Sunday, December 25, 2011

பி. ஜெயச்சந்திரன் - திருவாளர் underestimated

எனக்கும் பொதுத் திரையிசை இரசனைக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உண்டு. அநேகருக்கும் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அவர் மிக இளைஞனாக இருந்தபோது பாடிய ஒருசில பாட்டுக்கள் விதிவிலக்கு. ஜேசுதாஸ் ஏறக்குறையப் பிடிக்காது எனலாம். ஜேசுதாஸ் பாட்டுக் கேட்டால் ஏதோ ஒரு ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருக்கிறமாதிரி இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு அரும்பொட்டில் அடிவாங்காமல் தப்பிய அனுபவங்கள் உண்டு. இப்பவும் தீவிர ஜேசுதாஸ் ரசிகர்கள் கண்ட இடத்தில் உதைக்கும் 'ஃபத்வா' வெளியிடலாம். அதுபோகட்டும், எனக்கும் சில ஜேசுதாஸ் பாடல்கள் ஆவது பிடிக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அந்தப் பாடல்களைப் பாடியது ஜேசுதாஸ் அல்ல, இன்னொரு மலையாளியான பி.ஜெயச்சந்திரன் என்று தெரியவந்தது.

முதலாவது, ஒருகாலத்தில் சக்கைபோடுபோட்ட, "வசந்தகால நதிகளிலே..."




அடுத்தது, ஒரு காலத்தில் கலக்கிய "ஒரு வானவில் போலே..."




இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.


பின்னே, எனக்குப் பிடித்த இன்னும் இரண்டு பாடல்கள்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே...
(Disclaimer: இப்படிப் பாடினாலும் நகை பட்ஜெட்டில் கைவைக்க முடியாது)



சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...



Wednesday, December 14, 2011

செல்வன்

செல்வனைக் கடைசியாகக் கண்ட நாள் 25 வருடங்களின் பின்னும் அப்படியே ஞாபகம் உள்ளது. அப்பாவின் மறைவுக்குப் பின் சில நாட்களில் வந்திருந்தான். ஒரு அந்தி மங்கிய நேரம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு நின்றது நேற்றுப் போல் உள்ளது. சம்பிரதாயமான எதையும் சொல்லவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சொல்லும் சுபாவம் இல்லாத பேர்வழி. எனவே வழமையான ஆறுதல்/ இரங்கல் பேச்சுக்கள் எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு நின்றான். அந்த நாளிற்குப் பிறகு செல்வனை நான் காணவில்லை. அவனது வீட்டுக்காரருக்கும் காணக் கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

ஒல்லியான உருவம். முன் பற்கள் கொஞ்சம் நீக்கல். ஊர் சொல் வழக்கப்படி நல்ல கறுவலான பெடியன் என்றுதான் சொல்லவேண்டும். டக்கென்று பார்த்தால் கொஞ்சம் முரடு என்று யோசிக்கவைக்கும் ஆனால் ஆள் என்னவோ அதற்கு நேர்மாறு. மென்மையான, யாருடனும் அதிகம் பேசாத ஒரு சுபாவம். தனிமை விரும்பியாகத்தான் இருந்திருப்பான் என்று இப்போது கணிக்கின்றேன்.

80 களின் ஆரம்பத்தில் இருந்த வடக்குக் கிழக்கு நிலைமையை 80 களில் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புரிய வைப்பது கடினம். கிபிர், புக்காரா விமானத்தாக்குதல்கள் தொடங்கவில்லை. ஆனால், தமிழன் என்ற ஒரேகாரணத்தால் இம்சைகளை அனுபவிக்கும் காலம் எப்பவோ ஆரம்பித்தாயிற்று; என்றாலும் 1983 ஆடிக் கலவரங்களின் பின் ஒட்டுமொத்த தமிழரிற்கும் "இப்படியே இருந்தால் சரி வராது" என்று புரிபடத் தொடங்கியது. அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் இயக்கங்களிர் சேரத் தொடங்குகிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் இளைஞர்கள் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

செல்வன் 1982 இல் மாணவர் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றான். பிறகு இராணுவப் பிரிவிற்கு மாறுகின்றான். ஆள் இடைக்கிடை ஊரிற்கு வருவதும் பிறகு காணாமற் போவதும் நடக்கும். காணும் போதெல்லாம் எனக்கும் செல்வனுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் மிகச் சரியாக இரண்டு 'கதை/காரியம்' இல்லாத இருவருக்கு இடையில் நிகழ்வது போல்தான் இருந்தது. ரோட்டில் எங்காவது கண்டால்

"எங்கை போறாய்?", இது செல்வன்.
"வீட்டுக்கு" என்று பதிலளித்து விட்டு நிறுத்திக்கொள்வேன்.

அல்லது சிலவேளைகளில் ஒரு கதையும் இல்லாமல் ஆளை ஆள் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வோம்.

அமைதியான சுபாவம் என்றாலும், அமைதியான சுபாவமானவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பக்கம் போலவே செல்வனுக்கும் இருந்திருக்கிறது. "கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" ஒரு நண்பர் கூட்டம் அவனுக்கு இருந்திருக்கிறது. அதே நண்பர்களுடன் பின்னேரங்களில் காற்பந்து விளையாடுவதையும் கண்டுள்ளேன். இலகுவிற் களைப்படையாத செல்வன் நன்றாகப் காற்பந்து விளையாடுவான் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேட்கிறேன். காற்பந்து விளையாட முடியாதளவு இருட்டியபின் அதே இளைஞர் கூட்டம் பள்ளிக்கூட மதிலில் அல்லது திறந்தவெளி மேடையில் இருந்து வம்பளக்கத் தொடங்கும். "நீ சின்னப் பெடியன்... ஓடு வீட்டை" என்று என்னையும் கலைக்கும். "இவங்கள் 'நோட்டிஸ்' எழுதப் போகிறான்கள், அதுதான் என்னைக் கலைக்கிறாங்கள்" என்று யோசித்துக் கொள்வேன்.

****

இயக்கங்களிடையே 'கருத்து வேறுபாடு' தொடங்கி இனப்பிரச்சினை மாதிரி இதுவும் சிக்கலாகிக் கொண்டிருக்கும் ஒரு காலப் பகுதியில்தான் கிழக்கில் நிறைய வேலை செய்ய இருக்குது என்று கிழக்கு மாகாணங்களுக்குப் புறப்பட்டுப் போனான். பிறகு ஊர் வருவது ஆடிக்கொருக்கால் அமாவசைக்கொருக்காற் தான்.

இவ்வளவு காலம் கடந்து, வடக்குக்/ கிழக்கு என்று ஒரு மாபெரும் பிளவு வந்து, அது எல்லாவற்றையும் காவு கொண்டு போனபின், 25, 26 வருடங்களிற்கு முன்பே "கிழக்கில் செய்ய வேண்டிய வேலைகள் கனக்க இருக்கு" என்று கிழக்கிற்குப் பயணமான ஒரு 22 வயது இளைஞனை நினைத்துப் பார்க்கின்றேன். How great he is ! தீவிர தமிழ்ப் பிரியர்கள் மன்னிப்பீர்களாக. உண்மையாகவே கடைசி வரியைத் தமிழிற் கோர்க்க முடியவில்லை.

கிழக்குக்குப் பயணமாகமுன் சொந்த அண்ணா ஒருவரிடம் செல்வன் சொன்னது, "அண்ணை நான் இனி அடிக்கடி இங்கை வருவனோ தெரியாது, எனக்கு ஒரு ஷே(ர்)ட்டும் ஒரு மணிக்கூடும் வாங்கி அனுப்பு" என்று. அண்ணா அனுப்பினார். போய்ச்சேர்ந்ததோ இல்லயோ என்பது செல்வனுக்கு மட்டும் தெரிந்ததொன்றாகியது.

செல்வன் ஞாபகமாக:
************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதியார்


--------------------------
செல்வன் என்கின்ற சுப்பிரமணியம் செல்வகுமார் (இயக்கப் பெயர் செல்றின்) 14/12/1986 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைகின்றார். அன்றுதான் அவரது 23 வது பிறந்த நாள். என்னைவிட ஆறு வயது பெரியவன் என்றாலும் "ன்" போட்டுக் கதைத்த பழைய இடைக்காட்டில் வாழ்ந்தோம். என்பதால் அதே உரிமையோடு 'அவன்' என்று பத்தியில் எழுதுகின்றேன். செல்வனின் தாய்வழிப் பேத்தியாரும் என் தந்தைவழிப் பேத்தியாரும் சகோதரிகள் என்பது டிஸ்கி.

"கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" என்ற சொற்றொடரை அவரது நண்பர் எழுதிய அஞ்சலியில் இருந்து எடுத்துப் பாவிக்கின்றேன்.

Thursday, December 8, 2011

காய்ச்சல்காரன்

வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. நல்ல வெயில் எறித்த காலை நேரம். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று.

முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது.

"குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என விளிப்பார். கொஞ்சம் குஷி 'மூட்டில்' இருந்தால் 'பெரிய பண்டி' என்று கூப்பிடுவார். அக்காவை 'மகாராணி' என்றுமட்டும்தான் கூப்பிடுவார். 'மகாராணியார்' என்று சொன்னால் ஏதோ பிடிக்கவில்லை என்றாகும்.

"காச்சல்காரனை ஏன் திட்டுறியள்?" அம்மா சப்போர்ட்டிற்கு வந்தா.

"இன்னும் மாறல்லையே" அப்பா கிட்ட வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். "வெளிக்கிடு ஆஸ்பத்திரிக்கு" என்றார்.

****

"வாயை 'ஆ' காட்டு" டாக்குத்தர் ரோ(ர்)ச்லைற் அடித்துப்பார்த்தார். எனக்கு மனிசன் ஊசி போடப்போகிறாறோ என்றுதான் பயம் வந்தது.
"எத்தினை நாளாக் காச்சல்?" அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
"மூண்டு நாளாச்சு"
"வயித்துக் குத்து, வயித்தோட்டம் இருக்கே?" எனக்குக் கொஞ்சம் வெட்கம். வெளியில் இருந்த ஆட்களுக்குக் கேட்டிருக்குமோ?
"இல்லை" அவசரமாக மறுத்தேன்.
"இவன் ஒழுங்காக கக்கூசுக்குப் போறேல்லை" என்று அப்பா சொல்ல வெட்கம் பிடுங்கித் தின்றது.
"கடைசியாக எப்ப போனவர்?" என்று டாக்குத்தர் அப்பாவைக் கேட்க, எழுந்து வெளியே ஓடலாம் போலிருந்தது.

டாக்குத்தரைப் பார்க்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி இருப்பார், குண்டாகத் தள தள என்று. மீசை இல்லை. எப்பவும் புன்சிரிப்புடன் இருப்பார். என்றாலும் மனிசனைப் பார்த்தால் ஊசி ஞாபகம் வருவதால் நெஞ்சு கொஞ்சம் 'பக் பக்' என்று அடித்துக்கொள்ளும். இன்றைக்கு ஊசி போடவேண்டி வரவில்லை. மனிசன் குனிந்து சதுரவடிவ வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கினார்.

"இதை எடுத்துப்பாருங்கோ, 3, 4 நாளில் மாறிவிடும்" என்றார்.

சின்ன மஞ்சள் குளிசைகள், சிவப்பில் இன்னொரு வகை (நக்கினால் மேல்பக்கம் இனிக்கும்), பிறகு கூட்டுக் குளிசைகள், காய்ச்சல் இருக்கும்போது விழுங்க வெள்ளைக் குளிசைகள் (காய்ச்சல் இருந்தால் மட்டும் எடுக்கவும்). இத்தோடு சிவப்புக் கலர் 'சிரப்' ஒன்றும் குடிக்கவேண்டும். ஒருபாதி மஞ்சளாகவும் மற்றப்பாதி சிவப்பாகவும் இருந்த கூட்டுக்குளிசைதான் எழுப்பமானது. காய்ச்சல் மாறின பிறகு பள்ளிக்கூடம் போனால் 'கப்சூல்' குளிசை விழுங்கித்தான் காய்ச்சல் மாறியது என்று பீற்றிக்கொள்ளலாம்.

கிளினிக்கில் இருந்து ஊசி போடாமல் வந்தது சந்தோஷம். என்றாலும் மிக முக்கிய வேலை ஒன்று மிச்சம் இருந்தது.

"அப்பா" உலகத்தின் ஆகத்திறம் அப்பாவை, ஆகத்திறம் மகன் கூப்பிடுகிறமாதிரிக் குரலை வைத்துக் கொண்டேன்.
"என்னடா?"
"வி.சு.க்.கோ.த்.து..." ஒருமாதிரி மெல்லமாக இழுத்துச் சொல்லிவிட்டு உண்மையாகவே கொஞ்சம் தயங்கினேன். அப்பா என்னைப் பார்த்தார். ஆள் இளகிவிட்டார். சைக்கிள் கணேஸ் கடையை நோக்கித் திரும்பியது. நான் உண்மையாகவே மகாராசா மாதிரிப் பாவனை பண்ணிக்கொண்டு சைக்கிள் 'கரியலில்' உட்கார்ந்து இருந்தேன்.

திரும்பி வரும்போது சைக்கிள் ஹாண்டிலில் கொழுவிருந்த வயர்க்கூடையில் இருந்த 250 கிராம் 'நைஸ்' பிஸ்கட்டிலும், தோடம்பழ இனிப்புச் சரையிலும்தான் மனம் இருந்தது.

"தம்பிமாருக்கும் குடுத்துத் தின்ன வேணும், தெரியுதே?"
"ம்ம்ம்.. " அரைகுறை மனத்துடன் சொன்னேன்.
"கொக்கா கேட்கமாட்டாள், அவளுக்கும் ஒரு விசுக்ககோத்துக் குடு என்ன?"
"சரி அப்பா". அக்காவிற்கு கொடுத்துவிட்டுத் திருப்பி வாங்குவது கஷ்டம் இல்லை.

****
பின்னேரம் தாத்தா வந்தார். கையில் இருந்த பையில் மூன்று செவ்விளநீர்களும் இரண்டு தோடம்பழங்களும்.
"இவனுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப்பட்டன்", உரத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தார். இவர் மெல்லிய குரலில் சொன்னால்தான் அதிசயம். காய்ச்சல் நேரத்தில் இளநீர் எனக்குப் பிடிக்காது. யார் அதைக் கணக்கில் எடுத்தது? தாத்தா மொட்டைக் கத்தியால் 'சத், சத்'என்று இளநீர் வெட்டுவது கேட்டது. குடித்தே ஆகவேண்டும். தப்ப முடியாது.

"இந்தக் காலத்துப் பெடியங்களுக்குக் காச்சல் பீச்சல் எண்டு எப்பவும்; நானும் இருந்தன், சின்னப்பிள்ளை வயதில ஒரு காச்சல் வந்திருக்குமே?" தாத்தா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். எவர்சில்வர் கப்பில் இளநீர் வந்தது. இளநீரைக் குடிக்க 'சத்தி' வரும்போல் இருந்தது. ஒருமாதிரி அடக்கிக் கொண்டேன். தம்பிமார் இளநீர் வழுக்கைக்கும் 'கயருக்கும்' அடிபடத் தொடங்கினார்கள்.


****
இரவு நித்திரை கொள்ளமுடியவில்லை. இடையில் அப்பா வந்து வியர்த்துப் போயிருந்த தலையைத் கோதிவிட்டார்; பிறகு போர்வையை இழுத்துக் கழுத்துவரை மூடிவிட்டார். பிறகு அம்மாவும் அக்காவும் அதே வேலையை இரண்டு இரண்டு மணித்தியால வித்தியாசத்தில் செய்தார்கள்.

காலையில் எழும்போது தலை நல்ல 'கிளியராக' இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. இனிக் காய்ச்சல் அடிக்கமாட்டாது என்று புரிய எதையோ இழந்தது மாதிரி இருந்தது.



--------------

பண்டி - பன்றி
கொக்கா (யாழ் பேச்சு வழக்கு) - உனது அக்கா

Friday, November 18, 2011

ஐந்து வெள்ளி யாசிப்பவன்

நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது.

இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல்வாகு. நாலைந்து நாட்களாகச் சவரம் பண்ணியிருக்க மாட்டான். போட்டிருந்த உடுப்பைப் பார்த்தால் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்போல் இல்லை. கண்கள் மட்டும் ஒரு அடிபட்ட விலங்கின் கண்ளைப் போல பரிதாபமாக இருந்தன. மொத்தத்தில் விசிற் விசாவில் வந்து, வேலை தேடிக் களைத்து நாளைக்குத் தோல்வியுடன் நாட்டுக்குப் திரும்பிப் போகும் இஞ்சினியர் மாதிரி இருந்தான். ஒன்றும் பேசாமல் மிகக் கிட்ட நின்று என்னப் பார்த்துக் கொண்டு நிற்பது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.

"நீங்கள் இலங்கையே?" அசௌகரியத்தை உடைக்க முயன்றேன்.
"இல்லை, நான் சிங்கப்பூரிலதான் பிறந்தது," பதில் உடனே வந்தது.
"இண்டைக்கு வேலை இல்லைப் போல?"
"இல்லை அண்ணே, வேலை ஆரும் தர மாட்டேங்கிராங்க."
"ஏன்?" கேட்டிருக்கக் கூடாது, கேட்டுவிட்டேன். சிங்கப்பூரில் முன்னாள் சிறைக் கைதிகளுக்கும், முன்னாள்- இன்னாள் போதைப் பொருள் அடிமைகளுக்கும் வேலை கிடைப்பது கஷ்டம்.

இப்போது சங்கடப் பட்டான். கொஞ்சம் தயங்கி பிறகு சொல்லத் தொடங்கினான். "எனக்கு முந்திக் கொஞ்சம் 'மனநிலை' குழம்பி இருந்திச்சு, இப்ப சிகிச்சை எல்லாம் எடுத்துச் சரியா வந்திட்டுது. ஆனா எல்லாரும் என்னை "லூசு" எண்டுதான் நினைக்கிறாங்கள்.". இப்போது நான் இடத்தை விட்டு நழுவ முயற்சித்தேன், என்றாலும் சட்டென்று எப்படி இடத்தைக் காலி பண்ணுவது? ஏற்கெனவே நான் அரை லூசுகளுடன் சிநேகிதம் வைத்திருப்பதாக மனைவி சொல்லிக்கொள்வாள். இதிலே இது வேறு. சுற்றவர நின்ற எல்லோரும் என்னையே பார்ப்பதுமாதிரி ஒரு உணர்வு.

"அண்ணே, ஒரு அஞ்சு வெள்ளிக் காசு தருவியளா? வீட்டில சாப்பாடு சரியாத் கொடுக்கிறாங்கள் இல்லை"

"அஞ்சு வெள்ளி இப்ப இல்ல", முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். அவன் அடுத்த இழித்த வாயைத் தேடத் தொடங்கினான்.

****
பிறகு இவனைப் பல இடங்களிற் காணக் கிடைத்தது. அநேகமாக இந்திய, இலங்கை உருவமுள்ள ஆட்களுடன் கதைத்துக் கொண்டு நிற்பதைக் காணக்கிடைத்தது. வேறு என்ன? "வீட்டில சாப்பாடு போடுறாங்கள் இல்லை, ஐந்து வெள்ளி தருவியளே?" என்று கேட்பானாக்கும். இப்போது எனக்கும் அவனில் பரிதாபம் வரத்தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை காணும்போதும் இன்னும் மெலிந்தமாதிரி இருந்தான், தாடிமட்டும் கூடிக்கொண்டு போனது ; உடையும் முந்தி மாதிரி இல்லை. அழுக்காகிக் கொண்டே போனது. கண்ட கண்ட எல்லாரிடமும் ஐந்து வெள்ளி கேட்பவன் என்னிடம் மட்டும் அதற்குப் பிறகுகேட்கவில்லை. நல்ல ஞாபகசக்தி இருக்கவேண்டும். இவனிடம் காசு பெயராது என்று இன்னும் மறக்கவில்லை.


*****
அரசகேசரி சிவன் கோவில் அப்போது வுட்லண்ஸ் வீதியில், மலேசிய எல்லைக்குக் கிட்ட இருந்தது. இப்போது கோவில் இடம் மாறியிருக்கவேண்டும். சிங்கப்பூரின் பரபரப்பான மற்றக் கோவில்கள் மாதிரியில்லாமல் அமைதியாக இருக்கும். கோவிலோடு ஒரு குளம், குளத்தில் சில ஆமைகள், மீன்கள், அலம்பல் பேர்வழியான கோவிற் கணக்குப் பிள்ளை என்று ஒரு நல்ல செற்றப். ஐயர் யாழ்ப்பாணம். ஆனால் இடைக்கிடை தமிழ்நாட்டில் இருந்து 'விசிற்றிங்' ஐயர்மாரும் வருவார்கள். கோவிலில் நின்றால் பத்துப் பதினைந்து வருடங்களின் முன் ஊரில் 'திருவிழா இல்லாதபோது' கோவிலில் நின்ற ஞாபகம் வரும். பின்னுக்கு என்னைக் 'கண்காணிக்க' மனைவி மட்டும் மேலதிகம். ஐந்து வெள்ளிக்காரன் இப்போது கோவில் மணியடிக்கும் வேலையைக் கைப்பற்றி விட்டான். பூசை இடையில் எப்பப்ப மணி அடிக்கவேண்டுமோ அப்பப்ப சுமாராகச் சரியாக மணி அடிக்கத் தொடங்குவான். அடிக்கத் தொடங்கினால் நிறுத்த விருப்பம் இல்லை. கணக்குப்பிள்ளை மெதுவாகத் தோளிற் தொட்டு, "நிப்பாட்டும்" என்று சொல்லுமட்டும் நிறுத்தமாட்டான். மணி அடிக்கும் 'பணிக்காகக்' கிடைத்த ஊதியம் என்றமாதிரிக் கோயிற் பிரசாதங்களை உரிமையுடன் தின்னப் பழகிவிட்டான். இப்போதும் என்னிடம் 'அஞ்சு வெள்ளி' கேட்பதில்லை. எப்போதாவது அவன் இன்னுமொரு முறை கேட்டால் ஒரு 'ரண்டோ,அஞ்சோ' வெள்ளியைக் கொடுத்து என் குற்றவுணர்ச்சியை 'அவுட்சோர்ஸ்' பண்ண இருந்த எனக்குப் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

கோவிற் பிரசாதம் அவன் வயிற்றை நிரப்பப் போதாதோ அல்லது ஐந்து வெள்ளி யாரிடம் வாங்கினாற்தான் அன்றைய பொழுது நன்றே போகும் என்று யோசித்தானோ தெரியவில்லை. கோவில் வந்த யாரையாவது மடக்கி ஏதோ ஒரு தாள்க் காசு வாங்காமற் போகமாட்டான்.


******
இவனைக் கடைசியாகக் கண்டதுவும் அரசகேசரி சிவன் கோவிலிற்தான். 2003 இன் கடைசிப் பகுதி. அப்போது சிட்னி வரும் முடிவிற்கு வந்தாயிற்று. கொஞ்சம் டல் அடித்தாலும் சிங்கப்பூர் பிடித்துத்தான் இருந்தது. பிளாஸ்க் பையில் விற்கும் ரீ'யும் 'புட் கோ(ர்)ட்'இல் கொலஸ்திறோல் பயமில்லாமல் சாப்பிடும் நாசி கொறெங், பிறகு எண்ணையில் 'குளிக்கவார்த்து' சுடச் சுடக் கிடைக்கும் பரோட்டாக்களும் பழகிவிட்டது. ஊர் ஞாபகம் வந்தால் செரங்கூன் சாலை, சிலோன் பிள்ளையார் கோயில், அல்லது அ.சிவன் கோவில் என்று ஒரு ஞாயிற்றுப் பொழுதைப் போக்காட்டி விட்டால் ஆயிற்று. ஒரு மழையும் பெய்யாத வெயிலும் அடிக்காத வெள்ளிக்கிழமை பின்னேரம் கோவிலின் வெளிப்புறம் றோட்டில் இருந்த பஸ் ஸ்டாண்டில் எனக்குக் கிட்ட இவன். நீண்ட நாட்களாக மனதில் அரித்துக் கொண்டிருந்த ஒன்றைக் கேட்டேன்.

"தம்பி, அப்பா என்ன செய்யிறார்?"
"நீங்கள் புது அப்பாவைக் கேக்கிறியளோ? அல்லது எங்க அப்பாவைக் கேக்கிறியளோ? புது அப்பா வந்து நாலைந்து வருஷங்களாச்சு ஆனா எனக்கு அடிக்கிறதை மட்டும் நிறுத்தல, புதுத் தம்பிமாரும் அடிக்கிறாங்கள், அம்மாவும் அடிக்கிறா, எல்லாரும் அடிக்கிறாங்கள். இப்ப நான் வீட்டில சாப்பாடு கேக்கிறதில்ல. ஏன் அண்ணே எல்லாரும் அடிக்கிறாங்கள்?".

*****

இப்பவும் அவன் வீட்டில் அடி வாங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது வெளியில் யாரிடமாவது ஐந்து வெள்ளி தரச்சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கலாம்.

Sunday, October 9, 2011

'அன்னக்கிளி' யும் அது கொண்டுவரும் ஞாபகங்களும்...

Nostalgia என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சரியாக என்ன சொல் வரும் என்று தெரியவில்லை. 'நனவிடை தோய்தல்' என்பது ஞாகத்திற்கு வருகிறது. ஆனால் மிகச் சரியான அர்த்தமா இல்லை இரண்டும் சற்று வித்தியாசமா என்று குழப்பமாகவுள்ளது. Nostalgia என்பது இறந்த காலத்தை ஒருவித ஏக்கத்துடன் நினைவு படுத்துக் கொள்வது. இதில் முக்கியமானது இறந்த காலத்தில் உள்ள நல்லதுகளை மட்டும் நினைத்துப் பார்ப்போம். உதாரணமாக, "நான் சின்னப்பிள்ளையாக இருக்கேக்கை பாண் ஒரு றாத்தல் 60 சதம்தான்" என்று ஞாகத்தில் உள்ளது. அப்ப ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் என்பது சௌகரியமாக மறந்துவிடும்.

வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டாப்பிறகும் அரைக்காற்சட்டையுடன் பள்ளிக்கூட ஞாபகம் வருவதும் அதோடு ஒட்டிக்கொண்டு ஒரு மெல்லிய ஏக்கம் வருவதும் தவிர்க்க முடியாமல் வருவதற்கும் காரணம் இந்த 'நனவிடை தோய்தல்' தான். இந்த 'ஏக்கம்' சென்ரிமென்ற்'இற்குக் காரணம் சுமைகளற்ற சிறுவயது மென் ஞாபகங்கள் அவை என்பது மட்டுமல்ல. என்னதான் தலைகீழாக நின்றாலும் அந்தக்காலம் திரும்பி வரப்போவதில்லை என்ற புரிதல்தான் முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.



சிலவற்றைக் காணும்போது அல்லது கேட்கும்போது இந்தப் பின்னோக்கிப் போகும் நினைவுகள் அதிகம் வரும். கொஞ்சம் பழைய தூசி பிடித்த பெட்டி ஒன்றைத் திறந்தபோது அதுக்குள் இருந்த ஆறாம் வகுப்பு 'றிப்போர்ட்'ஐக் காணும்போது கூடவே வருபவை ஞாபகங்கள். ஆறாம் வகுப்பில்தான் நட்ராஜ் அல்லது ஒக்ஸ்போர்ட் கொம்பாஸ் பெட்டி வாங்கியிருப்போம். விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி என்று பாடங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி வாத்தியா(ய)ர் வந்திருப்பார். சிலபேர் அப்பதான் களிப்பேனை பாவிக்கத்தொடங்கியிருப்போம். சின்னப் பள்ளிக்கூடத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடத்திற்கு வந்த 'மிதப்பு'க் கொஞ்சம் மீந்திருக்கும். 'ஏ/எல் படிக்கிற அண்ணாமார் அக்காமார் படிப்பு விடயமாக (!) டிஸ்கஸ் பண்ணுவதைக் கவனிக்கத் தொடங்கியிருப்போம்.

அன்னக்கிளி படம் வந்தது 1976 இல். முதலாம் வகுப்புக் படித்துக்கொண்டிருந்திருப்பேன். படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாட்டு என் அரைக்காற்சட்டைப் பருவம் முழுவதுமே என்னோடு கூட வந்தது. கோயிற் திருவிழா, சித்திரை வருஷப் பிறப்பு விளையாட்டுப்போட்டி, 'மின்னோளியிற்' கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, ஐஸ்கிறீம் வான் என்று லவுட் ஸ்பீக்கர் இருக்கும் இடமெல்லாம் இந்தப் பாட்டுத் தப்பாது. இப்ப இந்தப் பாட்டைக் கேட்டால் கூடவே வருபவை ஒரு கலவை ஞாபகங்கள். ஏதோ ஒரு வைரவ கோயிற் திருவிழாவில் சோளப்பொரி கொறித்துக்கொண்டு இரவு எந்த மேளக்குழுக்கள் வருது, கண்ணன் கோஷ்டி பாட்டுப் பாட வருதா? போன்ற 'முக்கியமான' தகவல்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன். அல்லது இவற்றைக் கொஞ்சக் கைச்சரக்குச் சேர்த்து இன்னொருவனுக்கு அவித்துக் கொண்டிருப்பேன். கோயிற்திருவிழாக்கள் தொடங்கினால் நாலைந்து மேளக் கோஷ்டிகள் இருக்கும், அநேகமாக இரவில்தான் இருக்கும். எங்களைப் போன்ற அரைக்காற்சட்டைகளுக்கு மேளக்காரர்களுக்குக் கிட்ட, முன்வரிசையில் இருந்து பார்க்கத்தான் ஆசை. மேளத்தைப் பார்ப்பதைவிட மேளக்காரரின் அங்க சேஷ்டைகளைத்தான் பார்த்து ரசிப்போம். இல்லாவிட்டால் 'ஆர் மேளத்தை உடைக்கிறமாதிரிக்' கெட்டித்தனமாக அடிக்கிறான்' என்பதிற்தான் நிறைய 'விவாதங்கள்' வரும்.


கோயில் இரவுத் திருவிழா என்றால் கலர் ரியூப் லைற், 'விட்டு விட்டு' எரியும் பல்ப் அலங்காரம் என்று கோயிலே ஒரு கலாதியாக இருக்கும். மத்தியான நேரத்திற்குப் பின் எந்நேரமும் 'லைற் மிசின்காரன்' வரலாம். எல்லாவற்றையும்விடத் 'திறிலான' விஷயம் லைற்று மிசினைச் 'ஸ்ரார்ட்' பண்ணுவது. 'பொழுதுபட்டுக்' கொஞ்சம் இருட்டத் தொடங்க ஆயத்தமாவார்கள். குட்டி ராட்சதன்மாதிரி இருக்கும் லைற் மிசினிற்குக் கற்பூரம் (சூடம்) காட்டி விட்டுப் பயபக்தியோடு இரண்டு 'பெலமான' ஆசாமிகள் ஒரு "ஸ்ரார்டிங் லீவர்' ஐத், தம் பிடித்துச் சுத்துவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று,..., என்று சுற்ற, 'டட், .. டட், .. டட், டட் டட்' என்று 'ஸ்ரார்ட்' ஆகும். பிறகு விடிய வெளிச்சம் வரும் மட்டும் இதன் இயந்திரச் சத்தம் எட்டுப் பத்து வீடுகளுக்காவது கேட்கும்.

