Monday, June 30, 2014

புது மாப்பிள்ளைகள்

இது புது மாப்பிள்ளைகளுக்கும் முன்னாள் புது மாப்பிள்ளைகளுக்கும் ஆனது.

புது மாப்பிள்ளைகளை எப்படி வரைவிலக்கணம் செய்யலாம் என்பது சர்ச்சைக்கு உரியது.
கல்யாண நாளுக்கு 'சில' மாதங்கள் முன்னாலும் பின்னாலும் இருக்கும் ஆண்கள் எனலாம். சிலருக்கு 'சில' என்பது எழுபது எண்பது வரை போவது ஒரு உளச் சிக்கல்.
என்றாலும் "என்ன ஆள் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கிற மாதிரி இருக்கு? கல்யாணாம் கில்யாணம் எதாவது ஃபிக்ஸ்டோ" என்று ஆராவது ஆரம்பித்து வைக்க ஆள் கொஞ்சம் வெட்கப்பட்டுச் சிரித்தால் அவர் புதுமாப்பிள்ளையாக ரெடி ஆகின்றார் என அனுமானிக்கலாம்.

புதுமாப்பிளைகளுக்கு முழங்காலுக்குக் கீழ் எதுவும் இருப்பதுமாதிரி இராது. ஏதோ மிதப்பதுபோல் திரிவார்கள். எந்தநேரமும் எதையோ யோசித்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (மற்றவர்களுக்கு அசட்டுச் சிரிப்பு மாதிரி இருக்கும்). சந்தியில் இருக்கிற ரொட்டிக் கடையில் சாதாரணமாக எட்டுப்பத்துச் சிநேகிதங்களுடன்கள்தான் பிளேன் ரீ என்றாலும் குடிக்கும் இவர் இப்போது புது மாப்பிள்ளை -தனியாகத்தான் ரீ குடிப்பார். நண்பர்களைக் கெட்டித்தனமாகக் காய் வெட்டி விடுவார். யாராவது கேட்டால், "இவங்கடை நக்கல் தாங்க முடியல்லை" என்பார். அது உண்மையல்ல, இவருக்குத் தனிமையியே கொஞ்சம் "திங்" பண்ண வேண்டும் என்பதுதான் காரணம்.

நேற்று வரைக்கும் ட்ரவுசர், சேர்ட் , சாரம், அது இது என்று எதையும் தோய்த்துத்தான் அணிய வேண்டும் என்று இவனுக்குத் தெரியுமா என்று மற்றவர்களை எண்ண வைத்திருப்பார் பெரியவர். இப்போது சைவ சமய பாடப் புத்தகத்தில் "கோவிலுக்கு எப்படிப் போக வேண்டும்?" என்பதற்குப் விடையான "நன்றாகக் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து.." என்பதனை ஞாபகம் ஊட்டுவார்கள். கூடுதலாக "இஸ்திரி" போடும் வேலையையும் செவ்வனே செய்திருப்பார்கள்.

புது மாப்பிள்ளைகள் சவரம் செய்வது என்பது தனித் தலைப்பு வைத்து எழுத வேண்டிய ஒன்று. எனக்குத் தெரிந்த அண்ணா ஒருவர், 'தமிழீழம் கிடைத்தாலென்ன கிடைக்காட்டிலென்ன தாடியை வழிக்க மாட்டேன்' என்று வீர சபதம் போட்டிருந்தார். அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி, கெமிஸ்ரி வாத்தியார், பிஸிக்ஸ் வாத்தியார் என்று எல்லாரும் இதைத்தான் சொன்னார்கள், "சகிக்கேல்லை". ஆனால் அண்ணனின் தாடி மட்டும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமோ என்னவோ அதுமாதிரி வளர்ந்தது. "காதல் தோல்வி" என்றும் ஊரில் ஒரு கதை கிளம்பியது. (பின்னாட்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் தாடியை விட வேகமாக வளர்ந்த இன்னொன்று என்றால் அவரின் காதல்தான் என்று தெரிந்தது).

