Sunday, July 31, 2011

அழகிய இடைக்காடு


யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 752ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாற்றில். இந்த இரண்டு "பெரிய" சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது எங்களூர். றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.

752 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது "வளலாய்" பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு - வளலாய் வரைஓடியது. பிறகு நின்றுவிட்டது. 'லோக்கல்' பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு 'மவுசு'. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.

பஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 752ம் பஸ்ஸில்தான் 'பெல்பொட்டம்' காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் 'பருத்துறை' போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை 'பெடியன் ரியூசன் போய்விட்டான்' என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். சே(ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 'தெறி'களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் "சுப்பிரமணியபுரம்" படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.

'அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் 'குப்பை கூட்டுற' காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டுமா(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன? பார் இவங்கடை தலையை? காகக்கூடு மாதிரி' என்று அப்பா சொல்லுவார். நான் இளந்தாரியாக வந்த காலத்தில் 'தொள தொள' baggy ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் '#இயக்கக்' கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.

********************

ஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் 'வெளி' இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரஙகளும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.

சாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் "நொழுக் நொழுக்" என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.

செல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் 'சுடலை வீதி' ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். "உங்கடை ஊரிலை தார்போட்ட றோட் இல்லையே" என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால் , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு 'திறில்' தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே? போதாக்குறைக்கு "முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன" சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். "முருகேசர் பேயுடன் தண்ணி' இறைக்காதபோது, "அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்" என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்(!), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். "நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே?" என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் "நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே" என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.


********************

சீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை - இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்டவிதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு 'மினுக்கப்பட்ட' சைககிள்களில் திரிவினம். 'இறைப்பு மிசின்'தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.

ஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் 'நகர்ந்து' பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி? சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.

குச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் "வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்" என்று கேட்கக்கூடாது.

சொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் "கோப்பிறேசன்" என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.

இப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.

********************


பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள். ஆருக்குக் கையில் "மசில்" கூட என்று கையை "ட" போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.

அழுக்கு ஐஸ்பழ வியாபாரி, 'சீசனுக்கு' மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, "போஓஓஓத்தல் பித்த்தளை அலுமினியமிருக்கா" ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, "ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு" என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என் உணர்கின்றேன்.

அவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு 'மருந்து' அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து "இண்டைக்கு 'சிக் லீவு' எடுக்கவேணும்" என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.



------------

முள்முருக்கு - கல்யாண முருங்கை
#இயக்கம் -விடுதலை இயக்கம் /இயக்கங்கள்
பத்தைக்காடு - பற்றைக்காடு
தெறி - பொத்தான்/பித்தான் - button
அப்புக்காத்து - வக்கீல், வழக்குரைஞர்
குச்சொழுங்கை = குச்சு+ஒழுங்கை - சிறிய ஒழுங்கை/பாதை

நன்றிகள்:
(1) புகைப்படங்கள்: சுகேசன் கேதீஸ்வரன்


திருத்தங்கள்
(1) 17/08/2011. பஸ் நம்பரை 751 இலிருந்து 752 இற்கு மாற்றிவிட்டேன். எங்கள் ஊரின் கிழக்குப் பக்கத்தால் ஓடியது 751ம் இலக்க பஸ் என்று என் ஞாபகத்தில் தவறாகப் பதிந்து விட்டது. தவற்றைச் சுட்டிக் காட்டிய எல்லோருக்கும் நன்றிகள்.

33 comments:

  1. நட்பு,,,, உங்க இலங்கை தமிழ் அருமையாக இருக்கு . எங்க வீட்டுக்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க www.sparkkarthikovai.blogspot.com

    ReplyDelete
  2. அருமை நண்பரே....ஊர் கதை வாசித்து மனம் இனிக்கிறது!!

    ReplyDelete
  3. 751 பஸ்சில் உங்கள் பாதைகளில் பயணித்திருக்கிறேன். ஏனெனில் எமது ஊரான வியாபாரிமூலை பகுதியால் அது போகும்.இனிய ஞாபகங்கள். நன்றி.

    ReplyDelete
  4. அழகிய இடைக்காடு - ஊருக்கே அழைத்து சென்று விட்டது. இப்ப ஊர் எப்படி இருக்கிறது. சுமுக வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  5. நான் உங்களூர் பக்கம் வந்ததில்லை. இடைக்காடு என்னும் பெயர் அறிந்திருக்கிறேன். உங்கள் பதிவினூடாக ஒரு ஊர் பற்றி அறிந்து கொண்டேன். ஒவ்வொரு ஊருக்கும் உங்கள் பதிவு போன்ற பதிவுகள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. எஸ் ரஞ்சகுமார்August 1, 2011 at 7:23 PM