சிவராத்திரி அநேகம் ஊர்களில் கோவில்களிற்தான் கொண்டாடப்படும் . எங்களூரில் மட்டும் சிவராத்திரிக்குக் கோவில்களில் சனம் மினக்கெடுகிறமாதிரி ஞாபகம் இல்லை அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் மேடையில் இரவிரவாக பாட்டு/நாடகம் போடுப்படும். அநேகமாகக் கிட்டத்தட்ட விடியும் மட்டும் ஏதாவது நிகழ்ச்சி இருக்கும். தொடக்கத்தில் 'இப்போது நான்காம் வகுப்பு மாணவி தர்சினி ஒரு பாட்டுப் பாடுவார்" என்று அறிவிக்க, அவா கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டு "சின்னப் பாப்பா எங்கள் தங்கப் பாப்பா, சொன்ன சொல்லைக் கேட்டால்தான் நல்ல பாப்பா..." என்ற மாதிரி ஒரு பாட்டைப் பாடுவா. இப்படியே போய் ஏ/எல் அண்ணாமார் நாடகம் போட நடு இரவு தாண்டிவிடும். அவர்களின் நாடகம் நிறைப்பேருக்குப் பிடிக்கும். காதல், நகைச்சுவை என்று கலந்து வெளுத்துவாங்குவார்கள்!

நாடகம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். நீளத் தலைமயிர் வளர்த்து, பெல்பொட்டம் போட்ட இளைஞன். கொஞ்சம் 'பாதுகாப்பான' இடைவெளி விட்டு ஒரு சிவந்த இளம்பெண் நிற்பாள். இது முதல் சீன்.

"சுகந்தி, நான் உன்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன். உன் இதயம் என்ன கல்லா? நீ ஏன் இப்படி என்னை நோகடிக்கிறாய்?...", சுகந்தி அநேகமாக ஆராவது கொஞ்சம் சிவந்த பெடியன் 'பேமாஷார்ப்' பிளேட்டின் துணையால் மீசையிழந்து, பொய்முடி கட்டி, கஷ்டப்பட்டுச் சேலையும் கட்டி இருப்பான். சுகந்தி கோபப்பட்டுக் கொண்டு, "சேகர், உனக்கு இந்த வயதிற் காதல் தேவையா? உன் அப்பா/அம்மா உன் படிப்புக்கு எவ்வளவு செலவழிக்கிறார்கள் தெரியுமா? அதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காரைக்காலம்மையார் ரேஞ்'சிற்கு அட்வைஸ் மழை பொழிவாள். இப்படிக் காதல் வசனம்- அட்வைஸ் என்று நாடகம் ஒரு பத்து நிமிசம் ஓடும்.

அடுத்த காட்சி. ஒரு முரட்டு இளைஞன். சாரம் தான் கட்டி இருப்பான்.(அந்தக் காலங்களில் நாடகங்களில் வரும் முரடர்கள் சாரம்தான் கட்டியிருப்பார்கள்). கோபமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். இவன்தான் சுகந்தியின் அண்ணா என்று இவ்வளவுக்குள் புரிந்திருக்கும்...

மிச்ச நாடகம் எப்படிப் போகும் என்று ஊகிக்க முடியாவிட்டால் நான் எழுதப்போகும் "காதல் என்பது கானல் நீரா?" மேடை நாடகத்திற்காகக் காத்திருக்கவும்.

எங்கள் வகுப்புப் பெடியளும் ஒருதரம் நாடகமொன்று போட்டார்கள். அது ஒரு 'ப.ய.ங்.க.ர.த் திகில் துப்பறியும் நாடகம்'. அப்படித்தான் நிகழ்ச்சி தொடங்கமுதல் அறிவிப்பாளர் அடிக்கடி ஞாபகமூட்டினார். கதை/வசனம்/நெறியாள்கை/நடிப்பு எல்லாம் வகுப்பு 7 பி மாணவர்கள். நேரம் கிடைக்கும்போது அதைப்பற்றி எழுதுகிறேன்.



--------------------------------------------------------------------------------------------
மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே.


பாண் - ப்ரெட் (தமிழ்நாடு)
லைற்று மிசின் -a diesel generator fixed permanently onto the body of a small lorry/truck
பொழுதுபட்ட நேரம் - சாயுங்காலம் (தமிழ்நாடு)
சாரம் - சாரம் (இலங்கை, தமிழ்நாட்டில் சில பாகங்கள் ( உ+ம் திருநெல்வேலி), லுங்கி/கைலி (சென்னை)
ஏ/எல்- A/L = Advanced Level, கிட்டத்தட்ட (இந்தியாவில்) ப்ளஸ் 2 மாதிரி

நன்றிகள்:
(1) புகைப்படம்: www.idaikkadu.com

Sunday, October 2, 2011

முருகா நீ ஏன் இப்படிக்...

இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்", "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசு/பணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன zip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டி, பிளாஸ்டிக் வாளிகள், ரெடிமேட் சேட்டுக்கள், ஸ்கேர்ட்டுக்கள், பிளவுஸ்கள், தேங்காய்த் திருவலை, பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம். ஒரு சின்னப் பிரச்சினை. கடையில் ஒரு பெண்பிள்ளை வேலை பார்த்தது. வயது இருபது, இருபத்திரண்டு இருக்கலாம். எங்கள் வயதைச் சொன்னால் இத்தனை வயதிலே இதை வாங்க வெட்கமே என்று சிரிப்பீர்கள். ஆனால் எங்கள் வயதோடு பார்த்தால் அவள் பெரிய பெண். ஆம்பிளைப் பிள்ளைகளின்ரை பிரச்சினை ஆம்பிளைப் பிள்ளைகளுக்குத் தானே விளங்கும்? அவளட்டை போய் "அக்கா இன்ன சைஸ் பென்ரர் எடுங்கோ" என்று எப்படிக் கேட்பது? நானும் விக்கியும் இரண்டு மூன்றுதரம் பக்கத்துக் கடையில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு 'தற்செயலாக' கடைக்குள் எட்டிப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கடையில் அவள் நின்றாள். அசோகனின் சலூனிலே ஓசிப் பேப்பர் பார்த்துவிட்டு, இன்னொரு கடைசி முயற்சி. இந்தமுறை அவள் இல்லை.

நெஞ்சை நிமித்திக் கொண்டு கடைக்குள் உள்ளிட்டோம். கடை முதலாளி 'ரீ' யை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"தம்பிமார் கொஞ்சம் இருங்கோ, இந்தற் ரீ' யைக் குடிச்சிட்டு வாறான்" , மனிசன் சாவகாசமாகக் ரீ' யைக் குடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையில் தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி அப்பதான் அவள் எங்கிருந்தோ திடீரென்று வந்தாள். "பிள்ளை, இந்தப் பெடியளுக்கு என்ன வேணும்" எண்டு கேட்டுக் குடு", முதலாளி அக்கறையாகச் சொன்னார்.

நான் விக்கியைப் பார்த்தேன். அவன் இப்ப தேங்காய்த் திருவலை ஒன்றைத் தூக்கி மேல், கீழ், இடம், வலம் என்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். விபுலானந்த அடிகள் யாழ்'ஐப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதினாராம். விட்டால் இவன் தேங்காய்த் திருவலை பற்றி நூறு பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும் எழுதியிருப்பான். அவ்வளவு மும்முரம்.

"தம்பி என்ன வேணும்" அவள் கேட்டாள்.

"ம்ம்ம்ம் வந்து....... அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்கிற பவுடர் பேணி என்ன விலை?" என்றேன் அசடு வழிய.

**************************************************

யோசித்துப் பார்த்தால் தாத்தாமார் காலத்தில் இந்தமாதிரிப் பிரச்சினைகள் இருந்திருக்காது. வேட்டியை ஒடுக்கமாக நீளமாகக் கிழித்தால் கோவணம் ரெடி. இடுப்பில் அறுணாக் கொடி கட்டாயம் தேவைப்படும்தான். ஆனால் கடைக்கெல்லாம் போய் மினக்கெடத் தேவையில்லை. செலவும் இல்லை. எனது இரண்டு தாத்தாமாரும் கனக்க விஷயங்களில் வித்தியாசம். ஒற்றுமையான ஒன்று உண்டென்றால், இந்தக் குளிப்பு விடயத்தில்தான். கௌபீனத்துடன் கிணத்தடிக்கு வந்தால் 45 நிமிடம் ஆகாமல் குளிப்பு முடியாது. 15- 20வது நிமிடத்தில் கிணத்தடியில் நிக்கிற கமுக மரம் அல்லது ஒல்லித் தென்னையில் முதுகு தேய்ப்பார்கள். "ஓடிப் போய் சமையல் முடிஞ்சுதோ எண்டு பாத்திட்டு வா" என்றால் குளியல் முடியப் போகுது என்று அர்த்தம். ஆச்சிமாரும் ஒரேமாதிரித்தான் பதில் சொல்லுவார்கள், "கிழவன் ஏன் இப்படிச் சாணக முதலை மாதிரித் தண்ணியில நிக்குது?, கெதியாக சாப்பிட வரச் சொல்லு " என்று.

தாத்தாமார் காலம் போய் அப்பாமார் காலம் வந்ததும் சஸ்பென்ரர் என்று ஓன்று வந்தது. இது கடையிற் கிடைக்காது. வேறு உடுப்புத் தைத்த மிச்சத் துணியில் கெட்டித்தனமாக வெட்டித் தைக்க வேண்டும். இடுப்பில் இரண்டு இடத்தில் முடிச்சுப் போடவேண்டும். முடிச்சுப் போட்டுக் கட்டுவதால், இலாஸ்ரிக் பட்டை இடுப்பில் தேவைப்படாது. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!.

பிறகு சித்தப்பாமார் காலத்தில் வந்ததுதான் இந்த பென்ரர், மினிப் பென்ரர் என்பன. இவை கடையில் மட்டுமே கிடைக்கும். இப்படித்தான் ஆண்கள் உள்ளாடை வர்த்தக மயமாக்கப்பட்டு சர்வதேசப் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு ஆண்வர்க்கம் உள்ளாவதாக தோழர் செந்தமிழ்ச்செல்வன் சொல்லுகிறார்.

************************************************

பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




-------------------------------------
தேங்காய்த் திருவலை - தேங்காய்த் துருவு பலகை
கொம்மா - உனது அம்மா
கெதியாக- விரைவாக

Photo: Thanks to

http://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்


Friday, September 16, 2011

யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி

முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும் ஆயிற்று. முள்போல் குத்திய வலியையும் தூக்கமில்லாத இரவுகளையும் புலம் பெயர் தமிழர் அநேகர் அனுபவித்திருப்பர். என்றாலும் இந்த இரண்டு வருடங்களில், "ஏன் தோத்தாங்கள்?" என்ற கேள்வி barbecue party களுக்குள் சுருங்கிவிட்டது. கேள்விப்படவே தாங்கமுடியாத வலியை அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வன்னி வாழ் மக்கள், மற்றும் முன்னால் போராளிகள் படும் துன்பங்கள் இந்த "ஏன் தோத்தாங்கள்?" வியாக்கியானங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அதைவிட முக்கியமாக எழுதப்படவில்லை என்ற ஆதங்கங்களுடன் இருந்த என் கையில் அகப்பட்ட சிறுகதைத் தொகுப்பு யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத்துணி".

யோ.கர்ணன் யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் என்று புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்புக் கூறுகின்றது. அவரின் சிறுகதைகள் முள்ளிவாய்க்கால் துயரங்களைப் பேசுகின்றன. முக்கியமாக நாம் அதிகம் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிராத பேசாப்பொருட்கள் சிலவற்றையும் பேசுகின்றன. என்பதால், தூய்மைவாதிகளிற்குப் பிடிக்காமல் போகலாம். போகட்டுமே! பிடிக்காது என்பதற்காக நடந்ததை கண்ணை மூடிக்கொண்டு 'ஒண்டும் தெரியாத பூனை' மாதிரி இருக்கவேண்டும் என்பதில்லை.

ஒரு மாபெரும் துயரத்தைக் காவும் கர்ணனின் கதைகள் ஒப்பாரி நடையில் எழுதப்படவில்லை. மிக மெலிதான அங்கத நடையில் கதைகளை எழுதியுள்ளார். இன்னொன்றையும் சொல்லவேண்டும். முழுக்கதைகளையும் உயிர்ப்பான யாழ்ப்பாண/வன்னி பேச்சுத்தமிழில் எழுதியுள்ளார்.

ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக மிக அதிகமாக இரண்டுவிதமான பார்வைகளைக் காணலாம்.

(1) புலிகளைக் கிட்டத்தட்ட தேவர்கள் அல்லது உப கடவுளர் "range" இற்கு ஏற்றுவது.
(2) புலிகளை விமர்சிக்கின்றேன் என்ற பெயரில் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது - இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் "இலங்கை அரசாங்கம் அப்படியொன்றும் தமிழர்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை. போராட்டம் என்பது சாப்பிட்டது செமிக்கக் கஷ்டமான கொஞ்சப்பேர் தொடங்கிய ஒன்று" என்கின்ற தொனி தெரியும்.

மேலேயுள்ள இரண்டுமில்லாமல் நடுநிலைப் பார்வைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு. கர்ணன் மேலேயுள்ள (1) அல்லது (2) இனை எடுக்காமல் சொல்ல வேண்டியவற்றை எதுவித மறைத்தல்களுமின்றிச் சொல்கிறார். நடுநிலை என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்பதால் நீங்களே புத்தகத்தை வாசித்து முடிவு எடுங்கள்.

*************

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி வெளியீடாக ஓகஸ்ட் 2010 இல் வந்தது. சில கதைகள் இணையத்தில் (கர்ணனது blog இல்) கிடைக்கின்றன.

1. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......
2. மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி
3. பெயர்
4. தஸ்யுக்களின் பாடல்கள்
5. சுதந்திரம்
6. பாதுகாப்பு வலயம்
7. திருவிளையாடல்
8. றூட்
9. சடகோபனின் விசாரணைக் குறிப்பு
10. தேவதைகளின் தீட்டுத் துணி

முதல் கதை "எப்படி ஒரு பயந்த, கொஞ்சம் பட படப்புக் குணமுள்ள பெட்டை, ஒரு பெரிய தியாகத்தைச் செய்கிறாள்" என்று விபரிக்கிறது. தியாகந்தான் வீணாகப் போயிற்று.

"மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி" மறக்கமுடியாத ஒரு கதை. காலத்திற்குக் காலம் (80 களிலிருந்து) இதுமாதிரி நடந்து கொண்டிருக்கிறது. செய்பவர்களும் செய்யப்பட்டவர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். "போடுப்பட்டுக்" கொண்டிருப்பது எல்லாம் நம்மவர் என்பதுதான் ஒரு பொதுத்தன்மை. கர்ணனின் எழுத்துநடையில் ஒரு கொழும்பு லொட்ஜ், வெளிநாட்டுக்குப் பறந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆயத்தமாகும் ஒரு "முன்னாள்", சில விடலைப் பையன்கள் என்று ஒருவித "சீன்" விரிகிறது.

வெதுப்பி, குளிர்களி முதலிய சொற்களை ஒரு காலத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் "பெயர்" சிறுகதை இன்னும் சுவாரசியம் ஆகும். இதை வாசிக்கும்போது 1991- 1994 வரை லீவுகளில் யாழ்ப்பாணம் வரும்போது வவுனியா ஆமிப் பெடிச்சிகளின்(!) செக் 'பொயின்ற்' தாண்டி, ஓமந்தை வந்து புலிகளின் சோதனை நிலையத்தில் எங்கள் தமிழ்ப் புலமையைக் காட்டியது ஞாபகம் வருகிறது. கதை, "மேனன்" தமிழ்ப்பெயரா என்ற ஆராய்ச்சியில் இருந்து , "சதுரங்கனி" சாப்பாட்டுக் கடையில் முடிவுக்கு வருகிறது.

"தஸ்யுக்களின் பாடல்கள்" ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியுமுள்ளது. மீண்டும் ஒருமுறை முயற்சிக்கின்றேன்.

"சுதந்திரம்", இப்படியும் வன்னிச் சனங்கள் கஷ்டப்பட்டனர் என்று சொல்கிறது. ஆறாவது கதையான " பாதுகாப்பு வலயம்" வன்னியில் "கோரங்கள்" நடந்தபோது நின்ற ஒருவரால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என்பது என் கருத்து. (மற்றவர்களும் முயற்சிக்கலாம்!) .

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ஏழாவது கதையாக உள்ள "திருவிளையாடல்". முள்ளி வாய்க்காலில் இறங்கிய கடவுளை இந்தப் பக்கம்"பங்கர்" வெட்டக் கூப்பிடுது. தப்பிப் பிழைத்து அந்தப் பக்கம் போனால், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னால் மொபைல் போனால் ஒருவன் அவரைப் படம் பிடிக்கிறான். இப்படிச் சிம்பிளாகக் கதையைக் கூற முடியாது. முழுக் கதையையும் வாசியுங்கள்.

