத்திலிருந்து காதையும் எடுக்க மாட்டேன்.


குறிப்பு: இந்த மாதமும் போன மாதமும் , கடந்த 20 ஆண்டு கால காலநிலை அறிக்கைகளின்படி , சிட்னியின் மிகவும் ஈரமான பங்குனியும் சித்திரையுமாகும்.

Wednesday, April 20, 2011

தாத்தாவும் மற்றவைகளும்

மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. வெளியில் போக முடியாது. ஏழாவது பேரன் அனுப்பியிருந்த "Bunnings " என்று பெரிதாக எழுதிருந்த கனமான பெரிய குடையை முன்போல இலேசாகத் தூக்க முடிவதில்லை. மணியங் கடையில் வாங்கிய சின்னக் குடை ஒழுகும். சமாளித்து வெளிக்கிட்டாலும் எங்காவது விழுந்து வைக்காமல் திரும்பி வரவேணும். இல்லாவிட்டால் மனிசி திட்டும். "அப்பனே முருகா, பின்னேரத்துக்கிடையில மழையை நிப்பாட்டு" என்று வேண்டிக் கொண்டார்.

ரேடியோவைப் போட்டார். "புத்தூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா மரணமானார். அன்னார், ......." என்று உலகத்தில் உள்ள கால்வாசி நாடுகளில் உள்ள உறவினர்களின் பெயர்கள் வந்தது. இதில் வரும் பேரப்பிள்ளைகளின் பெயர்கள் வாயில் புகுவதில்லை. "நிமிஷன் , நமேஷன், வமிஷா, கநூஷா.." என்று இருந்தது.

காலமை சாப்பிட்ட தோசை இன்னும் செமிக்கவில்லை. மழைநாட்களில தப்பாது வீட்டு முற்றத்தில் தாவித்திரிகிற தவளைகளையும் காணவில்லை. வளவு முழுவதும் பரவியிருந்த ஈசல் செட்டைகள் முதல்நாள் பின்னேரத்தின் மழையிருட்டை ஞாபகப்படுத்தின. முதல்நாள், பின்னேரம் நாலு மணிவரை கொட்டுமழை. நாலு மணிக்குப்பிறகு ஒரே மழையிருட்டு.

மத்தியானமாகத் தூறல் நின்றுவிட்டது. குளிக்கவென்று கிணத்தடிக்குப் போனார். கிணற்றிற்குள் இருந்து தவளைக் கச்சேரி கேட்டது. "சே , இது வேறை ஒண்டு" என்று அலுத்துக் கொண்டார். துலா உடன் மல்லுக் கட்டி நாலு வாளி தண்ணீரில் குளித்து முடித்தார். மறக்காமல் திருநீறு பூசினார். மனிசி தட்டில் வைத்த சாப்பாட்டை "கப்சிப்" என்று விழுங்கினார். இந்நேரம் மனிசி "வாத"த்திற்கு எண்ணை பூசிவிட்டு கண்ணயர்ந்து இருக்கும். இப்போதெல்லாம் மத்தியானங்களில் அவரிற்கு நித்திரை வருவதில்லை.

பின்னேரம் வரை என்ன செய்வது என்று யோசித்தார். "கேற்"றைத் திறந்து வெளியில் நடந்தார். ஆளில்லாத நாலு வீடுகளைத் தாண்டியதும் பள்ளிக்கூடம் வந்தது. "playgrounds " இனை ஒட்டியிருந்த மதிலில் இரண்டு முழங்கைகளையும் ஊன்றி தலையைக் கைகளில் முட்டுக் கொடுத்து , கிரிக்கெட், காற்பந்து என்று விளையாடும் சிறுவர்களைப் பார்த்தார். கொஞ்ச நேரந்தில் கால் மூட்டுக்களில் விண் விண் என்று வலி. தொடர்ந்து நிற்க முடியவில்லை. மனிசியிடம் "வாத" எண்ணை கொஞ்சம் கடன் வாங்கிப் பூச வேண்டும் என்று யோசித்தார். "உந்தப் பச்சை, சிவப்பு, கத்தரிப்பூக் கலர் எண்ணைகளை ஊத்திப் போட்டுக் கொஞ்சம் நட, எல்லாம் போய்விடும்" என்று மனுசிக்குக் கொடுத்த மருத்துவ அறிவுரைகள் திரும்பி விழும் என்பதில் சந்தேகம் இல்லை.