    விசரன் சொல்வதுபோல ஒவ்வொரு ஊர் பற்றியும் பதிவுகள் அவசியம்...எமது ஊர்கள் அழிந்து விட்டன. மீண்டும் தளிர்க்கும் என்பது உண்மைதான் என்றாலும்.. பழைய தரவுகளை யாராவது தேடும்போது இவ்வகையான பதிவுகள் உதவலாம். நண்பர் பா. இரகுவரன் தனது ஊரான தும்பளை பற்றி ஒரு முழுமைான நுாலை வெளியிட்டிருந்தார். தும்பளை பற்றிய பலகோணப் பார்வயையும் விபரங்களையும் துல்லியமான தரவுகளையும் அது கொண்டிருந்தது. நீங்களும் ஏன் அவ்வாறு முயற்சிக்கக் கூடாது... (எஸ். ரஞ்சகுமார்)

    ReplyDelete
  7. நன்றிகள் ஸ்பார்க் கார்த்தி, மைந்தன் சிவா, Dr.எம்.கே.முருகானந்தன் , கணேஷ், விசரன், எஸ் ரஞ்சகுமார். திட்டாயினும் ஷொட்டாயினும் இனிப்பவை பின்னூட்டங்களே.

    ReplyDelete
  8. இது நானும் நடந்த மண். இடைக்காட்டுக்குப் பலதடவைகள் வந்துள்ளேன். காரணங்கள் உங்கள் கற்பனைக்கு.

    அரும்பொருள் அகராதி வேண்டியதில்லை. அத்தனை மண்டூகங்களா நாங்கள்?

    ReplyDelete
  9. யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 751ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. //

    வணக்கம் ஐயா,
    ஓகோ..அப்படியா. அப்போ கதிரிப்பாய் எங்கே இருக்கிறது?
    தீர்த்தாங்குளப் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கின்றது, அப்படியே அச்சுவேலியால் வரும் போது வாற வீதிகளையும் கொஞ்சம் நினைவுபடுத்தியிருக்கலாம் தானே;-)))

    ReplyDelete
  10. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.//

    இடைக்காட்டிற்குப் பின்னுக்கு வளலாய் தானே.

    ReplyDelete
  11. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்//

    ஹா...ஹா...உண்மையிலையே, அங்கே நிறையப் பொட்டையளைப் பார்க்கலாம் தானே;-)))

    ReplyDelete
  12. மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்//

    ஓ...அதுவா, ஓவரா மப்பிலை தள்ளாடித் தள்ளாடி வந்தால், ஊரில் உள்ளவை, வாசிகசாலையில் உள்ளவர்கள் அவர்களை இலகுவில் அடையாளங்கண்டு விடுவார்கள் என்பதால்,
    கௌரவத்தை மறைக்க, தலையில் ஒரு துண்டைப் போடுவார்கள்.
    ஹி...ஹி....

    ReplyDelete
  13. பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும்//

    அப்ப உங்களுகு இடைக்காடு மகாவித்தியாலத்திற்குப் போற வழியில் இருக்கும் வாசிகசாலை
    தெரியுமே;-)))

    ReplyDelete
  14. ஊர் நினைவினைக் கலந்து கலக்கலா, வட்டார மொழி வழக்கோடு எழுதியிருக்கிறீங்க.
    ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
  15. மிக்க நன்றிகள் @Garunyan . நிச்சயமாக உங்களுக்கு அரும்பொருள் அகராதி வேண்டியதில்லை :-). அவை நம் தமிழ்நாட்டு நண்பர்களுக்கு.

    @நிரூபன் ,
    >இடைக்காட்டிற்குப் பின்னுக்கு வளலாய் தானே.
    ஆம், அது இன்னொரு பக்கம்.

    >அப்ப உங்களுக்கு இடைக்காடு மகாவித்தியாலத்திற்குப் போற வழியில் இருக்கும் வாசிகசாலை
    அங்கைதான் 1989 வரை ஓய்வு நேரங்களில் மண்டிக்கொண்டு நின்றிருப்பேன்.

    >அப்படியே அச்சுவேலியால் வரும் போது வாற வீதிகளையும் கொஞ்சம் நினைவுபடுத்தியிருக்கலாம் தானே;-)))
    இரண்டு பிரச்சினைகள். ஒன்று- பதிவு ஓவராக நீளமாகப் போய்விடும். மற்றது, அவ்விடங்கள் மிக நன்றாகத் தெரியாது.

    ReplyDelete
  16. இடைக்காடு என்னும் பெயர் அறிந்திருக்கிறேன். உங்கள் பதிவினூடாக ஒரு ஊர் பற்றி அறிந்து கொண்டேன்.Nanry.
    வேதா.இலங்காதிலகம். http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  17. நண்பரே இது நானும் நடந்த மண்.ஊர் கதை வாசித்து மனம் இனிக்கிறது!
    அழகிய இடைக்காடு - ஊருக்கே அழைத்து சென்று விட்டது. சுமுக வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  18. நெல்லியடிக்குப் போனாத் தான் நிறைய பெ............ பாக்கலாம்!

    ReplyDelete
  19. உங்கட ஊரை நினைச்சு நீங்க எழுதினத வாசிச்சு கண்ணில நீர் கோக்குது,எங்கட ஊரை நினைச்சு!(அரியாலை)

    ReplyDelete
  20. நன்றிகள் Vetha, Elango (Canada), மாலதி, Yoga.s.FR .