சில உண்மைகள் எப்பவும் தெரிய வரா. அதேபோல் "ரூட்" கதையில் கதையின் முடிவில் அவனின் மார்பைத் துளைத்த ரவை எங்கிருந்து வந்தது என்று தெரியவராது. தெரிய வந்துதான் என்ன ஆகப் போகிறது? "சடகோபனின் விசாரணைக் குறிப்பு" ஒரு விசாரணை இப்படியும் இருந்திருக்கலாம் என்று சொல்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அநேகமாக இப்படித்தான் விசாரணை நடந்திருக்கும் என்று யோசிக்கவைக்கிறது. "தேவதைகளின் தீட்டுத்துணி" , இதுதான் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதை, அத்தோடு கடைசிக் கதை. கதையின் ஆன்மாவும் கதையின் கடைசி வரியிற்தான் இருக்கிறது.

மொத்தத்தில் ஈழத்தமிழர் எல்லாரும் கட்டாயம் படிக்கவேண்டிய சிறுகதைத்தொகுப்பிது. வடலி இணையப்புத்தகக் கடையிற் கிடைக்கிறது. விலை US$ 7.90 மட்டுமே, அனுப்பும் செலவும் சேர்த்து.

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி இணையப்புத்தகக் கடையில்


---------
குறிப்பு
"கதை" என்று நான் மேலே குறிப்பிடுபவை "சிறுகதை" என்றுதான் இருக்கவேண்டும். என்றாலும் "கதை" என்ற சொற்பதம் இங்கு பொருத்தமாக, இயல்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Monday, August 29, 2011

செல்வச் சந்நிதி கோவில்

சந்நிதி கோவில் என்கின்ற "தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவில்" கொடியேற்றம் இன்றைக்குத்தான் என்று தற்செயலாக அறியவந்தேன். கடைசியாக எப்ப அங்கே போனேன் என்றால் ஞாபகம் வர மறுக்குது. 80களின் நடுவாக இருக்கும்.

"தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது. அது பெயருக்கு ஏற்ற மாதிரி தொண்டைமானாற்றில் இருந்தது. கீரிமலை வீதியும், (752 பஸ் ரூட்" ) பருத்தித்துறை வீதியும் சந்திக்கிற 'T-சந்தியில்' கடல் நீரேரிப் பக்கமாக இருந்த பச்சைக் நிறக் கட்டடத் தொகுப்புக்கள்தான் இவை. இந்த வெளிக்கள நிலையத்தில் இருந்துதான் முழு யாழ்ப்பாண பள்ளிக்கூடங்களுக்கும் கணக்கு, விஞ்ஞான ரெஸ்ட் பேப்பர்கள் வரும். கேள்விகள் கொஞ்சம் வயிற்றை கலக்க வைக்கிற மாதிரிக் கஷ்டமாக இருக்கும். இந்தப் பரீட்சைகளில் வரும் வினாக்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும்போது கட்டாயம் சந்நிதி முருகன் ஞாபகத்திற்கு வருவார். "முருகா முருகா" என்று ஒரு நேர்த்தி. பிறகு லோக்கல் இத்திக்கலட்டி வைரவரும் நினைவுக்கு வருவார். நமக்கேன் வம்பு என்று அவருக்கும் ஒரு நேர்த்தி. இரண்டு பேரும் மாறி மாறிக் ஹெல்ப் பண்ணினதால புள்ளடிக் கேள்விகளிற் கனக்கச் சரி வந்திருக்குது.

சந்நிதி கோவிற் திருவிழா தொடங்கினால் ஒரே ஒரே பிரச்சினைதான். வீட்டில் முட்டை, மீன், இறைச்சி அவிபட மாட்டாது. போனாப் போகுது என்று ஒரு முட்டைப் பொரியல் கூடக் கிடைக்காது. அப்பவெல்லாம் அச்சுவேலிக் கடைகளிற் மட்டன் ரோல்ஸ் களவாச் சாப்பிடத் தொடங்கவில்லை. சாப்பாடு 'சைவமாகி' இம்சை கொடுத்தாலும், திருவிழாத் தொடங்கினால் மிச்சம் எல்லாம் இனிமைதான். மண்ணிலாக் கொட்டை, சோளப் பொரியல், ஐஸ் கிறீம், அம்மம்மாக் குழல், காவடி, சிங்களவர்களின் பாய்/பெட்டிக் கடை, அலுமினியச் சட்டிக்கடை, "தலையில்லாமல் உடல் பேசுகிறது" வகைச் சுத்துமாத்துக்கள், போறவாற வழியில் வாற குஞ்சு குளுவான்கள், இளம் பெட்டைகள், பெடியங்கள், ஆச்சிமார், தாத்தாமார், 2-3 வயதுக் குழந்தைகளைக் 'குண்டு மாதிரிக் கனக்கிறான்/ள்' என்று பெருமையாச் சொல்லிக்கொண்டு காவிக்கொண்டு போகும் இளம் தம்பதிகள் என்று எல்லாமினிதே.

சின்ன வயதில் அப்பா, அம்மாவோடு சந்நிதி முருகன் போவில் போவேன். அநேகமாக கச்சான் சரையுடன் ஒரே ஒரு ஐஸ்கிறீம் தான் கிடைக்கும். இந்தப் பெரிய உண்மை அந்த்ச் சின்ன வயதிலேயே புரிந்ததால், கொஞ்சக் காலத்திலே தாத்தாவுடன் கோயில் போகத்தொடங்கினேன். தாத்தா வாங்கித்தரும் கடைசி ஐஸ்கிறீம் அவர் பணப்பை காலியாகும்போது. அதுக்கடுத்த ஐஸ்கிறீம் வீட்டில் தந்துவிட்ட காசில் நான் சொந்தமாக வாங்குவது! எனக்கு அடுத்தப் பிறந்த தம்பி கொஞ்சம் விபரமானவன். இந்தப் பெரிய திருவிழாக் கூட்டத்திலும் மற்றத் தாத்தாவைத் தேடிப்பிடிச்சு இன்னுமொரு ஐஸ்கிறீம் வாங்கிவிடுவான். "பக்கத்து இலைக்காரனுக்குக் கிடைத்த பாயாசம்" மாதிரி எனக்கும் இன்னொரு ஐஸ்கிறீம் கிடைக்கும்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வாழ்க்கையில் ஐஸ்கிறீமை விட முக்கியமான சங்கதிகள் இருக்கு என்று புரிந்ததால், நண்பர்களுடன் கோவில் போகத்தொடங்கினேன். நடையிற் போனால் குறுக்கு வழிகளிற்தான் அதிகம் போவோம். வழியில் உள்ள குளம், குட்டை, கிணறு எதையும் எட்டிப் பார்க்காமற் போனதில்லை. அணில் கொந்தி விழுந்த நுங்குகளைக் கல்லிற் குத்தித் தின்னப் பார்த்திருகிறோம். வழியில் உள்ள அம்மன் கோவிலிற் சிதறு தேங்காய்களைப் பொறுக்கித் தின்போம். யாராவது புழுக்கொடியல் கொண்டு வந்த நாட்கள் இன்னும் உத்தமமானவை. புழுக்கொடியலும் தேங்காய்ச் சொட்டும் எச்சில் ஊறப் பண்ணும் ஒரு கொம்பினேசன்.

அம்மன் கோவிலுக்குக் கிட்ட 752 ரூட்டில ஏறிக் கொஞ்சத்தூரம் நடந்தால் புகழ்பெற்ற "காத்தாடி", ரோட்டுக்கரையில் வரும். இது ஏன் இருக்குது என்னத்துக்கு இருக்குது என்று எப்பவும் புரிந்ததில்லை. "கட பட" என்று பெருத்த சத்தத்துடன் சும்மா சுத்திக் கொண்டிருக்கும். முழியைப் பிரட்டி காத்தாடியை மேலே பார்ப்பது அரைக்காற்சட்டை வயதுப் பெடியளுக்குப் பிடிக்கும். பிறகு இன்னும் கொஞ்சம் நடந்தால் கீரிமலை ரோட்டு 752 ரூட்டைச் சந்திக்கும் முச்சந்தி வரும். சந்தியின் இடப்பக்கம் சைக்கிள் 'பார்க்கிங்'. திருவிழாக் காலங்களில் மட்டும் இருக்கும். சும்மா இல்லை, காசு கட்டி டிக்கட் எல்லாம் எடுக்கவேணும்.

நேரே வெளிக்கள நிலையத்தைக் கடந்து ரோட்டுக்கு வலப் பக்கம் இறங்கினால் - அது தற்காலிக பஸ் நிலையம். உடம்புக்கு முன்னும் பின்னும் "வைர மாளிகை" என்று எழுதிய அட்டைகளை ஒரு கவசம் மாதிரிப் போட்டுக் கொண்டு போதாக்குறைக்கு வசனங்களிலும் "உங்கள் நகைத் தேவைகளுக்கு -அணுகுங்கள் வைர மாளிகை" என்று விளம்பரம் செய்யும் பேர்வழியை இன்னும் மறக்கவில்லை. அவர் 2-in-1 மாதிரி பஸ் நம்பர்களையும் அறிவிப்பார். பின்னாட்களில் வந்த திருவிழாக்களில் ஆளைக் காணவில்லை. தொழிலை விட்டு விட்டார் போலும்.

பிறகு உடனே வருவது திருவிழாக்காலங்களில் மட்டும் கட்டப்படும் பாதசாரிகள் பாலம். அங்கை தொடங்கும் "அம்மா தாயே! பிச்சை போடுங்கோ" கோவில் வெளிவீதி வரை தொடரும். "அண்ணை கற்பூரம் வாங்குங்கோ" என்று ஒரு நாலைந்து "கால்நடை" விற்பனையாளர்கள் தங்கள் விற்பனைத் திறனைக் காட்டுவார்கள். வெளி வீதியில் பெரிய கடகங்களில் கச்சான், சோளப்பொரி விற்கும் ஆச்சிகள். பக்கத்தில் கிளிப்பு, சீப்பு, பேன்சீப்பு, கண்ணாடி, பொய்த்தலைமயில், பன்ஸ், அலிஸ்பான்ட் என்று அம்மா, அப்பாமாருடன் வாற இளம் பொம்பிளைப் பிள்ளகளை வரவைக்கும் கடைகள். அங்கே எங்களுக்கு என்ன வேலை? என்ன விக்கிறாங்கள் எண்டு பார்க்கத்தான்.

"செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது.இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம்." இப்படி விக்கிபீடியாவில் உள்ள "செல்வச் சந்நிதி" சொல்லுது. "கேட்குமாம்" என்று சொல்லி விக்கிபீடியா எழுத்தாளர் தப்பப் பார்க்கிறார் என்று நினைகின்றேன். ஆனால் மணி நல்ல சத்தமான மணிதான். எங்களூர் வரை நிச்சயமாகக் கேட்கும். "மானிப்பாய்" வரை கேட்கும் என்பது "சொறி கொஞ்சம் ஓவர்" . கற்பனைத்திறன் உள்ளவர்களுக்கு மட்டும் கேட்டிருக்கலாம். மணியை  விட "டங்" என்று ஞாபகத்தில் நிற்பது லவுட் ஸ்பீக்கரில் எப்போதும் கேட்கும் டி. எம். சௌந்தரராஜனின் "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்", சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா போன்றன. சௌந்தரராஜனின் இசைத்தட்டு ஓய்வெடுக்கும்போது, " குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் " என்று ரமணியம்மா பாடிக்கொண்டிருப்பா. கடைசிப் பாட்டுத் துள்ளிசை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

**********************

கோயிலுக்கு மேற்குப்பக்கமாக ஒரு கேணி. எத்தனைபேர் குளித்தாலும் எல்லாற்றை பாவங்களையும் கழுவும் என்று ஒரு நம்பிக்கை. நிறையப் பேர் முயற்சித்தார்கள். எனக்கும் நண்பர்களுக்கும் வீட்டுக் கிணறுகள் அதே வேலையை இன்னும் "க்ளீனாகச்' செய்யும் என்று நம்பிக்கை என்பதால் வீட்டிலேயே குளித்துவிட்டு வந்துவிடுவோம். அதுதவிர கேணிக்குள் இறங்க மனத்திடம், நோய் எதிர்ப்புசக்தி எல்லாம் உச்சத்தில் இருக்கவேண்டும். கோயிலின் மேற்குப் பக்கம் தவிர்த்து எல்லாப் பக்கங்களும் மரங்கள். (மேற்குப்பக்கம் கோயில் வீதியைத் தாண்டினால் கடல்.)

கோயிலுக்குக் உள்ளே போனால், எல்லாக் கடவுளருக்கும் முன்னால் கற்பூரம் எரிக்கும் இரும்புக் கால்வைத்த பாத்திரம் ஒன்றிருக்கும். வாங்கிய கற்பூரத்தைத் தட்டுத் தட்டாகப் பிரித்து, ஒவ்வொரு கற்பூரப் பாத்திரத்தில் எறிந்தால் ஏதோ வந்த வேலை முடிந்தமாதிரி. உள்வீதியை ஒரு சுத்துச் சுத்தினாற் போதும். ஆனால் சிலவேளை 2, 3 முறையும் சுத்த வேண்டியும் வரலாம். அதுக்குக் காரணம், 2 வது பந்தியில் வந்த நேர்த்திக்கடன் சிலவேளைகள்தான். பிறகு வெளியே வந்தால், வழக்கமான ஐஸ்கிறீம், கச்சான் அது இது என்று வாங்கிக் கொறிப்போம். தும்பு முட்டாஸ், கலர்த் தண்ணி (சர்பத்?), சோக் கட்டி மாதிரி ஆனால், ஒரு குங்குமம்/இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இனிப்பு என்பனவற்றைப் பார்ப்பதோடு சரி. சிலவேளை தும்புமுட்டாஸ் வாங்கியுண்டு வயித்துக்குத்தையும் இலவசமாக வாங்கியதுண்டு.

**********************

1986இல் என்ன மாதம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் குண்டுச் சத்தங்கள் கேட்ட ஒருநாள். அப்போதுகூடக் குண்டுச் சத்தங்கள் புதினம் இல்லை. வானத்தில் விமானங்கள், ஹெலிகள் வட்டமிட்டன. இம்முறை குண்டுச் சத்தம் கேட்டபக்கம் மாத்திரம் வித்தியாசம். தொண்டமானாற்றறுப் பக்கம் குண்டுச்சத்தங்கள் கேட்டன. (தொண்டைமானாறு ) வெளிக்கள நிலையத்தில் ஆமிக் காம்ப் இருந்தது. அடுத்தநாட்தான் தெரிந்தது, வெள்ளோட்டம் விட்டுச் சில வருடங்களேயான, உலகத்தின் நான்காவது பெரிய சித்திரத் தேர் என்று சொல்லப்பட்ட, இலங்கைத் தமிழரின் ஆர்வம், சேர்ந்துசேர்த்த செல்வம் ஆகியவற்றோடு, இந்தியாவில் இருந்து வந்த சிற்பிகள் வருடங்களாக உழைத்துச் செய்த தேர் எறிகணை வீச்சால் எரிந்துவிட்டது என்று. பிறகு புதுத்தேர் செய்யப்பட்டதாக்க் கேள்விப்பட்டதோடு சரி. போகக்கிடைக்கவில்லை.

என்னதான் அப்பப்ப மூக்கைப் பொத்த வைத்தாலும், கோவில் வெளிவீதியில் ஏதோ ஒரு மருத மரத்தின் வேரில் குந்தி இருந்து கொண்டு , கச்சானைக் கொறித்துக்கொண்டு வம்பு தும்பு பேசுவதின் இன்பம், ஏதோ ஒரு வேற்று நாட்டின் கடற்கரையோர விடுதியில் வெள்ளைப் பெயின்ற் அடித்த கதிரையில் படுத்துக் கொண்டிருந்து கடலையும் வானையும் வெறிக்கும்போது வருவதில்லை. எனக்கும் எதாவது ஒரு திருவிழா நாளில் முக்கால் காற்சட்டை + பெரிய பூப்போட்ட சட்டையுடன், கூலிங் கிளாசை உச்சந்தலையில் போட்டுக்கொண்டு விலைகூடிய SLR கமராவால் மோசமான போட்டோக்கள் எடுத்து முகநூலிற் போட ஆசை. அடுத்தடுத்த வருடங்களில் அது நடக்க சந்நிதி முருகன் அருள் பாலிப்பாராக.