ஆயிற்று அண்ணன் புது மாப்பிள்ளையானர். ஒரு பின்னேர நேரம் அண்ணி சொன்னா "இதென்ன ஒரு தாடி, இதை அடுத்தமுறை வரமுன்னே வழிக்கவேண்டும்" என்று. அண்ணனுக்கு ரோஷம் பொத்திக் கொண்டு வந்தது. விறுவிறு என்று சொல்லிக் கொள்ளாமல் நடையைக் கட்டினார். சூடாகி விட்டார் என்றுதான் அண்ணியும் நினைத்திருப்பா. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணனின் தாடி காலி.

இது இன்னொரு கேஸ். இவர் இன்னை விடச் சிறியவர். எனவே தம்பி என்போம். தம்பிக்கு முகத்தில் முடி குறைவு. இரண்டு மூன்று முறை மீசை வளர்க்க முயற்சித்துத் தோல்வியடைந்து ஒரு ராஜதந்திரப் பின்வாங்கல் முடிவு ஒன்று எடுத்தார். "டீசன்ட் வேலை பாக்கிறவங்கள் க்ளீன் ஷேவ் ஆகத்தான் இருக்கவேண்டும்" என. இவரும் ஒரு நல்ல நாளில் புது மாப்பிள்ளையானார். "உங்களுக்கு பிரஞ்ச் தாடி வைச்சால் நல்லாயிருக்கும்" என்று அவா சொல்ல, இவர் உண்மையில் சூடானார். சூடாகி என்ன? ஆத்திரத்தை முகநூலில் நிலைத்தகவல் ஆக்கி ஒரு இருபத்து மூன்று லைக்குகள் வாங்கினார். அதில் ஒன்று அவரின் அம்மா இட்டது.

அண்மைக்காலப் புது மாப்பிள்ளைகள் சிலரைப் முகநூலில் அவதானிக்க முடிந்தது. காலையில் எழுந்து பல்லுத் தீட்டி, நீராடி, தேத்தண்ணி பாண் என்பவற்றை வயிற்றினுள் தள்ள முன்னரே முகநூலில் நிலைத்தகவல் போடுவார்கள். "It is so cold outside, but roses on my desk are beautiful- Handsome boy, the poet" என்ற கணக்கில். அதுக்கு எழுநூற்று அம்பத்தைஞ்சு 'லைக்குகள்' (அதில் ஒன்று நான் போட்டது). ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு நிலைத்தகவல் போடுவார். தம்பிக்குக் கல்யாணம் ஆச்சு. பெண்டாட்டி ஒரே ஒரு வேலைதான் செய்தா. இந்த லைக்'குகளில் எததனை ஆண்கள் போட்டது, எத்தனை பெண்கள் போட்டது என்று ஒரு ஒரு excel sheet இலே இரு சின்ன ஆராய்ச்சி தொடங்கினா. தம்பியை இப்ப முகநூல் பக்கம் காணவில்லை. இது இப்படி என்றால் இப்ப கல்யாணம் ஆன ஒரு பதிவரைப் பற்றி எழுதி நான் அடி வாங்க ஆயத்தம் இல்லை. போனமுறை கண்டபோது தான் ஜிம்'இல் செய்யும் உடற்பயிற்சிகளைப் பற்றி ஒரு சின்ன வகுப்பு எடுத்து விட்டுத்தான் போனார். எதுவும் விளங்கவில்லை என்றாலும் பாரமான இரும்புகளைத் தூக்குகிறார், தள்ளுகிறார், இழுக்கிறார் என்று புரிந்தது. பிசகு வந்தால் ஓடித்தப்பலாம் என்றால் அன்பர் ஒவ்வொரு நாளும் முப்பது நாப்பது நிமிடங்கள் ஓட்டப் பயிற்சியும் செய்கிறாராம். வம்பெதற்கு?

***************************

4 comments:

  1. ச‌க்திவேல் நல்ல ஒரு பதிவு

    ReplyDelete
  2. கதை தூக்குது . இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பெடியளை நொந்து நூலாக்கி போடுவாளவை எங்கடை பெண்டுகள். தொடர்ந்து எழுதுங்கோ சக்திவேல் .

    ReplyDelete
    Replies
    1. ஹீ ஹீ, எல்லாம் சுத்தவர நடப்பதைக் கவனிப்பதால் வந்ததுதான்...

      Delete