பள்ளிக்கூடத்தில் எதோ ஒரு பாடம் முடிந்து மணி அடிக்க நடக்கத் தொடங்கினார். இம்முறை சின்ன வைரவ கோவிற் பக்கம் போனார். ஒருவரும் இல்லை. முன்பெனில் குறைந்த பட்சம் வீட்டிற்குத் தெரியாமல் கள் அடித்துவிட்டு கள்மணம் "ஆறுமட்டும்" ஓய்வெடுக்கும் பேர்வழிகளாவது கோவிலிற்கு எதிரில் இருக்கும் ஒரு மரத்திற்குக் கீழ் இருப்பார்கள். இப்ப இலையான்கள், காகங்களுடன், மழை காலமென்பதால் நிறையத் தவளைகளும் தென்பட்டன. கலட்டிச் செடிகள் பூத்திருந்தன.நிறைய வண்ணாத்திப் பூச்சிகள் கண்ணுக்குப் பட்டன. கோயிலும் வெளிநாட்டுப் புண்ணியவான்களின் நன்கொடையில் பளிச் என்று பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சின்ன மேளம், பெரிய மேளம், சேக்கஸ், இரண்டு மூன்று "லைற் மெசின் " போட்டு கலர் "டியூப்" லைற் கட்டித் திருவிழா நடந்தது எல்லாம் பழைய காலம். ஒவ்வொரு திருவிழா முடியவும் இரண்டு மூன்று கல்யாணங்களும் , இன்னும் இரண்டு மூன்று காதல்களும் "செற்" ஆகும்.

மனதில் தோன்றிய வெறுமை முகத்தில் தெரியவில்லை. திருப்பி வீட்டை நோக்கி நடந்தார். வழியில் வந்த "வாசிக சாலை" யில் இருந்த வாங்கில் குந்தினார். அலுப்பாக முன்னால் மேசையில் இருந்த பேப்பர்களைப் பார்த்தார். "என்ன வரப்போகுது, களவு, கொள்ளை, கொலை, ஆட் கடத்தல், சினிமா நடிகைகளின் படங்கள்.' என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டார்.எதிரில் வாங்கில் இருந்த செல்லையர் "வாங்கோ பெஞ்சனர்" என்று வரவேற்றார். இதில் "பெஞ்சனர்" என்பது ஒரு நக்கல். மாதமாதம் வெளிநாட்டில் இருந்து கொஞ்சம் காசு கைச்செலவுக்கு வருவதைத்தான் செல்லையர் குறிப்பிட்டார். செல்லையருக்கு மூத்த மகளும், கடைசி மகனும் மட்டும் நாட்டில். மிச்சப் பிள்ளைகள் வெளிநாட்டில்தான்.

பின்னேரமாக , பெரிய வேப்ப மரங்களும் பூவரச மரங்களும் நின்ற நீண்ட பாதையால் நடந்து, அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு "communication centre" இனை அடைந்தார்.

"என்ன அப்பு, இண்டைக்காவது லைன் கிடைக்குதா எண்டு பார்ப்பம்" என்று இவரைக் கேட்காமலே டெலிபோன் இனை அழுத்தத் தொடங்கினார், அங்கு வேலையில் இருந்தவர்.

"ஹலோ" என்று நித்திரைத் தூக்கத்தில் ஒரு குரல் ஒலித்தது.
"சுட்டி, நான் அப்புவடா" என்று ஆர்வத்தோடு சொன்னார். சின்ன மகனை "சுட்டி" என்றுதான் கூப்பிடுவார். இயற்பெயர், அந்த நாள் யாழ்ப்பாண ஸ்டைல் இல் "சிறிசற்குணநாதன்"

"அப்பு நான் இப்பதான் வேலையால வந்து நித்திரை கொள்ளத் தொடங்கின்னான், என்ன விஷயம் " குரல் கொஞ்சம் எரிச்சலாக ஒலித்தது.

"இல்லை ,கன நாளா உன்ரை குரலைக் கேட்கவில்லை, அதுதான்......... "

"அப்பு எனக்கு இப்ப நேரமில்லை, காசு ஏதும் தேவையே?" குரலில் விரைவாக ஆளைக் கழட்டிவிடும் அவசரம் தெரிந்தது.

அவரிற்கு தொடர்ந்தது ஒரு கிழமையாக டெலிபோன் எடுக்க முயற்சித்தது ஞாபகம் வந்தது. படக்கென்று லைனைத் துண்டித்தார்.

வீடு வரும்போது மத்தியானம் சாப்பிடவில்லை என்பதைவிட இனிமேல் மாதா மாதம் வரும் காசு நின்று விடுமோ என்ற பயம்தான் அவரின் முன்னே நின்றது.

Tuesday, April 12, 2011

"-------" கள் தினம்.

காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது.

வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன் பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று தமிழில் கேட்டார். பக்கத்தில் வெள்ளைக்காரங்கள் இல்லை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

பஸ்ஸில் ஏறினேன். "இன்றைக்கு டிக்கெட் தேவையில்லை" என்று கனிவான புன்னகையுடன் டிரைவர் கூறினார். குழப்பமாக இருந்தது. என்றாலும் நாலு டொலர் முப்பது காசு சேமித்தது புளுகாக இருந்தது. படக்கென்று 105.5 ஆல் பெருக்கிப் பார்த்து அற்பச் சந்தோசம் கொண்டேன். (1 A$ = 105.5 SL Rs). பஸ் கூட டிராபிக் ஜாமில் மாட்டவில்லை. பஸ் உள்ளிற்கும் வெப்பநிலை மிகச் சரியாக இருந்தது. வழக்கமாகக் கை, கால்கள் விறைக்கிற அளவிற்கு இருக்கும். "எல்லாம் சரியாக இருக்குது, இண்டைக்கு ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுது" என்று மனம் அடித்துக் கொண்டது. (வெளிக்கு மாத்திரம் ஐயா "எனக்கு மூடக் கொள்கைகள் எல்லாம் கிடையாது" என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார். )

அலுவலகத்தில் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் பார்த்து வழமையாக முறைக்கும் வரவேற்பாளினி முகம் மலர "காலை வணக்கங்கள்" என்றாள். எனக்குப் நேரே பின்பக்கம் யாரவது நிற்கின்றார்களா என்று பார்த்தேன். இல்லை. இப்ப பயம் கொஞ்சம் கூடப் பிடித்தது. அடித்துப் பிடித்து என் வழமையான இடத்திற்கு வந்து கதிரையில் குந்தினேன். எல்லோரும் இன்று புதிதாக ஞானம் பெற்றவர்கள் போல இருந்தார்கள். பிடரிப் பக்கம் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. எல்லாருக்கும் பொதுவாக ஒரு அசட்டுச் சிரிப்பை வரவழைத்தேன்.

இரவுச் சாப்பாடும் "கல்யாண சமையல் சாதம்" போல் இருந்தது. பெரிய மகன் "அப்பா இண்டைக்கு நான் எல்லா வீட்டு வேலைகளையும் நீங்கள் சொல்லாமலே செய்து விட்டேன்" என்றான் சுந்தரத் தமிழில்.

"நல்லது, PS4 விக்கத் தொடக்கி விட்டாங்களா?"

"இல்லை"

"பின்னை 4DS ? "

"இல்லை"

"அப்ப நான் என்ன வாங்கித் தர வேண்டும்? "

"ஒன்றும் இல்லை, அப்பா?"

"சோழியன் குடும்பி சும்மா ஆடாதே?"

"What is that?"

"இல்லை பின்னே ஏன் ஏழு, எட்டுக் காட்டுக் கத்தல் கத்தமுந்தி வீட்டு வேலையைச் செய்தாய்?"

"ஒவ்வொரு நாளும் மூஞ்சயைக் கழுதை மாதிரித் தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறிகள், இண்டைக்காவது கொஞ்சம் உங்களைச் கொஞ்சம் குஷிப் படுத்தத்தான்"

எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டு என்னோடு நல்லமாதிரிப் பகிடி பண்ணுற மாதிரி இருந்தது.

திடீரென்று ஞாபகம் வந்தது இன்றைக்கு வியாழக்கிழமை. வியாழக்கிழமை மட்டும்தான் சிட்னியில் கடைகள் இரவு ஒன்பது பத்து மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பின்னேரம் ஐந்து ஆறு மணியோடை கடைகள் எல்லாம் பூட்டிவிடும். வியாழன் ஷொப்பிங் பிரியர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்.

இந்த முறை நான் முந்திக் கொண்டேன். "என்னப்பா இண்டைக்கு வியாழன் எல்லே? ஷொப்பிங் போவமே?"

"இல்லையப்பா , நீங்கள் இண்டர்நெட்டிலே வழக்கம்போல ஊர்த் துளவாரங்களைப் பாருங்கோ. பொடியள் உங்களைக் குழப்புவாங்கள். நான் அவங்களைக் கூட்டிக் கொண்டு ஷொப்பிங் போயிட்டு வாறன்" என்று மனைவி சொல்ல மாத நாவல் எழுத்தாளர்கள் எழுதுகிற மாதிரி உண்மையில் "கண்கள் பனித்தன" பாருங்கோ. என்றாலும் நக்கல் விடுறாளோ என்று ஒரு யோசனையும் ஓடியது.

Google இன்றைக்கு ஒரு மாதிரி இருந்தது. இப்ப சில நாட்களில் அவங்களும் ஒரு "தீம்" வைக்கிறாங்கள் தானே. Google என்றதைப் பார்க்கும்போது ஒரு செல்லக் கழுதையைப் பார்ப்பது போலிருந்தது. ஆர்வமுந்த அதன்மேல் கிளிக்கினேன். முதலாவதாக இருந்தது,

International Donkeys' Day- Be nice to donkeys and donkeylikes today.