--------------------

கச்சான், மண்ணிலாக் கொட்டை = வேர்க்கடலை (தமிழ்நாடு)
சரை - பொட்டலம்
கனக்க - நிறைய
கதிரை - நாற்காலி, அல்லது சேரு (தமிழ்நாடு)
சோக் கட்டி- chalk piece

படங்கள் : http://www.thinakaran.lk/2009/09/03/_art.asp?fn=d0909035 இலிருந்து

குறிப்பு: இதை எழுதத் தொடங்கியது, ஓகஸ்ட் 29, 2011. முடித்தது செப்ரம்பர் 3, 2011.

Sunday, July 31, 2011

அழகிய இடைக்காடு


யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 752ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாற்றில். இந்த இரண்டு "பெரிய" சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது எங்களூர். றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.

752 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது "வளலாய்" பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு - வளலாய் வரைஓடியது. பிறகு நின்றுவிட்டது. 'லோக்கல்' பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு 'மவுசு'. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.

பஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 752ம் பஸ்ஸில்தான் 'பெல்பொட்டம்' காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் 'பருத்துறை' போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை 'பெடியன் ரியூசன் போய்விட்டான்' என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். சே(ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 'தெறி'களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் "சுப்பிரமணியபுரம்" படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.

'அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் 'குப்பை கூட்டுற' காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டுமா(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன? பார் இவங்கடை தலையை? காகக்கூடு மாதிரி' என்று அப்பா சொல்லுவார். நான் இளந்தாரியாக வந்த காலத்தில் 'தொள தொள' baggy ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் '#இயக்கக்' கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.

********************

ஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் 'வெளி' இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரஙகளும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.

சாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் "நொழுக் நொழுக்" என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.

செல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் 'சுடலை வீதி' ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். "உங்கடை ஊரிலை தார்போட்ட றோட் இல்லையே" என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால் , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு 'திறில்' தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே? போதாக்குறைக்கு "முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன" சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். "முருகேசர் பேயுடன் தண்ணி' இறைக்காதபோது, "அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்" என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்(!), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். "நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே?" என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் "நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே" என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.


********************

சீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை - இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்டவிதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு 'மினுக்கப்பட்ட' சைககிள்களில் திரிவினம். 'இறைப்பு மிசின்'தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.

ஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் 'நகர்ந்து' பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி? சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.

குச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் "வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்" என்று கேட்கக்கூடாது.

சொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் "கோப்பிறேசன்" என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.

இப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.

********************


பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள். ஆருக்குக் கையில் "மசில்" கூட என்று கையை "ட" போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.

அழுக்கு ஐஸ்பழ வியாபாரி, 'சீசனுக்கு' மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, "போஓஓஓத்தல் பித்த்தளை அலுமினியமிருக்கா" ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, "ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு" என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என் உணர்கின்றேன்.

அவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு 'மருந்து' அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து "இண்டைக்கு 'சிக் லீவு' எடுக்கவேணும்" என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.



------------

முள்முருக்கு - கல்யாண முருங்கை
#இயக்கம் -விடுதலை இயக்கம் /இயக்கங்கள்
பத்தைக்காடு - பற்றைக்காடு
தெறி - பொத்தான்/பித்தான் - button
அப்புக்காத்து - வக்கீல், வழக்குரைஞர்
குச்சொழுங்கை = குச்சு+ஒழுங்கை - சிறிய ஒழுங்கை/பாதை

நன்றிகள்:
(1) புகைப்படங்கள்: சுகேசன் கேதீஸ்வரன்


திருத்தங்கள்
(1) 17/08/2011. பஸ் நம்பரை 751 இலிருந்து 752 இற்கு மாற்றிவிட்டேன். எங்கள் ஊரின் கிழக்குப் பக்கத்தால் ஓடியது 751ம் இலக்க பஸ் என்று என் ஞாபகத்தில் தவறாகப் பதிந்து விட்டது. தவற்றைச் சுட்டிக் காட்டிய எல்லோருக்கும் நன்றிகள்.

Thursday, July 7, 2011

வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு

முன்னுரை

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த பிரமிப்பு இப்பவும் கிட்டத்தட்ட அதேயளவு இருக்கிறது.

என்றாலும், அமரர் கல்கி அவர்கள் பாத்திரங்களைக் கொஞ்சம் "இலட்சியப்" படுத்திவிட்டார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் . எனவே நான் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தனமாக "யதார்த்தப்" படுத்திப் பார்த்தேன்.

உசாத்துணை:

பொன்னியின் செல்வன்

**************************************


வந்தியத்தேவன் குழம்பிப் போயிருந்தான். மணிமேகலை கொஞ்சநாட்களாக அவன் அனுப்பிய காதல் ஓலைகளுக்குப் பதிலனுப்புவதிலை. ஓலைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சிறுவன் குஞ்சமல்லனும் இப்போது "ஓலைகாவுதல்" வேலைகளில் சுவாரசியம் காட்டுவதில்லை. "ஓலையைக் கொடுத்தால், முன்பு சம்பளமாக கற்கண்டுகள் கொடுப்பாள் மணிமேகலை அக்கா, இப்ப என் கன்னத்தில் கிள்ளல்களை மட்டும்தான் கொடுக்கிறாள்" என்கிறான்.

வந்தியத்தேவனின் நண்பன் கந்தமாறன். அவன் தங்கைதான் மணிமேகலை. அவன் காதலுக்கு கந்தமாறனின் மறைமுக ஆதரவும் இருந்தது. உடனே நீங்கள் "ஆஹா, எல்லா அண்ணன்மாரும் இப்படியிருந்தால் நல்லதல்லவா!" என்று பெருமூச்சு விடுவதும் கேட்கிறது. உங்கள் பெருமூச்சு வீரநாராயண ஏரியின் கரையில் குறுக்கும் நெடுக்கும் தன குதிரையில் பயணித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்குக் கேட்கமாட்டாதுதான். கேட்டாலும் குழம்பியிருந்த அவன் மனம் தெளியவா போகிறது?

போனமுறை, திருப்பனங்காட்டிலிருந்து வரவழைத்த அழகான, விலையுயர்ந்த, நன்கு பதப்படுத்திய ஓலையில், வேலை மினக்கெட்டு அழகான கையெழுத்தில் சிரமப்பட்டுக் காதல் மடல் வரைந்திருந்தான். அதற்கும் பதில் வரவில்லை. ஓலையில் அடியில் இரண்டு "இதயப்" படங்களை கிட்டக்கிட்ட வரைந்து, அவையிரண்டையும் ஒரு ஈட்டி துளைப்பது போலெல்லாம் வரைந்திருந்தான். ( கிரேக்க குதிரை வியாபாரி சொல்லிக் கொடுத்த யோசனையிது)

வந்தியத்தேவனின் குதிரையும் மூச்சு வாங்கத் தொடங்கியது. "கிழட்டுக் குதிரை" என்று அவன் திட்டிக் கொண்டிருக்க, எதிரில் ஒரு ஆஜானுபாவன் உருவம் ஒரு பெரிய முரட்டுக் குதிரையில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கண்கள் அந்தக் குதிரையைச் சற்றுப் பொறாமையுடன் நோக்கின. நல்ல கருநிறப் புரவி. இவனின் குதிரையைவிட அரை மடங்கு உயரம் அதிகமாக இருந்தது. "அதில் ஏறியிருந்தாலே ஒரு கம்பீரம்தான்" என்று சொல்லிக் கொண்டான். "இந்த மாதிரிப் பெரியபுரவி வைத்திருப்பவன் நிறையப் பொன் வைத்திருப்பவனாகத்தான் இருக்கவேண்டும். அத்தோடு இந்தக் குதிரைக்கு கொள்ளு வாங்கவும் இருமடங்கு பொன் தேவைப்படும்" மனம் முணுமுணுத்தது.

முரட்டுக் குதிரைக்காரன் கிட்ட வரத்தொடங்கவும் வந்தியத்தேவனின் கை குறுவாளை இறுகப் பற்றியது. சாலையிலிருந்து சற்று விலகி நின்று, வந்த உருவத்தை உற்று நோக்கினான். அருண்மொழிவர்மனின் மதிப்பிற்குரிய ஒற்றனின் விழிகளுக்கு அவன் யாரென்பது கணநேரத்தில் புரிந்துவிட்டது. இளவரசன் மதுராந்தகன்! அவன் சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்புவரையர் மணிமேகலையின் தந்தை.

அவன் அடிக்கடி சம்புவரையரின் மாளிகைக்கு போய் வருவது வந்தியத்தேவனிற்குப் பிடிக்கவில்லை. அத்தோடு போனமுறை அவன் சம்புவரையரின் மாளிகைக்கு போனபோது ஒரு அழகிய முத்துச்சரமும், சில வளையல்களும் எடுத்துச் சென்றதும் வந்தியத்தேவனின் காதுகளிற்கு எட்டாமல் போகுமா?

"அவர்கள் சந்திப்பது இராஜ காரியத்திற்கு, எனக்கு இதற்குமேல் தெரியாது," என்று கந்தமாறன் சொல்லியதையும் அவன் நம்பவில்லை.

**************************************

"வீரநாராயணன் மோர்க்குடில்" சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு அதிக தூரத்தில் இல்லை. எப்பவும் அங்கு இளவட்டங்களின் சத்தம் , கும்மாளம் கேட்டுக் கொண்டிருக்கும். வயதானவர்கள் "காலம் கெட்டுப் போய் விட்டது" என்று சொல்லி அங்கு வருவது குறைவு. கால் முட்டி மோரை வாங்கிப் பத்து நாழிகைகள் செலவழித்து அதி மெதுவாகக் குடிக்கும் கலையை இளைஞர்கள் அல்லது யுவதிகளால்தான் செய்ய முடியும். அதுவும் தங்கள் மனங் கவர்ந்தவர்களுடன் வந்த இளைஞர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோர்க்குடிலின் பின்புறம் இரகசியமாக, அரசனின் அனுமதியின்றிச் சோமபானமும் விற்கப்படுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்குதான் வந்தியத்தேவன் மணிமேகலையை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"மணிமேகலை," வந்தியத்தேவன் காதல் உணர்ச்சியுடன் அழைத்தான்.

"என்ன?" பதில் கொஞ்சம் சூடாக வந்தது.

"நீ, ஏன் நான் அனுப்பிய மடல்களுக்குப் பதில் அனுப்பவில்லை"

"நேரம் கிடைக்கவில்லை," அவன் கண்களைப் பார்க்காமல் பதில் கூறினாள்.

"ஓ அதுதானா நான் வேறு ஏதோவென்று பயந்து விட்டேன் !"

"ஏதோவென்று?"

"இல்லை அடிக்கடி அந்த மதுராந்தகன் உன் மாளிகைக்கு வந்து போகின்றான்.."

"அதுக்கென்ன?"

"இல்லை, உன் தந்தை அவனை உனக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார் என்று பயந்து விட்டேன்"

"அவரைத்தான் நான் மணக்கப் போகின்றேன்", அவள் முகத்திலிருந்தது நாணமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை.

அதிர்ச்சியடைந்த வந்தியத்தேவன் தன்னிலையடையச் சில நிமிடங்கள் எடுத்தது. "மணிமேகலை, யாது சொல்லுகின்றாய்" என்றான்.

"ஏன் உங்களுக்குக் காது கேட்காதா? நான் இளவரசர் மதுராந்தகரை மணக்கப் போகின்றேன் என்று சொன்னேன்," சற்று உரக்கக் கூறினாள்.

"அப்போது நாங்கள் காதலித்தது?"

"காதலித்தது? நீங்கள் அப்படி யோசித்தால் நான் என்ன செய்வது? என்னைப் பொறுத்தவரையில் எமக்கிடையே இருந்தது தூய நட்புத்தான்!"

"புரிகிறது மணிமேகலை, அவன் இளவரசன். நான் ஒருகாலத்தில் நன்றாக இருந்து கெட்ட வாணர் குலத்தவன். நீ என்னை மெதுவாக நீக்க விழைகிறாய்"

"வல்லவரையரே, தங்களுக்கு நட்பென்றால் என்னவென்று புரியாது. நான் போய்வருகிறேன். சொல்ல மறந்துபோய் விட்டேன். இந்த ஓலை அனுப்புதல் வேலைகளையெல்லாம் இனி வைத்துக் கொள்ளாதீர்கள், மதுராந்தகருக்குப் பிடிக்காது" வந்தியத்தேவனின் கண்களை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். பிறகு மென்மையாக, மிக மென்மையாக, தனக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில், "என் நிலைமை தங்களுக்குப் புரியாது" என்றாள்.

அதற்குப் பிறகு முட்டி முட்டியாகச் சோமபானம் அருந்தியதுதான் வந்தியத்தேவனின் ஞாபகத்தில் இருந்தது.

மணிமேகலை தன் முதல் ஆண் குழந்தைக்கு வந்தியக்குமாரன் என்று பெயர் வைத்தது வந்தியத்தேவனுக்குக் கனகாலம் பிறகுதான் தெரிய வந்தது.


--------------

1 நாழிகை = 24 நிமிடம்
கால் முட்டி = கால்வாசி முட்டி = 1/4 முட்டி

படங்கள் : http://www.eegarai.net/t50562-topic இலிருந்து

Tuesday, June 28, 2011

என் மீன்பிடித் தொழில்...

70 களின் இறுதி அல்லது 80 களின் ஆரம்பம். நாலாவதோ அல்லது ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சரியாக ஞாபகமில்லை.

ஒரு சனிக்கிழமை காலைச் சாப்பாட்டு நேரம். நான் ஏழாவது தோசையைப் பிய்த்து தேங்காய்ச் சம்பலுடம் கலந்து வயிற்றிற்குள் தள்ளிக் கொண்டிருக்ககொண்டிருக்க, விக்கி வந்தான். விக்கி என் வகுப்புத் தோழன் மற்றும் நண்பன். "அன்பின் நணபண் கண்ணனுக்கு" என்று எழுதப் பழகத் தொடங்கிய காலத்திலேயே தீபாவளிக் கார்ட் எல்லாம் போட்டிருக்கிறான். என்னை விட இரண்டே மாதங்கள் மூத்தவன். அந்தக் குற்றத்திற்காக "விக்கி அண்ணா" என்றெல்லாம் ஒரு காலத்தில் அவனைக் கூப்பிட்டு இம்சைப் படுத்தியுள்ளேன்.

விக்கி குழம்பிப் போய்விட்டான். கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு பெரிய மனிசன் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கனநேரம் ஒன்றும் பேசவில்லை. முதல்நாள் இரண்டு பேரும் போட்ட பெரும் திட்டத்தை நான் மறந்துவிட்டேனோ என்று பயந்திருப்பான். திட்டத்தின்படி நான் காலமைச் சாப்பாட்டை முடித்தவுடன் இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பவற்றுடன் அவன் வீட்டுக்குப் போயிருக்கவென்டும். எதிர்பாரதவிதமாகத் தோசை இடையிற் குறுக்கிட்டு விட்டது. காலைமைச் சாப்பாடு தோசை என்றால் எப்படியும் பிந்திவிடும்.

திட்டங்கள் இரகசியத் திட்டங்கள் என்பதால் அம்மா, அப்பா, சகோதரங்கள் இருக்கும்போது கதைக்கமுடியாது. விக்கியின் நிலைமை தர்மசங்கடம். என்னை முழிசிப் பார்த்தான். நானோ தோசையுடன் பிஸி. இலேசாகப் பல்லை நறநறத்த மாதிரியிருந்தது.

"மறந்து போனியே?" என்று மெல்லமாகக் கேட்டான்.