    @Yoga.s.FR- உங்களுக்கு நெல்லியடி மாதிரி எங்களுக்கு அச்சுவேலி :-)

    ReplyDelete
  21. //
    பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள்.
    ஆருக்கு கையில் "மசில்" கூட என்று கையை "ட" போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.
    //
    ம்ம்ம்ம்..............
    உண்மை தான். அது ஒரு அழகிய கனாக்காலம்(?)

    ReplyDelete
  22. //அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். //

    நீங்களுமே தம்பி.

    Bus 752 ஐ மறந்திட்டியள்.
    "வளலாய்" பஸ் - 986

    ReplyDelete
  23. இன்னுமொண்டு குஞ்சு, இந்த அப்பா, தாத்தா எல்லாம் கொஞ்சம் செயற்கையாத் தெரியுது. எனக்குத் தெரிய "ஐயா, அப்பு" எண்டு தான் நாங்கள் கூப்பிட்டம்.

    ReplyDelete
  24. நன்றிகள் சித்ரவேல் - சித்திரன் , வேலணை வலசு, மற்றும் செயபால் .

    @செயபால் ,
    பஸ் நம்பர் 751 ஆ அல்லது 752 ஆ அன்பது இன்னும் குழப்பமாக உள்ளது. இரண்டு மாதிரியும் சொல்லுகிறார்கள். என் ஞாபகத்தில் ஊரின் "கிழக்குப்" பக்கமாக உள்ள வீதியில் (யாழ்ப்பாணம் - அச்சுவேலி-தம்பாலை- தொண்டமானாறு - பருத்தித்துறை) போன பஸ் 751 . ஆனால் என் ஞாபக சக்தியில் எனக்கே நம்பிக்கை இல்லை.

    >//அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். //
    நீங்களுமே தம்பி.?

    இல்லை, நான் அப்ப சின்னப் பெடியன். "சைட்டு" வெட்டும் அரைக் காற்சட்டையும்தான் :-)

    >இன்னுமொண்டு குஞ்சு, இந்த அப்பா, தாத்தா எல்லாம் கொஞ்சம் செயற்கையாத் தெரியுது. எனக்குத் தெரிய "ஐயா, அப்பு" எண்டு தான் நாங்கள் கூப்பிட்டம்.

    நான் என் அப்பாவை "அப்பா" என்றே கூப்பிட்டேன். தகப்பனாரை "ஐயா" என்று கூப்பிடுவது நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் , எங்கள் வயது மட்டத்தில், குறைவு . அதேமாதிரி என் பாட்டன்மாரைத் தாத்தா என்றே அழைத்தேன்.

    ReplyDelete
  25. 750: Pt-Perdo to Jaffna through Nelliyadi, vallai
    751: Pt-Perdo to Jaffna through Uduppiddi, VVT, vallai
    752: Pt-Perdo to Jaffna through VVT, Thondaimanaru, Thampalai, Atchuvely

    763, 764, 765 are some other buses not bound to Jaffna but through Thampalai, Atchuvely

    986: Valalai to Jaffna (through Idaikkadu, Thampalai, Atchuveli & Rasa veethi)

    //நான் என் அப்பாவை "அப்பா" என்றே கூப்பிட்டேன்//
    அப்ப, நீங்கள் கொஞ்சம் புதிசு போல :-)

    ReplyDelete
  26. நன்றிகள் செயபால், பஸ் நம்பரைத் திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  27. Np. Some more buses coming to my mind.
    757, 759 via Thampalai, maybe through Vasavilan.

    Nice article. Thanks for bringing back my childhood/youth memories of Idaikkadu.

    Have you heard the song மீண்டும் பள்ளிக்குப் போகலாம்?
    This will make all cry.

    ReplyDelete
  28. புத்தன்August 23, 2011 at 7:04 PM

    நல்ல ஒரு ப‌திவு...தொடரட்டும் ....புத்தன்

    ReplyDelete
  29. இந்த யாழ்ப்பாணம் பருத்திதுறை பஸ்சில் நானும் பலதடவைகள் பயணித்திருக்கிறேன். நானும் வடமராட்சிதான்.
    உங்கள் 'நனவிடை தோய்தல்கள்' வட்டார மொழியில் எங்களையும் 25- 30 வருடங்களிற்குமுன் இழுத்துச் செல்கிறது.

    ReplyDelete
  30. அருமையான பதிவு, இடைகாட்டிட்கு நான் பல தடவைகள் வந்துள்ளேன். எனது அப்பா பண்டிதர் பொன் கணேசனின் தலைமயில் பட்டிமன்றம் நடைபெறும்
    அதைப் கேட்பதற்கு நானும் அவரோடு கூட வருவேன். எனக்கும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள் அங்கே இப்போது பெயர்கள் ஒன்றும் நினைவில் இல்லை
    நெல்லியடியில் சயின்ஸ் சென்டர் இல் அநேகமானோர் படித்தனர். வசித்தபோது பலவகையான நினைவுகள்.

    ReplyDelete
  31. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி புத்தன், அம்பலத்தார், மற்றும் BOOPATHY . நானும் ஒருவிதத்தில்(!) வடமராட்சிதான், மனைவியின் ஊர் நெல்லியடிக்குக் கிட்ட - துன்னாலை.

    ReplyDelete