"நீ போ, நான் வாறன்," அதைவிட மெல்லமாகச் சொன்னேன்.

விக்கி வீட்டில் ஒரு பெரிய "பிலிப்ஸ்" ரேடியோ இருந்தது. அது "செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, ஜில்லென்ற காற்றே.."" என்று உரத்துப் பாடிக் கொண்டிருக்க வீட்டினுள் நுழைந்தேன்.அவனின் பங்குக்கு இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பன ஆயத்தமாக இருந்தன.

"எடே ரெடியே" என்று மறந்துபோய் உரத்துக் கேட்டு விட்டேன். பதிலாக ஒரு முறைப்புத்தான் கிடைத்தது. பிறகு, "ஸ்ஸ்ஸ்...மெல்லமாகச் சொல்லக் கூடாதெ? இப்ப எதுக்கு ரெடி எண்டு கேள்வி வரப்போது" என்றான். நல்ல வேளை, தோசைக் கடை மாதிரி அலறிக் கொண்டிருந்த ரேடியோவின் புண்ணியத்தில் யாருக்கும் என் குரல் கேட்டிருக்கவில்லை போல.

விக்கிக்கு நான்கு அண்ணன்மாரும் மூன்று அக்காமாரும். கடைக்குட்டி என்பதால் எல்லோரினதும் அன்பு மழையில் நனைந்து கொண்டிருப்பான்.
அன்றைய அன்பு மழை மூத்த அண்ணர் வடிவத்தில் வந்தது.

"டேய் விக்கி, இஞ்சை வா". வந்தான்.

"குளிச்சியே காலமை?"
"இல்லை"
"நேற்று?"
"இல்லை"
"முந்த நாள்?"
"ஓ குளிச்சேனே", வலு உசாராகச் சொன்னான்.

"ரண்டு நாளாக் குளிக்கல்லை, வெளிக்கிட்டுட்டாய் சுத்த; அங்கை பார் கண்ணனை ! காலங்காத்தாத்லை குளிச்சுப் பவுடர் பூசி வந்திருக்கிறான். ஓடு கிணத்தடிக்கு" என்று விரட்டினார். இதிலை "பவுடர் பூசி" என்பது மெய். நான் கடைசியாகக் குளித்தது அதுக்கு முந்திய ஞாயிறு என்பதைத் 'தன்னடக்கம்' காரணமாக வெளிவிடவில்லை.

இவன் குளித்து முடிந்துவர இன்னும் அரை மணித்தியாலமாவது எடுக்கும். திட்டம் இரண்டாவது முறையாகப் பிந்திப் போயிற்று.

******************

ஒருமாதிரி எல்லாருக்கும் போக்குக் காட்டி வெளிக்கிட்டாயிற்று. பள்ளிக்கூடம் தாண்டி நடந்துகொண்டிருக்க ஓணான் முருகேசர் எதிரில் வந்தார். (எங்கள் ஊரில் இப்படி எல்லாருக்கும் ஒரு "மூன்றாவது" பெயர் உண்டு. அதைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.)

"தம்பியவை, எங்கை கையிலே பேணியோடை?" தலையை மேலும் கீழும் ஆட்டியபடி கேட்டார்.

என்ன விடை சொன்னாலும் மனிசன் வீட்டை போய் அப்பாவைச் சந்தித்து வத்தி வைக்காமல் ஒரு வாய் கள்ளுக் கூடக் குடிக்கமாட்டுது.

"அப்பு, பள்ளிக்கூடத்தில கைவேலைப் பாடத்திற்கு மாப் பேணி சேர்க்கச் சொன்னவை. அதுதான் சேர்க்கிறம். உங்கடை வீட்டிலயும் ஏதாவது ஒரு லக்ஸ்பிறேப் பேணி சும்மா இருந்தால், தாறீயோணை?" வாயில் வந்த பொய்யை எடுத்து விட்டேன்.

"தம்பியவையள் நான் அவசரமாகப் போகோணும், பிறகு பாப்பம் என்ன?," ஆசாமி நழுவினார்.


*************************

முனியப்பர் கோயிற் குளம் 'அவ்வளவு' ஆழமானதல்ல. அதன் தெற்குப் பக்கம் தண்ணீர் ஆழம் குறைவு. வடக்குப் பக்கம் ஒரு வளர்ந்த ஆளை மூழ்கடிக்கக் கூடியளவு ஆழம் இருக்கும். ஒரு பனையளவு ஆழம் இருக்குமென்று எங்களோடு படித்த "அளப்பு மன்னன்" குஞ்சன் சொல்லுவான். நல்ல சுத்தமான தண்ணீர். பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கு அதிலிருந்துதான் "இறைப்பு மிசின்" பூட்டித் தணணீர் விடுவார்கள். ஒன்றிரண்டு மாரிகாலங்களில் முதலைகள் வசித்திருந்த குளம் அது என்பது இப்ப அவசியமில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டது, குளத்திலிருந்த மீன்கள். சின்னதாக, பெரிதாக, கறுப்பாக, வெள்ளியாக என்று நிறைய மீன்கள். சின்ன மீன்கள் அனேகமாகக் கூட்டமாக நீந்தும். ஒரு சின்னக் கல்லெடுத்து எறிந்தால், ஒரு கணத்திற் சிதறி ஓடி, மீண்டும் கூட்டமாகச் சேர்ந்து ஓடும். எங்கள் திட்டம் பெரிய மீன்களைப் பிடிப்பதுதான். பெரிய மீன்கள் குளத்தின் வடக்குப் பக்கத்தில்தான் இருக்கும்.

சட்டை ஊசியை நேராக்கி பிறகு தூண்டில் முள்ளு மாதிரி வளைத்தெடுத்தேன். ஊசியின் காதில் நைலான் நூலை இறுக்கமாக முடிந்தேன். இப்ப தூண்டிலில் எதைக் குத்திக் குளத்துக்குள் விடுவது? அதுக்குத்தான் பாவப்பட்ட மண்புழுக்கள் கிடைத்தன. ஈரமான தண்ணீர் வாய்க்கால்களில் தேடி எட்டுப் பத்து உயிருள்ள மண்புழுக்களைப் பிடித்தோம். முதலாவது மண்புழுவைத் தூண்டிலில் குத்தினேன். இப்ப தூண்டில் ரெடி. தூண்டில் கொளுக்கியைக் குளத்தில் வீசிவிட்டு, நைலான் நூலின் மற்றப் பக்கத்தை பூவரசங் கட்டையுடன் சேர்த்துப் பிடித்த் கொண்டேன்.

தூண்டிலை அங்குமிங்கும் அசைத்து மீன் ஏதாவது மாட்டுப்படுதா என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். விக்கியின் லக்ஸ்பிறேப் பேணிக்குள் இதுக்கிடையில் இரண்டு பெரிய மீன்கள். என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு வேறு அடித்தான். மனதுக்குள் அவன் பிடித்த மீன்களைத் திருப்பிக் குளத்துக்குள் எறிந்தேன்.

ஒருமணித்தியாலம் கழிந்தும் எனக்கு ஒரு மீனும் பிடிபடவில்லை. ஆனால், "ம்ம் கும்" என்று ஒரு செருமல் பின்னுக்குக் கேட்டது. நான் மீன் பிடியில் பிஸி. "மாப்பிளே, மீன் என்ன விலை?" என்று பழகிய குரல். திரும்பிப் பார்த்தால் அப்பா! அடுத்து நடந்தது அநேகமாகக் கார்ட்டூன் படங்களில் மாத்திரம் பார்த்திருப்பீர்கள். அந்தக் கணம் அந்த இடத்திலிருந்து மறைந்து அடுத்த கணம் வீட்டில் நின்றேன். அவ்வளவு வேகமாக எந்த ஓட்டப் போட்டியிலும் ஓடியிருக்கவில்லை. விக்கி பிறகு அப்பாவின் சைக்கிளில் அவன் வீட்டுக்கு வந்ததாக அறிந்தேன்.

சொல்லாமல் கொள்ளாமல், களவாக, ஆளை மூழ்கடிக்கக் கூடிய குளத்தில் மீன் பிடித்ததிற்கு பூவரசங் கம்பு முறிய அடி விழப் போகுது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அப்பா "என் மீன்பிடித தொழிலைப்" பற்றி ஒருநாளும் கதைக்கவில்லை. கொஞ்சம் ஏச்சும் அடியும் தந்து அலுவலை அப்பவே முடித்திருந்தால் இதைவிடப் பரவாயில்லை என்றுதான் இப்பவும் நினைக்கிறேன்!




-------------------
பேணி = a tin can

தேங்காய்ச் சம்பல் - கிட்டத்தட்ட தேங்காய்ச் சட்னி மாதிரி ஒன்று, கொஞ்சம் உலர்வாக இருக்கும்

சட்டை ஊசி = safety pin

நைலோன் - Nylon

பூவரசங் கட்டை/பூவரசங் கம்பு - கிட்டத்தட்ட கட்டைவிரல் தடிப்பில் உள்ள பூவரசங் கிளையை வெட்டி, அதன் தோலைச் சீவி எறிந்துவிட்டு, ஒரு சாண் அளவான துண்டுகளாக்கி அதைக் காயவைத்தால், அவைதான் எங்கள் (பட்டம் விடும் நூலின்) நூல் கட்டைகள். இத்தக் கட்டைகளில் நைலோன் நூலை வடிவாகச் சுற்றி வைத்திருப்போம். ஒரு சில விற்பன்னர்கள் வெட்டிய பூவரசங் கட்டைகளை வெறுமனே வெயிலிற் காயவிடாமல், நெருப்பில் மெதுவாகச் சுட்டு (heat treatement !) அதை வலுவாக்குவார்கள்.

Wednesday, June 22, 2011

வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்

என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும்.

எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில்; எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான்.


படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியில் இதைப் பொருத்தியிருப்பார்கள். மேற்பக்கத்தில், நீளமான ஒரு (தண்ணீர்க்) குழாயை ஒரு சுருட்டுச் சுருட்டி பெரிய வட்டவடிவாகக் கட்டி வைத்த்ருப்பார்கள். குழாயைத் தாங்கி நிற்க அடியில் (base)இல் இருந்து சரியான விதத்தில் ஆக்கிய இரும்புக் கம்பிகளை இணைத்திருப்பார்கள். இத்தோடு உடன்பிறவாச் சகோதரம் மாதிரி ஒரு சின்ன வாளியும் பயணப்படும். வாளிக்குள் இரண்டு முழம் நீளமான ஒரு வலிய கயிறு, ஒரு சின்ன Singer Oil Can --அதுக்குள் கொஞ்சம் பெற்றோல் கட்டாயம் இருக்கும். மேலதிகமாக கடந்த 10 வருடங்களில் உழைத்துக் களைத்துப்பபோன பிளக்குகள் (Spark Plugs) மூன்று, நான்கு, ஒரு கரி பிடித்த பழைய துண்டு/துணி, என்பனவும் இருக்கலாம்.

இந்த இறைப்பு மிசின்களைப் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தைத் தவிர வேறுநிறத்தில் நான் காணவில்லை.


இறைப்பு மிசின் விவசாயிகளின் நண்பன் என்றால், றலி சைக்கிள் எல்லாருக்கும் நண்பன். ஏசியா பைக், லுமாலா கூட்டணி வருமட்டும் யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களின் மகாராஜா றலி சைக்கிள்தான். எங்களூரில் கட்டாயமாக, குடும்பத்திற்கு ஒரு றலி சைக்கிள் இருந்திருக்கும். அநேகமாக (டைனமோ) விளக்கு இருந்தால், அதைச்சுற்றி ஒரு மஞ்சள் துணி கட்டப்பட்டிருக்கும்; சத்தியமாக அது ஏன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. படத்தில் இருப்பது போலன்றி 'ஸ்டான்ட்' பின்புறம் ஒரு 'கரியல்' (carrier) உடன் இணைந்திருக்கும். ஒரு நாலைந்து குஞ்சங்களும் ஆங்காங்கே இருக்கும்.

சைக்கிள் என்றால் கட்டாயம் ஒரு மணியும் இருக்கும். அழகான இளம் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குக் கிட்ட சைக்கிள் போகும்போது இந்த சைக்கிள் மணிச் சத்தம் கொஞ்சம் வலுவாக ஒலிக்கும். மோட்டச் சைக்கிள், கைத் தொலைபேசி எல்லாம் பரவலாக வரமுன் இந்தச் சைக்கிளும் சைக்கிள் மணியும் எத்தனையோ காதலர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அண்ணன் அவளின் வீட்டுக்குக் கிட்டவந்து மணியை ஒரு வித சங்கேத தொனியில் அடிப்பார். அவள் வீட்டு மதிலில் 'கடதாசியை' வைப்பார். அந்தப்பக்கம் ஒரு வளையல் அணிந்த கரம் அந்தக் கடதாசியைக் கணக்காக எடுத்து விட்டு, இன்னொரு கடதாசியை வைக்கும். (நிற்க, இது எந்தச் சைக்கிளுக்கும் பொருந்தும் றலி சைக்கிளுக்கு மட்டுமல்ல).

இனிக் கொஞ்சம் 'சீரியஸ்'ஸான விடயத்திற்கு வந்தால், ஆறுகள் அற்ற, வரண்ட தட்டையான யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம், ஒருகாலத்தில் தந்நிறைவடைந்தது என்றால், அதற்கு யாழ் மக்களின் கடும் உழைப்புத்தான் காரணம். அந்த உழைப்பிற்கு உதவியதில் முக்கியமானது இந்த வில்லியர்ஸ்/றலி கூட்டணி.

"மீண்டும் காணமாட்டோமா அந்தப் பொற்காலத்தை,?" மனம் அடித்துக்கொள்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -
- பாரதியார்

பாரதியார் இந்தியாவை நினைத்துப் பாடியது. "வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்" எழுதத் தொடங்கிய என் ஞாபகத்திற்கு வருகின்றது.


--------------------------------------------

வில்லியர்ஸ் இறைப்பு மிசின் = a Water Pump with Villiers engine
றலி சைக்கிள் = Raleigh Bicycle
மிசின் = மெசின் = Machine
வாளி (bucket) - மெட்ராஸ் தமிழில் அழகாக "பக்கட்டு" எனப்படும் :-)

Photos: Thanks to
http://www.flickr.com/photos/33159162@N02/5574558073/
http://www.bikecult.com/works/archive03.html

Saturday, June 11, 2011

ஒரு மத நல்லிணக்கக் கதை எழுதுவது எப்படி?

முதலில் முன்னுரை:

இது கனகாலம் முன்னுக்கு சிட்னியில் உள்ள ஒரு கற்பனைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் உண்மையாக நடந்தது. அது தமிழ்ப் பள்ளிக்கூடம் என்பதால் சனிக்கிழமைகளில் மட்டும் கூடும். "வருடாந்த பெற்றோர், ஆசிரியர், பாடசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்" அல்லது அதுமாதிரி நீளமான தலைப்பில் நடந்த ஒன்றில் நானும் ஓசித் தேத்தண்ணி, விசுக்கோத்துக்களை அனுபவித்துக்கொண்டு அமர்ந்து இருந்தேன். எல்லாரும் 'அமர்ந்திருந்து' கூட்டத்தில் பங்கு பற்றுமாறு அடிக்கடி வேண்டிக் கொண்டார்கள். எனவே, பின்வரிசையில், கதவிற்குக் கிட்ட, வழக்கம் போல் நிற்க முடியவில்லை. கதவுக்குக் கிட்டத்தான் விசுக்கோத்து, தேத்தண்ணி, கோப்பி எல்லாம் வைத்திருந்த மேசை இருந்தது.

நடுவில் நடுவுரை:

"கூட்டம்" வழக்கமான கூட்டங்களை போல் இருந்தது. "கொட்டாவி -தேத்தண்ணி- கொட்டாவி-கோப்பி- விசுக்கோத்து- கொட்டாவி", என்று என் பொழுது போயிற்று.

எப்படா எழும்பிப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. "கடந்த வருடம் நடந்த கலை விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்" என்று தலைவர் கேட்க, 'கச்சிதமாக அழுத்தப்பட்ட' நீளக் கைச் சட்டையும் பொருத்தமான, ஆனால் 1980 யாழ்ப்பாணத்தை ஞாபகப்படுத்தும் வகையிலான நீளக் காற்சட்டையும் அணிந்திருந்த ஒருவர் எழுந்தார்.

"என் பெயர் பீட்டர் சூசைதாசன். நான் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை உப அதிபர்", எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனால் ஒரு சின்னக் கருத்தொன்றைச் சொல்லலாமென்று உள்ளேன். இது ஒரு நாடகத்தைப் பற்றியது. அதிலே ஒரு கிழவன் 'எல்லாம் அந்தச் சிட்னி முருகன் துணை என்று மானசீகமாக அந்தப் பக்கம் பார்த்துக் கும்பிடுகிறார்?", . இந்த இடத்திலே பேச்சை நிறுத்திவிட்டு ஒரு அரை வட்டமாத் திரும்பி, எல்லோரையும் பார்த்தார்.


"அது பிழைதானே?"

நான் மட்டும் குழம்பவில்லை என்று மற்றவர்களின் முகபாவனைகளிலிருந்து விளங்கியது.

"வழக்கமாக வயதானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தானே? அதிலென்ன பிழை?" என்று யாரோ பின்னுக்கிருந்து கேட்டார்கள். எல்லாவற்றிற்கும், "சந்நிதி முருகா" என்று முருகனைத் துணைக்கழைக்கும் என் ஆச்சி வேறு ஞாபகத்திற்கு வந்து போனா.

"இல்லை, நான் அதைச் சொல்லவில்லை, எல்லா மதப் பிள்ளைகளும் படிக்கிற ஒரு பள்ளிக் கூடத்திலே இப்படி ஒரு சைவ சமயத்தைப் திணிக்கிற காட்சிகள் வரக்கூடாதுதானே?" தொடர்ந்தார் அவர்.

இந்த இடத்தில் இன்னொரு பேர்வழியும் புகுந்து கொண்டார். "என் பெயர் ஜான் ஆசீர்வாதமுங்க , அது தப்புதாங்க" என்றார்.

எதோ இப்படியாவது " 'நீ இலங்கைத் தமிழன், நீ இந்தியாத் தமிழன்' என்று வேறுபடாது சேர்ந்து நிக்கிறாங்கள்" என்று யோசித்தும் கொண்டேன்.

"அப்ப அவர்கள் அப்படி நாடகங்கள் போட்டால், நீங்கள் ஏசுநாதரை வைத்து ஒரு நாடகம் போடலாமே", இது நான்.

"இது நல்ல ஐடியாதான், ஆனால் சரிவராது, எங்களில் ஆட்கள் குறைவு, எனவே ஏசுநாதரை வைத்து நாடகம் போடுவது கஷ்டம்" அவர் தொடர்ந்தார்.

இதுக்குப் பிறகு , 'எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் நாடகம் போடுவது/ கதை எழுதுவது எப்படி' என்று மூளையைக் கசக்கி யோசித்ததில் வந்த எண்ணம் இது. யாரும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். காப்புரிமைப் பிரச்சினை இல்லை.

இப்ப விஷயம்

நீங்கள் இருக்குமிடத்தில் மூன்று மதங்களைப் பின்பற்றும் தமிழ் பேசும் நன்மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் எனில் நீங்கள் எழுதும் கதை அல்லது நாடகம் நான்கு பகுதிகளாக்கப்படும் ஏன் நான்கு என்பது பிறகு விளங்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பந்தி கீழே ...

ஒன்று

யேசுதாசன் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் பரலோகம் போய் விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"ஏசுவே என்மீது இரக்கம் காட்டும்" என்று பொதுவாக வேண்டிக் கொள்வார். குறிப்பாக எதையும் யேசுவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் பைபிள் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

இரண்டு

இஸ்மாயில் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் மவுத்தாகி விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"இன்ஷா அல்லா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் அல்லாவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் குர்ஆன் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

மூன்று

முருகுப்பிள்ளை தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் சிவனடி சேர்ந்து விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"முருகா முருகா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் முருகனிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் தேவாரம்/திருவாசகம் என்பன படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

நான்கு

ஏதுசாமி தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று. (ஏதுசாமி தாத்தாவிற்குக் கடவுள் நம்பிக்கையில்லை. பெற்றோர் வைத்த பெயரை "ஏதுசாமி" என்று மாற்றிவிட்டார்)

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டாள் . முதுமையிற் தனிமை வேதனையானது.

"கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். கடந்த ஐம்பது, அறுபது வருடங்களாக இரவில் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

******************************************************

எப்படி என் ஐடியா?


-----------

Image from http://www.humanitarianforum.org/pages/en/faith-religion-and-the-forum.html


தேத்தண்ணி = தேநீர் = tea ; இந்தியாவில் பரவலாக "டீ" எனப்படும். மலேசியா/சிங்கப்பூரில் "டீத்தண்ணி" எனச் சொல்லப்படுவதைக் கேட்டுள்ளேன்.

விசுக்கோத்து = பிஸ்கட்=biscuit;

Thursday, June 2, 2011

தட்டை வடைகளும் ஒரு 'உண்மை' நண்பரும்

காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. அன்றுதான் சனியும் பிடிக்கப்போகுது என்று புரியாமல் இடியப்பக் கடைக்குள் பாய்ந்து உள்ளிட்டு "ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும் தாங்கோ" என்றேன்.

"ஐயோ இவ்வளவு மயிர் கொட்டுண்டு போச்சு உங்களுக்கு" என்று பின்னுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் 'நண்பர்' நின்று கொண்டிருந்தார். நண்பருக்குத் தும்புத்தடி மாதிரி நிறையத் தலைமுடி. அதைப் பகரவீ நிறத்திற்குச் சாயம் அடித்திருந்தார். "ஞாபகம் இருக்கே? உங்களுக்கு ரண்டு வருசம் ஜூனியராகப் படிச்சனான்? இப்பதான் வந்தனான் ஒஸ்ரேலியாவுக்கு , வேலையும் எடுத்துட்டன், என்ன கார் லைசன்ஸ்தான் இன்னும் எடுக்கல்லை" என்றார். கையில் இருந்த சின்னச் சரையில் இருந்து தட்டை வடையொன்றை எடுத்து நீட்டினார்.

வடையைக் கடித்துக்கொண்டு, 'ஆரப்பா இவன்' என்று யோசனையில் ஆழ்ந்தேன். கற்பனையில் அவரின் தலைமுடியைக் கறுப்பாக்கினேன். ஆளை ஒரு பதினைந்து வருடங்கள் இளமையாக்கினேன். அவரின் பிள்ளையார் போன்ற உடம்பை, முருகனின் உடம்புபோல் 'ஒல்லி' ஆக்கினேன். அப்பவும் பிடிபடவில்லை. 'மொட்டையனாக ஆகியும் இவன் என்னை அடையாளம் கண்டு பிடித்துவிட்டான்', எனக்குக் கொஞ்சம் வெட்கமாயிற்று.

நண்பர் வலு நிதானமாக இன்னொரு வடையை எடுத்து நீட்டினார், "இன்னும் கண்டு பிடிக்கவில்லைப் போல, நான் சுகுமார், பூனை சுகுமார் எண்டா ஞாபகம் வரும்". பூனை மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் வலு அமைதியாக இருந்ததால் வந்த பெயர். "நல்லா மாறீட்டாயடாப்பா, வண்டி எல்லாம் வைத்து", என்று அசடு வழிந்தேன்.

'சரி இப்ப உங்கடை மொபைல் நம்பரைத் தாங்கோ, பிறகு கதைக்கிறன்," என்று நம்பரையும் எடுத்தார் நண்பர்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் அழைப்பு வந்தது. மிக மெல்லிய குரலில், பக்கத்தில் யாரோ ஒட்டுக்கேட்பதைத் தவிர்ப்பதுமாதிரிப் பேசினார்.

"ஒரு சின்ன உதவி..."
"சொல்லுங்கோ"
"இந்த டிரைவிங் லைசன்ஸ் விசயம்... நான் ரண்டு மூண்டு தரம் RTA இலே டெஸ்ட் கொடுத்தாச்சு, இன்னும் சரிவரல்லை."
"ஐயோ இங்கை ஊர்மாதிரி இல்லை, காசு தள்ளி எல்லாம் எடுக்க முடியாது" என் உள்ளூர் அறிவை மெதுவாகப் பறை சாற்றினேன்.

"ஹா ஹாஹ் ஹா" என்று எதிர்முனையில் நண்பர் ஏதோ தலைசிறந்த நகைச்சுவையைக் கேட்டமாதிரிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

"இல்லையப்பா, டிரைவிங் பழக்கிற ஆள் சொன்னார், ஆரேனும் நண்பர் மூலம் கொஞ்சம் அதிகம் ஓடிப் பழகச் சொல்லி. கிழமைக்கு ஒருநாள் அந்த ஆளட்டை பழகிறது போதாதுதானே?"

"போதாதுதான்!"

இப்படித்தான் ஆறுமுறை தவறி, ஏழாவது முறை டிரைவிங் லைசன்ஸ் எடுத்த நான் நண்பருக்குக் கார் ஓட்டப் பழக்கிய சம்பவம் தொடங்கியது.

காருக்கு முன்புறமும் பின்புறமும் பெரிய L என்று எழுதிய அட்டைகளை மாட்டிவிட்டு , சிட்னியில் உள்ள பெரிய பெரிய வீதிகளில் எல்லாம் ஆமை வேகத்தில் நண்பர் என் அறிவுறுத்தல்களின்படி கார் ஓடிப் பழகினார். சொறிப்பார்வைகள், நடுவிரல் உயர்த்தல்களையெல்லாம் புத்தரின் உண்மையான சிஷ்யர்கள் போல் புன்னகையால் எதிர் கொண்டோம். என் 'திறமையான' பயிற்சியளிப்பால் நண்பர் மிகக் குறுகிய எட்டு மாதங்களில், இன்னும் நாலே நாலு முறை முயற்சித்து, டிரைவிங் லைசன்ஸ் எடுத்துவிட்டார். பிறகு ஒருநாள் ஒரு சின்னச் சரையில் கொஞ்சத் தட்டை வடைகளையும் நிறைய நன்றிகளையும் எடுத்து வந்தார்.

இதுக்குப் பிறகு நான் நண்பரை மறந்துவிட்டேன். ஆனால் நண்பர் இடைக்கிடை நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார். ஒரு வருடம் கழித்து நான் ஊருக்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது வாய் நிறையப் புன்னகையுடனும் கையில் நாலு கிலோ எடையில் ஒரு 'சின்னப்' பையுடனும் வீடு வந்து சேர்ந்தார்.

"அண்ணை ஊருக்குப் போறியள் எண்டு கேள்விப்பட்டன். இந்தச் சின்னப் பார்சலை கொழும்பிலை என்ரை மனிசியின்ரை தம்பியிட்டை கொடுத்து விடுவியளே?"

நன்றிக்கடனாக நண்பர் தட்டைவடைச் சரை ஒன்றை எனக்குத் தரவும் மறக்கவில்லை.

-----
நட்பு மிக ஆழமானது என்று மீண்டும் ஆறு மாதங்களின் பின் புரிந்தது.

"அண்ணை ஒரு சின்ன உதவி," நண்பர் வழக்கம்போல் மெல்லிய குரலில் தொலைபேசினார்.
"சொல்லுங்கோ"
"மாமா ஊரிலை இருந்து வாறார், சிட்னி எயர்போர்டில் இருந்து கூட்டி வரவேணும், எனக்கு உந்தப் பெரிய பெரிய ரோட்டுகளிலை கார் ஓடப் பயமாக இருக்கு. இப்பதானை லைசன்ஸ் எடுத்தனான். நீங்கள்தான் கார் ஓடவேணும், சனிக்கிழமை இரவுதான் வாறார். ஏலும்தானே?"

சிட்னி விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது , 'மாமா' என் வாகனமோட்டும் திறமையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டு வந்தார். மாமா கொண்டு வந்த 'பருத்துறை' வடைகளில் பாதி எனக்குக் கிடைத்தது.

-----
நட்பு இன்னும் ஆழமானது என்று இன்னும் ஆறே மாதங்களிற் புரிந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில், நடுத்தர வயதைத் தாண்டிய என் கார் சண்டித்தனம் பண்ணி நடுவீதியில் நின்றுவிட்டது. இரண்டு வெள்ளைக்காரத் தடியன்கள் 'பாவம்' பார்த்துத் தள்ளியதில் காரை வீதியின் கரையில் நிறுத்திவிட்டேன். 'வீதி உதவி'(road assist) இற்கு வருடச் சந்தா கட்ட மறந்து விட்டேன். இப்ப கூப்பிட்டால் பெரிய தொகையை உருவி விடுவார்கள், கட்டணமாக.

காருக்கு வெளியே வந்தேன். காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. சூடாக மொறுமொறுப்பாக 'ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும்' சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

ஆங் , என் மறதி மண்டைக்குள் தலை முடியைப் பகரவீ நிறத்திற்குச் சாயமடித்த நண்பர் வந்தார். செல்பேசியில் நண்பர் உடனே கிடைத்தார்.

இப்ப என் முறை, "மச்சான் ஒரு சின்ன உதவி"

"சொல்லுங்கோ" என்றார் நண்பர் எதிர் முனையில். சொன்னேன்.

"அண்ணை குறை நினையாதீங்கோ, நான் அந்தப் பக்கம் இப்ப வர வேண்டிய தேவையில்லை. அதுதான் ... "

"தம்பி , நீங்கள் இந்தப் பக்கம் வர வேண்டிய தேவையில்லைதான், ஆனால் ஒருக்கா வந்து என்னைப் 'பிக்கப்' பண்ணிக் கொண்டு வீட்டில் விட்டு விடுகிறீயளே? இஞ்சை குளிராக் கிடக்கு"

"அண்ணை திருப்பச் சொல்லுறன் குறை நினையாதீங்கோ. நான் உந்தப் பக்கம் வர வேண்டியிருந்தால் கட்டாயம் உங்களுக்கு உந்த உதவியைச் செய்ய மாட்டனே? இப்ப நான் தேவையில்லாமல் ரண்டு கிலோமீட்டர் கார் ஓடி உங்கை வரக்கிடையிலே, நீங்கள் கிட்ட இருக்கிற வேறை ஃப்ரென்ட்ஸைக் கூப்பிடலாமே!"

ஒரு உதவியும் எதிர்பாராமற் செய்யும் உதவிதானே உண்மை நட்புக்கு அழகு? இது ஏன் எனக்கு இப்பதான் புரிகிறது?

************************************

நன்றிகள்: படம் http://n-aa.blogspot.com/2010/12/blog-post_24.html இலிருந்து


சரை = பொதி, பொட்டலம்
வண்டி = தொப்பை
RTA - Roads & Traffic Authority

Wednesday, May 25, 2011

புல்லாங்குழல்

எண்பதுகளின் இறுதியில் வந்த தமிழ் சினிமாப் பாட்டுக்களைக் கேட்டிருப்பீர்களாயின், ஒன்றைத் தவறவிட்டிருக்க மாட்டீர்கள். அநேகமாகப் பாட்டின் ஏதாவது ஓரிடத்தில் "கூக்கூ குக்குக் கூ" என்று ஒரு வரி இருக்கும். இதைச் சிலவேளை ஒரு பெண்குரல் பாடும், அல்லது அநேகமாக ஒரு புல்லாங்குழல் ஊதும்.

இப்படித் தமிழ் சினிமாப் பாடல்களில் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த புல்லாங்குழல், மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. மனிதன் முதல்முதலிற் பாவிதத இசை உபகரணம் இதுதான் என நம்பப்படுகிறது. ஜேர்மனியில் எங்கோ ஒரு குகையிற் கண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல் கிட்டத்தட்ட 35,000 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது என்று அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஐந்து துளைகளைக் கொண்ட இந்தப் புல்லாங்குழல் வல்லூறு ஒன்றின் சிறகு எலும்பிலிருந்து செய்யப்பட்டது.

இன்று இந்தியாவில் பாவிக்கப்படும் புல்லாங்குழல்கள் மூங்கிலினால் ஆனவை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தில் பாவிக்கப்படுவது எட்டுத் விரல்-துளைகளைக கொண்டது. வட இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசையிற் பாவிக்கப்படுவது சற்று நீளமானதாய் இருந்தாலும் ஆறு விரல்-துளைகளை கொண்டது. மேற்கத்தைய புல்லாங்குழல்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்படுபவை. மூங்கில் புல்லாங்குழலுடன் ஒப்பிட்டால் செய்முறை/அமைப்பு என்பன மிகச் சிக்கலானவை.

கிழக்கோ மேற்கோ ஒன்று பிடித்தால் மற்றது பிடிக்கும். இப்போது புல்லாங்குழலால் உலகப்புகழ் அடைந்தவர்கள், இல்லாவிட்டால் புல்லாங்குழலை உலகப் பிரபலமாக்கியவர்களில் ஒரு சிலர்.

(1) சேர் ஜேம்ஸ் கால்வே (Sir James Galway )

"The Lord of the Rings" ஆங்கிலப் படத்தில் வந்த ' உருகி ஓடும் தங்க ஓடை' போன்ற இசையைத் தந்தவர். பார்க்கவும், இவர் இரண்டு விதமான புல்லாங்குழல்களைக் கையாள்கிறார். ஒன்று நாதஸ்வரம் போன்று நேரே பிடித்து ஊதுவது (block flute or recorder). மற்றது நாம் எல்லாருமறிந்த பக்கவாட்டில் பிடித்து ஊதுவது.



(2) ஜோஹ்ன் பியர் ரம்பால் (Jean-Pierre Rampal 1922 -2000)

புல்லாங்குழலில் 'தனி ஆவர்த்தனம்' வாசிக்கலாம் என்று மேற்குலகிற்கு நிரூபித்தவர். அதற்கு முன், புல்லாங்குழல் பத்தோடு பதினொன்றாக குழு இசையில் வாசிக்கப்பட்டது.

Jean-Pierre Rampal plays Mozart

(3) ஷஷாங் சுப்பிரமணியம் (Shashank Subramanyam) மிக இளம் வயதிலேயே அதீதத் திறமையை வெளிப்படுத்தியவர். இவரின் "REMINISCENCE OF BRINDAVAN" இறுவட்டு எனக்கு மிகவும் பிடித்தது. கீழே உள்ளது வேறு ஒன்று. அவரின் இளங்கன்று போன்ற துள்ளல் நடை கவனிக்கத்தக்கது.



(4)Dr என்.ரமணி. இவரின் இறுவட்டு எதுவாகிலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவேன். இன்று வரை ஏமாற்றமடைந்ததில்லை. டி.ஆர்.மகாலிங்கத்திற்குப் பிறகு, அவர் பாணியிலே சில புதுமைகளைப் புகுத்தி கர்னாடக புல்லாங்குழலிசைக்குப் புத்துயிர் கொடுத்தவர்.



(5)இமானுவல் பயூட் (Emmanuel Pahud). பிறந்தது ஜெனீவா வில். வசிப்பது பெர்லினில். இவர் புல்லாங்குழல் பழகியிருக்காவிட்டால், ஹொலிவூட்டிற்கு நடிக்கப் போயிருக்கலாம்! ஆசாமி அவ்வளவு அழகாக இருக்கிறார்.



----
உசாத்துணை:

(1) http://www.britannica.com/
(2) Wikipedia

Monday, May 23, 2011

பணப் பையைத் தொலைத்தவன்

"நண்பனே" , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் "தூங்காபி" ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று கிறிஸ்தமஸ் தினம் வேறு. 50 அடி நடைக்குள் வரும் மூன்று இடியப்பக் கடைகளில் ஒன்றாவது மூடாமலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவுச் சாப்பாடும் பாண் தான்.

குரல் வந்த திசையில் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 6 அடி 4 அங்குலத்திற்கும் குறையாத உயரத்தில் நம் "சகோதர" இனத்தவன். கொஞ்சம் சதுர முகம். கருப்பான சுருட்டை முடி. மண்ணிறக் கண்கள். இந்த மார்கழி வெக்கையிலும் கோட் , சூட் போட்டிருந்தான். நல்ல வேலையில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படங்களில் வரும் வில்லன் மாதிரிச் சுமாராக இருந்தான். இவன் பூர்வீகம் இத்தாலி அல்லது கிரேக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பக்கத்தில் நின்றவள் அவன் மனைவி அல்லது துணைவியாக இருக்கவேண்டும். உயரமாக, ஒல்லியாக வில்லு மாதிரியிருந்தாள். அவளின் காலைக் கட்டிக் கொண்டு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. நீலக் கண்கள். நீளமான, பொன்னிற முடி. குழந்தை அம்மா மாதிரியே அழகாக இருந்தது.

நான் வாய் பார்த்துக் கொண்டு நின்றதால் பதில் சொல்ல மறந்து போய் விட்டேன் போலிருக்கிறது.

"தொந்தரவிற்கு மன்னிக்கவும், என் பெயர் மார்க்கஸ் செர்ஜோபௌலஸ். இவள் என் துணைவி கிளாரா , இவள் சாரா - என் குழந்தை , அப்படித்தான் நினைகிறேன்" என்று வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

அவளும் நக்கலுக்குக் குறைந்தவள்போல் இல்லை.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கண் சிமிட்டினாள்.

"என் பெயர் சுப்ரமணியம் வாசுதேவன்" , வேண்டுமென்று பாஸ்போர்ட் இல் இருக்கிறமாதிரிச் சொன்னேன்.

இப்ப அவன் கொஞ்சம் கிட்ட வந்தான். குரலைத் தாழ்த்தி, "இன்றைக்குக் கிறிஸ்மஸ் தெரியுமா?" என்றான். 'கிறிஸ்மஸ், கோட் , சூட் போட்ட வெள்ளைக்காரன், அடுத்து என்ன , பைபிளை எடுத்து நீட்டப் போகிறான்' என்று யோசனை ஓடியது.

"எல்லா வங்கிகளும் பூட்டு. கடைகளும் பூட்டு", என்று தொடந்தான். "இடியப்பக் கடை திறந்திருக்கும்" அன்று நான் என் உள்ளூர்த் தகவல்திரட்டை எடுத்துவிடமுன், "நான் என் பணப்பையைத் தொலைத்து விட்டேன்" என்றான்.

பணப்பையைத் தொலைத்துவிட்டுத் 'தேடுவபவர்களை' நான் துபாய் தேய்ராவில், ஷார்ஜா கிரிக்கெட் கிரவுண்ட்டிற்கு வெளியே, சிறிரங்கம் கோவில் உள்வீதியில், கொழும்பு /கோட்டை பஸ் ஸ்ராண்ட்டில், இன்னும் பின்னுக்குப் போனால் யாழ்ப்பாண நகரத்தில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எல்லாரும் நிறையத் தூரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். எல்லாருக்கும் அது நண்பர்கள் இல்லாத புது நகரமாகத்தான் இருக்கும். இப்பதான் ஞாபகம் வருது. எல்லாரும் நாகரிகமாக "இங்கிலிஷ்" பேசுவார்கள். எல்லாரும் வீட்டுக்குப் போக பஸ் காசு கேட்பார்கள். மறக்காமல் எங்கள் பெயர், விலாசத்தையும் எழுதி வைப்பார்கள், காசைத் திருப்பி அனுப்பத்தான்!

நான் கொஞ்சம் உஷார் பேர்வழி. 'யாரிடமும் ஒருக்காக்கூட ஏமாந்ததில்லை' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவள் நம்பியமாதிரித் தெரியவில்லை.

நான் வேண்டுமென்று ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிறிய அசௌகரியமான அமைதி. "என் கார் அங்கே நிற்கிறது, பார்" என்று எதிற்பக்கம் சுட்டிக்காட்டினான். "அப்பாடா, இது ரிக்கற் வாங்கப் பணம் கேட்கப்போகும் வகையல்ல" என்று ஒரு சின்ன ஆசுவாசம். தூரத்தில் தெரிந்த காரைப் பார்த்தேன். புத்தம் புதிய காரல்ல. என்றாலும் என் நகரும் தகரக் கூடு போலிருக்கும் காருடன் பார்க்கும்போது எவ்வளவோ பரவாயில்லை. "இவன் பைபிள் பேர்வழிதான்" என்று முடிவு கட்டிக்கொண்டிருக்க, "தந்தையே, பசிக்கிறது, மக்காஸ் போவோம்" என்று சிறுமி அழத் தொடங்கினாள்.

"சரி, உன் நேரத்தை அதிகம் எடுக்க விரும்பவில்லை. உன்னைப் பார்த்தால் கௌரவமான பேர்வழி போலுள்ளாய்; என் காருக்குப் பெற்றோல் தீர்ந்துவிட்டது. முந்தியே சொன்னேனே, என் பணப் பையும் தொலைந்து விட்டது. ஒரு முப்பது டொலர் இப்போது தருவாயாயின், நான் வீடு போய்ச்சேருமட்டுமளவிற்குப் பெற்றோல் போட்டுவிடுவேன், ஒரு நண்பனுக்கு நண்பனாக இந்த உதவியைச் செய்யமாட்டாயா?" என்று கெஞ்சும் தொனியிற் கேட்டான்.

என்ன சொல்லி இவனைக் "கழட்டுவது" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

******************

"எங்கேயப்பா இடியப்பம்? வழக்கம்போல் மறந்தாச்சோ?", இது மனைவியின் வரவேற்பு.
"அது பெரிய கதை". கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

முடிக்கமுன்னே "நான் மிச்சத்தைச் சொல்லுறன். கொடைவள்ளல் அவன் கேட்கமுன்னே அம்பது டொலரைத் தூக்கிக் குடுத்திருப்பீங்கள்" என்றாள்.

"ஹா ஹா பிழை, முப்பது டொலர் மட்டும்தான் இருந்தது. குடுத்துட்டன். அவன் திருப்பியனுப்புவான். "அக்கவுன்ட்" நம்பரெல்லாம் எழுதிக் கொண்டு போறான்."

"வடிவாக அனுப்புவான், வட்டியும் சேர்த்து, இருக்கட்டும் ஒரு கேள்வி"

"கேள்"

"அவள் வடிவோ?"

"சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்!


------------

மக்காஸ் = Maccas = McDonalds
mate - இதை "நண்பன்" என்று மொழிபெயர்ப்பது மிகச் சரியாகாது. வேறு பொருத்தமான சொல் அகப்படவில்லை.

Sunday, May 15, 2011

The boy in the striped pyjamas

புரூனோ ஒரு ஜெர்மன் சிறுவன், ஷ்மூல்
ஒரு யூதச் சிறுவன். இரண்டு பேரிற்கும் எட்டு வயது. ஒருவன் முள்வேலிக்கு உள்ளே, மற்றவன் வெளியே. இரண்டு பேரிற்குமிடையேயுள்ள பாசாங்குகளற்ற உண்மையான நட்புத்தான் கதை.


இனி, படம்.

ரால்ஃப் இற்கு நாஜிப்படையில் உயர் பதவி. ரால்ஃப் இன் மகன் புரூனோ, மிகத் துறுதுறுப்பானவன். வீட்டில் சும்மா குந்தியிருக்கப் பிடியாது. நண்பர்களுடன் ஓட்டம், பாட்டம், கற்பனை "ஏரோப்பிளேன்" விடுவது என்று பொழுதைப் போக்குபவனுக்கு, தந்தையின் பதவியுயர்வுடன் கூடிய இடமாற்றம் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. போதாக்குறைக்குப் புது வீட்டில் மூன்றே மூன்று மாடிகள்தான்! புரூனோவின் அக்கா கிரெட்டெல்- பன்னிரண்டு வயசு. தம்பிக்குத் தான்தான் முதலாளி என்று நினைப்பு வேறு.புது ஊரிற் பள்ளிக் கூடம் இல்லைப் போலிருக்கிறது. அக்காவிற்கும் தம்பிக்கும் சேர்த்து ஒரு வாத்தியார் வீடு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். வாத்தியாரின் இம்சைவேறு தாங்க முடியவில்லை. "ஜெர்மனியரின் உன்னதம், யூதர்களின் நரித்தனம், .." என்று வெளுத்து வாங்குகிறார். விளைவு, கிரெட்டெல் தீவிர நாஜி விசுவாசியாகின்றாள். ஆனால் புரூனோ குழம்பிப் போகின்றான்.

வீட்டில் இருக்கும் வயதான தளர்ந்த வேலையாள் 'பவல்'தான் புரூனோவிற்கு ஒரே ஆறுதல். பவல் தான் படத்தில் வரும் முதலாவது "வரி வரியான" பிஜாமா அணிந்த முதல் ஆள். என்றாலும் அவர் கதையின் பிரதான பாத்திரம் இல்லை.

என்ன நடந்தாலும் வீட்டு வளவின் பின்புறம் போகக்கூடாது என்று அம்மாவும், அதைவிடக் கடுமையாக அப்பாவும் உறுக்குவது புரூனோவின் ஆர்வத்தை இன்னும் கிளறுகின்றது. ஒருநாள் எல்லாருக்கும் "டிமிக்கி" கொடுத்துவிட்டு, வளவின் பின்புறத்தினூடாக, ஒரு சிற்றோடையைக் கடந்து, முட்கம்பிவேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய "பண்ணை"யை அடைகின்றான். அவன் பண்ணை என்று குறிப்பிடுவதுதான் நாஜிகளின் ஓஸ்விச் (Auschwitz) வதை முகாம் என்றும், அவன் தந்தைதான் அதன் பொறுப்பாளர் என்றும் பின் புரிய வரும். (குறிப்பு: படத்தில் எந்த இடத்திலும் அந்த முகாம் ஓஸ்விச் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை).

முட்கம்பி வேலியின் ஒரு மூலையில், தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறான் ஷ்மூல். இவன்தான் படத்தலைப்புக் குறிப்பிடும் "வரி வரியான பிஜாமா அணிந்த சிறுவன்". சேர்ந்து விளையாட ஒரு சம வயதுச் சிறுவன் கிடைத்ததால், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 'பண்ணைக்கு' வருகின்றான் புரூனோ. புதிய நண்பன் ஷ்மூல் எப்போதும் முள்வேலிக்கு அந்தப்பக்கம். புரூனோ இந்தப் பக்கம். ஒரு நாட் பந்து விளையாடுகிறார்கள். சில நாட்களில் draughts. ஷ்மூல் எப்போதும் பசியுடன் இருப்பதை உணர்ந்த புரூனோ, வீட்டிலிருந்து இரகசியமாகத் தின்பண்டங்களைக் கொண்டுவர மறப்பதில்லை.

இதற்கிடையே, புரூனோவின் அம்மா 'எல்சா' விற்குக் கணவன் ரால்ஃப் உண்மையில் என்ன 'தொழில்' செய்கிறான் என்று புரிய வருகின்றது. பின்னே, கணவன் மனைவிக்கிடையில் குடும்பி பிடிச்சண்டை. "இது என் குழந்தைகள் வளரும் இடம் இல்லை, (அம்மாவின்) ஊருக்குக் குழந்தைகளுடன் போகின்றேன்" என்று ஆயத்தம் பண்ணுகிறாள்.

மிகுதி வெள்ளித் திரையில் ...

படத்தின் கொழுக்கி (trailer)



அல்லது

IMDb Trailer (துல்லியமானது)


குறிப்பு

(1) படம் அவுஸ்திரேலியாவில் M என வகைப்படுத்தப் பட்டுள்ளது. M என்பது 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு உகந்தது. ஆனாலும் எந்த இடத்திலும் 'இசகு பிசகான' காட்சிகள் இல்லை. நாஜி வதைகளை பற்றிய படம் என்பதால் 15 வயதிற்கு உட்பட்டோர் தவிர்ப்பது நலம் என்கிறார்கள் . உட்குறிப்பு ஒரு சாதாரண தமிழ்ப் படத்தில் இருக்கும் வன்முறைகளுடன் பார்த்தால் இதில் உள்ளது ஒன்றுமில்லை.

(2) நீங்கள் சிட்னிவாசியாயின், வென்ற்வே(ர்)த்வில் சமூக நிலைய, நூல் நிலையத்தில் DVD யை ஒரு சதம் செலவு செய்யாமல் இரவல் வாங்கலாம்.